search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேலம் இளைஞர் அணி கூட்டம்... உதயநிதி சொன்ன குட்டி கதை...
    X

    சேலம் இளைஞர் அணி கூட்டம்... உதயநிதி சொன்ன குட்டி கதை...

    • மேடையில் இருக்க கூடிய உண்மையான முதல் செயல்வீரர் யார்? அது நம்முடைய முதன்மை செயலாளர் நேரு.
    • உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு நம்முடைய இளைஞர் அணியே சாட்சி.

    சேலம்:

    சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் அடுத்த மாதம் 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இதையடுத்து தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி வருகிறார்.

    அதேபோல் சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் இன்று நடந்த ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இளைஞர் அணி மாநாட்டை வெற்றி பெற செய்கின்ற பொறுப்பு மற்ற மாவட்டத்தை விட சேலம் மாவட்டத்திற்கு அதிகம் உண்டு என்பதை நீங்கள் உணர வேண்டும். இது வெறும் செயல்வீரர்கள் கூட்டம் அல்ல, மாநாட்டிற்கான முன்னோட்டம். நம்முடைய இளைஞர் அணிக்கு பல்வேறு பெருமைகள் இருக்கிறது. இளைஞர் அணியின் வரலாற்றை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு பல்வேறு இயக்கங்களில் இளைஞர் அணி இருக்கிறது. பல அணிகளும் இருக்கிறது. ஆனால் இந்தியாவிலேயே 1980-ம் ஆண்டு முதன் முறையாக ஒரு இயக்கத்திற்கு இளைஞர் அணி என ஆரம்பித்தது தி.மு.க. தான். இதை தொடங்கி வைத்தவர் நம்முடைய கழக தலைவர் தான்.

    அதுபோல் தி.மு.க.வில் பல அணிகள் உள்ளது. அதவாது 22 அணிகள் இருக்கிறது. ஆனால் அணிகள் இருந்ததும் அதில் முதன்மையான அணி எதுவென்றால் இளைஞர் அணி என்று கலைஞரால் பலமுறை பாராட்டப்பட்டது.

    தற்போது நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக இருந்து முதலமைச்சராக இருக்கிறார் என்றால் அவருடைய உழைப்பு எப்படி பட்டது என்பதை நீங்கள் உணர வேண்டும். இளைஞரணி மன்றத்தை கோபாலபுரத்தில் தொடங்கிய நம்முடைய தலைவர் படிப்படியாக உழைத்து இன்று தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக, கழக தலைவராக உட்கார்ந்து இருக்கிறார் என்றால் அவருடைய உழைப்பு தான் அதற்கு காரணம். அதற்கு அடித்தளமாக அமைந்திருப்பது நம்முடைய இளைஞரணி என்பதை நீங்கள் உணர வேண்டும். இளைஞர் அணியினர் உழைத்தால் நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும்.


    செயல்வீரர்கள்னா யார்? தலைவர் என்ன சொல்கிறாரோ, தலைமை என்ன சொல்கிறதோ அதை களத்தில் இறங்கி செஞ்சி முடிப்பவன் தான் உண்மையான செயல்வீரன். அதனால் தான் இந்த கூட்டத்திற்கு பெயர் செயல்வீரர்கள் கூட்டம். தன்னுடைய சுய நலன் பார்க்காமல் கட்சி நலனுக்காக தலைமை சொல்லிவிட்டது, தலைவர் சொல்லி விட்டார் என உத்தரவை ஏற்று களத்தில் இறங்கி அதை முதன் முதலில் செஞ்சி முடிக்கிறவன் தான் உண்மையான செயல்வீரன்.

    இந்த மேடையில் இருக்க கூடிய உண்மையான முதல் செயல்வீரர் யார்? அது நம்முடைய முதன்மை செயலாளர் நேரு. அவருக்கு துணை நிற்பவர்கள் தான் மாவட்ட செயலாளர்கள் 3 பேரும். இங்கு இருக்கக்கூடிய அனைவரும் உண்மையான செயல்வீரர்கள். எனவே தலைமை சொல்வதை களத்தில் இறங்கி செஞ்சி முடிப்பது நம்முடைய கடமை.

    உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு நம்முடைய இளைஞர் அணியே சாட்சி. அதற்கு நம்முடைய தலைவரே சாட்சி. உழைப்பு என்றால் ஸ்டாலின், ஸ்டாலின் என்றால் உழைப்பு என்று பாராட்டப்பட்டவர் தான் நம்முடைய தலைவர் அவர்கள்.

    14 வயதில் 1967-ம் ஆண்டு கோபாலபுரத்தில் ஒரு முடிதிருத்தும் கடையில் இளைஞர் தி.மு.க.வை தொடங்கினார்கள். அதன் பிறகு 1968-ல் சென்னை மாநகராட்சி தேர்தலுக்காக சென்னை முழுவதும் சைக்கிள் பிரசாரம் செய்தார். 1969-ம் ஆண்டு சென்னை மாவட்டத்தினுடைய வார்டு பிரதிநிதி, 1973-ம் ஆண்டு தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர். 1976-ம் ஆண்டு மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு கடுங்காவல் தண்டனை.

    1980-ம் ஆண்டு தி.மு.க. இளைஞரணி ஆரம்பிக்கும்போது 7 அமைப்பாளர்களில் ஒருவர். கடின உழைப்பால் நம்முடைய தலைவர் முதலமைச்சர் ஆகியுள்ளார்.

    பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 9 வருடங்கள் ஆகி விட்டது. 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு வாக்குறுதி கொடுத்தார். இந்தியாவை 2020-ம் ஆண்டுக்குள் வல்லரசு நாடாக மாற்றி காட்டுவேன் என்று சொன்னார். இப்போது மீண்டும் அதே வாக்குறுதியை கொடுக்கிறார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றி காட்டுவேன் என்று சொல்கிறார். ஒரு விசயத்தில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியாக வேண்டும். ஒரு வாக்குறுதி கொடுத்தார். இந்தியாவை மாற்றி காட்டுவேன் என்றார். இதை மட்டும் செய்து விட்டார். என்னவென்று கேட்டால் அவர் இந்தியா பெயரை பாரத் என மாற்றி விட்டார். தன்னுடைய சொல்லை காப்பாற்றி விட்டார் என சொல்கின்றார்.

    சி.ஏ.ஜி. என்கிற அமைப்பு மத்திய, மாநில அரசுகளின் செலவு கணக்கை தணிக்கை செய்யும் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் மத்திய அரசில் ரூ.7½ லட்சம் கோடிக்கு கணக்கு இல்லை எனவும், மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு பணம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தொடர்ந்து நம்முடைய தலைவர் கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

    ஆனால் மத்திய பா.ஜனதா அரசு பதில் சொல்லாமல் அந்த சி.ஏ.ஜி. அறிக்கை தயார் செய்த அத்தனை அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்து விட்டார்கள்.

    நம்முடைய மாநாட்டின் பெயர் மாநில உரிமைகள் மீட்பு மாநாடு. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விட்டு கொடுத்த நம்முடைய உரிமைகள் அத்தனையும் மீட்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் இருந்து வரி வருவாயாக மத்திய அரசுக்கு ரூ.5 லட்சம் கோடி சேர்ந்துள்ளது. அதில் ரூ.2 லட்சம் கோடி மட்டுமே திருப்பி தரப்பட்டுள்ளது. ஆனால் உத்தரபிரதேசத்தில் ரூ.3 லட்சம் கோடி வருவாய் சென்றுள்ள நிலையில் ரூ.9 லட்சம் கோடி அந்த மாநிலத்திற்கு திருப்பி கொடுத்துள்ளது.

    பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. செயல்வீரர்கள் அனைவரும் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி, பூட்டை உடைக்க சுத்தியல் பலமுறை அடித்தும் திறக்கவில்லை, சாவி எளிதாக பூட்டை திறந்தது. சுத்தியலிடம் சாவி சொன்னது நீ பூட்டின் தலையில் தட்டினாய், நான் பூட்டின் இதயத்தை தொட்டேன் என்று. இதில் பூட்டு என்பது தமிழ்நாடு. சுத்தியல் ஒன்றிய பா.ஜ.க. அரசு. மக்களின் இதயத்தை தொடும் சாவி தி.மு.க. என குட்டிக்கதை சொன்னார்.

    Next Story
    ×