என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
- சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று சட்டசபை உறுப்பினராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதவி ஏற்றுக்கொண்டார்.
- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றியை தொடர்ந்து தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து உள்ளது.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு கடந்த மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திருமகன் ஈவெராவின் தந்தையும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டார். இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை விட 66 ஆயிரத்து 233 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார்.
இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று சட்டசபை உறுப்பினராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றியை தொடர்ந்து தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து உள்ளது.
சட்டசபை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட பின், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.






