search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சனாதனம் குறித்து பேச்சு: தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு
    X

    சனாதனம் குறித்து பேச்சு: தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு

    • சனாதன தர்மம் குறித்து தி.மு.க. தலைவர்களின் வெளிப்படையான பேச்சுக்கு இந்தியா கூட்டணியில் உள்ள சில தலைவர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர்.
    • ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்ததால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் 2-ந்தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசும்போது, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும்.

    அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதைவிட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் பணியாகும். சனாதனம் வீழட்டும். திராவிடம் வெல்லட்டும் என்று பேசி இருந்தார்.

    அவரது இந்த பேச்சு இந்தியா முழுவதும் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ராஜஸ்தானில் பேசும்போது சனாதன தர்மத்தை இந்தியா கூட்டணி அவமதிக்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரசும், தி.மு.க.வும் வாக்கு வங்கிக்காக சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசுகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக இந்தியா கூட்டணி எந்த எல்லைக்கும் செல்லலாம் என்று கடுமையாக தாக்கி பேசி இருந்தார்.

    பா.ஜ.க. ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா பேசுகையில், 'சனாதன தர்மத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார் என்று குற்றம் சாட்டினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களை இனப்படுகொலைக்கு அழைக்கவில்லை. பல சமூக கேடுகளுக்கு சனாதன தர்மம்தான் காரணம். எனது பேச்சை தவறாக திரித்து கூறி வருகின்றனர் என்று விளக்கம் அளித்தார்.

    ஆனாலும் உதயிநிதியின் பேச்சுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவிக்கையில், 'இந்தியாவில் உள்ள எல்லா மதங்களுக்கும் ஒவ்வொரு உணர்வு இருக்கிறது. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு, அதனால் அனைத்து மதத்தினரையும் நாம் மதிக்க வேண்டும். நான் சனாதன தர்மத்திற்கு மதிப்பு கொடுக்கிறேன். எனவே எந்த மதத்தினரையும் புண்படுத்தும் விதத்தில் பேசக்கூடாது என்று அறிவுரை கூறினார்.

    இதேபோல் ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்ததால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது.

    சனாதன தர்மம் குறித்து தி.மு.க. தலைவர்களின் வெளிப்படையான பேச்சுக்கு இந்தியா கூட்டணியில் உள்ள சில தலைவர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர். பாராளுமன்ற தேர்தலின் போது வடமாநிலங்களில் இது பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று அச்சப்படத் தொடங்கினர். இதனால் இந்த விஷயத்தை மேலும் மேலும் பேசி பெரிதுப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.

    இந்த நிலையில் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு இந்தியா கூட்டணிக்கு பலம் சேர்ப்பீர் என்று கூறியதுடன், பொய், புரட்டு, திட்டமிட்ட அவதூறு பரப்பும் பாரதிய ஜனதாவினரின் திசை திருப்பும் தந்திரத்தை முறியடிப்பீர் என்றும் கவனச் சிதறலுக்கு இடம் தராதீர்கள் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    அது மட்டுமின்றி சனாதன தர்மம் குறித்து அமைச்சர்களும் கட்சி தலைவர்களும் பேசுவதற்கு அவர் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Next Story
    ×