search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தென் மாவட்ட கனமழை: நிவாரணம் குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
    X

    தென் மாவட்ட கனமழை: நிவாரணம் குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    • கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை என்பது தவறான தகவல்.
    • ரெயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்போம்.

    தென் தமிழகத்தை புரட்டிப்போட்ட கனமழையால் ரெயிலில் சுமார் 500 பயணிகள் சிக்கி தவித்து வருகின்றனர். நேற்றிரவு 8.40 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி பயணிகளுடன் ரெயில் கிளம்பியது.

    சுமார் 21 மணி நேரத்தை கடந்தும் நகர முடியாத நிலையில் ரெயிலுக்குள் பயணிகள் தவித்து வருகின்றனர்.

    தண்டவாளம் முழுவதும் நீரில் மூழ்கியதால் ரெயில் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் மீட்க முயற்சி நடந்து வந்தாலும் வானிலை காரணமாக பயணிகளை மீட்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாளையங்கோட்டை சென்றிருந்தார். அங்கு, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

    பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் மேலும் கூறியதாவது:-

    கனமழையால் 30 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 50 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

    தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளுக்கு அருகில் பொது மக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

    தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட இடங்களிலும் அமைச்சர்கள் ஆய்வு செய்வார்கள்.நெல்லையில் தூர்வாரப்பட்ட கால்வாய்கள், அதிக மழையால் நிரம்பி உள்ளது. கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை என்பது தவறான தகவல்.

    மழை வெள்ள பாதிப்பு குறித்து கணக்கெடுத்து வருகிறோம். அதன் பிறகு, நிவாரணம் குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்.

    ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரெயிலில் சிக்கியுள்ள பயணிகளை விமான படை உதவியுடன் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×