search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு பணி மும்முரம்- அமைச்சர் முத்துசாமி ஆய்வு
    X

    தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு பணி மும்முரம்- அமைச்சர் முத்துசாமி ஆய்வு

    • மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து 5 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • முதலமைச்சர் வருகையை முன்னிட்டு 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. குறிப்பாக மாநாடு நடைபெறும் திடலுக்கு தினமும் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சென்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

    இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து 5 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும் மாநாடு நடைபெறும் இடத்தை தினமும் பார்வையிட்டு வருகின்றனர்.

    தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்காக அவர் வருகிற 20-ந் தேதி மாலை விமானம் மூலம் சேலம் வருகிறார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். முதலமைச்சர் சேலம் வருகையை முன்னிட்டு மாநாடு நடைபெறும் இடத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    அதன் பொறுப்பாளராக சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வரும், போலீஸ் சூப்பிரண்டுமான லாவண்யா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சேலத்தில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே தி.மு.க. மாநாட்டு பணிகளை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம் (கிழக்கு), வக்கீல் ராஜேந்திரன் (மத்திய மாவட்டம்), டி.எம்.செல்வகணபதி (மேற்கு), மாவட்ட துணை செயலாளர்கள் சுரேஷ்குமார், சின்னதுரை, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம், அவைத்தலைவர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் மூர்த்தி, சிவராமன், அன்பு, பேரூர் செயலாளர்கள் வெங்கடேஷ், பாபு, முன்னாள் பேரூர் செயலாளர் சோமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×