என் மலர்
செய்திகள்

பாரதீய ஜனதா ஆட்சியில் தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை- தினகரன் குற்றச்சாட்டு
பொள்ளாச்சி திருவள்ளூவர் திடலில் அ.ம.மு.க. துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது-
கடந்த 5 ஆண்டுகால மத்திய பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. தி.மு.க. மத்திய அரசில் பங்கு வகித்த காலத்தில் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை. பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தவேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை.
பொள்ளாச்சி விவகாரத்தில் அரசின் நடவடிக்கை உலக மெங்கும் உள்ள தமிழர்களை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. பொள்ளாச்சி வழக்கில் ஆளுங்கட்சியினர் மீது சந்தேகம் எழுகிறது.
ஜெயலலிதா கடந்த பாராளுமன்ற தேர்தலை சந்தித்தபோது பா.ஜ.க.விற்கு எதிராக பிரசாரம் செய்தார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் பா.ஜ.க.வை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிக்கின்றனர். இது எந்த பயனையும் தரப்போவதில்லை. மத்தியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரப்போவதில்லை. எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காது.
உச்சநீதிமன்றத்தில் போராடி பரிசு பெட்டி சின்னத்தை பெற்று தேர்தலில் போட்டியிடுகிறோம்.
கோடம்பாக்கத்திற்கு அடுத்த படியாக பொள்ளாச்சியில் படப்பிடிப்புகள் அதிகம் நடைபெறுவதால் பொள்ளாச்சி பகுதியில் படப்பிடிப்பு நகரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். #dinakaran #bjp






