search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும்- சட்டசபையில் முக ஸ்டாலின் வலியுறுத்தல்
    X

    விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும்- சட்டசபையில் முக ஸ்டாலின் வலியுறுத்தல்

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #GajaCyclone #DMK #MKStalin #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்விநேரம் முடிந்ததும் கஜா புயல் பாதிப்பு குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு கட்சிகள் சார்பில் எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள். அதன்விவரம் வருமாறு:-

    துரை சந்திரசேகரன் (தி.மு.க.):-

    கஜா புயலினால் டெல்டா மாவட்டங்களும், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட வேறு மாவட்டங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டன. தமிழகத்துக்கே உணவு அளிக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகள் உணவுக்கு கையேந்தும் நிலை ஏற்பட்டது. அனைத்து பயிர்களும் சேதம் அடைந்தன.

    தென்னை, வாழை, கரும்பு அடியோடு நாசமாயின. ஏராளமான உயிரிழப்பும் ஏற்பட்டது. ஆனால் பிரதமர் இதைநேரில் வந்து பார்க்கவில்லை. இறந்தவர்களுக்கு அனுதாபமும் தெரிவிக்கவில்லை.

    இதை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை 3 நாட்கள் நேரில் சென்று பார்த்தார். 300 லாரிகளில் பொருட்களும் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். தமிழக அரசு புயல் நிவாரண உதவியை அறிவித்துள்ளது. மத்திய அரசிடம் கேட்கப்பட்ட நிதியில் மிகக்குறைந்த அளவே கொடுக்க அவர்கள் முன் வந்திருக்கிறார்கள்.

    இன்றைய நிலையில் அங்குள்ள விவசாயிகள் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டார்கள். பெரும்பாலான தென்னை மரங்கள் விழுந்துவிட்டதால் அதைநம்பி இருந்த விவசாயிகள் ஒரேநாளில் ஏழையாகி விட்டார்கள்.

    ஒரு தென்னை மரத்துக்கு 600 ரூபாய் இழப்பீடு என்று அரசு அறிவித்துள்ளது. அவர்களுக்கு 8 வழிச் சாலைக்கு அறிவித்ததுபோல் தென்னை ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க அரசு முன்வர வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் முதல்-அமைச்சர் நேரடியாக பார்வையிட வேண்டும். மத்திய அரசிடம் கூடுதல் நிதியை வற்புறுத்தி பெற வேண்டும். விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்.

    எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகள் பெற்றுள்ள வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். அதே கோரிக்கையை நானும் வலியுறுத்துகிறேன். விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமின்றி கூட்டுறவு வங்கிகளிலும் வாங்கிய கடன்களை இந்த அரசு தள்ளுபடி செய்ய முன்வர வேண்டும்.

    அதுமட்டுமல்ல, மாணவர்கள் வங்கிகளில் வாங்கிய கல்விக் கடன்கள், பெண்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கிய வங்கிக்கடன்கள், மீனவர்கள் படகுகளுக்காக வாங்கிய வங்கிக்கடன்களையும் இந்த அரசு முழுமையாக ரத்து செய்ய முன்வர வேண்டும். முதல்-அமைச்சர் ரத்து செய்வார் என எதிர் பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதேபோல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர், மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி ஆகியோரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி விரிவாக பேசினார்கள்.

    கே.ஆர்.ராமசாமி பேசும் போது, ‘‘சேலம்-சென்னை 8 வழிச்சாலை அமைக்க ஒரு தென்னை மரத்துக்கு ரூ.40 ஆயிரம் தருவதாக கூறினார்கள். ஆனால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சாய்ந்த தென்னை மரத்துக்கு ரூ.1400 தருவதாக கேள்விப்படுகிறேன். ஏன் இந்த பாகுபாடு. இதற்கு ஒரு நீதி அதற்கு ஒரு நீதியா? இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அரசு விளக்க வேண்டும்’’ என்றார். #GajaCyclone #DMK #MKStalin #TNAssembly
    Next Story
    ×