search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இணையதள சேவை முற்றிலும் முடக்கம் - வணிகர்கள், பொதுமக்கள் தவிப்பு
    X

    இணையதள சேவை முற்றிலும் முடக்கம் - வணிகர்கள், பொதுமக்கள் தவிப்பு

    தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இணையதள சேவை முற்றிலும் முடங்கியதால் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியாமல் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். #sterliteprotest
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.



    போராட்டக்காரர்கள் ஊர்வலமாக புறப்பட்டது முதல் போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூடு, கல்வீச்சு, பலியானவர்களின் புகைப்படம் என பல்வேறு விபரங்கள் உடனுக்குடன் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவியது.

    போராட்டத்திற்கு ஆதரவாகவும், அரசு மற்றும் போலீசாருக்கு எதிரான பதிவுகளையும் ஏராளமானோர் பதிவிட்டனர். இதனால் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவியது.

    போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்பட்டாலும் தொடர்ந்து தூத்துக்குடி பகுதியில் நடைபெறும் சம்பவங்கள் உடனடியாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. இதன் தாக்கத்தை போலீசார் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

    இதையடுத்து வன்முறை பரவாமல் இருப்பதற்காக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு (27-ந் தேதி வரை) இணையதள சேவையை நிறுத்தி தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டது.

    இதைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணி முதல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைய தள சேவை முற்றிலும் முடங்கியது.

    ஆனால் தொலைபேசி சேவையில் எந்தவித பாதிப்பும் இல்லை. வழக்கம் போல் மற்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பேச முடிகிறது.

    இணையதள சேவை முடங்கியதால் தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை சமூக வலை தளங்களில் பதிவிடுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொழில் ரீதியாக இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். #sterliteprotest
    Next Story
    ×