என் மலர்
செய்திகள்

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.11 லட்சம் மதுபாட்டில்களை வெளியே எடுத்து பெண்கள் போராட்டம்
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய அலுவலகம் அருகே இருந்த டாஸ்மாக் கடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த மார்ச் மாதம் அகற்றப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் ராயல் சிட்டி குடியிருப்பு பகுதியில் தனியார் இடத்தில் கட்டிடம் கட்டப்பட்டு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த மக்கள் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரியலூர் கலெக்டர் சரவணவேல்ராஜிடம் மனுவும் கொடுத்தனர்.
கடந்த 5-ந்தேதி அப்பகுதியை சேர்ந்த கிராமமக்கள் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சிலர் அங்கேயே சமைத்து சாப்பிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் அப்பகுதி பெண்கள் ஏராளமானோர் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் துணை மேலாளர் சித்ரா சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது டாஸ்மாக் கடையை இங்கிருந்து அகற்றினால் தான் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர்.
அதைத்தொடர்ந்து கிராம மக்கள் கடை முன்பு துடைப்பம் மற்றும் செருப்புகளை கட்டி தொங்க விட்டு விட்டு அங்கேயே சமைத்து சாப்பிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக இதில் பெண்கள் அதிகம் பேர் கலந்து கொண்டனர்.

நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சுத்தியல் மற்றும் கடப்பாரை மூலம் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்தனர். பின்னர் கடையின் உள்ளே இருந்த ரூ.11 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை எவ்வித சேதாரமும் இன்றி அப்புறப்படுத்தி, சாலையில் கொண்டு வந்து வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை லாரியில் ஏற்றி ஆர்.எஸ்.மாத்தூரில் உள்ள டாஸ்மாக்கடைக்கு கொண்டு சென்றனர்.
இந்த போராட்டம் குறித்து பெண்கள் கூறுகையில், டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை எவ்வித சேதாரமும் இல்லாமல் அப்புறப்படுத்தி கடையை காலி செய்துள்ளோம். மீண்டும் அதிகாரிகள் இந்த இடத்தில் கடை திறக்க முயன்றால் கட்டிடத்தையே இடித்து தரைமட்டமாக்குவோம் என்று ஆவேசத்துடன் கூறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






