என் மலர்
கிரிக்கெட் (Cricket)

'வெறும் காட்சிக்காகத்தான்'... மூடிய கதவுகளுக்குப் பின் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்' - அலெஸ்டர் குக்!
- ‘எப்பொழுதெல்லாம் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாடுகிறதோ, அப்போதெல்லாம் அவர்கள் மைதானத்தில் பயந்திருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது.
- ஒரு கிரிக்கெட் மைதானத்தில் கை குலுக்கிக் கொள்ளாதது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்
இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தில்தான் கைக்கொடுப்பதில்லை, ஆனால் மூடிய கதவுகளுக்கு பின் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலிஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.
பிப்.15ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு பிறகு, முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் அலாஸ்டர் குக், மைக்கேல் வாகன், டேவிட் லாயிட் மற்றும் பில் டஃப்னெல் ஆகியோர் பாட்காஸ்ட் ஒன்றில் பேசினர். அப்போது இந்தியா - பாகிஸ்தான் குறித்து பேசிய அவர்கள்,
'பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடுவதைப் பார்த்தால், அது ஒரு சமமற்ற போட்டி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது' என்று டஃப்னெல் கூறினார்.
மைக்கேல் வாகன், 'எப்பொழுதெல்லாம் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாடுகிறதோ, அப்போதெல்லாம் அவர்கள் மைதானத்தில் பயந்திருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது. அந்த ஒட்டுமொத்தச் சூழலும் கசப்பானது (சரியற்றது), இல்லையா? ஒரு கிரிக்கெட் மைதானத்தில் கை குலுக்கிக் கொள்ளாதது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்' என தெரிவித்தார்.
'ஆனால் அவர்கள் ரகசியமாக (கேமராக்கள் இல்லாத போது) பேசிக்கொள்வது இல்லையா? அவர்கள் அனைவரும் இயல்பாக பேசிக்கொள்கிறார்கள் என்று நான் எங்கோ படித்தேனே," என்று குக் கூறினார். மேலும் இது வெறும் வெளிப்பகட்டுக்காகத்தானே (Show)? மைதானத்தில் அவர்கள் கை குலுக்கிக் கொள்வதில்லை, ஆனால் கேமராக்கள் இல்லாத தனிப்பட்ட இடங்களில் அவர்கள் அனைவரும் பேசிக்கொள்கிறார்கள், சகஜமாகத்தான் இருக்கிறார்கள்' என தெரிவித்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தொடர்ந்து ஒரே குழுவில் இடம் பெறுவதை விமர்சித்த லாயிட், ஐசிசி திட்டமிட்டு இப்போட்டிகளை நடத்துவது விளையாட்டின் நேர்மையைக் குலைப்பதாகத் தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்தாண்டு நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரின்போது இந்திய அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்கவில்லை. இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. விளையாட்டில் அரசியலை கலக்கக்கூடாது எனவும், இது ஒரு நல்ல ஸ்போர்ட்மேன்ஷிப்பிற்கு அழகல்ல எனவும் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து தற்போது டி20 உலகக்கோப்பையில் கொழும்புவில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியின்போதும், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா ஆகியோர் டாஸ் போடும்போது கைகுலுக்கவில்லை.
இந்நிலையில் "மூடிய கதவுகளுக்குப் பின்னால்" அவர்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என அலிஸ்டர் குக் தெரிவித்தது கவனம் ஈர்த்துவருகிறது.






