என் மலர்
கிரிக்கெட் (Cricket)

41 ரன்தான் தேவை... 3 இந்திய வீரர்கள் மட்டுமே உள்ள சாதனை பட்டியலில் இணையும் ரோகித் சர்மா
- ரோகித் சர்மா இதுவரை 503 போட்டிகளில் விளையாடி 19,959 ரன்களைக் குவித்துள்ளார்.
- இதுவரை மூன்று வீரர்கள் மட்டுமே 20,000 சர்வதேச ரன்களைக் கடந்துள்ளனர்.
ராய்ப்பூர்:
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மூன்று வீரர்கள் மட்டுமே உள்ள பிரம்மாண்ட சாதனைப் பட்டியலில் ரோகித் இணைய அதிக வாய்ப்பு உள்ளது.
ராய்ப்பூரில் இன்று நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், அவர் இன்னும் 41 ரன்கள் எடுத்தால் வரலாற்றுச் சாதனை படைப்பார். சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களைக் கடந்த 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற அதிக வாய்ப்பு உள்ளது.
ஏனென்றால் 2025-ம் ஆண்டு ரோகித் சர்மாவுக்கு ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 561 ரன்களைக் குவித்துள்ளார். ராஞ்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் கூட 51 பந்துகளில் 57 ரன்கள் விளாசி நல்ல ஃபார்மில் உள்ளார். அதற்கு முன் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் சதம் அடித்து இருந்தார். தான் விளையாடிய கடைசி ஐந்து ஒருநாள் போட்டிகளில் மூன்று அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்து இருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்தும் சேர்த்து) ரோகித் சர்மா இதுவரை 503 போட்டிகளில் விளையாடி 19,959 ரன்களைக் குவித்துள்ளார். 20,000 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை அடைய அவருக்கு இன்னும் வெறும் 41 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மூன்று வீரர்கள் மட்டுமே 20,000 சர்வதேச ரன்களைக் கடந்துள்ளனர்.
அந்த பட்டியல்:
சச்சின் டெண்டுல்கர் - 34,357 ரன்கள்
விராட் கோலி - 27,808 ரன்கள்
ராகுல் டிராவிட் - 24,064 ரன்கள்
ராய்ப்பூரில் 41 ரன்கள் அடிக்கும் பட்சத்தில், இந்த ஜாம்பவான்களுக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா தனது பெயரை வரலாற்றில் பதிவு செய்வார்.






