என் மலர்
விளையாட்டு

பும்ரா, ரிஷாப் பண்ட், கே.எல். ராகுல்
ரோகித் சர்மா தலைமையின் கீழ் மூன்று கேப்டன்களை உருவாக்க திட்டம்: சேத்தன் சர்மா
ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது காலத்தில் மூன்று கேப்டன்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள், டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வரும் ரோகித் சர்மா தற்போது கூடுதலாக டெஸ்ட் அணி கேப்டனாகவும் செயல்பட இருக்கிறார்.
34 வயதாகும் ரோகித் சர்மா மூன்று வடிவிலான கேப்டன் பதவி மற்றும் தொடக்க வீரராக தொடர்ந்து செயல்பட முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால், அவர் அடிக்கடி தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்படுவது உண்டு. ஆனால், ரோகித் சர்மா முழு உடல் தகுதியுடன் உள்ளார். அவருடைய கேப்டன் பதவியின் கீழ் மூன்று கேப்டன்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேத்தன் சர்மா கூறுகையில் ‘‘மிகப்பெரிய கிரிக்கெட்டர் (ரோகித் சர்மா) கேப்டனாகும்போது, அதன்பின் தானாக, தேர்வுக்குழு ரோகித் சர்மாவிற்கு கீழ் கேப்டன்களை உருவாக்குவது குறித்து யோசிக்க விரும்பும்.
நாம் கே.எல். ராகுலை தென்ஆப்பிரிக்கா தொடரில் கேப்டனாக செயல்பட வைத்தோம். பும்ரா தென்ஆப்பிரிக்கா தொடரில் துணைக் கேப்டனாக செயல்பட்டார். இலங்கை தொடரிலும் துணைக் கேப்டனாக செயல்பட இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் ரிஷாப் பண்ட் துணைக் கேப்டனாக செயல்பட்டார். ரோகித் சர்மா தலைமையின் கீழ்கேப்டன்கள் உருவாக மிகப்பெரிய அளவிலான சாத்தியக்கூறுகள் உள்ளன. அடுத்த கேப்டன் யார் என்று கூறுவது கடினம். ஆனால், விரைவில் நாங்கள் பெயரை வெளிப்படுத்துவோம்’’ என்றார்.
இதையும் படியுங்கள்... அணியில் இடம் மறுப்பு: டிராவிட், கங்குலி மீது விருத்திமான் சஹா பாய்ச்சல்
Next Story






