search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவியை தாக்கிய போலீஸ்காரர் கைது
    X

    கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவியை தாக்கிய போலீஸ்காரர் கைது

    குஜராத் மாநிலத்தில் கார் விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவின் மனைவியை தாக்கிய போலீஸ் கான்ஸ்டபிள் சஞ்சய் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். #RavindraJadeja #Rivaba #Jadejawifeassault
    ராஜ்கோட்:

    இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா தற்போது ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வருகிறார். குஜராத் ஜாம்நகரில் இவருடைய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    ஜடேஜாவின் மனைவி ரீவா நேற்று முன்தினம் தனது தாயார் பிரபுல்லபாவுடன் ஜாம் நகரில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற கார், அங்கு வேகமாக வந்த போலீஸ்காரர் சஞ்சய் அகிர் என்பவரின் மோட்டார் சைக்கிள் மீது லேசாக மோதிவிட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர், ரீவாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அவரது கூந்தலை பிடித்து இழுத்து, தலையை கார் கண்ணாடி மீது பலமாக மோத வைத்து 3 முறை கன்னத்திலும் அறைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உடன் இருந்த அவரது தாயார் போலீசில் புகார் செய்தார்.

    இதற்கிடையே டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் மற்றும் மாநில முதல்-மந்திரி அலுவலகம் உள்ளூர் எம்.எல்.ஏ. தர்மேந்திரசிங்கை தொடர்பு கொண்டு இது தொடர்பாக குறிப்பு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டன.

    இதையடுத்து, ஜாம்நகர் மாவட்ட போலீஸ் நிர்வாகம் ஜடேஜாவின் மனைவியை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்குப் பதிவு செய்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாவட்ட போலீஸ் நிர்வாகம் சஞ்சய் அகிரை பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டது.  #RavindraJadeja #Rivaba #Jadejawifeassault
    Next Story
    ×