search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணிக்கு 8-வது தோல்வி
    X

    புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணிக்கு 8-வது தோல்வி

    புரோ கபடி லீக் போட்டியில் புனேரி பால்டன் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 33-20 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது.

    சென்னை:

    5-வது புரோ கபடி லீக் திருவிழா 12 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா 3 முறையும், அடுத்த பிரிவில் உள்ள 6 அணிகளுடன் ஒரு முறையும், ‘வைல்டு கார்டு’ ஆட்டம் ஒன்றிலும் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும். நேற்றுடன் 9-வது நகரத்தில் (டெல்லி) லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றன. 

    சென்னை சுற்று ஆட்டம் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இன்றைய போட்டிகளை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும், தமிழக துணைமுதல்வர் பன்னீர்செல்வமும் கண்டுகளித்தனர்.



    இன்று நடைபெற்ற 100-வது லீக் ஆட்டத்தில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, தீபக் ஹூடா தலைமையிலான புனேரி பால்டன் அணியை எதிர்கொண்டது. இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ள தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

    இப்போட்டியில் முதல் சுற்றில் இரு அணியினரும் புள்ளிகள் எடுக்கமுடியாமல் தடுமாறினர். இதனால் முதல் பாதியின் முடிவில் 12-11 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து நடந்த இராண்டாம் சுற்றில் புனே அணி சிறப்பான ஆட்டத்தை வெளிகாட்டியது.

     இரண்டாம் பாதியில் புனே அணி 8 புள்ளிகளை மட்டுமே விட்டுக்கொடுத்து 22 புள்ளிகள் எடுத்தது. இதனால் மொத்த புள்ளிகள் அடிப்படையில் 33-20 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெரும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி, 8வது போட்டியில் தொல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது.

    அதன்பின்னர் நடந்த மற்றொரு லீக் போட்டியில் சுகேஷ் ஹெக்டே தலைமையிலான குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி, பர்தீப் நார்வால் தலைமையிலான நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 30-29 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் அணி வெற்றி பெற்றது. 



    இன்றைய லீக் பிரிவு ஆட்டங்கள் முடிவில் 'ஏ' பிரிவு புள்ளிப்பட்டியலில் குஜராத் பார்ச்சூன் ஜெயண்ட்ஸ் அணி 62 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கும், புனேரி பால்டன் அணி 52 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கும் முன்னேறின. 'பீ' பிரிவு புள்ளிப்பட்டியலில் பாட்னா பைரேட்ஸ் அணி 66 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், தமிழ் தலைவாஸ் அணி 32 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் நீடிக்கின்றன.

    நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் புனேரி பால்டன் - உ.பி. யோத்தா, தமிழ் தலைவாஸ் - ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
    Next Story
    ×