என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- ஜாதக கட்டத்தில் 6-வது இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.
- சிலருக்கு ஆலயங்களுக்கு செல்ல முடியாத நிலை இருக்கும்.
ஜாதகத்தில் ஒவ்வொரு கட்டத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு என்பது உங்களுக்கு தெரிந்ததுதான். ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 6-வது இடம் என்பது ஒவ்வொருவரது வாழ்க்கைக்கும் முக்கியமானது. ஏனெனில் இந்த 6-வது இடம்தான் கடன், நோய், எதிரிகள் ஆகியவற்றை நிர்ணயிப்பதாகும்.
ஜாதக கட்டத்தில் 6-வது இடம் சுத்தமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் கடன் பிரச்சினைகள் வராது. மிகப்பெரிய நோய்கள் தாக்காது. எதிரிகள் தொல்லையும் இருக்காது. எனவே 6-வது இடம் வேறு எந்த கிரக சேர்க்கையும் இல்லாமல் தனித்து இருப்பது நல்லது.
ஆனால் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு 6-வது இடத்தில் நிச்சயமாக ஏதாவது ஒரு கிரக சேர்க்கை இருக்கும். 6-வது இடத்தில் எந்த கிரகம் உச்சம் பெற்று இருக்கிறதோ அதற்கு ஏற்ப பலன்கள் அமையும். 6-வது இடத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது போன்றவை உட்கார்ந்திருந்தால் நோய் தாக்கம் இருக்கும் என்பார்கள்.
பொதுவாக 6-வது இடத்தில் சூரியனும் சேர்ந்து இருந்தால் தலை வலி பிரச்சினை இருக்கும். சந்திரன் இருந்தால் தைரியம் குறையும். செவ்வாய் இருந்தால் உடல் சூடு நோய்கள் வரும். புதன் இருந்தால் நரம்பு தளர்ச்சி உண்டாகும். வியாழன் இருந்தால் உடலில் எப்போதும் சோர்வு காணப்படும். சுக்கிரன் இருந்தால் சர்க்கரை நோய் உண்டாகும். சனி இருந்தால் பித்தம் மற்றும் மர்ம நோய்கள் ஏற்படும். ராகு இருந்தால் வாயு தொல்லையும், கேது இருந்தால் தோல் வியாதியும் ஏற்படும் என்று ஜோதிடர்கள் கணிப்பது உண்டு.
அந்த அளவுக்கு 6-வது இடம் நோய், கடன், எதிரி ஆகிய மூன்றையும் நிர்ணயிப்பதாக அமைந்துள்ளது. ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு 6-க்கு உடையவன் வலு பெற்று இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு கடன் இருந்து கொண்டே இருக்கும். இதைதான் கடன் தோஷம் என்று குறிப்பிடுவது உண்டு.
மேலும் இந்த தோஷத்தால் எதிரிகளாலும், நோய்களாலும் ஒருவருக்கு தொடர்ச்சியாக தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். இந்த தோஷத்தை உணர்ந்து கொள்வது என்பது எல்லோராலும் இயலாது. கடன் வாங்கும்போது அதை திருப்பி செலுத்துவதற்கான திட்டமிடல் இல்லாமல் செய்வதை இந்த தோஷம் ஏற்படுத்தி விடும்.

அதுபோல ஒருவருக்கு நோய்களையும் அவர்கள் அறியாமலேயே இந்த தோஷம் உண்டாக்கும் ஆற்றல் கொண்டது. பெரும்பாலும் நோய் தாக்கினால் பரம்பரையை குறை சொல்வார்கள். ஆனால் தற்போது தானாக தேடிக்கொள்ளும் நோய்கள் அதிகரித்து விட்டது. இதைத்தான் 6-ம் இடத்தில் தோஷம் என்று ஜோதிடர்கள் குறிப்பிட்டு சொல்கிறார்கள்.
ஒருவரது சுற்றுச்சூழல், உணவு பழக்க வழக்கம், செய்யும் வேலை, உட்கொள்ளும் தவறான மருந்துகள் போன்றவையும் நோய் தாக்கத்துக்கு அடிப்படை காரணங்களாக இருக்கின்றன. இவையெல்லாம் 6-ம் இடம் சுத்தம் இல்லாமல் இருப்பதுதான் காரணமாகும். 6-ம் இடம் சுத்தமாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்து கொண்டே இருக்கும். நோய் தாக்கமும் அதிகமாக வராது.
அதுபோல தான் 6-ம் இடம் சரியில்லா விட்டால் கண்டபடி பேசி எதிர்ப்புகளை சம்பாதித்து விடுவார்கள். அதிலும் 6-ம் இடத்தில் கிரக சேர்க்கை மோசமாக அமைந்து விட்டால் எதிரிகளால் ஏற்படும் தொல்லைக்கு அளவு இல்லாமல் போய் விடும். எனவே 6-ம் இடம் என்பது கடன், நோய், எதிரி ஆகிய மூன்று பிரச்சினைகளையும் நிர்ணயம் செய்வதாக இருக்கிறது.
இந்த மூன்று பிரச்சினைகளையும் எதிர் கொள்ள வேண்டும் என்றால் 6-ம் இடத்து தோஷம் எப்படி இருக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 6-ம் இடத்துபடி கடன் தொல்லை இருந்து கொண்டே இருந்தால் உரிய பரிகாரம் செய்வதன் மூலம் அந்த பிரச்சினையை போக்கிக் கொள்ள முடியும்.
இதற்கு மிகப்பெரிய செலவு ஒன்றும் ஆகாது. குலதெய்வ வழிபாட்டை செய்தாலே போதுமானதாகும். மூன்று மாதம் பவுர்ணமி தினத்தில் குலதெய்வ ஆலயத்துக்கு சென்று அபிஷேகம் செய்து தேவையான நைவேத்தியங்களையும் படைத்து மனமுருக வேண்டிக் கொண்டாலே போதும் கடன் பிரச்சினைகளை குலதெய்வம் தீர்த்து வைக்கும்.
பெரும்பாலும் முற்பிறவிகளில் செய்த வினைகள் காரணமாகவே 6-ம் இடத்து கிரக சேர்க்கைகள் தாறுமாறாக ஏற்பட்டு கடன் பிரச்சினைக்கு வழி வகுக்கும். குல தெய்வத்தை எந்த அளவுக்கு வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இந்த கடன் பிரச்சினையில் மீண்டு வர முடியும்.
சிலர் சொந்த ஊரை விட்டு வெளியூரில் பணி நிமித்தமாக தங்கி இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்தடுத்து 3 மாதங்கள் குல தெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத நிலை இருக்கலாம். இதற்காக கவலை வேண்டாம். குல தெய்வ படத்தை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட்டால் போதும். ஆனால் அந்த வழிபாட்டுக்கு சில விதிமுறைகள் இருக்கின்றன.

பவுர்ணமி தினத்தன்று குல தெய்வ படத்தை நன்கு அலங்கரிக்க வேண்டும். உங்கள் குல தெய்வம் எந்த திசையில் இருக்கிறதோ அந்த திசை நோக்கி 5 விளக்குகளில் நெய் தீபம் ஏற்ற வேண்டும். குல தெய்வத்துக்கு பாரம்பரியமாக என்ன நைவேத்தியம் படைக்கிறார்களோ அதை படைத்து வழிபட வேண்டும். 9 பவுர்ணமி தினங்களில் இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக செய்து வந்தால் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியும்.
வைணவ பக்தர்கள் சுதர்சனரை வழிபட்டால் கடன் பிரச்சினைகளில் இருந்து மீள முடியும். ஆலயத்துக்கு செல்லும்போது சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு செல்ல வேண்டும். அவரை வழிபட்டு 12 முறை சன்னதியை சுற்றி வந்து வழிபட்டால் கடன் பிரச்சினை பனிபோல் நீங்குவதை அனுபவப் பூர்வமாக உணர முடியும். சனிக்கிழமை அல்லது புதன் கிழமைகளில் இந்த வழிபாடு செய்வது நல்லது.
இது இல்லாமல் வேறு சில வழிபாடுகளும் கடன், நோய், எதிரிகள் பிரச்சினைக்கான தோஷத்தை தீர்க்க உள்ளன. தினமும் காலை பசு மாட்டுக்கு பழமும், புல்லும் கொடுத்து வழிபடுவது மிகப்பெரிய சிறந்த பரிகாரம் ஆகும். பசு வழிபாடு மூலம் கடன் தோஷம் காணாமல் போய் விடும். பசுக்களை மனம் குளிர செய்தால் வீட்டில் இருந்து வந்த ஏழ்மை நீங்கி செல்வ செழிப்பு உண்டாக தொடங்கும்.
அதுபோல தினமும் பறவைகளுக்கு உணவு வைப்பது நோய் தீர்க்கவும், கடன் தீர்க்கவும் மிக சிறந்த பரிகாரம் ஆகும். வசதி வாய்ப்பு இருப்பவர்கள் திருதியை திதி தினத்தன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். இந்த அன்னதானம் என்பது ஏழைகளின் ஒரு நேர வயிற்று பசியையாவது தீர்க்கும் வகையில் இருக்க வேண்டும். இந்த அன்னதானத்தால் ஏழைகள் மனம் குளிர்ந்தால் கடன் தோஷம் நிவர்த்தி ஆகும்.
செவ்வாய்க்கிழமைகளில் வரும் பிரதோஷத்தை ருண விமோசன பிரதோஷம் என்று சொல்வார்கள். அந்த பிரதோஷ நாளில் சிவாலயத்துக்கு சென்று நந்தி பகவான் அபிஷேகத்துக்குரிய பொருட்களை வாங்கி கொடுத்து வழிபட்டால் கடன் தோஷம், நோய் தோஷம், எதிரிகள் தோஷம் மூன்று தோஷங்களும் அடியோடு விலகும்.
இந்த பிரதோஷத்துக்கு நந்தி அபிஷேகத்துக்காக பசும் பால், இளநீர் ஆகிய இரண்டையும் வாங்கி கொடுத்து அந்த அபிஷேகத்தை நீங்களும் கண்குளிர பார்க்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முற்பிறவிகளில் இருந்து தொடர்ந்து வரும் கடன் பிரச்சினை களுக்கு விடிவு ஏற்படும்.
பொதுவாக கடன் என்றதும் பொருளாதார ரீதியிலான கடனை மட்டுமே பெரும்பாலான வர்கள் நினைக்கிறார்கள். ஒருவருக்கு பிறவி தோறும் எத்தனையோ கடன்களை தீர்க்க வேண்டிய பொறுப்புகள் உள்ளன. இந்த பிறவியிலும் அந்த கடன்கள் தொடரும். அதை தெரிந்து கொண்டு வழிபாடு செய்வது நல்லது.
ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு கடன் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் கும்பகோணத்தில் திருவாரூர் செல்லும் வழித்தடத்தில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருச்சேறை தலத்துக்கு செல்ல வேண்டும். அங்கு கடன் நிவர்த்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இது கடன் நிவர்த்தி செய்யும் அற்புதமான தலமாகும்.
இந்த தலத்து சிவபெருமானை செவ்வாய்க் கிழமைகளில் வரும் ருண விமோசன பிரதோஷத்தில் வழிபட்டால் எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் அது நீங்கும் என்பது பல்லாயிரக்கணக்கானவர்களின் அனுபவம் ஆகும். ஜோதிட ரீதியாக கடன் பிரச்சினை தீர வேண்டும் என்றால் சனி பகவானின் அருள் பார்வை வேண்டும் என்பார்கள். சனி பகவான் ஆதிக்கம் பெற்ற ஆலயங்களுக்கு சென்று வழிபட்டால் கடன் தோஷம் படிப்படியாக குறையும்.
சிலருக்கு ஆலயங்களுக்கு செல்ல முடியாத நிலை இருக்கும். அவர்கள் வீட்டிலேயே சில குறிப்பிட்ட பரிகாரங்களை செய்யலாம். எதுவுமே செய்ய முடியாவிட்டால் பாசி பருப்பு வாங்கி தானம் செய்யுங்கள் போதும். கடன் தோஷம், நோய் தோஷம், எதிரிகள் தொல்லை தோஷம் விலகி சென்று விடும்.
சனிக்கிழமைகளில் சனி ஓரை நேரத்தில் விநாயகர் அல்லது ஆஞ்சநேயரை வழிபட்டாலும் கடன் தோஷத்தில் இருந்து விடுபட வாய்ப்பு உள்ளது. கடன் தோஷம் கஷ்டப்படுத்திக் கொண்டே இருக்கும் நிலையில் மேலே குறிப்பிட்ட ஆலய வழிபாடுகளில் ஏதாவது ஒன்றை செய்து நிவர்த்தி பெறலாம்.
- காதல் என்பது மனம் சார்ந்த உணர்வா? வம்சம் தழைக்க இயற்கை வழங்கிய கொடையா? என்ற கேள்விக்கு எத்தனை யுகங்கள் கடந்தாலும் பதில் சொல்ல முடியாது.
- பெற்றோர்கள் உடன் பிறந்தவர்கள் உங்கள் மேல் உள்ள காதலால் தான் உங்களை இழக்க மனமின்றி தவிக்கிறார்கள்.
காதல் ஒரு சுகமான அனுபவம். பருவ வயதை கடக்கும் அனைவருக்கும் வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சுவாரசியமான சம்பவம். ஜடப்பொருளைத் தவிர இந்த பிரபஞ்சத்தில் உருவாகும் அனைத்து ஜீவராசிகளுக்கும் காதல் உணர்வு உண்டு. காதல் என்பது வெறும் இனக்கவர்ச்சி மட்டுமல்ல. வாழ்க்கை பயணத்தில் சந்திக்கும் நபர் மேல் உண்மையான அன்பு வைத்து இருந்தால் அது உள்ளுணர்வுடன் கலந்து எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஆன்மாவுடன் இணைப்பில் இருக்கும்.ஜோதிட ரீதியாக ஒருவரின் ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி பலம் பெற்றால் அடுத்தடுத்து காதல் உருவாகிக் கொண்டே இருக்கும். இவர்கள் எந்த வயதிலும் காதல் உணர்வுடனே இருப்பார்கள்.ஆழ்மன உணர்ச்சியை தூண்டும் சம்பவங்கள் இவர்களின் அடுத்தடுத்த காதலுக்கு காரணமாக அமைகிறது. தான் ரோல் மாடலாக நினைக்கும் நபர்கள், சமுதாய அந்தஸ்துள்ள நபர்கள், சினிமா நடிகர் நடிகைகள், விளையாட்டு வீரர்கள் என மிகப் பெரிய காதல் லிஸ்ட்டு வைத்திருப்பார்கள். இவர்களுடன் மனதால் மானசீகமாக குடும்பம் நடத்துவார்கள். இவ்வளவு ஏன் இவர்கள் கடவுளை கூட காதல் உணர்வுடன் தான் பார்ப்பார்கள்.
ஐந்தாம் பாவகமும் காதலும்
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 5-ம்மிடம் மனம் புத்தியைக் குறிக்கும். ஒருவரின் விருப்பு வெறுப்புகளைத் தெரிவிக்குமிடம். எனவே காதலிப்பவர்களுக்கு முதலில் 5-ம்மிடம் வேலை செய்ய வேண்டும்.
பெரும்பான்மையாக ஐந்தாமிடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசை புத்தி காலங்களில் அல்லது சுக்ரன், ராகு தசை புத்தி காலங்களில் ஒருவருக்கு காதல் ஏற்படும். அதே போல் ஒருவரின் ஜாதகத்தில் காதலுக்கான காரக கிரகம் புதன் மற்றும் 5,7-ம் பாவகத்தை வைத்தே ஒருவரின் திருமண வாழ்வைப் பற்றி கூற முடியும். 2,5, 7, 11ம் பாவக தொடர்பு மற்றும் புதன், கேதுவின் சம்பந்தம் வைத்தும் ஒருவரின் திருமணம் எத்தகையது என்பதை எளிதாக கூற முடியும். காதல் கிரகங்கள் 4-ம் அதிபதியோடு தொடர்பு ஏற்பட்டால் பள்ளி, கல்லூரி காலங்களிலும் ஒன்பதாம் பத்தாம் அதிபதிகளுடன் தொடர்பு ஏற்பட்டால் வேலை செய்யும் இடத்தில் அல்லது மத்திம வயதில் காதல் வரும்.
காதலும் சுக்ரன் ராகுவும்
சுக்ரன் என்ற பெயரைக் கேட்டாலே மனதில் பரவசம் பெருகும். வயது வித்தியாசமின்றி ஒருவரின் மனதில் இன்ப அலைகளை பரவ விடுவதில் சுக்ரனுக்கு நிகர் சுக்ரனே. காதலுக்கும், காமத்திற்கும் அடிமையாகாத நபரை உலகில் பார்ப்பது அரிது. எல்லா மனிதனுக்கும் பொதுவான, சிற்றின்பத்தை காதல் ஆர்வத்தை தூண்டும் கிரகம் சுக்கிரன். காதல் மற்றும் பெண் ஆசைக்கு பல கோட்டைகள் சாம்ராஜ்ஜியங்கள் சரிந்துள்ளதை நாம் கேள்விப்பட்டு உள்ளோம். அந்த ஆசையை தூண்டுவது சுக்கிரன் தான். ஒரு மனிதனுக்கு அழகு கவர்ச்சியை கொடுப்பதும் சுக்கிரன் தான். ஒரு மனிதன், இப்பூமியில் வாழ்ந்தான் என்பதற்கு அடையாள மாக, தன் வாரிசை விட்டுச்செல்லும் அமைப்பிற்கு மூலகாரணமான, காதல், இல்லற இன்பத்தை அனுபவிக்கும் அமைப்பை கொடுக்கும் சிற்றின்ப அரசன் சுக்ரன் நவகிரகங்களில் வலிமை யானவரான ராகு. உலக இயக்கத்தை தன் பிடியில் வைத்தி ருப்பதுடன் ஒளி கிரகங்களான சூரிய, சந்திரர்களை தன் நிழலால் தோஷமடையச் செய்பவர். ராகு மனித தலையும் பாம்பின் உடலும் கொண்டவர். பாதி மனிதன் பாதி மிருகம்.

ஒருவரின் ஜாதகத்தில் ராகு நின்ற இடம் சென்ற பிறவியில் நிறைவேறாத ஆசை அல்லது அளவே இல்லாத ஆசை. ஏற்படும் ராகுக்கு சொந்த வீடு இல்லாததால் தான் இருக்கும் வீட்டையை சொந்த வீடாகிக் கொண்டு தன்னோடு சேர்ந்த கிரகங்களின் பலனைக் கொடுப்பார்.ஒரு ஜாதகத்தில் ராகு எந்த இடத்தில் இருக்கிறாரோ, அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறாரோ, அந்த கிரக காரகத்துவங்களும்,பாவக கிரக காரகத்துவ உறவுகள் தார்மீகமற்ற ஆசைகளை ஏற்படுத்து கிறார். ஒரு மனிதனுக்கு, எந்தெந்த வயதில், என்னென்ன தேவையோ, அது, அந்தந்த வயதில், சரியான அளவில் கிடைத்தே தீர வேண்டும் . அதுதான் முழுமையான வாழ்க்கை வாழ்ந்ததற்கு முழு ஆதாரம். ராகுவோ, கேதுவோ தன்னுடன் 3 டிகிரி அளவில் நெருக்கமாக இருக்கும் கிரகங்களை கிரகணப்படுத்திவிடும். இதில், ராகு பிரம்மாண்டத்தையும், உலக இன்பங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொடுக்கும் கிரகம். இதில் பருவ வயதை ஒட்டி சுக்கிரனை கிரகணம் செய்த, ராகு திசை நடந்தால், அதிலும் குறிப்பாக சுக்கிரனின் வீடுகளான, ரிஷபம் துலாத்தில் ராகு, சுக்கிரன் இருந்து ராகு திசை நடந்தால் காதல் கண்டிப்பாக ஏற்படும். சுக்கிரன் வலுவாகி சனியுடன் நெருக்கமாக இணைந்து, தசை நடந்தால் தனக்கு ஒவ்வாத அமைப்பில், எதிர்பாலினத்தின் மேல் ஈர்ப்பு ஏற்படும். சுக்கிரனின் வீடுகளில் ராகு அமர்ந்து, ராகு ,சுக்கிரன் தொடர்பு ஏற்பட்டு, சுக்கிர புத்தி அல்லது ராகு புத்தியோ நடந்தாலும்,இது போன்ற காலகட்டங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மேலும் ராகு தசை சுக்ர தசை, சுக்ர புத்தி ராகு புத்தி, போன்ற காலகட்டங்களில் எவ்வளவு வயது முதிர்ந்தவராக இருந்தாலும் காதல் உணர்வு அரும்பும்.பலர் பாலியல் வழக்கில் சிக்குவது இது போன்ற காலகட்டத்தில் தான். முறைகேடான உறவை மட்டுமே அடைய நினைக்கும் எண்ணத்தை தூண்டி காதலால் அசிங்கம், அவமானம், நிம்மதியின்மை நீடிக்கச் செய்வார்கள்.
டீன் ஏஜ் பருவம்:-
மனிதன் வாழ்வில் இரண்டாம் நிலையில் அடியெடுத்து வைக்கும் காலம். முப்பது வரை தொடரும் இப்பருவத்தை நினைத்தாலே இனிக்கும் பருவமெனச் சொல்லலாம். புதிய நண்பர்களின் அறிமுகம், அவர்களுடன் கேலி, கொண்டாட்டங்கள், நள்ளிரவு விருந்துகள், விதவிதமான பைக், கார்களில் நெடுந்தூர திரில் பயணங்கள், காதல் உணர்வு என வாழ்க்கை படு சுவாரஸ்யமாக தொடங்குவது இப்பருவத்தில்தான். தவறுகளில் இருந்து பாடங்கள் கற்க வேண்டிய தருணமும் இதுவேயாகும். அதேசமயம், கேலி, கொண்டாட்டங்களும், காதலும் மட்டுமே இந்த நிலையை அர்த்தப்படுத்தி விடாது. உண்மையில் நாம் யார், வாழ்வில் என்னவாக போகிறோம், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகள் ஒருவருக்கு இந்த நிலையில் எழுந்தால் அதுவே இந்த நிலையை முழுமை யாக்கும். மேலும், இந்த நிலையில் பெரும்பாலும் மனம் சார்ந்து உணர்ச்சிப்பூர்வமாக செயல்படுவதையே விரும்புவார்கள். அவ்வாறு செயல்பட விரும்பும்போது மனம் எல்லைகள் இல்லாமல், கட்டுப்பாடற்று தன் போக்கில் பயணப்பட விரும்பும்.
காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்
இந்த பாடல் வரிகளில் இருந்து காதல் என்ற உணர்வு உயிரையும் எடுக்கும் என்று உணர முடிகிறது. உலகம் தோன்றியது முதல் காதல் இருந்தாலும் இந்த நவநாகரீக உலகில் நடக்கும் காதல் பிரச்சினைகள் மனித குலத்தையே வெட்கி தலை குனிய வைக்கிறது.

ஒருவரின் உணர்வை தூண்டும் காதலை முறையான காதல், முறை தவறிய காதல் என வகைப்படுத்தலாம். அறியாத இளம் பருவத்தினர் இனக்கவர்ச்சியால் பருவக் கோளாறினால் செய்யும் காதலை கூட அறியாப் பருவம் என்று மன்னிப்பு கொடுக்கலாம். முறையற்ற கீழ்தரமான காதல் பல குடும்பங்களை கூறு போடுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். முறையற்ற காதலால் எத்தனையே கணவன்கள், மனைவிகள், குழந்தைகள், பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள்,
நண்பர்கள் பாதிகப்பட்டு இருக்கிறார்கள். புனிதமான இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் வாழ்பவர்களுக்கு இந்த அந்நிய நாட்டு கலாச்சாரம் ஒத்து வருமா?அடுத்தவரின் குடும்பத்தை கெடுக்கும் தவறான நட்பு போற்றுதலுக்குரியதா? அடுத்தவரின் மனைவியை பெற்ற தாய்க்கு சமமாக நினைக்க வேண்டும். சக பெண்ணின் கணவரை உடன் பிறந்தவராக பாவிக்க வேண்டும் என்பதே தமிழர்களின் மரபு. ஒருவர் செய்யும் தவறால் இரண்டு குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது என்ற உணர்வு வராதா?பருவ வயதினர்கள் முதல் வாழ்நாளை எண்ணும் முதியவர்கள் வரை ஏதாவது ஒரு காதல் உணர்வு ஆழ்மனதில் உருத்திக் கொண்டு தான் இருக்கிறது.
எந்த வகை காதலாக இருந்தாலும் ஐந்தாம் அதிபதி, ஐந்தில் நின்ற கிரகம், ஐந்தாமிடத்தை பார்த்த கிரகம், ஐந்தாம் அதிபதியுடன் இணைந்த கிரகங்கள் மற்றும் புதன்+கேது சம்பந்தமுமே காதலுக்கு காரக கிரகங்களாகும். புதனும் கேதுவும் வைத்த புள்ளியை கோலமாகவும் அலங்கோலமாகவும் செய்வது உடன் இருக்கும் மற்ற கிரகங்களின் கோலாட்டம் என்றால் மிகைப்படுத்தலாகாது. ஒரு நாளைக்கு பத்து ஜாதகம் பார்த்தால் ஐந்து ஜாதகத்தில் காதல் பிரச்சினை தான் பிரதானமாக இருக்கிறது.
பன்னிரண்டு பாவகங்களில் ஏன் ஐந்தாம் பாவகத்தை காதலுக்கு ஒப்பிடு கிறார்கள் என்று ஆய்வு செய்தால் ஐந்தாமிடம் என்பது உள்ளுணர்வு, ஆழ்மனம் மற்றும் பூர்வ ஜென்ம தொடர்ச்சி. பூர்வ ஜென்ம வினையின் தாக்கத்தால் தொடர்ந்து வரும் உணர்வு என்பதால் தான் யாராலும் கட்டுப்ப டுத்த முடியாத ஒரு சமுதாய வியாதியாக பரவியிருக்கிறது.
காதலிப்பதும், காதலிக்கப்ப டுவதும் சுகமான அனுபவம் தான்.தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் காதல் வயப்படாதவர்கள் இருப்பது அரிது. காதல் என்பது மனம் சார்ந்த உணர்வா? வம்சம் தழைக்க இயற்கை வழங்கிய கொடையா? என்ற கேள்விக்கு எத்தனை யுகங்கள் கடந்தாலும் பதில் சொல்ல முடியாது. ஜோதிட ரீதியாக இந்தக் கேள்விக்கு விதிப் பயன், வினைப் பதிவு என்று எளிதாக கூறிவிடலாம். மனிதர்களுக்கு மட்டுமல்ல உலகில் தோன்றி மறையும் அனைத்து ஜீவராசிகளுக்கும் காதல் உணர்வு உண்டு.பகுத்தாயும் திறன் கொண்ட மனிதர்கள் உணர்வை அடக்க முயல வேண்டும்.உலகின் ஒவ்வொரு மூலையிலும் தன்னைச் சார்ந்தவர்களின் நலன் கருதி காதலர்கள் நண்பர்களாக வாழ்கிறார்கள் அல்லது எந்த தொடர்புமின்றி மனதளவில் தனிமையில் அழுது வாழ்கிறார்கள்.முறையற்ற மற்றும் குலகவுரவத்திற்கு விரோதமான காதல் நிச்சயமாக தவறுதான். தன் சுகத்தை விட தன்னைச் சார்ந்த வர்களின் உணர்வு மிக முக்கியம். பெற்றோர்கள் உடன் பிறந்தவர்கள் உங்கள் மேல் உள்ள காதலால் தான் உங்களை இழக்க மனமின்றி தவிக்கிறார்கள். அதனால் காதலிக்கும் முன்பு குடும்ப சூழலுக்கு இது ஒத்து வருமா? என்று யோசிக்க வேண்டும்.தன் நலத்தை மட்டும் யோசிக்க கூடாது.பெற்றோர் தேர்ந்தெடுத்த வரை திருமணம் செய்வது நல்லது.
பரிகாரம்
பலர்மன வேதனையுடன் ஜோதிடரை அணுகும் போது சொல்வது உறவுகளின் விருப்பம் என்ன? பரிகாரம் என்ன செய்தால் என் பிள்ளைய நான் மீட்க முடியும் என்பதாகவே இருக்கிறது. ஜோதிடர் ரீதியாகஇந்த கேள்விக்கு தீர்வு தர முடியும்.காதலுக்கு காரக கிரகம் புதன். காதலுக்கான தைரியத்தை தந்தாலும் காதல் பிரிவினையை தரக் கூடிய கிரகங்கள். செவ்வாய் மற்றும் ராகு.கோட்சார புதன் ஜனன கால செவ்வாய் மற்றும் ராகுவுடன் சம்மந்தம் பெறும் காலங்களில் பிள்ளைகளுடன், முறையற்ற நட்பில் இருப்பவர்களுடன் பேசும் போது நல்ல தீர்வு கிடைத்து பிரச்சினை முடிவுக்கு வருகிறது.
கோட்சாரத்தில் லக்னாதிபதி பன்னிரண்டில் மறையும் போது அல்லது கோட்சாரத்தில் ஆறு,எட்டு,பன்னிரண்டாம் அதிபதிகள் லக்னாதிபதி மேல் சஞ்சரிக்கும் போது எடுக்கும் முயற்சிகள் பாதிக்கப்பட்டவர் களின் மனதில் தெளிவை ஏற்படுத்துகிறது.
உளவியல் ரீதியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றால் பத்தாவது கிரகமான தகவல் தொடர்பு சாதனமான செல்போன் பலரின் வாழ்க்கையில் விளையாடுகிறது. கொரோனா காலத்தில் மிதுனத்தில் சஞ்சாரம் செய்த கோட்ச்சார ராகு கல்வி நிறுவனங்களை மூடச் செய்து அனைத்து பிள்ளைகளுக்கும் ஆன்லைன் வகுப்பு என்ற போர்வையில் செல்போனை பரிசாக தந்து விட்டது.கிரகங்கள் தங்கள் கடமையை செய்யட்டும். பெற்றோர்கள் தங்களின் பங்களிப்பாக செல்போனை அவசிய தேவைக்கு மட்டும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். பிள்ளைகள் செல்போனை பயன்படுத்தும் போது பெரியவர்கள் கண்காணிக்க வேண்டும்.
பிள்ளைகளை தவறான பிரச்சினைக்காக தகாத வார்த்தைகளால் திட்டக்கூடாது, அடிக்கக் கூடாது, சபிக்க கூடாது. அன்பால் திருத்த முயற்சிக்க வேண்டும். புதன்கிழமை மதியம் 12 முதல் 1.30 மணிவரையான ராகு வேளையில் வெள்ளை பசுவிற்கு பசும்புல்லை உண்ணத் தர வேண்டும். இரவில் உறங்கும் போது தலைமாட்டில் ஒரு செம்பு நிறைய நீர் நிரப்பி வைக்கவும். காலையில் அந்த நீரை செடிக்கு ஊற்ற வேண்டும்.
தவறான உறவுகளால் வரும் பிரச்சினைகளுக்கு கருட பகவானை வழிபடலாம்.
- ராணுவத்திற்கு தரமான உதிரிபாகங்கள் தயாரித்து கொடுத்ததற்காக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமால் பாராட்டப்பட்டவர் தங்கவேலு.
- குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி செடிகளை வளர்ப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த நீர் பாசன முறையை, வீட்டில் வளர்க்கும் அனைத்து செடிகளுக்கும், மரக்கன்றுகளுக்கும் பயன்படுத்தலாம்.
நீரின்றி அமையாது உலகு...
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர் வாழ தண்ணீர் அவசியமானது. அவற்றில் தாவரமும் விதி விலக்கல்ல. மனித உடல் 70% நீரைக்கொண்டது. ஆனால் தாவரம் 90% நீரை கொண்டுள்ளது.
பயிர்கள் செழித்து வளர தண்ணீர் முக்கியமானதாக இருக்கிறது. அது சரியாக கிடைக்காவிட்டால் பயிர் வளராமல் பட்டுப் போய் விடும். பயிர்களுக்கு தேவையான அளவு தண்ணீர், தேவையான நேரத்தில் கிடைக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். இதனால் விவசாயத்தில் நீர் பாசன முறை பின்பற்றப்படுகிறது.
நீர்ப்பாசனத்தை பொறுத்தவரை பாரம்பரிய முறை மற்றும் நவீன முறை என இரு வகைப்படுத்தலாம். நவீன முறையில் தெளிப்பான் மற்றும் சொட்டு நீர் பாசன அமைப்பு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. நீர்ப்பாசனம் என்பது பயிர்களுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அது பயிர் விளைச்சலை கெடுத்து விடும்.
தற்போதைய நவீன காலக்கட்டத்தில் அனைத்து தொழில்களிலும் புதுமையை புகுத்த வேண்டியிருக்கிறது. அதுபோலத்தான் விவசாயத்திலும் புதுமை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. அதிலும் விவசாயத்திற்கு முன்பு போல் வேலையாட்கள் போதிய அளவில் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் அவர்களுக்கு கூலி அதிகமாக கொடுக்க வேண்டி இருக்கிறது.
இதன் காரணமாக பயிரை விளைவிக்க அதிக செலவு ஆகிறது. போதிய தண்ணீர் கிடைக்காமை, வேலை ஆட்கள் இல்லாமை இப்படி பல பிரச்சனைகளை சமாளித்து பயிரிட்டு அறுவடை செய்தால் போதிய வருமானம் கிடைப்பதில்லை.
இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காணும் வகையில் நீர்ப்பாசனத்தில் புதிதாக ஒரு முறையை தொழிலதிபர் ஒருவர் கண்டறிந்து இருக்கிறார். நெல்லை மாவட்டம் கன்னங்குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு. இவர் மும்பையில் ராணுவ தளவாடங்களுக்கான ரப்பர் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனமான VAKO SEALS-ன் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். இவர் இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

தொழிலதிபர் தங்கவேலு
1996-97 ஆண்டுகளில் இந்திய ராணுவத்திற்கான தளவாடங்களுக்கு ரப்பர் உதிரிபாகங்கள் தயாரித்து கொடுத்தற்கு அப்போது மத்திய ராணுவ மந்திரியாக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டசிடம் தேசிய விருது பெற்றிருக்கிறார். ராணுவத்திற்கு தரமான உதிரிபாகங்கள் தயாரித்து கொடுத்ததற்காக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமால் பாராட்டப்பட்டவர். பிரபலமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த போதிலும், தங்கவேலுக்கு விவசாயம் மீது அதிக ஆர்வம். இதன் காரணமாக தனது ஊரில் ஏக்கர் கணக்கில் விவசாய நிலங்களை வாங்கி பல்வேறு விதமான பயிர்களை வளர்த்து வருகிறார். விவசாயத்துடன் மாடுகள் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு உள்ளிட்ட பலவற்றையும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில்தான் நீர்ப்பாசனத்திற்கு புதிய முறையை கண்டறிந்து இருக்கிறார்.
அந்த முறை பற்றி அவர் கூறியதாவது:-
பொதுவாக தாவரத்திற்கு தண்ணீர் தேவையான அளவு கிடைக்கவேண்டும். தற்போதைய சூழலில் தண்ணீர் என்பது தேவையை விட குறைவாக தான் இருக்கிறது. இதனால் அனைத்து விஷயங்களிலும் தண்ணீர் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டி இருக்கிறது. விவசாயத்திற்கும் அதனை கடைபிடிக்க வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் தான் SWEATING IRRIGATION என்ற புதிய நீர்ப்பாசன முறை எனது சிந்தனைக்கு தோன்றியது.

அதன்படி நாம் வளர்க்கும் செடிகளுக்கு அருகே (செடிகளுக்கு தகுந்தாற்போல் ஒன்று முதல் ஐந்து அடி தூரத்தில்) நிலத்தின் அடியில் ஒரு மண்பானையை புதைத்து வைக்க வேண்டும். கழுத்துப்பகுதி நிலப்பரப்பிற்கு மேல் இருக்கும் வகையில் அதனை மண்ணுக்குள் புதைத்து வைக்க வேண்டும்.
அந்த பானைக்குள் ஒரு குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். அந்த பானையை மூடியால் மூடி வைப்பது அவசியமாகும். பொதுவாக மண் பானைகள், உள்ளே இருக்கும் தண்ணீரை பானைக்கு வெளியே கசிந்தபடி இருக்கும்.
இந்த முறை தான் நமது நீர்ப்பாசன முறைக்கு உதவுகிறது. நிலத்திற்குள் மண் பானையை வைத்து தண்ணீரை நிரப்பும்போது, அதில் இருந்து கசியும் (வியர்க்கும்) தண்ணீர் நிலத்தை ஈரமாக்கியபடி இருக்கிறது. அந்த தண்ணீர் தான் செடிக்கு கிடைக்கிறது. பொதுவாக செடிகளுக்கு தண்ணீரை நிலப்பரப்பில் பாய்ச்சும்போது, தேவையில்லாத நிலப்பரப்பும் தண்ணீரைப் பெறுகிறது.
இதன் காரணமாக செடியை தவிர தேவையில்லாத இடத்திற்கும் தண்ணீர் செல்கிறது. அதிக அளவில் தண்ணீர் செலவாகிறது. ஆனால் SWEATING IRRIGATION நீர்ப்பாசன முறையில் குறிப்பிட்ட செடிக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்க செய்கிறது. இதனால் அதிக அளவிலான தண்ணீர் விரயம் ஆவது தவிர்க்கப்படுகிறது.
நிலத்தின் மேற்பரப்பு ஈரம் ஆவதே களைச்செடிகள் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றன. இந்த முறையில் நிலத்தின் மேல்பரப்பு ஈரம் ஆவதில்லை. நிலத்தின் மேல் பரப்பிலிருந்து ஐந்து இன்ச் அளவுக்கு கீழே உள்ள நிலப்பரப்பே ஈரமாகிறது.

இதனால் நாம் வளர்க்கக்கூடிய செடிகளுக்கு அருகே தேவையில்லாத களைச்செடிகள் வளர்வது இல்லை. இதனால் களைச்செடிகளை அகற்றுவதற்காக தனியாக நாம் ஆட்களை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை. மற்ற நீர்ப்பாசன முறைகளில் அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும். ஆனால் இந்த நீர்ப்பாசன முறையில் பானை மட்டும் வாங்க செலவு செய்ய வேண்டும். அதற்கான செலவும் குறைவானதே. இரண்டு செடிகள் முதல் நான்கு செடிகளுக்கு ஒரு பானை வைத்தாலே போதும். அவ்வாறு வைக்கப்படும் பானையில் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரை ஊற்றி வைத்தால் போதும். அந்த பானையின் அருகே உள்ள செடிகளுக்கு போதுமான தண்ணீரை அது வழங்கியபடியே இருக்கும். விவசாயத்திற்கு மண்புழு என்பது மிகவும் அவசியம். பயிர்கள் வளர்வதற்கு ஏதுவாக மண்ணை பக்குவப்படுத்துவது மண்புழுக்கள் தான். இந்த நீர்ப்பாசன முறை நிலத்தின் அடிபரப்பை ஈரமாக்குவதால், மண்புழு உற்பத்திக்கு ஏற்றதாக இருக்கிறது. மண்புழுக்கள் அதிகளவில் பெருகும்போது செடிகள் நன்கு வளரும்.
குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி செடிகளை வளர்ப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த நீர் பாசன முறையை, வீட்டில் வளர்க்கும் அனைத்து செடிகளுக்கும், மரக்கன்றுகளுக்கும் பயன்படுத்தலாம். மற்ற நீர்ப்பாசன முறைகளை ஒப்பிடுகையில், இந்த நீர்ப்பாசன முறைக்கான செலவு மிக மிக குறைவு ஆகும். செலவுகளை குறைத்து விவசாயம் செய்து அதிக பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மலைப் பகுதியில் படப்பிடிப்பு என்றதும் நம்மூர் ஊட்டி, கொடைக்கானல் போல் தான் இருக்கும் என்று நினைத்தேன்.
- வெளிநாட்டுக்கு சென்று ஒருநாள் படப்பிடிப்பு நடத்தாமல் இருந்தால் எவ்வளவு செலவாகும்.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடர், ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய, மிக நீண்ட மலைத் தொடர்.
இந்த மலைத் தொடரில் பல சிகரங்கள் உண்டு. கடல் மட்டத்தில் இருந்து 4000 மீட்டருக்கு மேல் உயரம் கொண்டது. கொண்டை ஊசி வளைவு பாதைகள் மட்டும் 50-க்கும் மேல் இருப்பதாக கூறினார்கள்.
அந்த மலை உச்சியில் படப்பிடிப்பு. 1998-ல் வெளிவந்த 'அரிச்சந்திரா'படத்தின் பாடல் காட்சியை படமாக்க அழைத்து சென்றிருந்தார்கள். அப்போதெல்லாம் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவது மிக குறைவு.
நானும், கார்த்திக் சாரும் தான் ஹீரோ, ஹீரோயின். வெளிநாட்டில் படப்பிடிப்பு என்றதும் ரொம்ப சந்தோசமாக இருந்தது.
அரிச்சந்திரா என்றதும் பலருக்கு சிவாஜி சார் நடித்த படமும் அந்த புராண கதையும்தான் நினைவுக்கு வரும். ஆனால் நாங்கள் நடித்த அரிச்சந்திரா வித்தியாசமானது. புராண கதைப்படி அரிச்சந்திரன் உண்மையை மட்டுமே பேசக்கூடியவர்.
ஆனால் இந்த படத்தில் கதாநாயகன் பொய்யே பேசுவார். அதுவும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்காக. ஆனால் அது அவரது நண்பர்கள் 3 பேருக்கு மட்டுமே தெரியும்.
பள்ளி ஆசிரியையாக வரும் கதாநாயகியை கவருவதற்கும் பொய் சொல்வார். ஆனால் கதாநாயகி அந்த பொய்களையும் கண்டுபிடித்து விடும் புத்திசாலிப் பெண். அந்த புத்திசாலி பெண் வேடத்தில்தான் நான் நடித்தேன்.
சரி இனி படப்பிடிப்புக்கு வருவோம்....
மலைப் பகுதியில் படப்பிடிப்பு என்றதும் நம்மூர் ஊட்டி, கொடைக்கானல் போல் தான் இருக்கும் என்று நினைத்தேன். எனவே அதற்காக பிரத்யேக உடைகள் எதுவும் எடுத்து செல்லவில்லை.
காலையில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றதும் அணிந்து இருந்த ஜெர்கினையும் துளைத்து கொண்டு உடலை வதைத்தது குளிர். அதிலும் எனக்கு கைகள், இடுப்பு பகுதி தெரியும்படிதான் ஆடை வடிவமைப்பு. அது குளிருக்கு கூடுதல் வசதியாகி விட்டது. போட்டு தாக்கியது.
நிறைய உலோக நகைகளையும் அணிய வேண்டியிருந்தது. இடுப்பில் ஒட்டியாணத்தை மாட்டியதும் ஐஸ்கட்டியை கட்டியது போல் குளிர்ந்தது.
கார்த்திக் சார் கோட்-சூட்டில் இருந்தார். அவரும் குளிர் தாங்க முடியவில்லை என்றார். அவர் அப்படி சொன்னதும், உங்களுக்கே இப்படி என்றால் என் நிலைமையை யோசித்து பாருங்கள் என்றேன்.
டைரக்டர் ஷாட் ரெடி என்றதும் ஜெர்கினை கழட்டி போட்டு விட்டு ஓடுவேன். ஷாட் முடிந்ததும் ஓடி வந்து ஜெர்கினை மாட்டிக் கொள்வேன்.

காலில் கேன்வாஷ் போன்ற ஷூதான் அணிந்து இருந்தேன். அது குளிருக்கு தாக்கு பிடிக்கவில்லை. எங்கே கால் மரத்து விடுமோ என்று பயந்தேன். ஏனெனில் அங்குதான் உறைபனியையும், பனி மழையையும் நேரில் பார்த்தேன். தங்கியிருந்த ஓட்டலில் ஜன்னலை திறந்து பார்த்தால் நம்மூர் மழை தூறல் போல் விழும். ஆனால் அது வெண்பனி மழை! பார்க்கவே ஆச்சரியமாக இருந்தது.
பனி திவலைகள் உடலில் ஆங்காங்கே விழுந்து படர்ந்தது. தலையில் வெள்ளை பஞ்சு காற்றில் பறந்து வந்து விழுந்தது போல் இருக்கும். ஷாட் ரெடியானதும் அதை துடைத்து விட்டு ஓடுவேன். உடலில் எந்த பகுதியில் பனி படர்ந்தாலும் கவலை இல்லை. ஆனால் முகத்திலும், கண் இமைகளிலும் படர்ந்தால் தான் அதை துடைக்கும் போது மேக்-அப் கலைந்து விடும். அப்புறம் மேக்-அப் போடுவது சிரமம். எனவே இரண்டு கைகளையும் நெற்றிக்கு மேல் டான்ஸ் அபிநயனம் போல் வைத்துக் கொள்வேன்.
ஷாட் ரெடி என்றதும் கண்ணாடியில் பார்ப்பேன். அப்பாடா முகமும், கண் இமையும் தப்பிச்சுது என்று நினைத்துக் கொண்டு ஷாட்டுக்கு ஓடுவேன்.
உடல் முழுவதும் மறைக்காத ஆடை அணிந்து இருந்த நான்தான் மிகவும் சிரமப்பட்டேன். ஆனால் காலில் ஷூ, பேன்ட்-கோட், முழுக்கை சட்டை அணிந்து இருந்த கார்த்திக் சாருக்குதான் மாலையில் உடல் சரியில்லாமல் ஆகி விட்டது.
ஜுரத்திலும், குளிரிலும் நடுங்கி கொண்டிருந்தார். நாளை என்னால் ஷூட்டிங் வர முடியாது என்றார். அதை கேட்டதும் தயாரிப்பாளரான தியாகராஜன் பயந்து போனார்.
வெளிநாட்டுக்கு சென்று ஒருநாள் படப்பிடிப்பு நடத்தாமல் இருந்தால் எவ்வளவு செலவாகும்? அந்த கவலை அவருக்கு.
இரவில் ரசம் சாதம் சாப்பிட்டு ஓய்வெடுத்தால் சரியாகி விடும் என்றார்கள். சுவிட்சர்லாந்தில் ரசத்துக்கு எங்கே போவது? என்ன செய்வது? என்று தெரியாமல் எல்லோரும் தவித்தோம்.
அப்போது என்னுடன் வந்திருந்த என் அம்மா 'கிச்சன்' எங்கே இருக்கிறது என்று தேடி பிடித்து அங்கே சென்றார். நம்மூரை போல் ரசத்துக்கு தேயைான மிளகு, பூண்டு, தக்காளி உள்பட எல்லாம் அங்கு கிடைக்கவில்லை.
ஒன்றிரண்டு இந்தியர்கள் அந்த கிச்சனில் வேலை பார்த்தார்கள். அவர்களிடம் பேசி சில பொருட்களுக்கு அம்மா ஏற்பாடு செய்தார். அதை வைத்து சிறிது நேரத்தில் ரசம் தயார் செய்து விட்டார்.
எல்லோருக்கும் ரசம் சாதம்தான் இரவு சாப்பாடு. காலையில் தூங்கி எழுந்ததும் உடல் இலகுவாக இருந்தது. கார்த்திக் சாருக்கும் உடல் நிலை சீராகி விட்டது. எல்லோரும் புதுதெம்புடன் படப்பிடிப்புக்கு சென்றோம்.
அதை பார்த்ததும் தியாகராஜன் சார் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். அம்மா ரசம் சூப்பர் என்று என் அம்மாவை எல்லோரும் புகழ்ந்து தள்ளினார்கள்.
"முந்தானை சேலை முட்டுதா ஆள!
மாலையா சுத்திக்க மேல
ஏய் கொத்தாத மீனே
கொக்குதான் நானே!
வெக்கமும் நாணமும் வீணே... என்று ஆல்ப்ஸ் மலை உச்சியில் நானும் கார்த்திக் சாரும் ஆடிய டூயட் பாடலை போலவே அந்த அனுபவமும் மறக்க முடியாதவை.
கார்த்திக் சாருடன் நடித்த முதல் படம் 'மருமகன்' நல்ல மருமகனாக அமையவில்லை. எனவே 'அரிச்சந்திரா' நன்றாக வரவேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.
கதை, காட்சி, பாடல் என்று எல்லாமே அருமையாக இருந்தது. எப்படியும் வெற்றி பெறும் என்று நினைத்தேன். அது போலவே படமும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.
மீண்டும் 'மாமன் மகள்' வந்தாள். அவள் எப்படி...? அடுத்த வாரம் பேசுவோம். (தொடரும்)
- சூதாட்டம் தெரியாத தருமர் எதிரியின் வலையில் சிக்குகிறார்.
- தவறு என்று தெரிந்தும் நண்பன் என்ற காரணத்திற்காக தவறு செய்யும் துரியோதனன் உடன் இருந்தவன் கர்ணன்.
மகாபாரதம்: இதனை உண்மை சம்பவங்களின் தொகுப்பு என்று நிரூபிக்க பல விஞ்ஞான ஆய்வுகள் வெளி வந்துள்ளன.
பல பல காலங்களுக்கு முன்னாள் நிகழ்ந்த சம்பவங்களை நொடிக்கு நொடி இன்றைய கால கட்டத்தில் கூற முடியாதுதான். அன்றே தொகுக்கப்பட்ட நிகழ்வுகளை விளக்கவுரை படுத்தி கூறும்போது அந்த கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் சில உப கதைகள், உரையாடல்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம்.
ஆனால் வாழ்வின் நெறியினை மிக நன்றாக கற்றுத் தரும் பதிவுதான் மகாபாரதம். என்ன செய்தால் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை உணர்த்துகிற கண் முன்னே நடமாடும் நீதிதான் 'மகாபாரதம்'
இதனை கற்பனைக் காப்பியம் என்று கூறுவோரும் உண்டு. இருக்கட்டும். ஆனால் நேர்மையான வாழ்க்கைக்கு வழி காட்டும் அழுத்தமான பதிவுகள் கற்பனையா? உண்மையா? என்பதனைப் பற்றி வாதங்கள் இங்கு தேவையில்லை. அதில் உள்ள பல நல்ல கருத்துக்களைப் பார்ப்போம்.
பீஷ்மரின் தந்தை சாந்தனு. சத்யவதியினை மணக்காமல் இருந்திருந்தால் மகாபாரதம் என்ற ஒன்று இருக்குமா? என்பதே சந்தேகம்தான். பீஷ்மர் தன் தந்தையின் விருப்பத்திற்காக தான் அரசனாக மாட்டேன் என்ற உறுதியினைத் தந்தார். பீஷ்மர் தன்னை நாட்டுக்காக மட்டுமே அர்ப்பணித்துக் கொண்டார்.
நாடு என்ற ஒன்றிற்காக பாண்டவர்களை எதிர்த்தும் போரிட்டார். தன் குரு பரசுராமருடன் போரிட்டார். தன் தம்பிக்கு கல்யாணம் செய்ய வேண்டி 'அம்பா'வினைக் கடத்தினார். அம்பாவிற்கு தான் ஏன் கடத்தப்படுகின்றோம் என்று கூட முதலில் தெரியவில்லை. தன் வலிமையினைக் கொண்டு ஒரு பெண்ணை தன் நாட்டிற்காக, தன் தம்பி மணம் புரிவதற்காக கடத்தி வந்தார்.
திரவுபதி சபையில் அவமானப்படுத்தப்பட்டபோது எதிர்க்காமல் இருந்தார். இவர் மனம் வேதனைப்படாமல் இல்லை. ஆனால் துரியோதனனை தடுக்கவில்லை. பீஷ்மரின் அறிவு, சத்தியம், நேர்மை இவைகள் மூலம் ஒருவர் வாழ்விற்கான பாடங்களை கற்க வேண்டும். அவரைப் போன்ற மன உறுதி வேண்டும். ஆயினும் மிக உயர்ந்த குணம் கொண்டவர்களும் தன் பிடிமானக் கொள்கைகளுக்காக பாதை சற்று மாற வேண்டி உள்ளது என்பது அறிஞர்களின் கருத்து.
தன் அண்ணன் சொல்படி அதனை மீறாமல் வாழ வேண்டும் என்று வாழ்ந்தவர்கள் பாண்டவர்கள் மற்றும் கவுரவர்கள். தர்மரின் சொல்லை மீறாமல் வாழ வேண்டும் என அவரின் சகோதரர்கள் நால்வர் இருந்தனர். துரியோதனின் சொல்லுக்கு மறு பேச்சு கூடாது என அவரது தம்பிகள் 99 பேர் இருந்தனர்.
சூதாட்டம் தெரியாத தருமர் எதிரியின் வலையில் சிக்குகிறார். என்ற பொழுதும் மற்ற நால்வர் அவரின் சூதாட்ட தோல்வியால் எதிரிக்கு அடிமை ஆனார்கள். திரவுபதியினை பணயம் வைத்த போது கூட மவுனம் காத்தார்கள்.
கவுரவர்களோ தன் அண்ணணுக்கு மேல் கோபமும், வேகமும் உடையவர்களாக இருந்தார்கள்.
நண்பர்கள் இருக்க வேண்டியது தான். நன்றி கடன் அவசியம்தான். அதே போல் நட்பு இருக்க வேண்டிய அளவுக்கு நண்பர் தவறு செய்தால் திருத்த போராட வேண்டும். இல்லையென்றால் நகர்ந்து விட வேண்டும்.
தவறு என்று தெரிந்தும் நண்பன் என்ற காரணத்திற்காக தவறு செய்யும் துரியோதனன் உடன் இருந்தவன் கர்ணன். காரணம் உள்ளுக்குள் தான், பிறந்த தாயால் கை விடப்பட்டவன் என்ற வேதனை அவனுக்குள் அரித்துக்கொண்டே இருந்தது. அதனால் தவறு செய்தாலும் நண்பன் உயர்வாகத் தெரிந்தான்.
அஸ்வத்தாமன் தனது நண்பன் துரியோதனனுக்கு உதவி என்ற பெயரில் உலகம் சகித்துக்கொள்ள முடியாத செயல் எல்லாம் செய்தான். பஞ்ச பாண்டவர்களின் அனைத்து பிள்ளைகளையும் கொன்றான். அர்ஜூனனின் மருமகள் அபிமன்யுவின் மனைவி உத்தரை வயிற்றில் உள்ள கருவை அஸ்திரம் ஏவி கொல்ல முயன்றான்.
அந்த கருவினை கிருஷ்ணர் உயிர் பித்தார் என்பது புராண கூற்று. மனிதன் நினைத்து பார்க்க கூட அஞ்சும் தவறினை அஸ்வத்தாமன் செய்ததால் இன்றும் உலகில் மிகுந்த பாதித்த உடலோடு அழைந்து கொண்டிருக்கிறார். இது கிருஷ்ணர் கொடுத்த சாபம்.
சிவபிரான் அன்றாடம் இரவில் கோவில் பூஜை செய்வதாக வட இந்தியர்கள் கூறுகின்றனர். துரோணாசாரியரின் மகனாக பிறந்தாலும் பல திறமைகளை பெற்றிருந்தாலும் தவறானவருடன் தொடர்ந்த நட்பு கொடுமையின் உச்சிக்கே கொண்டு சென்றது.
இது மக்களுக்கான கருத்தான பாடம். உயிர் போகும் நிலையில் கூட தீயவர்களிடம் இருந்து உதவி பெற்று விடக்கூடாது. நன்றி கடன் என்ற பெயரில் பல பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.
சகுனி தன் தங்கை தன் குடும்பத்தினருக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்காக துரியோதனன் கூடவே இருந்து அவர்களை அழித்தார்.
திருதிராஷ்டிரன் அரச நீதிப்படி நடக்கவும் இல்லை. துரியோதனனின் அளவு கடந்த தவறுகளை கண்டிக்கவும் இல்லை. காந்தாரிக்கோ தன் பிள்ளைகள் மேல் வைத்துள்ள பாசத்தின் காரணமாக நியாய தர்மங்கள் எடுபடவில்லை.
திரவுபதியின் பக்கத்திலும் குறைகளை சொல்லலாம். ஆனால் சாலையில் திரவுபதிக்கு நேர்ந்த கொடுமையினை பெண் உலகம் தாங்காது.
ஆங்காங்கே ஏற்படும், செய்யும் சிறு தவறுகளோ பெரிய தவறுகளோ அடுக்கடுக்காய் வளர்ந்து நரக வாழ்க்கையினை ஏற்படுத்துகின்றன என்பதற்கு மகாபாரதத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் உணர முடியும்.
நீதிமான் என்ற பொருளுக்கு முழு அர்த்தம் கொடுத்தவர் விதுரர்.

கமலி ஸ்ரீபால்
அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிக் கேட்கலாம். அவரை நாம் அவதார புருஷராக போற்றுகின்றோம். அவரது 'கீதோபதேசம்' ஒன்று மட்டும் போதுமே. அன்றாடம் ஒரு முறை படித்தால் கூட மனம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
எந்த மதத்திலும் நீதி, தர்மம் இதனைத்தான் வலியுறுத்துகின்றன. கடவுள், மதம் சாராதவர்களும் இதனையே கூறுகின்றனர்.
ஆக கட்டுப்பாடான மனம் ஒன்றே ஆன்மீக பயணத்தினை தொடர உதவும் என்பதனை அறிவோமாக.
கருடனை பார்த்தால் யோக பலன் என கூறப்படுகின்றது. சமீபத்தில் இந்த கருடனை பார்ப்பதனை கருட தரிசனம் என்று கூறுகின்றோம். கோவிலுக்கு சென்று வந்தால் சாமியை தரிசனம் செய்து விட்டு வந்தேன் என்று தான் பொதுவில் கூறுவார்கள்.
உயர்ந்த நிலையில் நாம் பார்க்கும் அனைத்தினையும் தரிசனம் என்று தான் கூறுவோம். அந்த தரிசனம் மங்கலகரமானது. ஆக 'சுதர்சனம்' என்றும் குறிப்பிடப்படுகின்றது. சுதர்சனம் என்றால் சிறந்த தரிசனம் என்பதாகும்.
பெருமாள் கோவில்களில் 'சுதர்சன சந்நிதி' என்றே உண்டு. அச்சந்நிதிகளுக்கு கண்டிப்பாய் செல்ல வேண்டும். பொதுவில் பெருமாள் கோவிலில் கருடன் சந்நிதி, பலி பீடம், கொடி மரம் பின்பு பெருமாள் சந்நிதி என்று இருக்கும்.
பறவைகளின் தலைவன் கருடன் தான் எனப்படுகின்றது. இவருக்கு கருடாழ்வார் என்ற பெயரும் உண்டு. வேதசொரூபன் என இவரை குறிப்பிடுவார்கள். வியாழக்கிழமை கருட தரிசனம் கிடைத்தால் சிறப்பு என்பர்.
கெட்ட சகுனங்கள், துர் நிகழ்வுகள் போன்றவை கருட தரிசனத்தினால் நீங்கும் என பெரியோர்கள் கூறியுள்ளனர்.
திருப்பதியில் பெருமாள் 'கருட வாகனத்தில்' வருவதனை தரிசனம் செய்ய கூட்டம் அலைமோதும். இதனை 'கருட சேவை' என்பர்.
கருடாழ்வாருக்கு சிகப்பு பட்டு அணிவித்து மல்லிகைப்பூ, கதிர் பச்சை, மரிக்கொழுந்து, செண்பகம் பூக்களால் அர்ச்சனை செய்தால் மபையம், தோஷம் நீங்கும் என பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கருடனை வழிபட்டால் ராகு, கேது தோஷங்கள் நிவர்த்தி ஆகும் என்பர்.நோய்கள் நீங்கும்.
* ஞாயிறு கருட தரிசனம்-நோய்கள் நீங்கும்.
* திங்கள் அன்று ஏற்படும் கருட தரிசனம் குடும்பத்தில் சுபிட்ஷங்கள் ஏற்படும்.
* செவ்வாய் கருட தரிசனம் - மன தைரியம் கூடும்.
* புதன் கிழமை கருட தரிசனம் - சத்ருக்களே இருக்க மாட்டார்கள்.
* வியாழக்கிழமை கருட தரிசனம்- தனம் சேரும்.
* வெள்ளிக்கிழமை கருட தரிசனம்-தடையில்லா பண வரவைத் தரும்.
* சனி கருட தரிசனம்-கருமங்கள் தீரும்.
'ஓம் தத் புருஷாய பிரசோதயாத்' சீவாண பட்சாய தீமஹி
தன்னோ கருடஷ் பிரசோதயாத்' என்ற கருட காயத்திரியினை ஜபிக்கலாமே.
சமீபத்தில் கருடனை பற்றி பேசப்பட்ட பொழுது ஒரு வைணவப் பெரியவர் கூறியதனை பகிர்ந்து கொள்கிறேன். உனக்குள் ஒளியினைப் பார்ப்பதற்கு முதலில் மனபயம், பிரச்சனைகளை நீக்க வேண்டும். அதில் பக்தி மார்க்கமும் ஒரு வழி என்றார் அந்த பெரியவர். அந்த பெரியவர் தான் படித்ததாக ஆன்மிக விஷயங்களை பகிர்ந்து கொண்டார். நாமும் அறிவோமே!
- கேட்வே வளைவைச் சுற்றியுள்ள நிலப்பரப்பு நினைவுச்சின்னத்தின் வளைவுத் தன்மையை பிரதிபலிக்கிறது.
- புதுமையான அருங்காட்சியகம் அமெரிக்காவின் முன்னோடியான சாதனைகளைக் கொண்டாடக்கூடிய ஒன்றாகும்.
அமெரிக்க நாட்டின் மிக உயரமான நினைவுச் சின்னம் கேட்வே ஆர்ச் அல்லது கேட்வே டு த வெஸ்ட் என்பது செயின்ட் லூயிசு, மிசூரியில் அமைந்துள்ளது, 630 அடி (192மீ) உயரமுள்ள இது அமெரிக்காவின் அதிஅற்புத இயந்திரவியல் பொறியியல்நுட்பம் கொண்ட நினைவுச் சின்னம் என்றால் அது மிகையாகாது. இதே போன்று இதன் அருங்காட்சியகமும் சிறப்பானது.
செயின்ட் லூயிஸ் அமெரிக்காவின் மிக உயரமான நினைவுச் சின்னமாகவும், உலகின் மிக உயரமான வளைவாகவும் அமைகிறது. வளைவின் உச்சியில் ஒரு கண்காணிப்புத் தளம் உள்ளது. அமெரிக்காவின் மேற்குலக விரிவாக்கத்திற்கான நினைவுச் சின்னமாக இந்த வளைவு வடிவமைக்கப்பட்டது.
செயின்ட் லூயிசு வளைவு மிசிசிப்பி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது நகரப் பகுதியில் உள்ள ஒரு சோலை. இது ஜெபர்சனின் தேசிய விரிவாக்க நினைவகத்தின் ஒரு பகுதியாகும். ஜனாதிபதி தாமஸ் ஜெபர்சனின் பெயரில் அழைக்கப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவின் விரிவாக்கத்திற்குப் பொறுப்பான தாமஸ் ஜெபர்சன் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள், அரசியல்வாதிகளின் பங்களிப்புகளைக் கொண்டாடும் வகையில் 1935-ம் ஆண்டில் இந்தப் பூங்கா நிறுவப்பட்டது.
கீழிருந்து பார்க்கும்போது தோன்றும் இதன் கம்பீரமான அழகு உண்மையிலேயே நம்மை பெருமூச்சு விடச்செய்கிறது. 630 அடியை டிராம் மூலம் உயர உயரக் கடந்து செல்லும்போது ஆச்சரியமானதும், பரபரப்பான காட்சிகளுக்கும் பஞ்சமே இருக்காது. இதன் மூலம் பெறும் அனுபவம் வாழ்வில் மறக்க முடியாத உற்சாகமானதொரு அனுபவமாகவே உறைந்திருக்கும்.
கலை, இயற்கை, வரலாறு, சாகசம் என அனைத்தையும் ஒருங்கே கொண்டு சேர்க்கும் இந்த நினைவுச் சின்னப் பயணம் உத்வேகம் அளிக்கக்கூடியதொன்று. உயர உயரச் செல்லும் உன்னத அனுபவம் மனதை ஏதோ செய்யக்கூடியதுதான்.
பூர்வீக அமெரிக்கர்கள், கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், அமெரிக்காவை எழுச்சியுறச் செய்த வெற்றியாளர்களின் கதையை அறிந்துகொள்ள நல்ல வாய்ப்பு இந்த அருங்காட்சியத்தில் அமைகிறது.
ஆறு கருப்பொருள் கண்காட்சிப் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த புதுமையான அருங்காட்சியகம் அமெரிக்காவின் முன்னோடியான சாதனைகளைக் கொண்டாடக்கூடிய ஒன்றாகும்.
19-ம் நூற்றாண்டின் மாதிரிப் படகு பார்ப்பதில் ஒரு தனிப்பட்ட சுகமாகிப் போகிறது. அந்த துடுப்புப் படகு பயண அனுபவம் ஒரு தனி ரகமாக அமைந்துள்ளது. பகலோ அல்லது இரவோ, வளைவின் நுழைவாயிலில் உள்ள ஆறுகள், புனித லூயிசு நகரின் அற்புதமான வானூர்திக் காட்சிகள் மிகச் சிறந்தவையாக மக்களால் வாக்களிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பவளசங்கரி
தேர்ந்தெடுத்து உண்ணும் வகையில் பல்வேறு வகையான உணவு வகைகளுடனும், வித்தியாசமான சுற்றுலாப் பயணிகளுடன், ஒரு படகு இல்லையில்லை ஒரு பயணக் கப்பல் மூலம் செயின்ட் லூயிசின் நகரப் பகுதிகளோடு பல்வேறு காட்சிகளையும் கண்டுகளிக்கும் சுவையான அனுபவம் கொண்ட ஒரு தனித்துவமான பயணம்தான்.
1964-ம் ஆண்டில் செயின்ட் லூயிசு ஆற்றுமுனையைப் பார்வையிட அழைத்து வரப்பெற்ற பெக்கி தாட்சர் மற்றும் டாம் சாயர் ஆகியோர், முதலில் வளைவின் நுழைவாயிலின் கட்டுமானத்தைப் பார்வையிடுவதற்காக மிக ஆர்வமாக ஆற்றுக்கு வருகை புரிந்தனர். நகரத்தின் அன்றைய காட்சிகளில் பல்வேறு மாற்றங்கள் நிரம்பியிருந்தாலும், அந்த வளைவின் காட்சிகள் எப்பொழுதும் போலவே இன்றும் அதே சுவையானதொன்றாகவே இருக்கின்றன. நுழைவாயிலில் உள்ள அருங்காட்சியகம் பார்வையாளர்களை இனிமையாக வரவேற்கின்றது!
செயின்ட் லூயிசு, நுழைவாயிலும், புதிய மேற்கு நுழைவு வாயிலின் அருங்காட்சியகமும், கடந்த ஜூலை மாதம்
2018-ல் திறக்கப்பட்டது. இது 380 மில்லியன் டாலர் செலவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட மிகப்பெரிய திட்டமானது.
அந்த புதிய அறையில் இருந்து, பார்வையாளர்கள் அருங்காட்சியகத்தின் பார்வையாளர் மையத்திற்கு மின்தூக்கி அல்லது படிகள் வழியாக இறங்கி வரவேண்டும். இங்கு உயரிய தொழில்நுட்பக் கருவிகள் மூலம் சிறப்பான விளக்கங்கள், கல்வி நடவடிக்கைகள், சிறப்பு நிகழ்வுகள் போன்றவைகள் புதிய காணொலிக் காட்சிகளின் மூலம் வழங்கப்படுகின்றன.
இந்த புதிய அருங்காட்சியகத்தின் கருப்பொருள்கள் குறித்தும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்த படுகின்றன. படிகள் வழியாகவும், எஸ்கலேட்டர்களின் வழியாகவும் சிறப்பாகப் புதுப்பிக்கப்பட்டிருக்கும் பெரிய புதிய கண்காட்சிப் பகுதிக்குச் செல்லலாம்.
19-ம் நூற்றாண்டில் மேற்கின் விரிவாக்கத்திற்கு செயின்ட் லூயிசு நுழைவாயிலாக இருந்ததையும், அதன் பங்களிப்பையும், தனிநபர்களின் மரபுவழி, மரபுரிமைகள், பாரம்பரிய மரபுகள் ஆகியவற்றைப் பற்றிய பார்வையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கேட்வே வளைவும், அதன் கட்டிடக்கலை, பொறியியலாளர்கள் பற்றியும், அடுக்கு மாடிக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான வரலாற்றையும் கூட பார்வையாளர்கள் அறிய முடிகிறது.
சித்திரங்கள், சித்தரிக்கப்பட்ட வரலாற்று விளக்கங்கள், முதன்மை மூல ஆவணங்கள், வரலாறு சார்ந்த கலையையும், கலைப்பொருட்கள் போன்றவற்றையும் காட்சிப்படுத்துகின்றன.
நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் பார்வையாளர்கள் லூயிசு மற்றும் கிளார்க் ஆகியோரின் பயணத்தின் காணொலிக் காட்சிகளை பெரிய திரையில் பார்வையிட கிடைக்கின்றன.
மின்னணு தொழில்நுட்பப் பயணங்கள் மூலம் காலனித்துவ வரலாற்றைப் பற்றியும் அறியலாம்.
கேட்வே வளைவைச் சுற்றியுள்ள நிலப்பரப்பு நினைவுச்சின்னத்தின் வளைவுத் தன்மையை பிரதிபலிக்கிறது.
இயற்கைக் கட்டிடக் கலைஞர் டான் கிலே, கண்ணைக் கவரும் நுட்பமான, பொருத்தமான அமைப்பை உருவாக்க வடிவியல் விதிகளையும், பாரம்பரிய இயற்கை வடிவமைப்புக் கூறுகளையும் பயன்படுத்தியுள்ளார். மைதானத்தின் அளவும், தாக்கமும், வடிவமைப்பும் உலகப் புகழ் பெற்ற வளைவிற்கும் அதன் சுற்றுப்புறங்களுக்கும் இன்றியமையாதவை ஆகும்.
செயின்ட் லூயிசு வளைவு கட்டுவதற்காக சுற்று வட்டாரத்தில் இருந்த பல கட்டிடங்கள் இடிக்கப்பட்ட போதும் ஒரு தேவாலயம் மட்டும் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதுதான் பிரான்சின் புனித லூயிஸ் கிங்கின் பசிலிக்கா (பழைய கதீட்ரல்).
வரலாற்றுப் புகழ் பெற்ற இந்த பழமையான தேவாலயம், செயின்ட் லூயிசு பசிலிக்கா உலகின் மிகவும் மதிக்கப்படும் தேவாலயங்களுள் ஒன்றாகும். இது கேட்வே வளைவின் தெற்கே உள்ள நதிக்கரையில் அமைந்துள்ளது.
இந்தப் பழமையான தேவாலயம், மேற்குப் பகுதியில் கத்தோலிக்கத்தின் தொடக்கத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பதோடு, வளர்ந்துவரும் அமெரிக்கா முழுவதும் அனைத்து கலாச்சாரங்களுக்கும் நம்பிக்கை அடிப்படையிலான மதிப்புகள் பரவுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
- பதினெட்டு வகையான கரப்பான் நோய் குழந்தைகளுக்கு ஏற்படுவதாக சித்த மருத்துவ நூல் “பால வாகடம்” கூறுகிறது.
- மூலச்சூடு அதிகமாவதால் குழந்தைகளுக்கு நாவேக்காடு ஏற்படும்.
குழந்தைகளுக்கு வரும் நோய்களை நம் முன்னோர்கள் முற்காலம் தொட்டே அனுபவ முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சரிசெய்து வந்தனர். வாய்விட்டு பேச தெரியாத பச்சிளம் குழந்தைகளுக்கு கூட அவர்களின் அழுகை, உறக்கம், மலம், நீர் இவற்றின் தன்மைகளை வைத்து நோயின் தன்மையை உணர்ந்து அதற்கேற்ற மருந்துகளை வழங்கினர். அதன் நுட்பத்தை நாம் அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
குழந்தைகளின் ஒவ்வொரு பருவத்திலும் ஏற்படும் நோய்களின் குறிகுணம் மற்றும் அவற்றை நீக்குவதற்கான எளிய வழிமுறைகளையும் நாம் அறிந்து வருகிறோம். அவ்வகையில் இந்த கட்டுரையில் குழந்தைகளுக்கு ஏற்படும் கரப்பான், சுரம், சன்னி, காமாலை போன்றவற்றை குறித்து அறியலாம்.
குழந்தைகள் கடின உணவு பொருட்களான சோளம், கம்பு, வரகு, வாழைக்காய், பாகற்காய், கெளிற்றுமீன் போன்றவற்றை தொடர்ந்து உணவில் சேர்த்து வருவதால் கரப்பான் எனப்படும் தோல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நோயால் உடலில் அரிப்பு, புண், தடிப்பு, வெடிப்பு, நீர்க்கசிதல் போன்ற குறிகுணங்கள் ஏற்பட்டு உடலின் இயற்கை நிறம் மாறுபடும். பதினெட்டு வகையான கரப்பான் நோய் குழந்தைகளுக்கு ஏற்படுவதாக சித்த மருத்துவ நூல் "பால வாகடம்" கூறுகிறது.

கரப்பான் ஏற்பட்ட இடத்தில் திரிபலா கஷாயம் அல்லது வேப்பம்பட்டை கஷாயத்தை வைத்து நன்றாக துடைக்க வேண்டும். பின்பு அவ்விடத்தில் பூவரசன் இலை பழுப்பை சுட்டு கரியாக்கி தேங்காய் எண்ணையில் குழைத்து தடவலாம் அல்லது புங்கன் விதையை சுட்டு சாம்பலாக்கி தேங்காய் எண்ணையில் குழைத்து போட அரிப்பு, தடிப்பு, நீர்க்கசிவு மாறும். தேவைக்கேற்ப சித்த மருத்துவர்களின் பரிந்துரைப்படி உள்மருந்துகளை வழங்கி வரலாம்.
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமலும், வயிற்றில் பூச்சி தங்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். கரப்பான் நோய் தொற்றும் குணமுடையது. கரப்பான் புண்ணிலிருந்து கசியும் நீர்பட்டால் அங்கும் கரப்பான் உண்டாகி விடும். எனவே முடிந்த வரை சுத்தமாக துடைத்து அடிக்கடி வெளிமருந்திட்டு வர விரைவில் ஆறும்.
அடுத்து அக்கரம் எனப்படும் அச்சரம் குறித்து காணலாம். மூலச்சூடு அதிகமாவதால் குழந்தைகளுக்கு நாவேக்காடு ஏற்படும். இதனால் குழந்தைகளின் நா வெளுத்து மாவு படிந்து காணப்படும். மிளகின் காரத்தை கூட தாங்க முடியாது. சொள்ளு நீர் வாயிலிருந்து அதிகமாக வடியும்.
வாயில் அக்கரம் ஏற்படுவதற்கு மூலச்சூடு மட்டுமின்றி பல காரணங்கள் உண்டு. வாய் சுகாதாரமின்மை அதில் முக்கியமானதாகும். எனவே முறையாக பல் துலக்கி வாய் கொப்பளித்துவரின் வாய்ப்புண் உண்டாவதற்கான வாய்ப்பு குறையும். வாயில் புண்ணுண்டானால் திரிபலாக் குடிநீர் அல்லது தேன் சிறிது நீரில் சேர்த்து வாய் கொப்பளித்து வரலாம். மாசிக்காய் அல்லது வசம்பு சுட்ட சாம்பலை நெய்யில் குழைத்து புண்ணுக்கு பூசிவரலாம். வெப்பு குணமிருந்தால் நல்லெண்ணைய் விட்டு வாய்க்கொப்பளித்து வரலாம்.
காரசாரமான உணவுகளை தவிர்த்து திரவ ஆகாரங்களை உட்கொள்ளலாம். பால் சாதம், இடியாப்பம், கஞ்சி, நெய், மோர் போன்றவைகளை அருந்தலாம். அதிக சூடாக அல்லது குளிர்ச்சியாக உண்பதை தவிர்க்க வேண்டும்.
அடுத்ததாக சுரம் குறித்து காணலாம். சுரமானது குழந்தைகளுக்கு தனி நோயாகவோ அல்லது வேறு நோய்களுக்கு குறிகுணமாகவோ ஏற்படலாம். சுரத்தை பொறுத்தவரை சரிவர கணித்து உரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சரிவர சிகிச்சை அளிக்காது விட்டால் வலிப்பு போன்ற விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடல் வெப்ப அளவை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.
நல்ல சுத்தமான பருத்தி துணியை நீரில் நனைத்து தண்ணீரை பிழிந்து நெற்றி பகுதியில் வைத்து எடுக்க வேண்டும். மேலும் உடலையும் துடைத்து எடுக்க வேண்டும். இதன் மூலம் உடலின் அதிகப்படியான வெப்பநிலை குறையும். உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைக்க இது மிக உதவியாக இருக்கும்.

சுரம் வந்த குழந்தைகளுக்கு சுக்கு, மிளகு, அரிசிதிப்பிலி, சுட்ட வசம்பு சம அளவு எடுத்து நீர் விட்டு காய்ச்சி குடிநீராக்கி தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை தேன் கலந்து 10 மி.லி., – 20 மி.லி., கொடுத்து வரலாம்.
சில நேரங்களில் குழந்தைகளுக்கு மாந்தத்தால் சுரம் ஏற்படும். அந்நிலையில் வெங்காயம், வில்வ இலை, அவுரி ஒவ்வொன்றும் ஒரு பிடி எடுத்து குறுக அரிந்து சிவக்க வறுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி ஒரு வேளைக்கு இரண்டு சங்களவு வீதம் மூன்று நாட்கள் கொடுக்க மாந்த சுரம் தணியும்.
சித்த மருத்துவர்களின் பரிந்துரைக்கேற்ப பால சஞ்சீவி மாத்திரை, கஸ்தூரி மாத்திரை மற்றும் நிலவேம்பு, ஆடாதோடை போன்ற கஷாய வகைகளை வழங்கி வரலாம்.
உணவாக சுக்கு, பாசிப்பயிறு, நெற்பொரி மூன்றும் கூட்டி கஞ்சி செய்து வழங்கி வரலாம். மந்த உணவுகளான பால், இறைச்சி வகைகள், மாவுப்பொருட்கள், மாங்காய், தேங்காய், முட்டை, பழங்கஞ்சி போன்றவற்றை காய்ச்சலின் போது தவிர்க்க வேண்டும். முடிந்த வரை திரவ உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். மந்த உணவுகளை சுரம் உள்ளபோது சேர்த்துக்கொண்டால் சந்நி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனையே திருமூலர் சித்த மருத்துவ நூல்களில்
"உற்ற சுரத்துக்கும் உறுதியாம் வாய்வுக்கும்
அற்றே வருமட்டும் அன்னத்தை காட்டாதே" என்று உரைக்கின்றார். அடுத்ததாக குழந்தைகளுக்கு ஏற்படும் கழிச்சல் குறித்து காணலாம். மலமானது தண்ணீராகவும், அடிக்கடியும் குழந்தைகளுக்கு கழியும். சில குழந்தைகளுக்கு மலமானது அடிக்கடி சீதமாகவும் அல்லது ரத்தமாகவும் அல்லது இரண்டும் சேர்ந்தும் கழியும். சித்த மருத்துவ நூல்கள் கழிச்சலை மூன்று வகையாக கூறுகிறது. கழிச்சலுக்கு கூறப்பட்டுள்ள மருந்துகள் பெரும்பாலும் குடிநீராகவே இருக்கிறது இதன் மூலம் கழிச்சலினால் ஏற்பட்ட நீரிழப்பு தீரும். தற்கால மருத்துவமும் கழிச்சல் ஏற்பட்டவர்களுக்கு நீரிழப்பு மற்றும் உப்புகள் இழப்பை சரிசெய்வதையே முதல் நிலை மருத்துவமாக கொண்டுள்ளது.
கழிச்சல் ஏற்பட்ட குழந்தைகளுக்கு மாதுளை பழத்தோல் மற்றும் சுக்கு இரண்டும் 15 கிராம் அளவு எடுத்து நீர் விட்டு காய்ச்சி இறக்கி 15-30 மிலி அளவு தேனுடன் சேர்த்து வழங்கி வரலாம்.
மாங்கொட்டை, வசம்பு, சுக்கு, வெள்ளுள்ளி ஆகிய பொருட்களை கருக வறுத்து நீர்விட்டு காய்ச்சி பருகினாலும் கழிச்சல் நிற்கும்.
பச்சிளம் குழந்தைகளுக்கு கழிச்சல் ஏற்பட்டால் மஞ்சளை வசம்பின் மேல் 5 முறை அரைத்து தடவி உலரவிட்ட பின் தீயில் கருக்கி அரைத்து ஒன்று அல்லது இரண்டு சிட்டிகை மோர், தாய்ப்பால் அல்லது தேனில் கலந்து கொடுக்க உடனே கழிச்சல் அடங்கும்.
சில குழந்தைகளுக்கு அடிக்கடி மலக்கட்டு ஏற்படும். அந்த நிலையில் உயர்ந்த ரக காய்ந்த திராட்சை ஐந்தை வெந்நீரில் போட்டு பிசைந்து வடிகட்டி ஒரு தேக்கரண்டி வீதம் கொடுத்து வந்தால் மலக்கட்டு நீங்கும்.
குழந்தைகள் போதுமான சுகாதாரமின்மையால் குடற்புழுவால் பாதிக்கப்படுகின்றனர். அசுத்தமான நீர், உணவு போன்றவற்றாலும், நகம் வெட்டாது வளர்த்தல், உணவு உண்ணும் முன் கை கழுவாமை, அசுத்தமான இடங்களில் காலில் செருப்பணியாமல் செல்லுதல் போன்றவற்றாலும் குடல்புழு ஏற்படுகிறது. இந்த குடற்புழுவினால் குழந்தைகள் உறங்கும் போது பல் கடிப்பது, அரைக்கண் மூடிய தூக்கம், முகத்தில் வெள்ளை தழும்புகள், வயிற்றுவலி, மலத்துவாரத்தில் அரிப்பு, ரத்த சோகை, சளி, மேல் மூச்சு வாங்குதல், முடி உதிர்தல், தொப்புளை சுற்றி வலி, சுரம், வலிப்பு போன்ற குறிகுணங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும்.
வாய்விடங்கத்தை பொடி செய்து 2 முதல் 3 சிட்டிகை தேனிலோ அல்லது வெந்நீரிலோ வாரம் ஒரு முறை வீதம் 4 வாரங்கள் கொடுத்து வர வயிற்றுப் புழு ஒழியும். பப்பாளி விதையை பொடி செய்து 2 கிராம் வீதம் தேன் கலந்து வாரம் ஒரு முறை கொடுத்து வர குடற்புழு சாகும்.
சில குழந்தைகளுக்கு கல்லீரல் மற்றும் பித்தப்பை கோளாறினால் காமாலை ஏற்படும். இந்நிலையில் கண் வெள்ளை விழி மற்றும் நகங்கள் மஞ்சள் நிறமாகின்றது. நாளடைவில் உடல் முழுவதும் மஞ்சள் நிறமாகும். சில சமயங்களில் சுரமும், வாய்கசப்பும் ஏற்படுவதுண்டு. பசி மந்தமும் வயிற்று உப்பிசமும் சிலருக்கு காணும். காமாலை என்றாலே பொதுவாக அனைவரும் பயப்படத்தான் செய்கிறார்கள். நோயை அறிந்து தக்க மருத்துவம் செய்தால் விரைவில் குணமாகும். குழந்தைகளுக்கு ஊது காமாலை, வரட்காமாலை, மஞ்சள் காமாலை என மூன்று வித காமாலை ஏற்படுவதாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
காமாலை நோய் ஏற்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவரின் பரிந்துரைப்படி கீழாநெல்லி, மணத்தக்காளி இலை எடுத்து பசுந்தயிரில் அரைத்து கொடுக்கலாம். மூன்றுமுறை அல்லது நோய் நீங்கும் மட்டும் கொடுக்கலாம். உப்பு, புளி நீக்கி பத்தியம் கடைபிடிக்க வேண்டும். கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி இரண்டையும் ஒரு பிடி எடுத்து இடித்து சாறு எடுத்து சுத்தமான தேன் கலந்து 30 மிலி அளவு காலை, மாலை ஒரு வாரம் கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.
வாந்தி, விக்கல் குழந்கைகளுக்கு ஏற்பட்டால் மாதுளம்பூ, நெற்பொரி, நாட்டு சர்க்கரை, திப்பிலி சரி எடை எடுத்து பொடித்து, தேனில் கலந்து வழங்கலாம்.

தூக்கத்தில் குழந்தைகள் சிறுநீர் கழிப்பது மூன்று வயது வரை இயல்பான ஒன்றாகும். அதற்கு மேல் படுக்கையில் சிறுநீர் கழித்தால் மருத்துவம் செய்வது நல்லது. பெரியவர்கள் குழந்தைகள் சிறுநீர் கழிக்கும் நேரத்தை அறிந்து அவர்களை எழுப்பி விட்டு பழக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் மலக்கட்டும் இதற்கு ஒரு காரணமாகும். எனவே மலக்கட்டு ஏற்படும் பட்சத்தில் உடனே சரிசெய்ய வேண்டும். சுண்டைக்காய், அவரை பிஞ்சு போன்ற உணவுகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். இனிப்பு பண்டங்களை குறைக்க வேண்டும்.
நெல்லிக்காய் வற்றல் 100 கிராம், சாதிக்காய் 25 கிராம் எடுத்து நன்றாக வறுத்து இடித்து மண் சட்டியில் போட்டு பாலை ஊற்றி 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு பாலை நீக்கி மருந்தை நிழலில் உலர்த்தவும். எட்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த மருந்தை காலை மாலை வழங்கி வர படுக்கையில் சிறுநீர் கழிப்பது குணமாகும்.
கரு உருவானதில் இருந்து குழந்தை பிறந்து வளரும் வரை அவர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு தடுப்பு முறையும் நோய்கள் தீர்க்கும் முறையும் நம் முன்னோர்கள் நல்ல முறையில் கடைபிடித்து வந்தனர். அவர்கள் கருத்துகளை மூடநம்பிக்கை என ஒதுக்கி விடாமல் அவற்றில் உள்ள அறிவியல் கருத்துகளை ஆராய்ந்து, புரிந்து கடைபிடிக்க வேண்டும். நவீன உலகின் மாற்றங்களால் நமது பாரம்பரியத்தில் உள்ள நல்ல விஷயங்களை இழந்து விட கூடாது. நமது குழந்தைகளின் நலன் காக்கும் பாரம்பரிய மருத்துவ முறைகளை பின்பற்றி குழந்தையை ஆரோக்கியமாக வளர்ப்போம்.
- அடப்பாவி மனசாட்சி, நீதான் படிக்காம உருப்படாம போயிருக்கே?
- ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு பிரச்சனையோ, கவலையோ ஒளிந்து கொண்டு இருக்கிறது,
ஆரம்பிச்சிட்டியா வாசப்படி நிலப்படின்னு... இப்பவே எல்லாருக்கும் எக்ஸாம் பீவர் லேசா ஸ்டார்ட் ஆகிடுச்சு. ஒருபக்கம் தொடர்ச்சியா நம்ம பேவரிட் ஹீரோஸ் நடிச்ச படங்கள், படு பயங்கரமான ஆப்கள், கேம்ஸ் கவரேஜ், இன்ஸ்ட்டா, பேஸ்புக், டுவிட்டர் சொல்லவே கண்ணைக் கட்டுது. இதெல்லாம் இல்லாம எப்படிடா படிக்கிறதுன்னு அவனவன் நொந்து போய் கிடக்கிறான். அப்படியே போனைத் தொடக்கூடாது அப்பத்தான் படிப்பென்னு ஒரு சத்தியப்பிரமாணம் எடுத்துக்கிட்டாலும், படிப்புக்குன்னு குரூப் கிரியேட் பண்ணி பிடிஎப் அனுப்பறாங்க.
அவன் அப்படி, இவன் இப்படின்னு கம்பேரிசன் வேற.. இதுலே நீயும் அட்வைஸ்னு படி படின்னா எங்களுக்கு எரிச்சலா வருமா? வராதா? மாணவர்கள் சாபத்தைக் கொட்டிக்காதே?
அடப்பாவி மனசாட்சி, நீதான் படிக்காம உருப்படாம போயிருக்கே?
ஆமா எனக்குத்தான் தலைவாரி, பவுடர் போட்டு முதுகில புக்கை மாட்டி படிக்க அனுப்பினாங்க. தேமேன்னு நீ போற இடத்துக்கு எல்லாம் கூட்டிப்போறே, நானும் வர்றேன். என்னைக் கொஞ்சம் ப்ரியா விடு நான் போய்...
ஒண்ணும் வேண்டாம். படிப்பைப் பத்தி பேசலை, நான் சொல்ல வந்த அர்த்தமே வேற?
என்னமோ புதுசா சொல்றே? ஒவ்வொரு வாரமும் இப்படித்தானே ஆரம்பிக்கிறோம். .
என்ன இருந்தாலும், மனசாட்சி ஆச்சேன்னு கொஞ்சம் விட்டா ரொம்ப ஓவரா போவியே?
வீட்டுக்கு வீடு வாசப்படி, ஏன்பா நல்லா யோசி, வீட்டுக்கு வாசப்படி சுவரா இருக்கும். எங்கிருந்து உனக்கு மட்டும் இப்படியெல்லாம் பழமொழி கிடைக்குது. வாசப்படியைப் பத்தி என்ன சொல்லவர்றே? அழகுக்காக தொங்கவிடறேன் பேர்வழின்னு கலர்கலரா 100ரூபாய்க்கு மூணு கலர்லே பூச்சரம் மாதிரி தேமேன்னு கிடக்குமே அதுதானே. வாங்கினப்போ இருந்த கலர் இதுதானான்னு சந்தேகப்படறாமாதிரி தொங்குமே அதுவா... நான் முறைப்பதை கண்டதும்...கண்டுபிடிச்சிட்டேன். இப்போ கரெட்டா சொல்றேன் பாரு நீ சொல்றது செருப்பைத்தானே.
கடவுளே உன்கிட்டே விவாதம் பண்றதுக்கு அதாலதான் அடிச்சிக்கணும். இன்னும் வாசப்படி விளக்கு, குங்குமம் பூசிய எலுமிச்சைப் பழம், கால்மிதின்னு ஆரம்பிக்கிறதுக்குள்ளே நானே சொல்லிடறேன்.
செருப்பு ஸ்டாண்டை விட்டுட்டியே... மனதிற்குள் முணுமுணுத்தது மனசாட்சி.
நான் சிரித்தபடியே, ஆரம்பித்தேன்..
வீட்டுக்கு வீடு வாசற்படி விஷயங்கள் ஆசைப்படி என்று எஸ்.பி.பி பாடிய பாடல் ஒன்று. வேலை வேலை என்று ஓடும் கணவன், அவனுக்காக ஏங்கிய மனைவி அவர்களின் இருவரின் மனப்பிரிவு அதை சேர்க்க வரும் ஜோடி என்று கதை விரியும். புழக்கத்தில், பலநேரம் உறவுகளுக்குள் நிகழும் பிரச்சினைகளை தீர்க்க பயன்படுத்தும் வார்த்தை இது.
மன்மத லீலைன்னு கமல் படம் ஒன்று, பெண்களிடம் சபலப்படும் கணவனாக கமல், மனைவி ஆலம் இதைக் கண்டித்து கோபத்துடன் அம்மா வீட்டுக்கு சென்று விடுவாள். அங்கே அம்மா அவளுக்கு அறிவுரை சொல்லி கணவன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

அந்த அம்மா தன் மகளிடம் அவளின் தந்தை அந்த வீட்டு வேலைக்காரியிடம் உறவில் இருக்கிறார். இருவரின் அன்பும், உறவும் எனக்குத் தெரியும், இருந்தாலும் நான் அதை தெரிந்ததாக காட்டிக் கொண்டது இல்லை. இதெல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாதே, வீட்டுக்கு வீடு வாசப்படி என்று சொல்லி அனுப்பி வைப்பார்.
அநேகம் கட்டுப்பாடுகளும், கற்பு நிலைகளும் பெண்களுக்கு மட்டும்தான் என்று புறம் தள்ளியிருந்த நேரம் அது, ஒரு கட்டத்திற்குள் அடைத்து அதில் அடைப்புக்குறிக்குள் வாழ வேண்டும் என்ற நிர்பந்தங்களில் எதையும் சகித்துக் கொண்டு போகும் நிலைக்கு அவள் தள்ளப்பட்டாள். தான் உழல்வதைப் போல தன் மகளும் அதே சாக்கடையில்தான் உழலவேண்டும். அப்போதுதான் அவளின் ஒழுக்கத்திற்கான அடையாளச் சான்று தரப்படும்ன்னு அந்த அம்மா நினைக்கிறாங்க. அதையே அந்த பொண்ணோட மனசிலும் விதைக்கிறாங்க.
அந்நாளின் நிலைமை மாறி வருகிறது நண்பா. நான் இப்போ ஒரு படம் பார்த்தேன். நம்ம பொன்னியின் செல்வன் படத்திலே பூங்குழலியா ஆக்ட்டு கொடுத்துச்சே ஒரு பொண்ணு, அந்தப் பொண்ணு நடிச்ச ஒரு மலையாளப் படம். அதில் இப்படித்தான்.. தனிக்குடித்தனம் பண்ற பொண்ணைப் பார்க்கவர்ற இடத்திலே அம்மாவுக்கு முன்னாடியே கை நீட்டி அடிச்சிடுவாரு மாப்பிள்ளை. பொண்ணும் அம்மாவும் படித்துறையிலே உட்கார்ந்து பொங்கி பொங்கி அழுவாங்க. இத்தனை கஷ்டத்தையும் தாங்கிட்டு நான் இங்கே வாழணுமான்னு பொண்ணு கேட்கும்.
பளிச்சினு, தேவையேஇல்லை. உனக்கு என்ன முடிவு எடுக்கணுமோ அதை செய். நீ பொருள் இல்லை. மனுஷி உனக்கும் உணர்வுகள் இருக்குன்னு புரியவைன்னு தைரியம் கொடுப்பாங்களே. அதுக்குக் காரணம் பெண்களின் பொருளாதாரம் முன்னேறி இருக்கிறதுதான்.
ஒருமுறை புத்தரிடம் ஒரு பெண், என் வீட்டில் ஒரே மகன். இறந்து விட்டான். நீங்கள்தான் அவனை உயிர்ப்பித்து தரவேண்டும் என்று மன்றாடினாள். வெறும் வாய் வார்த்தைகள் அவளிடம் எடுபடாது என்று நினைத்த புத்தர், இந்த ஊரில் இறப்பில்லாத வீட்டில் இருந்து ஒரு கை கடுகு வாங்கிக் கொண்டு வா என்றார். அவளும் அலைந்து திரிந்து அய்யனே இறப்பில்லாத வீடே இங்கே இல்லை. எல்லா வீடுகளிலும் ஏதோவொரு ஆன்மா வெளியே சென்றிருக்கிறது என்று பதில் சொல்வாள். உன் கேள்வியே பதிலாகும் என்று முடித்திருப்பார் புத்தர்.
ஐம்பது வயது கடந்த தொழிலதிபர். மனைவியோ தீவிர கடவுள் பக்தை. அவர்களுக்கு குழந்தை செல்வம் இல்லை. ஒரு துறவியிடம் இதை கவலையோடு பகிர்கிறார். துறவியோ உங்களுக்கு ஆரோக்கியமும், தொழிலும் நல்ல படியாக இருக்கிறதா? என்று கேட்கிறார்.
அதற்கென்ன கடவுள் புண்ணியத்தில் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் பிள்ளைகள் இல்லையே என்று மீண்டும் கேட்க, குறையுள்ளவன்தான் மனிதன். இருப்பதைக் கொண்டு மனநிறைவோடு வாழக் கற்றுக்கொள் என்று சொல்லிவிட்டு செல்வார் துறவி.
அண்ணனும் தம்பியும் நகமும் சதையுமாய் வாழ்ந்தவர்கள். திடுமென்று பார்த்தால் அவர்கள் வீட்டுக்கு நடுவில் சுவர், கடைக்கு நடுவில் தடுப்பு என்று பிரிவினை தாண்டவமாடியது. சிலர் அக்கறையாய் மத்திசம் பண்ண போனார்கள். சிலரோ வீட்டுக்கு வீடு நடப்பதுதானே என்று கடந்தார்கள்.
மேற்கண்ட மூன்று உதாரணங்களுக்கும் வீட்டுக்கு வீடு வாசற்படி என்ற பழமொழி பொருந்தும். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு பிரச்சனையோ, கவலையோ ஒளிந்து கொண்டு இருக்கிறது அதிலிருந்து மீண்டு வரும் ஒரு தன்னம்பிக்கை சொற்றொடராகக் கூட இதை எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், பழமொழியின் உண்மையான விளக்கம்.. மேன்மையான நேர்மையான எண்ணங்களும் அதை செயல்படுத்தும் வாழ்க்கை முறையைக் குறிக்கும். வாழ்க்கை என்னும் வீட்டுக்கு ஆன்மீகம் என்பதே வாசற்படி இதுதான் சரியான பொருளாகும்.
எவனொருவன் இருப்பதைக் கொண்டு திருப்தியோடு வாழ்ந்து, நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்பதை மனதில் இருத்தி தன்னைப் போல பிறரையும் சந்தோஷமாக வைத்துக் கொள்கிறானோ, உண்மையும், நேர்மையும், ஈகைத்திறனும், கடவுளுக்கும் மனசாட்சிக்கும் அஞ்சி பிறவிப் பெருங்கடலை கடக்கிறானோ அவனின் வீடு சொர்க்கத்தின் வாசற்படி என்பதை குறிக்கும் பழமொழி.
அடுத்தவாரம் மீண்டும் ஒரு பழமொழியோடு சந்திப்போம்.
- அடுத்த வாழ்விடப் படையெடுப்பு மீண்டும் கிராமங்களை நோக்கியதாகக் கூட இருக்கலாம்.
- உலகின் எல்லாத் தூக்கமும் அங்கே வந்து தவமாய் தவம் இயற்றும்.
வாழ்க்கையின் மீது தெளிவான பார்வை கொண்டு வாழத் துடிக்கும் வாசகர்களே! வணக்கம்.
இந்த உலகில் உள்ள ஜீவராசிகளை மனிதர்கள், மனிதர்கள் அல்லாதவை என இருவகையாகப் பகுக்கலாம். மனிதர்களிலும், ஆண்கள், பெண்கள்... பிறகு அவர்களிலும், குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், நடுவயதினர், முதியவர் எனப் பகுக்கலாம். பிறகு மனிதர்களை ஜாதி, இனம், நாடு, மொழி, மதம், தொழில், உறவுமுறை அடிப்படைகளிலும் பகுத்துக்கொண்டே போகலாம். இப்படிப் பகுத்துப் பார்க்க, பகுத்துப் பார்க்க, பார்வைகள் விரிந்துகொண்டே போகும்; பொருள்களும் மாறிக்கொண்டே போகும்.
ஒரு பொருளின் மீதோ அல்லது ஒரு விஷயத்தின் மீதோ எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான பார்வை அமைந்து விடுவதில்லை. மனிதருக்கு மனிதர், காலத்திற்குக் காலம், இடத்திற்கு இடம் பார்வைகளும் கருத்துக்களும் மாறுகின்றன. ஒரே தண்ணீர், பெய்யும்போது சாரலாகவும், மழையாகவும், புயலாகவும், மலையில் இருந்து கொட்டும்போது அருவியாகவும், காடுகள் வயல்வெளிகள் வழியே நடக்கும்போது நதியாகவும், பெரும்பெரும் பள்ளங்களில் தேங்கும்போது, ஏரியாகவும், கண்மாயாகவும், குளமாகவும், ஊருணியாகவும், குட்டையாகவும், நெடுக நடந்து பெரு வெள்ளத்தில் கலந்து நிறையும்போது கடலாகவும் பார்க்கப்படுகிறது; போற்றப்படுகிறது.
'வசதியான வீடு' என்பதுகூடக், காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம், மனிதருக்கு மனிதர் பொருள் மாறுபடத்தான் செய்கிறது. ஒருகாலத்தில் மழைக்கு ஒழுகாத ஓடுவேய்ந்த காரை வீடு அங்கே விளைபொருள்களைப் பாதுகாத்து வைக்க ஒன்றிரண்டு அறைகள், ஒரு சின்ன அடுப்படி இவை இருந்தாலே வசதியான வீடுதான். படுப்பதற்குக் கயிற்றுக் கட்டில்களை வானம் பார்க்க வீட்டுக்கு வெளியில் மரத்தடியில் போட்டுவிட்டாலே போதும்; உலகின் எல்லாத் தூக்கமும் அங்கே வந்து தவமாய் தவம் இயற்றும்.
காலம் மாறியது. கான்கிரீட் கலாசாரம் வந்தது. பெரும்பெரும் கட்டிடங்கள் உயர உயரமாய் எழுந்தன; ஆளுக்கொரு அறை; நடக்க, படிக்க, டிவி பார்க்க, சமைக்க, சாப்பிட, கழிக்க.. தனித்தனி அறைகள். இப்படி அரண்மனை போன்ற வீடுகள் வந்தன.
தற்போது நகரங்களின் பெருக்கத்தினால் வாழிடங்கள் சுருங்கிக் கொண்டே வருகின்றன. அடுக்கக வாழ்க்கையில் புறாக்கூண்டுகள் போன்ற வீடுகள்; ஐந்நூறு சதுர அடிக்குள் இரண்டு மூன்று அறைகள் வைத்த வீடுகள்; சுவர்களே அறைகளாகிப்போன அதிசயங்கள்!. கேட்டால் இந்த நூற்றாண்டு வாழ்வியலுக்கு ஏற்ற வசதியான வீடு இதுதான் என்று புதுக்கண்ணாடி போட்டுப் புதுப்பார்வை காட்டுகிறார்கள். அடுத்த வாழ்விடப் படையெடுப்பு மீண்டும் கிராமங்களை நோக்கியதாகக் கூட இருக்கலாம்.
பொதுவாகவே நம்மிடத்தில் ஓர் எண்ணம் உண்டு. நகரத்தில் இருப்பவர்கள் எல்லாம் அறிவாளிகள், படித்தவர்கள், பணக்காரர்கள் என்றும் கிராமத்தில் வாழ்பவர்கள் எல்லாம் கைநாட்டு, பிழைக்கத் தெரியாதவர்கள், ஏழைகள் என்றும் பார்க்கிற பார்வையே அது. தலைமுறை தலைமுறையாக இந்த எண்ணம் இருந்து வந்தாலும், எதையுமே புதுமையாகப் பார்க்கிற இன்றைய இளைய தலைமுறையின் பார்வை எப்படி இருக்கிறது?
ஒரு வித்தியாசமான அனுபவக்கதை. நகரத்தில் வசதியான பங்களா கட்டிப் பெரும் பணக்காரராக வாழ்கிறார் ஒருவர். அவரிடம் வெளிநாட்டுக் கார் உண்டு, வீட்டுக்குள்ளேயே தோட்டம் உண்டு; தோட்டத்தின் நடுவில் ஒரு நீச்சல் குளமும் உண்டு. அவருக்கு ஒரே மகன்; நகரத்திலேயே பிரபலமான பள்ளியொன்றில் அதிகப் பணம் கட்டி ஐந்தாம் வகுப்புப் படித்து வருகிறான். மகன் வறுமையின் நிழல்கூடத் தெரியாமல் வளர்ந்து வருகிறான்; அவனுக்கு வறுமை என்றால் என்ன? வறுமையில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? என்பதை நேரடியாக உணர்த்திக்காட்ட எண்ணினார் அவனது அப்பா.
அவரது பூர்வீகக் கிராமத்திற்கு மகனை அழைத்துச் சென்று, அங்குள்ள உறவினர் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கினார். அந்த இரண்டு நாட்களும், மகன் ஆர்வத்தோடு கிராமத்தைச் சுற்றிப் பார்த்தான்; கிராம மக்களோடும் சிறுவர்களோடும் விருப்பமாகப் பழகினான். தந்தை மகனிடம் எதைப்பற்றியும் பேசவுமில்லை; கேட்கவுமில்லை. இரண்டுநாள் கழிந்ததும் அப்பாவும் மகனும் அவர்களது ஏசி காரில் நகரம் நோக்கிக் கிளம்பினர்.
"மகனே! நாட்டில் எவ்வளவு வறுமையோடு மக்கள் இருக்கிறார்கள்! என்பதைப் பார்த்தாயா? கேட்டார் அப்பா.
"ஆமாம் அப்பா! நகரத்தில் நம்முடைய வீட்டில் ஒரே ஒரு நாய் வளர்க்கிறோம். இங்கோ கிராமத்தில் வீட்டிற்கு நாலு நாய்கள் இருக்கின்றன. நகரத்தில் நம் வீட்டு அறைகளில் மின்சாரத்தைச் செலவழித்துக், கதவுகளை அடைத்து, ஏசி போட்டு, மின் விசிறிகள் போட்டுத் தூங்குகிறோம். இங்கோ எந்தச் செலவுமில்லாமல், இயற்கையான குளுகுளு காற்று வீடு முழுக்க வருகிறது. நம் வீட்டில் உள்ள நீச்சல்குளம் மிகச் சிறியது; ஆனால் இங்கோ மலையடிவாரம் வரை நீண்ட மிகப்பெரிய ஸ்விம்மிங் பூல் இருக்கிறது. நகரத்தில் நம் வீட்டைச் சுற்றிப் பாதுகாப்புக்குப் பெரிய மதில்சுவர்களை எழுப்பியிருக்கிறோம்.ஆனால் இங்கோ எல்லாரும் நண்பர்கள் என்பதால் வீடுகளுக்குச் சுற்றுச் சுவர்களே இல்லை. நகரத்தில் நாம் நமக்கான உணவுப்பொருள்களைக் காசு கொடுத்து வாங்குகிறோம்; ஆனால் இங்கோ அவர்களுக்கான உணவை அவர்களே விளைவித்துக் கொள்கிறார்கள்.
உண்மையில் நகரத்தில் வாழும் நாம் எவ்வளவு பெரிய ஏழைகள் என்பதை இப்போது நான் உணர்ந்து கொண்டேன். நன்றிகளப்பா!" என்றான் மகன். அப்பா வாயடைத்துப் போனார். இதில் இப்படியுமொரு பார்வை இருப்பதை நமக்கு உணர்த்தி விட்டது இளையதலைமுறை.
சுந்தர ஆவுடையப்பன்
எதுவுமே பார்க்கிற கண்ணோட்டத்தோடு பார்க்கப்பட்டால் அதன் உண்மைத்தன்மை வெளிப்பட்டே தீரும். ஒரு தாத்தா தன்னுடைய பேரனுக்கு விளையாட மரத்தினால் செய்யப்பட்ட யானை பொம்மை ஒன்றை வாங்கிவந்து தந்தார். பொம்மையைப் பார்த்ததும், அந்த ஒரு வயதுப் பேரன், "ஐயோ! யானை!" என்று மழலையில் அலறிப் பயந்து விலகினான். தாத்தா சொன்னார்," இது யானை இல்லை பயப்படாதே". அருகில் நின்றிருந்த குழந்தையின் அம்மா தனது அப்பாவிடம் கேட்டாள், " அது யானை இல்லாமல் வேறு என்னப்பா?" என்று. ''அது யானையில்லை! வெறும் மரம்! அவ்வளவுதான்" என்றார் பெரியவர். அது எப்படி யானை மரமாகும்?.
பார்வைகள் வேறுபட்டால், தேக்கு மரம் சிலருக்குக் கதவாகத் தெரியலாம்; சிலருக்குக் கட்டிலாகத் தெரியலாம்; சிலருக்கு மேசை நாற்காலிகளாகத் தெரியலாம். சில கலைக் கண்களுக்குக் காவியமாகும் சிற்பங்களாகத் தெரியலாம். அப்படித்தான் எதையும் உண்மையென நம்பிவிடும் குழந்தைக்கு அது யானையாகவே தெரிந்து விட்டது. பக்தனுக்கு தெய்வமாகவும் மற்றோர்க்குச் சிற்பமாகவும் கற்சிலைகள் தெரிவதைப் போலத்தான் இதுவும்.
எந்த விஷயத்தையும் தீவிரமாக யோசித்து, அதனைப் பூதாகரமாகப் பார்க்கிறவர்கள் சிலபேர் இருக்கிறார்கள். சிலர் எதையும் பார்த்தும் பார்க்காமல், வருவதை ஏற்று வாழ்ந்து விடுவோம் என்று வாழ்க்கையை லேசான பார்வையோடு விட்டு விடுபவர்களும் இருக்கிறார்கள். உண்மையில் இந்த இருவிதமான பார்வைகளுமே ஆபத்தான விளைவுகளையே கொண்டுவந்து சேர்க்கும். தீவிரமான பார்வையில் பேன் பெருச்சாளியாகத் தோன்றித் துன்பத்தில் ஆழ்த்தும்; லேசான பார்வையில், பெருச்சாளிகள்கூடப் பார்வைக்கு அகப்படாமல் வேதனைகளைப் பெருக்கும்.
ஆக, தீவிரமாகவோ, ஆர்வமில்லாமலோ பார்க்கிற பார்வைகளை ஒதுக்கி வைத்துவிட்டு உண்மையான அக்கறையோடு பொருள்களையும் செய்திகளையும் அணுகத் தொடங்கினால் ஆழ்ந்திருக்கும் உள்ளர்த்தம் உள்ளது உள்ளபடி வெளிப்பட்டு விடும்.
ஒரு தாய் ஒட்டகத்தைப் பார்த்து ஒரு குட்டி ஒட்டகம் கேள்வி கேட்டது,''ஏன் அம்மா நமக்கு மற்ற விலங்குகளைப் போலில்லாமல் குச்சி குச்சியாய் உயரம் உயரமாய்க் கால்கள் படைக்கப் பட்டிருக்கின்றன?"
"அதுவா? நெடிய பாலைவனங்களில் நாம் நடந்து செல்லும்போது, பாலைவன மணலில் நமது கால்கள் அடியாழத்திற்குப் புதையும் என்பதற்காக உயரமான கால்கள்!" என்று பதில் சொன்னது தாய் ஒட்டகம்.
"சரி அம்மா! குச்சிக்கால்களின் கீழே அகலம் அகலமான பாதங்களும் விரல்களும் எதற்காக?" கேட்டது குட்டி.
"ஆழமான பாலைவன மணல்வெளியில் நமது கால்களை எடுத்து வைக்கும்போது எளிதில் அவை புதைந்துவிடக்கூடாது என்பதற்காக" சொன்னது தாய்.
"சரி அம்மா! மற்ற விலங்குகளை விட நமக்கு மட்டும் ஏன் உயரமான திமில்கள் படைக்கப்பட்டிருக்கின்றன?" குட்டி கேட்டது.
''பாலைவனங்களில் பயணிக்கும்போது நெடுந்தொலைவுகளுக்குத் தண்ணீர் கிடைக்காது. எனவே நமக்கு வழித் தேவைக்கான தண்ணீரைத் திமில்களில்தான் சேமித்து எடுத்துச் செல்லவேண்டும். அப்படியொரு சிறப்பானதொரு வசதியைப் பாலைவனங்களில் வாழும் நமக்காக இயற்கையே வழங்கியிருக்கிறது." விளக்கமாகப் பதில் சொன்னது தாய் ஒட்டகம்.
தாயின் இவ்வளவு பதில்களையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட குட்டி ஒட்டகம் கடைசியாகக் கேட்டதே ஒரு கேள்வி,
" பாலைவனத்தில் வாழ்வதற்கான இவ்வளவு வாய்ப்பு வசதிகளோடு படைக்கப்பட்ட நாம், பின் ஏனம்மா இந்த மிருகக் காட்சி சாலையில் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?"
குட்டி ஒட்டகத்தின் இந்த மாறுபட்ட பார்வைக்கும், சிந்திக்க வைக்கும் கேள்விக்கும் பதிலைத் தாய் ஒட்டகம் எப்படிச் சொல்லும்?. பதிலளிக்க வேண்டியவர்கள், அவர்களைக் கூண்டில் அடைத்துள்ள நாம் தானே!?.
மரபு என்பது வழிமுறையாகப் போற்றிக் காப்பாற்றப்பட்டு வருவது. அதனை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தவும்படுகிறது. ஆயினும் பொருள்புரிந்த தன்மையிலேயே மரபு காக்கப்படுகிறது என்றால் மறு பார்வைக்கும் மறு கேள்விக்கும் அது ஆட்படுத்தப் படவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் காலப்போக்கில் அது பொருள்பொருந்தா நிலைக்குத் தள்ளப்பட்டு அர்த்தமற்றுப் போனால் அதன் மீது புதுப் பார்வை பாய்ச்சிப் புதுமையை ஏற்படுத்தியே ஆக வேண்டும்.
இங்கே தான் பார்வைகள் பலவிதப் பட்டாலும், காலத்திற்கும் வாழ்நிலைக்கும் தகுந்த பார்வையை, கண்ணோட்டத்தை நாம் ஏற்று நடந்தே ஆகவேண்டும். புதுமை என்பது மரபை அழித்து விட்டுப் புதிதாக ஒன்றை உருவாக்குவது கிடையாது. மரபையே புதிய கண்ணோட்டத்தில் மீட்டுருவாக்குவது; மரபின் வழித்தடத்தில் புதுமைப்பாதை சமைப்பது; அதன் மூலம் சமூகமும் மனிதமும் பயனுறும் வண்ணம் சிந்தனைகளைச் செலுத்துவது ஆகும்.
பார்வைகள் பலவிதம் தான். ஏற்றுக்கொள்வோம்.
அவற்றுள் எது ஆழ்ந்திருக்கும் உண்மை ஆன்மாவைக் காண்கிறதோ அதுவே சிறந்த பார்வை.
தொடர்புக்கு 9443190098
- பூமி பாரம் தாங்காமல் சோர்வு அடைந்த அவர் சிவபெருமானை நோக்கி வழிபட்டார்.
- சிவனை மட்டுமே வணங்கும் பழக்கம் கொண்டவர் பிருங்கி முனிவர்.
கும்பகோணத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் அமைந்துள்ளது. இங்கு ராகு பகவானுக்கு தனி கோவில் இருக்கிறது. இதனால் இந்த தலத்தை ராகு தோஷம் போக்கும் அற்புதமான தலமாக கருதுகிறார்கள்.
கும்பகோணத்துக்கு ஆலய யாத்திரை செல்பவர்கள் இந்த ஆலயத்துக்கு சென்று வந்தால் பல்வேறு தோஷங்களையும் நிவர்த்தி செய்து கொள்ள முடியும். பாடல்பெற்ற சிவாலயங்கள் வரிசையில் 90-வது ஆலயமாக இந்த ஆலயம் உள்ளது.
இந்த தலத்தில் சிவபெருமானை நாகராஜா வழிபட்டு சக்தி பெற்றார். அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. பாற்கடலை கடைந்தபோது அமிர்தம் தேவர்களின் கைகளுக்கு சென்றதும் அசுரனான ராகு உருமாறி சென்று அமிர்தத்தை வாங்கி அருந்தினான். இதை அறிந்த மகாவிஷ்ணு தனது கையில் இருந்த அகப்பையால் அவனது தலையில் அடிக்க அவனது தலை தனியாகவும், உடம்பு தனியாகவும் பிரிந்தது.
என்றாலும் அமிர்தம் சாப்பிட்ட காரணத்தால் தலை பகுதியில் மட்டும் உயிர் இருந்தது. அந்த தலை பகுதி ராகு மனம் வருந்தி சிவபெருமானை வேண்டி வழிபட்டார். அவனுக்காக இரக் கப்பட்ட சிவபெரு மான் அவனுக்கு பாம்பு உடல் கொடுத்து நிழல் கிரகமாகவும் மாற்றினார். ஒரு சமயத்தில் ஆதி சேஷன் பூமியை தாங்கிக் கொண்டிருந்தார்.
பூமி பாரம் தாங்காமல் சோர்வு அடைந்த அவர் சிவபெருமானை நோக்கி வழிபட்டார். அவனுக்கு காட்சியளித்த சிவ பெருமான் கும்பகோணம் பகுதியில் வில்வம் விழுந்த இடமான நாகேஸ்வரம் சென்று வழிபட்டால் பலன் கிடைக்கும் என்றார். அதன்படி நாகராஜா நாகேஸ்வரம் வந்து லிங்க பிரதிஷ்டை செய்து ஈசன் அருள் பெற்று சக்தி பெற்றார்.
இதன் காரணமாக இந்த தலத்து இறைவனுக்கு நாகநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. ராகு இந்த தலத்தில் ஆற்றல் பெற்றதற்கு இன்னொரு வரலாறும் கூறப்படுகிறது. சுசீலர் என்ற முனிவரின் மகனான சுகர்மன் என்பவனை நாக அரசனான தக்கன் தீண்டி விட்டான். இதனால் சுசீலர் கோபம் கொண்டு, தன் மகனைத் தீண்டிய தக்கனை நீ பூலோகத்தில் மனிதனாகப் பிறப்பாய் என சாபம் கொடுத்தார். இந்த சாபம் நீங்க காசிப முனிவரின் கருத்துப்படி பூமிக்கு வந்து திருநாகேஸ்வரத்தில் செண்பக மரத்தடியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து தனது மனைவியருடன் வழிபட்டான், தக்கன்.

அவனுக்கு சிவன் காட்சி அளித்து சாப விமோசனமும் கொடுத்தார். இவரே இத்தலத்தில் நாகநாதர் என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார். இங்கு 12 தீர்த்தங்கள் உள்ளன. ஆதியில் செண்பக மரத்து நிழலில் சிவபெருமான் லிங்க வடிவில் எழுந்தருளி இருந்ததால் இறைவனுக்கு செண்பகா ரண்யேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
இவருக்கு வில்வனேசர், பாதாள பீஜனாதர், செண்பகா ஆரண்யேஸ்வரர், திருநாகேஸ்வரமுடையார், மகாதேவர் என்றெல்லாம் பெயர்கள் உண்டு. இவரை அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் பாடி அருள் பெற்றுள்ளனர்.
சிவாலயம் என்றாலும் ராகு ஆற்றல் பெற்றதால் இங்கு அவருக்கு செய்யப்படும் பூஜைகள் அனைத்தும் உடனே பலன் தருவதாக நம்பிக்கை உள்ளது. பொதுவாக ராகுவை மனிதத்தலை, நாக உடலுடன் காண முடியும். ஆனால் இக்கோவிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். ராகு பகவான், கோவிலின் இரண்டாவது பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாககன்னி ஆகிய தன் இரு தேவியருடன் மங்கள ராகுவாக தனிக்கோவிலில் அருள்கிறார்.
இவரை வழிபட்டால் ராகு-கேது தோஷம், திருமணத்தடை, பித்ரு தோஷம், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம், நாக தோஷம் மாங்கல்ய தோஷம், நீங்கும். ஜாதகத்தில் ராகுதசை, ராகு புக்தி நடப்பவர்கள் ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் அர்ச்சனை, ஹோமம் செய்து வழிபட்டுப் பலன் பெறுகிறார்கள். பாலாபிஷேகம் செய்யும் போது அந்த பால் நீலநிறத்தில் மாறுவது அதிசயமாக கருதப்படுகிறது.
ராகு தோஷம் போக்கி கொள்ள விரும்புபவர்கள் தங்கள் பிறந்த நட்சத்திர தினத்தன்று இந்த தலத்துக்கு வந்து ராகு காலத்தில் ராகுபகவானுக்கு பாலாபிஷேகம் செய்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். இந்த ஆலயத்தில் உள்ள வன்னி மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி வழிபட்டால் திருமண தோஷம் நீங்கும். கல் நாகத்தை பிரதிஷ்டை செய்தும் வழிபடலாம்.
ராகு தோஷம் மிக கடுமையாக இருந்தால் செவ்வாய்க்கிழமை, அஷ்டமி, பவுர்ணமி, அமாவாசை நாட்களில் இங்கு விளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது.
இந்த தலத்து அம்பாளுக்கு பிறையணி வாள்நுதல் அம்பாள் மற்றும் கிரிகுஜாம்பாள் என்று இரு பெயர்கள் உள்ளன. அதற்கு ஏற்ப இத்தலத்தில் அம்பாளுக்கு இரண்டு சன்னதிகள் அமைந்து உள்ளன. சுவாமி சன்னதிக்கு அருகில் பிறையணி வாள்நுதல் அம்மையை தரிசனம் செய்யலாம். பி என்றால் சந்திரன். நுதல் என்றால் வாள் போன்ற நெற்றியை உடையவள் என்பது பொருளாகும். நெற்றியில் பிறைச்சந்திரனைத் தரித்தவள் என்ற அர்த்தமும் உண்டு.
அம்பாளின் பெயருக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பவுர்ணமி அன்று மாலை வேளையில் சந்திரனின் ஒளி அம்பாள் மேல் விழுகிறது. கார்த்திகை மாதத்து பவுர்ணமி நாளில் அன்னையை தரிசிக்க பெரும் திரளாக பக்தர்கள் கூடுவர்.

அவள் கிரிகுஜாம்பிகை என்ற பெயரோடு இங்கு அருள் வழங்கிக்கொண்டிருக்கும் வரலாறு வித்தியாசமானது. பிருங்கி முனிவர் கயிலாயத்தில் சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்தார். இதனால் கவலை கொண்ட பார்வதி, சிவனை பூஜை செய்து இருவரும் ஒன்றாய் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவம் வேண்டி அக்னிப் பிழம்பில் கடும் தவம் புரிந்தாள்.
பார்வதியின் தவத்துக்கு மகிழ்ந்த இறைவன், அவளுக்கு தன் உடலில் பாதியைக் கொடுத்து உமையொரு பாகமானார். அர்த்தநாரீஸ்வரர் வடிவம் உலகில் பல இடங்களில் அமைய வேண்டும் என்று வேண்டினாள். சிவனும் அவ்வாறே ஆகுக என ஆசி வழங்கினார்.
சிவனை மட்டுமே வணங்கும் பழக்கம் கொண்டவர் பிருங்கி முனிவர். இருவரும் ஒன்றானதால் சிவனை மட்டும் அவர் வணங்கிச் செல்ல முடியாது என நினைத்தாள். ஆனால் பிருங்கி முனிவர் தான் கொண்ட கொள்கை யில் உறுதியானவர். சக்தி அர்த்தநாரீஸ்வ ரர் ஆகி இறைவனின் இடது பாகத்தைப் பெற்ற பிறகு, பிருங்கி ஒரு வண்டு உருவம் எடுத்து அர்த்தநாரீஸ்வர உருவில் ஈசனை மட்டும் துளைத்துக் கொண்டு வலம் வந்தார்.
அதைக் கண்டு வெகுண்ட அம்மை, முனிவரிடம் இருந்த தன் பாகமான சக்தியை, அதாவது முனிவரின் சதையையும், ரத்தத்தையும் திரும்பப்பெற்றுக் கொண்டாள். அதனால் எலும்புக் கூடாக மாறி வேதனையுடன் மெல்ல மெல்ல நடமாடினாலும் சிவனை மட்டும் வணங்கும் தன் செய்கையை பிருங்கி முனிவர் விடாமல் செய்து கொண்டிருந்தார்.
தன் பக்தனின் வேதனைக்குக் காரணமான அம்பிகை மேல் கோபம் கொண்ட சிவபெருமான், நீ என்னை விட்டுப் பிரிந்து பூவுலகில் செண்பக வனம் சென்று சிலகாலம் தவம் செய்து வரும்படியும், உரிய காலத்தில் உரிய நேரத்தில் அவளை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறிவிட்டார்.
சாபம் பெற்ற பார்வதிக்குத் துணையாக லட்சுமியும் சரஸ்வதியும் இருப்பார்கள் என்றும், அக்கோலத்தில் உன்னை வணங்குவோருக்கு அளப்பரிய கல்வி, புகழ், மேன்மை ஆகியவை குறைவின்றிக் கிடைக்கும் என சிவபெருமான் கூறினார்.
தேவியான பார்வதி பூலோகத்தில் செண்பக வனமான இத்தலத்திற்கு தவம் செய்ய வந்த போது அவளுக்குத் துணையாக லட்சுமியும், சரஸ்வதியும் எழுந்தருளினர். அந்தத் தவக்கோலத்திலேயே நவராத்திரி நாயகியரான மூவரையும் ஒரே சன்னதியில் தரிசிக்க முடியும்.
இந்த வரலாற்று அடிப்படையான இறைவியாக கிரிகுஜாம்பிகை சன்னதி தனிக்கோவிலாக உள்ளது. நாகநாதர் கோவிலின் வடகிழக்குப் பக்கத்தில் அன்னை கிரிகுஜாம்பாள் கோவில் நான்கு புறமும் மதிற்சுவர் கொண்டு விளங்கு கிறது. தெற்குப் புறமாக அக்கோவிலுக்குச் செல்லும் வாயில் கோபுர அமைப்போடு அமைந்துள்ளது.
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது கோவில். மூன்று திசைகளில் கோபுரங்களும் மூன்று பிரகாரங்களும் உள்ளது. கோவிலின் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. சன்னதி முன்புறம் உள்ள கிழக்கு வழி அடைக்கப்பெற்று, அதன் முன் ஒரு கூரை அமைப்புடைய மண்டபம் உள்ளது. அது வழியாக பைரவர் நடு ஜாமத்தில் திரிசக்திகள் மூவரையும் வந்து வணங்கிச் செல்வதாக சொல்லப்படுகிறது.
அம்பாள் கோவிலில் முன்மண்டபம், உட்பிரகா ரம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை அமைந்துள்ளன. உட்பிரகார தொடக்கத்தில் வாயிலின் கிழக்குப் புறத்தில் இருபுறமும் சங்கநிதி, பதும நிதியங்கள் உள்ளன. தென்கி ழக்கு மூலையில் பாலவிநாயகரும், வடமேற்கு மூலையில் பாலசுப்பிரமணியரும், கிழக்கில் பைரவரும் இருந்து அருள்கின்றனர்.
இங்கு கருவறையில் அன்னை தவக்கோ லத்தில் நின்றகோலத்தில் காட்சி அளிக்கின்றாள். இவளுக்கு அபிஷேகம் கிடையாது. புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்படும். கிரிகுஜாம்பிகைக்கு இருபுறமும் லட்சுமியும், சரஸ்வதியும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர்.
வலதுபுறம் வீணையை கையில் தாங்கி சரஸ்வதியும், இடதுபுறம் கரங்களில் தாமரை மலரைத் தாங்கி லட்சுமிதேவியும் அருளுகின்றனர். இவர்கள் மூவரையும் வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம் என்கிறார்கள்.
திருநாகேஸ்வரம் நாகநாத கோவிலில் ஆண்டு தோறும் வைகாசிப் பூச நன்னாளில் சேக்கிழார் திருவிழா நடைபெறுகின்றது. இது அவரது அவதாரத் தலம். கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். பிரதோஷம் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
ஞாயிறு தோறும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான ராகு கால நேரத்தில் ராகுவுக்கு பாலாபிஷேகம் நடைபெறுகிறது. ஆனாலும் சிறப்புக்கு சிறப்பாக நவராத்திரி நாயகியரான கிரிகுஜாம்பிகை சன்னதியில் நவராத்திரி பண்டிகை பத்துநாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
- இளம்பெண்கள் மன்னனைத் தங்கள் அண்ணனாகக் கருதி மகிழ்ந்தார்கள்...
- ஒருநாள் அந்த அரண்மனைக்கு யாசகம் வேண்டி ஒரு பார்வையற்றவர் வந்தார்.
கானகத்தில் கடும் தவம் மேற்கொண்டு வாழ்ந்து வந்தார் அந்த முற்றும் துறந்த முனிவர். யாரிடமும் எந்தப் பேச்சும் கிடையாது. கண்ணை மூடியது மூடியபடித்தான் இருப்பார். இறைத் தியானத்தைத் தவிர வேறு எந்தச் சிந்தனையும் கிடையாது.
ஆனால் உடல் என்றால் பசிக்குமே? உடலுக்கு அவ்வப்போது ஏதாவது தீனி போட்டாக வேண்டுமே? இந்தப் பாழும் உடலை ஓரளவேனும் நன்றாக வைத்துக்கொண்டால்தானே தொடர்ந்து தவத்தில் ஈடுபட முடியும்?
தன் பசியைத் தீர்த்துக்கொள்ள அந்த முனிவர் விந்தையான ஒரு வழியை மேற்கொண்டார். பசிக்காகத்தான் சாப்பிட வேண்டுமே தவிர ருசிக்காகச் சாப்பிடக்கூடாது என்பதில் அவர் கடும் உறுதியோடு இருந்தார்.
எனவே ஒருநாளைக்கு ஒரே ஒருமுறை கண்ணை மூடியவாறே எப்போதேனும் தன் கையை நீட்டுவார். அந்த நேரம் அந்தக் கையில் எது வந்து விழுகிறேதா அதைச் சாப்பிடுவார்.
அவ்வளவுதான். அன்றைய ஆகாரம் அத்தோடு சரி. மறுபடியும் மறுநாள்தான் கையை நீட்டுவார்.
அவரது இந்தப் பழக்கம் அந்தக் கானகத்தைக் கடக்கும் வழிப்போக்கர்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்கள் அவருக்கு உணவு தருவதைத் தங்கள் பாக்கியமாகக் கருதினார்கள். அதன் மூலம் தங்களுக்குப் பெரும் புண்ணியம் வந்துசேரும் என மனப்பூர்வமாக அவர்கள் நம்பினார்கள்.
எனவே அவரைக் கடந்து செல்பவர்கள் அவர் அருகே நின்று, அவர் கையை நீட்டுவாரா என ஆவலோடு காத்திருப்பதுண்டு. கனிகள், இனிப்புகள் போன்றவற்றைத் தயாராக வைத்திருந்து அவர் கையை நீட்டும்போது அதில் தாங்கள் கொண்டுவந்த தின்பண்டத்தை வைத்து அவரை அவர்கள் தரையில் விழுந்து வணங்குவது உண்டு.
முனிவர் தனக்குத் தரப்படும் மரியாதையைப் பற்றியோ உணவைப் பற்றியோ எதையும் லட்சியம் செய்ய மாட்டார். தனக்கு உணவிடுபவர்கள் யார் என்றோ அது என்ன உணவு என்றோ எதையும் ஆராய மாட்டார். அவ்வளவு ஏன்? கண்திறந்தே பார்க்க மாட்டார்.
தன் கையில் வந்து விழுவதை வாயில் போட்டுக் கொள்வதோடு சரி. மறுபடியும் வழக்கம்போல் தவத்தில் ஆழ்ந்துவிடுவார் அவர்...
ஒருநாள் ஒரு மன்னன் அந்தக் கானகத்தின் வழியே குதிரையில் போனான். அவனுக்கு இந்த முனிவர் பற்றிய சங்கதி எதுவும் தெரியாது.

திருப்பூர் கிருஷ்ணன்
யாரோ தவம் செய்கிறாரே என எண்ணியவாறு குதிரையை விட்டுக் கீழே இறங்கினான். அவரை நோக்கி வந்தான்.
என்ன ஆச்சரியம்! அப்போது பார்த்து அந்த முனிவர் கையை நீட்டினார்!
கண்ணை மூடிக்கொண்டே கையை நீட்டுகிறாரே இந்த ஆள்? என்ன வேண்டும் இவருக்கு? கண்ணைத் திறந்து பார்த்தால் என்ன? வாயைத் திறந்து கேட்டால்தான் என்ன? அகம்பாவம் பிடித்த ஆளாய் இருப்பாரோ?
யோசித்த மன்னன், இவருக்கு ஒரு பாடம் கற்பிப்போம் என எண்ணி நகைத்தவாறே கொஞ்சம் குதிரைச் சாணியை அவரது நீட்டிய கையில் வைத்துவிட்டு, குதிரையில் ஏறித் தன் நாட்டு அரண்மனைக்குப் போனான்.
மறுநாள் அந்த மன்னன் அரண்மனைக்கு அவனைத் தேடிவந்தார் இன்னொரு முனிவர். அவர் முக்காலமும் அறிந்த மெய்ஞ்ஞானி. மன்னனை உற்றுப் பார்த்தார்:
`மன்னா! நேற்று கானகத்தில் தவத்தில் ஆழ்ந்திருந்த ஒரு முனிவர் கையில் குதிரைச் சாணியை வைத்தீர்களா?` என வினவினார்.
மன்னன் வெலவெலத்துப் போனான்.
`அப்போது நானும் அந்த முனிவரும் மட்டும்தானே அங்கிருந்தோம்? வேறு யாருமே அங்கில்லையே? நடந்ததை நீங்கள் எப்படி அறிந்தீர்கள்?` என அச்சத்தோடு வினவினான்.
வந்த முனிவர் கடகடவென நகைத்தார்.
`மன்னனே! நான் நடந்தது நடப்பது நடக்கப் போவது என அனைத்தும் அறிவேன். நீ மாபெரும் தவசிரேஷ்டரை அவர் கையில் குதிரைச் சாணத்தைக் கொடுத்து அவமதித்திருக்கிறாய்.
ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே சாப்பிடுபவர் அந்த முனிவர். நீட்டிய கையில் எது விழுகிறதோ அதைச் சாப்பிடுவார். அது என்னவென்று கூடக் கண்விழித்துப் பார்க்க மாட்டார்.
நீ அவர் கையில் வைத்த குதிரைச் சாணத்தை அப்படியே வாயில் போட்டு விழுங்கி விட்டார். நீ செய்த பாவம் அந்தச் சாணம். அது நரகத்தில் மலைபோல் வளர்ந்து குவிந்துள்ளது.
தவ சிரேஷ்டரை அவமதித்த நீ, காலமாகி நரகத்திற்குத்தான் போவாய். அங்கே அத்தனை சாணமும் உன் வாயில் திணிக்கப்படும். நீ அதன் அருவருப்பைப் பொறுத்துக்கொண்டு அதைச் சாப்பிட்டே ஆக வேண்டியிருக்கும். அதுவே உனக்கான தண்டனை!`
பெருந்திகைப்பில் ஆழ்ந்த மன்னன், சடாரென்று, வந்த முனிவரின் கால்களில் விழுந்தான். இந்தப் பாவத்தில் இருந்து தப்பிக்க தான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கண்ணீர் விட்டவாறே வினவினான்:
`தான தர்மங்கள் செய். கொஞ்சம் கொஞ்சமாக உன் பாவம் குறைய வாய்ப்பிருக்கிறது. தவறை உணர்ந்துவிட்ட நீ, மனப்பூர்வமாக இறைவனிடம் மன்னிப்புக் கேள். சான்றோர்களை அவமதிப்பது மாபெரும் பாவம் என்பதை இனியாவது உணர்ந்துகொள்!
இனியாகிலும் சான்றோர்களுக்கு மரியாதை கொடுத்துப் பழகு!`
இப்படிச் சொன்ன முனிவர் வேறேதும் பேசாமல் தன்வழியே சென்றுவிட்டார்...
பெரும் கவலையில் ஆழ்ந்த மன்னன் அன்றுதொட்டு நிறைய தானதர்மங்கள் செய்யத் தொடங்கினான். முக்கியமாக திருமணமாகாத இளம்பெண்களை அரண்மனைக்கு வரவழைத்து அவர்கள் திருமணச் செலவுக்குப் பணம் நகை போன்றவற்றைத் தானமாக அளித்தான். அவர்களிடம் எந்தப் பாவமும் செய்யாமல் வாழவேண்டும் என அன்போடு அறிவுறுத்தி அனுப்பினான்.
அந்த இளம்பெண்கள் மன்னனைத் தங்கள் அண்ணனாகக் கருதி மகிழ்ந்தார்கள்...
ஆனால் ஊர்வாய் சும்மாவா இருக்கும்? மன்னன் எதன் பொருட்டு தானம் செய்கிறான் என்பதையோ அவன் நோக்கம் உன்னதமானது என்பதையோ மக்களில் பலர் அறியவில்லை. அதை அறியும் அக்கறையும் அவர்களுக்கு இல்லை.
`திருமண வயதில் இருக்கும் இளம்பெண்களை அரண்மனைக்கு அழைத்து நகையும் பணமும் கொடுக்கிறான் என்றால் பலனை எதிர்பார்க்காமலா கொடுப்பான்? மன்னன் ஒழுக்கம் கெட்டு நடக்கிறான்!` என்று சிலர் பேசத் தொடங்கினார்கள். இந்த வம்புப் பேச்சு சுற்றுவட்டாரத்தில் மெல்ல மெல்லப் பரவத் தொடங்கியது...
ஒருநாள் அந்த அரண்மனைக்கு யாசகம் வேண்டி ஒரு பார்வையற்றவர் வந்தார். அவரைக் கைப்பிடித்து ஜாக்கிரதையாக அழைத்து வந்தாள் அவரது மனைவி.
பரம ஏழைகளான அவர்கள் மன்னனை நாடி வந்தால் தங்களுக்குக் கொஞ்சம் செல்வம் கிடைக்கும் என நம்பி வந்தார்கள். அந்தப் பார்வையற்றவர் தன் மனைவியிடம் நாம் எங்கு வந்திருக்கிறோம் என வினவினார்.
அவர் மனைவி, மன்னன் அரண்மனைக்கு வந்திருக்கிறோம் எனத் தெரிவித்தாள். மன்னனைப் பற்றிய வதந்திகள் பார்வையற்றவரை ஏற்கனவே வந்தடைந்திருந்தன.
`எந்த மன்னன்? இளம்பெண்களுக்கு நகையும் பணமும் கொடுத்து ஆசைகாட்டி அவர்களைச் சீரழிக்கிறானே, அந்த மன்னனா? அவனிடமா நாம் தானம் பெறப் போகிறோம்?` எனக் கேட்டார் அவர்!
பார்வையற்ற தன் கணவருக்குப் பணிவிடை செய்யும் கற்புக்கரசியான அவர் மனைவி சடாரென அவர் வாயைத் தன் கரத்தால் இறுகப் பொத்தினாள். பின் பேசலானாள்:
`என்ன பேச்சுப் பேசுகிறீர்கள் நாதா? இப்படித் தாங்கள் பேசலாமா?`
`ஏன் நான் கேள்விப்பட்டதைத் தானே சொன்னேன்? அதிலென்ன தவறு?`
`கேள்விப்பட்டது உண்மையாய் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே? அவதூறு பேசுபவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிப்பார்கள். அதே அவதூறைப் பேசி அந்தப் பாவத்தில் நாமும் பங்கு கொள்ள வேண்டுமா?
என் கற்பின் திறத்தால் நான் உண்மை என்னவென்று அறிந்து கொண்டேன். இந்த மன்னர் மிக நல்லவர். தான் அகங்காரத்தோடு நடந்து கொண்டது தவறு என்பதை அவர் மனப்பூர்வமாக உணர்ந்துவிட்டார். அவர் தான தர்மத்தால் தன் பாவங்களைப் போக்கிக் கொள்ள விரும்புகிறார்.
அவருக்காக நரகத்தில் குவிந்த குதிரைச் சாணம் மெல்ல மெல்ல அளவு குறைந்து வருகிறது. அவரது நல்ல நோக்கத்தைத் தவறாக விமர்சித்தவர்கள் அவர் பாவத்தில் பங்கு போட்டுக் கொண்டுவிட்டார்கள். சாணி கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் பக்கம் போய்விட்டது.
மன்னர் பாவத்தில் இருந்து முற்றிலுமாக விடுதலையாவதற்கு இன்னும் ஒரே ஒரு கவளம் குதிரைச் சாணி மட்டும்தான் பாக்கியிருந்தது. இப்போது நீங்கள் மன்னரைப் பற்றி அவதூறு பேசியதால் அந்தப் பாவம் உங்களை வந்து சேர்ந்துவிட்டது.
எனவே மன்னருக்கான அந்தக் குதிரைச் சாணியும் மறைந்துவிட்டது. இப்போது மன்னர் பாவமற்றவர் ஆகிவிட்டார்.
நாதா! திருந்தி வாழ முயற்சி செய்யும் நல்லவர் ஒருவரைப் பற்றி அவதூறு பேசுவது பாவங்களில் எல்லாம் பெரும் பாவம் என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா?
இப்போது நீங்கள் அவதூறு பேசியதால் அடுத்த பிறவியிலும் நீங்கள் பார்வையற்றவராய்த் தான் பிறப்பீர்கள்! அதை எண்ணித்தான் நான் வருந்துகிறேன்!`
தன் மனைவியின் பேச்சைக் கேட்டு `தான் மட்டுமல்ல பார்வையற்றவர், திருந்த முயற்சி செய்யும் நல்லவர் குறித்து அவதூறு பேசும் அத்தனை பேரும் பார்வையற்றவர்கள்தான்` என்பதை அவர் உள்மனம் புரிந்துகொண்டது.
யார் எப்படிப் போனால் நமக்கென்ன? திருந்த முயலும் நல்லவரைப் பற்றித் தேவையில்லாமல் வம்பு பேசினோமே? தான் செய்த பாவத்தை எண்ணி அந்தப் பார்வையற்றவர் விழிகளில் இருந்து கண்ணீர் பெருகியது.
தொடர்புக்கு:
thiruppurkrishnan@gmail.com
- முதுமையில் பல்வேறு இடங்களில் புற்றுநோய் உண்டாவதாக உள்ளது.
- முதுமையில் உணவு பழக்கமும், உணவு ஒழுக்கமும் கடைப்பிடிப்பது மிக அவசியம்.
உடல் ஆரோக்கியம் பேண வேண்டிய வயதில் குடும்பத்தினருக்காகவும், சமூக கடமைகளுக்காவும் ஓடி ஓடி உழைத்து சரியான உணவு, உறக்கம் இன்றி, இளமை கடந்து முதுமையை அடைந்த பின், ஆரோக்கியம் என்பது கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் போல் ஆகிவிடுகிறது.
முதுமையில் தொற்றா நோய்க்கூட்டத்தில் இதய நோய்களுக்கு அடுத்தாற் போல் அதிக இறப்புகளை உண்டாக்கும் நோய்நிலையாக இருப்பது புற்றுநோய் தான். வயது மூப்பில் மாபெரும் சவாலாக இருக்கக்கூடிய நோய்நிலைகளில் முதல் இடத்தைப் பிடிப்பது புற்றுநோய். ஏனெனில் புற்றுநோய் என்றாலே ஒரு பயமும், பதட்டமும் முதுமைக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தான்.
புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் தடுக்கப்படவேண்டிய ஒன்று. மீறி உண்டாகிவிட்டால் எண்ணி எண்ணி வருத்தம் கொள்வதில் எந்த பலனும் இல்லை என்பதை முதுமையை நோக்கி பயணிக்கும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
அத்தகைய புற்றுநோயை சரி செய்து விடமுடியுமா? என்பது ஒரு புறமிருக்க, அது எந்த இடத்தில் உள்ளது? எந்த நிலையில் உள்ளது? பரவியுள்ளதா, இல்லையா? என்று அனுதினமும் எண்ணி எண்ணி அதிலே முதுமையின் ஆயுள் சுருங்கி விடும். வாழ்க்கைத் தரம் குறைந்து விடும். கிட்டத்தட்ட 60 சதவீதம் அளவுக்கு புற்றுநோயானது 65 வயதில் தான் உண்டாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
முதுமைப் பருவத்தில் புற்றுநோயை தடுப்பது என்பது கொஞ்சம் சிரமம் தான். ஏனெனில் முதுமையில் உண்டாகும் பல்வேறு உடல் செல்களின் மாற்றங்கள் பல்வேறு நோய்நிலைகளுக்கு பாதை அமைத்து விடுகிறது. இதில் புற்றுநோய் ஒன்றும் விதிவிலக்கல்ல.
முதுமை நிலையில் அத்தகைய புற்றுநோய் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு அதிகம் உண்டாவதாக உள்ளது. ஆண்களின் புகைப்பிடிக்கும் பழக்கமும், குடிப்பழக்கமும், ஆரோக்கியமில்லாத வாழ்வியலும், உணவுப் பழக்கமும் புற்றுநோய் விகிதத்தை அதிகமாக்கும் காரணிகளாக உள்ளன.
புகையிலையில் உள்ள 70-க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் உடல் செல்களை சிதைத்து புற்றுநோய்க்கான கதவுகளை திறந்து விடுகின்றன. இந்தியாவில் அறுபது வயதில் ஆண்களில் கிட்டத்தட்ட 45-50 சதவீதம் பேருக்கும், பெண்களில் 35-41 சதவீதம் பேருக்கும் புற்றுநோய் உண்டாவதாக புள்ளி விவரங்கள் கூறுவது முதுமைக்கு அச்சமும், சவாலும் உண்டாக்குவதாக உள்ளது.
முதுமையில் பல்வேறு இடங்களில் புற்றுநோய் உண்டாவதாக உள்ளது. கல்லீரல், கணையம், மூளை, பித்தப்பை, கருப்பை, கருவாய், மார்பகம், உணவுக்குழல், பெருங்குடல், இரைப்பை, சிறுநீரகம் ஆகியன புற்றுநோய் உண்டாகும் முக்கிய இடங்களாக உள்ளன.
முதுமையில் ஆண்களுக்கு புரோஸ்டேட் கோள புற்றுநோயும், பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயும், மார்பக புற்றுநோயும் அதிகம் ஏற்படுவதாக உள்ளன. ஆக அறுபதைக் கடக்கும் ஆண்களும், பெண்களும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம்.

சோ. தில்லைவாணன்
முதுமையில் பசியின்மை, திடீரென உடல் எடை குறைதல், சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் மாற்றம், அத்துடன் ரத்தக் கசிவு, நாட்பட்ட ஆறாத புண்கள், நாட்பட்ட கட்டிகள், அடிக்கடி சுரம், நிணநீர் கோளங்களில் வீக்கம் ஆகிய குறிகுணங்கள் தென்பட்டால் எவ்வித தாமதமின்றி உடனே மருத்துவரை அணுகுவது மிக மிக அவசியமான ஒன்று.
சித்த மருத்துவ அடிப்படையின் படி, நோய்க்கு காரணமாகும் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று குற்றங்களும் கேடடைந்து புற்றுநோய் உருவெடுக்கிறது. இருப்பினும் கபம் மற்றும் வாதம் ஆகிய குற்றங்களின் பாதிப்பு புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
"பித்தம் அடங்கிடின் பேசாதே போய் விடு" என்பது திருமூலர் வாக்கு. அதாவது பித்தம் அடங்கிவிட்டால் உயிர் போய்விடும் என்பது பொருள். அத்தகைய பித்தம் குறையாமலும், கபம் கூடாமலும் பார்த்துக்கொள்வது புற்றுநோய் நிலையில் ஆயுளை அதிகரிக்க உதவும்.
சித்த மருத்துவ மூலிகைகளான சீந்தில், மஞ்சள், நிலவேம்பு, வில்வம், நித்யகல்யாணி, சேராங்கொட்டை, கொடிவேலி, அமுக்கரா கிழங்கு, திரிபலை, தாளிசபத்திரி, கீழாநெல்லி, கரிசாலை ஆகிய பல எளிய மூலிகைகளும், அவை சேர்ந்த சித்த மருந்துகளும் புற்றுநோய் நிலையில் நல்ல பலன் தருவதாக உள்ளன. இவற்றை புற்றுநோயின் தன்மை மற்றும் நிலைகளுக்கு தகுந்தாற் போலும், நவீன சிகிச்சை முறைகள் எடுத்துக்கொண்டால் அதற்கு தகுந்தாற் போலும் மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது ஆயுட்காலத்தைக் கூட்ட உதவும்.
உதாரணமாக நித்யகல்யாணி இலையில் உள்ள 'வின்கிரிஸ்டின், வின்ப்ளாஸ்டின்' ஆகிய இயற்கை வேதிப்பொருட்கள் நவீன அறிவியல் உலகில் பிரித்தெடுக்கப்பட்டு புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப் படுகிறது. அதே போல் சித்த மருத்துவ மூலிகையான தாளிசபத்திரியின் செயல் மூலக்கூறான 'பிக்லிடாக்சால்' நுரையீரல் புற்றுநோய் நிலையில் பயன்படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இவை புற்றுநோய் சிகிச்சையில் நமது பாரம்பரிய மூலிகைகளின் மருத்துவப் பயனை பறை சாற்றும் விதமாக உள்ளன.
மேலும் கட்டிகளைக் கரைக்கும் ரசாயன மருந்துகள் என்று சித்த மருத்துவம் பட்டியலிடும் மருந்துகள் பல. அத்தகைய தாது கலப்புள்ள மெழுகு மற்றும் பற்ப, செந்தூர, பாஷாண பெரு மருந்துகளும் புற்றுநோய் கட்டிகளில் உதவக்கூடியதாக இருப்பது முதுமையில் புற்றுநோயை எதிர்கொள்ள சித்த மருத்துவம் தரும் நம்பிக்கை.
இவ்வாறாக தற்கால புற்றுநோய்க்கான மருத்துவத்தில் சித்த மருத்துவ மூலிகைகளின் செயல்தன்மை மிக்க வேதி மூலக்கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன. உலக அரங்கில் சவாலாக இருக்கும் தொற்றா நோய்நிலையான புற்றுநோய்க்கு சித்த மருத்துவம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டெடுத்த மூலிகைகள் நன்மை தருவதாக இருப்பது சிறப்பு மிக்கது. எனவே அத்தகைய மூலிகைகளை இயற்கையாய் பயன்படுத்த துவங்குவது புற்றுநோயின் பல்வேறு நிலைகளில் ஆயுளைக் கூட்ட உதவும்.
புற்றுநோய் நிலையில் பலன் தரும் சித்த மருந்துகள் ஒரு புறமிருக்க, புற்றுநோய்க்காக நவீன மருத்துவ கீமோ சிகிச்சை மேற்கொள்ளும் நிலையில் அதன் பல்வேறு பின்விளைவுகளை சமாளிக்க சித்த மருந்துகளை பயன்படுத்துவதும் நற்பலன் தரும்.
கீமோ சிகிச்சையின் போது பொதுவாக உண்டாகும் பின்விளைவுகளான முடி கொட்டுதல், நோய் எதிர்ப்புத்தன்மை குறைதல், எலும்பு மஜ்ஜை பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு ஆகிய நிலைகளில் நெல்லிக்காய் லேகியம், வெண்பூசணி லேகியம், அஸ்வகந்தா லேகியம், சீந்தில் மாத்திரை, மாதுளை மணப்பாகு, திரிபலை கற்பம், கரி சாலை கற்பம் போன்ற மருந்துகள் பலன் அளிக்கக் கூடியதால் முதுமையில் அவற்றை தயக்கமின்றி பயன்படுத்துவது, சோர்ந்த உடலுக்கு பலம் தரும்.
முதுமையில் சிறந்த உணவுப் பழக்கம் என்பது பல்வேறு நோய்களை தடுக்க உதவும் பேராயுதம். எளிமையான ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்கள் மூலம் பல்வேறு நோய்களை தடுக்க முடியும். நார்ச்சத்துள்ள உணவு வகைகள் அதில் முக்கிய பங்காற்றுகின்றன. பழங்களும், பிஞ்சு காய்கறிகளும் அத்தகைய நார்சத்துக்களின் முதன்மை ஆதாரம். சிறுதானிய உணவுகளும் அதிக நார்சத்தினை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பழங்களும், காய்கறிகளும் அதிகம் உட்கொள்வது பெருங்குடல், மலக்குடல், மார்பகம் மற்றும் நுரையீரல் புற்றுநோயினை தடுப்பதாகவும், மாறாக பழங்களை மட்டும் உட்கொள்வது ஆண்களின் புராஸ்டேட் புற்றுநோயினை தடுப்பதாகவும் உள்ளதென ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுவது சிறப்பு. அதே போல் மீன் உணவுகளை அதிகம் உட்கொள்வதும், குறைந்த அளவு இறைச்சி உணவுகளை உட்கொள்வதும் பெருங்குடல் புற்றுநோய்க்கான ஆபத்தினைக் குறைப்பதாக உள்ளதாக தெரிவிக்கின்றன. ஆகவே முதுமையில் உணவு பழக்கமும், உணவு ஒழுக்கமும் கடைப்பிடிப்பது மிக அவசியம்.
சமீபத்திய ஆய்வுகளின் படி நடைபயிற்சி செய்வது புற்றுநோய் நிலையில் ஆயுட்காலத்தினை அதிகரிக்க உதவுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளன. வாரத்திற்கு 3 மணி நேரம் நடைப்பயிற்சி பழகி வருவது மார்பக புற்றுநோயாளிகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பதாகவும், வாரத்திற்கு 6 மணி நேரம் நடைப்பயிற்சி பழகி வருவது பெருங்குடல் புற்றுநோயாளிகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பதாகவும் உள்ளதை ஆய்வுகள் உறுதிபட கூறுகின்றன. நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சி பழகுவதன் மூலம் மூளை புற்றுக்கட்டி நோயாளிகள் இறப்பு விகிதம் குறைவதையும் ஆய்வுகள் உறுதி செய்வது கூடுதல் சிறப்பு. எனவே சிரமம் பார்க்காமல் நடைப்பயிற்சி மேற்கொள்வது முதுமையில் அவசரமான அவசியம்.
மரபு சார்ந்தும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால், நோயுடன் தொடர்புடைய குடும்ப வரலாறு இருப்பவர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் நோயின் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், முறையான சிகிச்சை அளித்து நோயில் இருந்து காப்பாற்ற முடியும்.
புற்றுநோயின் முற்றிய நிலையில் ஆயுட்காலம் என்பது சில மாதங்கள் முதல் ஒரு சில வருடங்கள் வரை தான் என்பது வெளிப்படை. அவ்வாறு இருக்கையில் முதுமையில் ஆறுதலோடு வாழ்க்கையை நகர்த்த வேண்டியது அவசியம். ஆகவே ஒருங்கிணைந்த கைகளோடு, ஒருங்கிணைந்த மருத்துவத்தை கொண்டு, முதுமையை பாதுகாக்க வேண்டியது சமூக பொறுப்பு.
முதுமையில் நம்மால் பிறருக்கு துன்பம் வேண்டாம் என்ற எண்ணத்தால் மனம் நொந்து, மருந்து மாத்திரைகளை கைவிட்டு, நம்பிக்கை இழப்பது ஏற்க முடியாத ஒன்று. நல்ல நடைப்பயிற்சியும், ஆரோக்கியமான உணவும், நேரம் தவறாமல் மருந்துகளும், ஒருங்கிணைந்த மருத்துவமும், மனம் தளராமல் இருக்க யோகாசனமும், தியானமும், முகம் சுழிக்காத அன்பும் அரவணைப்பும் இருந்தால் முதுமையில் புற்றுநோயை மட்டுமல்ல, எமனையும் வெல்ல முடியும்.
தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com






