என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • உடல் எடை குறைதல், தசை வலி, உடல் வலி, வாந்தி, பசியின்மை, வாய்க்குமட்டல் ஆகியன சிறுநீரக பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாக உள்ளன.
    • ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்பது பழமொழி. ஆனால் உப்பில்லா பண்டங்கள் சிறுநீரக நோய்க்கு ‘குட் பை’ சொல்ல உதவும்.

    ஊருக்கு ஊர் அதிகமாகிக் கொண்டே செல்லும் டயாலிசிஸ் மருத்துவமனைகள் முதுமைக்கு வரம் என்ற போதிலும், அது முதுமையில் ஒருவித அச்சத்தை தருவதாக உள்ளது. ஏனெனில் முதுமையில் ஆயுட் காலத்தைக் குறைப்பதாக இருப்பவை சிறுநீரகம் சார்ந்த நோய்களும் தான்.

    50 வயதைக் கடக்கும் போதே சிறுநீரகத்தின் அடிப்படை அலகுகளான நெப்ரான்கள் சுருங்க துவங்குகின்றன. மேலும் முதுமையில் சிறுநீரகத்தில் ஏற்படும் உடல்கூறு மாறுபாடுகளும், செயல்பாடு மாறுபாடுகளும் இயல்பாகவே சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கின்றன.

    இது ஒருபுறமிருக்க, முதுமையில் அதிகம் பயன்படுத்தும் வலி நிவாரணி மாத்திரைகளும், முதுமைக்கு சவாலான நீரிழிவு நோயும், ரத்த அழுத்தமும், சிறுநீரக பாதிப்பை அதிகம் பேருக்கு உண்டாக்குவதாக உள்ளன. அத்தகைய சிறுநீரக பாதிப்பானது முதுமையின் நலத்திற்கு கூடுதல் சவாலாக உள்ளது. புற்றுநோயைப் போல நம் உடலில் உண்டாகும் நாட்பட்ட அழற்சியும், அதற்கு காரணமாகும் பல்வேறு வேதிக்காரணிகளும் சிறுநீரக நோய்களை உருவாக்க காரணமாக உள்ளன.

    உடல் எடை குறைதல், தசை வலி, உடல் வலி, வாந்தி, பசியின்மை, வாய்க்குமட்டல் ஆகியன சிறுநீரக பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. அத்துடன் நாட்பட்ட நிலையில் கால் வீக்கம், சிறுநீர் சரிவர இறங்காமை ஆகிய குறிகுணங்கள் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

    முதுமையில் சிறுநீரகம் மீது கூடுதல் அக்கறை செலுத்தாவிடில் சிறுநீரக செயலிழப்பு உண்டாகி, இதயத்தையும் பாதித்து ஆயுளைக் குறைக்க வல்லது. ஆகவே இதயம் காக்க விரும்பும் முதியோர்கள் சிறுநீரகத்தையும் காத்துக்கொள்வது அவசியம்.

    "மிகினும் குறையினும் நோய் செய்யும் - வளி முதலான எண்ணிய மூன்று" என்று வள்ளுவம் குறிப்பிடுவது சித்த மருத்துவத் தத்துவத்தின் அடிப்படையே. உடலில் இயல்புக்கு மாறாக காணும் வாதம், பித்தம், கபம் இவையே நோய்களுக்கு முதல் காரணம் என்று திருக்குறளும் கூறுகிறது.

    அத்தகைய மூன்று குற்றங்களில் கபம் மற்றும் வாதம் கூட்டணியின் பாதிப்பே முதுமையில் பல்வேறு நோய்நிலைகளுக்கு காரணம். அந்த வகையில் சிறுநீரகத்தைப் பாதிக்கும் 'கப வாதம்' சிறுநீரகத்தில் தேய்மானத்தை உண்டாக்கி நாட்பட்ட சிறுநீரக நோய்களுக்கு காரணமாகிறது.

    சித்த மருத்துவ மூலிகைகளான மூக்கிரட்டை, நெருஞ்சில், சீந்தில், தண்ணீர்விட்டான் கிழங்கு, நிலவேம்பு, நீர்முள்ளி, திராட்சை விதை, பூனைமீசை, சிறுபீளை போன்றவைகளும், மஞ்சள், கருஞ்சீரகம் போன்ற அஞ்சறைப்பெட்டி சரக்குகளும், திரிபலை சூரணமும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப நிலையில் பலன் தருவதாக உள்ளன. சிறுநீரைப் பெருக்கும் சிலாசத்து, நண்டுக்கல் போன்ற பல தாது கலப்புள்ள மருந்துகளும் சிறுநீரக பாதிப்பு நிலையில் பலன் தருவதாக உள்ளன.

    மேற்கூறிய மூலிகை மற்றும் மருந்துகளை நோய் நிலை அறிந்து மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது நல்லது. சிறுநீரக பாதிப்பின் இறுதி நிலையில் டயாலிசிஸ் போன்ற பிற சிகிச்சை முறைகளை மேற்கொள்ளும் போதும் இவற்றை பயன்படுத்துவது கூடுதல் நன்மை பயக்கும்.

    ஆரம்ப கட்ட சிறுநீரக செயலிழப்பில் நவீன ஆய்வுகள் கையில் எடுக்கும் மருத்துவ ஆயுதம் ஆன்டி-ஆக்சிடன்ட் வேதிப்பொருட்களைத் தான். ஆன்டி-ஆக்சிடன்ட் வேதிப்பொருட்கள் சிறுநீரகத்தின் செயல்திறனைக் கூட்டுவதாக ஆய்வுகளும் உறுதி செய்கின்றன. எளிமையாக அஞ்சறைப்பெட்டியில் உள்ள மஞ்சளும், கடைச்சரக்கான கருஞ்சீரகமும் அதிக ஆன்டி ஆக்சிடன்ட் தன்மை கொண்டு சிறுநீரகத்தை காக்க உதவுவதாக உள்ளன.

    நஞ்சில்லா மஞ்சளை ஒரு தேக்கரண்டி அளவுக்கு பாலில் சேர்த்து எடுத்துக்கொள்வதும், கருஞ்சீரகத்தை பொடித்து தேக்கரண்டி அளவு அல்லது கருஞ்சீரக தைலத்தை எடுத்துக்கொள்வதும் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடன்ட் சத்துக்களை உடலுக்கு தந்து, சிறுநீரக செல்களுக்கு புத்துணர்வு தரும்.

    மூக்கிரட்டை எனும் கீரை நாம் மறந்துபோன ஒன்றாகிவிட்டது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அத்துடன் மூக்கிரட்டை கீரையின் வேரை சூப் செய்து குடித்து வருவதும் உடலில் தங்கிய நீரினை வெளியேற்றி வீக்கங்களைக் குறைத்து சிறுநீரகத்தை காக்க உதவும். அல்லது மூக்கிரட்டை சூரணத்தை எடுத்துக்கொள்வதும் நல்லது. அதில் உள்ள 'புனர்னவின்' எனும் வேதிப்பொருள் அதன் மருத்துவ குணத்திற்கு காரணம் என்கின்றன நவீன ஆய்வுகள்.

    'பூனைமீசை' எனும் தாவரம் தற்காலத்தில் சிறுநீரக செயலிழப்பு நிலைக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த பூனைமீசை மூலிகையின் இலையை தேநீராக்கி எடுத்துக்கொள்வது சிறுநீரக பாதிப்பில் நற்பலன் தரும். அதில் உள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்சிடன்ட் வேதிப்பொருட்கள் அதன் மருத்துவ தன்மைக்கு காரணமாக உள்ளன.

    நெருஞ்சி முள், மூக்கிரட்டை, சிறுபீளை, நீர்முள்ளி இவற்றை சேர்த்து கசாயமாக்கி குடிப்பது வீக்கங்களைக் குறைப்பதில், ஆரம்ப சிறுநீரக நோய்நிலையில் பலன் தரும். தொடர்ந்து ஆறு மாத காலம் திராட்சை விதையினை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நாட்பட்ட சிறுநீரக நோயில் பலன் கிடைப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. திராட்சை விதையானது 'ரெஸ்வெரட்ரால்' எனும் சிறப்புமிக்க ஆன்டி-ஆக்சிடன்ட் வேதிப்பொருளைக் கொண்டுள்ளது. இதயத்தையும் காக்க வல்லது. ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த திரிபலை சூரணம் எனும் எளிய சித்த மருந்தை இரவில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்வது முதுமையில் சிறுநீரகம் காக்கும் எளிய வழிமுறை.

    மாறி வரும் கால சூழ்நிலையில் சிறுநீரகத்தின் வடிகட்டும் திறன் இயல்பாகவே குறைந்து விட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது. அதாவது இயல்பான அளவான 90-யைக் காட்டிலும் குறைந்து விட்டதாக தெரிவிப்பது வருத்தத்திற்குரியது. ஆகவே ரத்தத்தில் உள்ள யூரியா, கிரியாட்டினின் மற்றும் சிறுநீரில் வெளியேறும் புரதம், ரத்த அழுத்தம் ஆகிய பரிசோதனை முடிவுகளைக் கொண்டு சிகிச்சையை நாடுவது அவசியம்.

    உணவுக் கட்டுப்பாடு சிறுநீரக நோய்களுக்கும் மிக அவசியம். ஆரம்ப கட்ட சிறுநீரக நோய்நிலையில் மத்திய தரைக்கடல் பகுதி உணவும், டேஷ் உணவும் (DASH-Dietary approaches to stop Hypertension) நோயினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லாமல் தடுக்க உதவும்.

    'உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. ஆனால் உப்பில்லா பண்டங்கள் சிறுநீரக நோய்க்கு 'குட் பை' சொல்ல உதவும். முதுமையில் சிறுநீரக நோயில் அதிகமாகும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வர உப்பினை தவிர்ப்பது நல்லது. 

    ஏனெனில் உப்பு சேர்ப்பது சிறுநீரகத்தின் செயலுக்கு கூடுதல் பாரம் கொடுப்பது போன்றது. சோடியம் உப்பு சேர்ந்த உணவுகளை குறைவாக எடுப்பது சிறுநீரகத்தின் மீதான பாரத்தைக் குறைக்கும். மேலும் இது ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். எனவே முதுமையில் முடிந்த வரை சோடியம் உப்பினைக் குறைப்பது நல்லது.

    ஆரம்ப கட்ட சிறுநீரக நோய்நிலையில் அசைவ உணவுகளைத் தவிர்ப்பதும், பழங்கள் மற்றும் நார்ச்சத்துள்ள காய்கறிகளையும், நஞ்சில்லா இயற்கை உணவுகளை நாடுவதும் நோயினை இறுதி கட்டத்திற்கு கொண்டு செல்லாமல் தடுக்க உதவும். நாட்பட்ட சிறுநீரக நோயாளிகள் தினசரி 27 கிராம் அளவுக்கு நார்ச்சத்தினை உட்கொள்ள ரத்தத்தில் உள்ள யூரியா மற்றும் கிரியாட்டினின் அளவைக் குறைக்க உதவும் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு.

    கூடவே கட்டுப்படாமல் இருக்கும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டு வருவதும் சிறுநீரகம் காக்க வழிவகை செய்யும். நெல்லியும், மாதுளையும் நீரிழிவு நோயால் உண்டாகும் சிறுநீரக பாதிப்பை தடுக்க உதவுவதாக எலிகளில் நடத்திய சோதனை முடிவுகள் கூறுவது பழங்களின் மருத்துவத் தன்மைக்கு சான்றுகள்.

    இறைச்சியை அதிக வெப்பநிலைக்கு சூடாக்கும்போது உண்டாகும், ஏ.ஜி.ஈ. (AGE) எனும் வேதிப்பொருட்கள் சிறுநீரக செல்களை சிதைப்பதாகவும், அழிப்பதாகவும் உள்ளதை அறிவியல் ஆய்வுகள் உறுதி செய்கின்றன. அதே சமயம் சிறுநீரக வடிகட்டும் திறன் 30க்கும் கீழ் உள்ளவர்களில் ஒன்றரை வருடம் நடந்த ஆய்வில் சைவ புரதங்களை எடுத்துக்கொண்டதில் சிறுநீரக மாற்றுக்கு தேவை குறைந்துள்ளதாகவும் ஆய்வுகள் கூறுவது சிறப்பு. ஆகவே முதுமையில் சிறுநீரகம் காக்க அசைவ புரதங்களைத் தவிர்த்து சைவ புரதங்களை நாடுவது நல்லது. 

    அதே போல் தேநீர், காபிக்கு பதிலாக கிரீன் டீ அருந்தலாம். பச்சை கிரீன் டீயில் உள்ள அதிகப்படியான 'பாலிபீனால்கள்' உடல் பருமனால் உண்டாகும் நாட்பட்ட அழற்சியைத் தடுத்து, சிறுநீரக பாதிப்பை தடுப்பதாக எலிகளில் நடத்திய சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

    நாட்பட்ட சிறுநீரக நோயானது அதிக ரத்த அழுத்தம், ரத்த சோகை ஆகிய நோய்நிலைகளை துணை நோய்களாக கொண்டு வந்து முதுமையை வாட்டி எடுக்கும். இவ்வாறாக முதுமை மன மகிழ்ச்சியான, ஆரோக்கியத்தின் இருப்பிடமாக இல்லாமல், நோய்களின் கூடாரமாக மாறிவிடும். இருப்பினும் சரியான வழிகாட்டு முறைகளையும், நஞ்சில்லா உணவு முறைகளையும் பின்பற்றுவது சிறுநீரகத்தைக் காத்து ஆயுளைக் கூட்டும்.

    சிறுநீரக நோயின் இறுதி கட்ட நிலையில் டயாலிசிஸ் தேவையா? அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவையா? என்பதை உறுதி செய்ய மருத்துவர் ஆலோசனையை பின்பற்றுவது அவசியம். மேலும் சிறுநீரக பாதிப்பு உள்ள நிலையில் இரும்பு சத்து மாத்திரைகளுடன், கால்சியம் மற்றும் வைட்டமின்- டி3 மாத்திரைகளை சேர்த்து எடுப்பது மிக மிக அவசியம். 

    மருத்துவர் சோ.தில்லைவாணன்

    மருத்துவர் சோ.தில்லைவாணன்

    உடலை ஆரோக்கியப்படுத்த வேண்டிய உணவு நஞ்சாகி போனதன் விளைவு, அதிகமாகும் சிறுநீரக நோய்களுக்கு ஒரு முக்கிய காரணம். எனவே மாற்றுமருத்துவமாய் மாறிப்போன நமது மரபு மருத்துவம், அதைச் சார்ந்த மரபு உணவும், மற்றும் மரபு வாழ்வியல் நெறிமுறைகளும் சிறுநீரக நலம் காக்க அவசியமானவை.

    தொடர்புக்கு:

    drthillai.mdsiddha@gmail.com

    • ஜோதிடத்தின் மூலம் ஒரு மனிதனுடைய வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்கப் போகிற சம்பவங்களை எளிதாக அறிய முடியும்.
    • ஒருவரின் பிறந்த கால பலனை நிர்ணயம் செய்வதில் ராசி, லக்னம், நட்சத்திரம் மூன்றும் மிக முக்கியம்.

    ஒரு ஆன்மாவின் பயணத்தை எளிமையாக்கி தனது பிறப்பின் நோக்கத்தை அறியச் செய்து ஆன்மாவின் இலக்கை அடைய உதவும் உயர்ந்த சாஸ்திரம் ஜோதிடம். வானில் சூரியனைச் சுற்றி வரும் கிரகங்களால் மனித வாழ்க்கையில் உண்டாகும் மாற்றங்களை விளக்குவது ஜோதிட சாஸ்திரமாகும். ஜோதிடத்தின் மூலம் ஒரு மனிதனுடைய வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்கப் போகிற சம்பவங்களை எளிதாக அறிய முடியும். அதற்கு ஜாதகம் மிகவும் அவசியம். மனிதனுக்கு பொருள் தேடும் விஷயத்திற்கு உதவியாகவும் ஆபத்து காலத்தை அறிய உதவும் கலங்கரை விளக்கமாகவும் சத்ருகளிடம் இருந்து வெற்றியடைய விரும்பும் சமயங்களில் ஒரு நல்ல மதிநுட்ப மந்திரியாகவும் ஜோதிடம் திகழ்கிறது. இத்தகைய சிறப்புடைய ஜோதிட சாஸ்த்திரம் பலருடைய வாழ்க்கையில் பல நல்ல திருப்பு முனையை தந்துள்ளது. ஒருவரின் பிறந்த கால பலனை நிர்ணயம் செய்வதில் ராசி, லக்னம், நட்சத்திரம் மூன்றும் மிக முக்கியம்.

    90 சதவீதம் பிறந்த ஆங்கில தேதி, நேரம், ஊர் சரியாக இருந்தால் சாப்ட்வேர் மூலம் எளிமையாக ஜாதகத்தை கணித்திட முடியும். பிறந்த நாள், நேரம் இல்லாதவர்களின் ஜாதகத்தை கணித்திட வேறு முறைகள் உள்ளது.

    அதனால் அதை பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்களாம். பிறந்த நாள், நேரம் தெரிந்தும் சிலரின் ஜென்ம ராசி, ஜென்ம நட்சத்திரம், ஜென்ம லக்னத்தை அறிந்து கொள்ள முடியாமல் மனக் குழப்பத்திற்கு ஆளாகுகிறார்கள். அதனால்

    அது அவர்களுக்கு ஜோதிடத்தின் மேல் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. ஒருவருக்கு சரியான ஜென்ம நட்சத்திரம், ஜென்ம ராசி, ஜென்ம லக்னம் கண்டறிய முடியாமல் போவதற்கான ஜோதிட ரீதியான விளக்கமே இந்த கட்டுரை.

    ஒருவருக்கு சரியான பிறந்த லக்னம், ராசி, நட்சத்திரம் மாறுவதற்கான காரணங்கள் பல இருந்தாலும் மூன்று விதமான காரணங்களை பிரதானப்படுத்த விரும்புகிறேன்.

    1. லக்ன சந்தியில் குழந்தை பிறப்பது

    2. நட்சத்திர சந்தியில் குழந்தை பிறப்பது

    3. கண்டாந்த தோஷம்

    1. லக்ன சந்தியில் குழந்தை பிறப்பது.

    முதலில் லக்னம் என்றால் என்ன? என்பதை காணலாம். லக்னம் என்பது சூரிய ஒளியின் பயணம். அதாவது சூரியன் உதயமான நேரத்தில் இருந்து தோராயமாக இரண்டு மணி நேரம் வீதம் சூரிய ஒளி ஒரு ராசியில் பயணிக்கும். குழந்தை பிறக்கும் நேரத்தில் சூரிய ஒளி நின்ற புள்ளியே குழந்தையின் ஜென்ம லக்னமாகும். ஜென்ம லக்னம் என்பது ஒரு ஆன்மாவின் உயிர்.

    லக்ன சந்தி என்பது ஒரு லக்னம் முடிந்து அடுத்த லக்னம் தொடங்கும் நேரமாகும். அதாவது இரண்டு லக்னங்களும் சந்திக்கும் குறிப்பிட்ட நேரத்தை லக்ன சந்தி என்று கூறுகிறோம். இந்த நேரத்தில் குழந்தை பிறக்கும் போது ஜாதகரின் லக்னத்தை தேர்வு செய்வதில் சிறிய கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. உதாரணமாக மேஷ லக்னம் முடிந்து ரிஷப லக்னம் துவங்கும் நேரத்தில் குழந்தை பிறந்தால் மேஷ லக்னமா? ரிஷப லக்னமா? என்ற மனத்தாங்கல் உருவாகுகிறது. இது போன்ற நேரத்தில் ஜாதகரின் குணாதிசயங்களை முன்னிலைப்படுத்தி லக்னத்தை நிர்ணயிப்பது சாலச் சிறந்தது.

    ஐ.ஆனந்தி

    ஐ.ஆனந்தி

    2.நட்சத்திர சந்தியில் குழந்தை பிறப்பது.

    குழந்தை பிறந்த நேரத்தில் சந்திரன் நின்ற நட்சத்திரமே ஜென்ம நட்சத்திரமாகும். ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

    ஒரு ராசிக்கு ஒன்பது நட்சத்திர பாதமாகும். ஒரு நட்சத்திரத்தின் ஒன்பதாவது நட்சத்திர பாதம் முடியும் போதும் அடுத்த நட்சத்திரத்தின் முதல் பாதம் ஆரம்பமாகும் போதும் குழந்தை பிறந்தால் அது நட்சத்திர சந்தியாகும். உதாரணமாக மேஷ ராசி அசுவினி நட்சத்திரத்தின் 4-ம் பாதம் முடிந்து பரணி நட்சத்திரம் 1-ம் பாதம் ஆரம்பிக்கும் போது குழந்தை பிறப்பது நட்சத்திர சந்தியாகும். இதனால் ஜாதகரின் தசா புத்தி பலன்களில் மாற்றம் ஏற்படும். இது போன்ற நேரத்தில் ஜாதகரின் குணாதிசயங்களை முன்னிலைப்படுத்தி லக்னத்தை நிர்ணயிப்பது சாலச் சிறந்தது.

    3. கண்டாந்த தோஷம்

    கண்டாந்தர நட்சத்திர தோஷம் கண்டாந்தம் என்றால் கண்டம் +அந்தம். ஒரு நட்சத்திரம் முடியும்போது கடைசியில் உள்ள 2 நாழிகையும், ஒரு நட்சத்திரம் ஆரம்பமாகும் போதும் உள்ள 2 நாழிகையும் கண்டாந்த நாழிகை எனப்படும். இந்த இரண்டும் சேர்ந்த 4 நாழிகையானது கண்டாந்த நாழிகை எனப்படும். இந்த கண்டாந்த தோஷமானது.

    ரேவதி -அசுவினி, ஆயில்யம்-மகம்,கேட்டை -மூலம் ஆகிய இந்த மூன்று ஜோடி நட்சத்திரங்களுக்கு மட்டுமே உண்டு.

    அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் 1-ம் பாதமும், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் 4-ம் பாதமும் கண்டாந்த தோஷம்.

    கண்டாந்த வேளைகளில் பிறந்தவர் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது. மேலும் ஜாதகரை மட்டுமின்றி அவரது பெற்றோர் உறவினரைக் கூட பாதிக்க வல்லது.

    ஜென்ம லக்னம் மற்றும் ஜென்ம ராசி, நட்சத்திரம் எதுவென்று தெரியாத பல ஜாதகர்களின் மன வருத்தம் ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை குறைவை தருகிறது.

    லக்ன / நட்சத்திர சந்தியில் பிறப்பவர்களின் ஜாதக பலனை நிர்ணயிப்பது குதிரைக்கு கொம்பு முளைத்த கதைதான். ஒரு குழந்தையின் ஜென்ம நட்சத்திரம் மற்றும் ஜென்ம லக்னத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நட்சத்திரம் என்பது உடல் . லக்னம் என்பது ஆன்மா உயிர் புள்ளி. உடலும் உயிரும் இணைந்ததே ஒருவருடைய வாழ்க்கை. உயிர் இல்லாத உடலால் தனித்து இயங்க முடியாது. அத்துடன் ஒருவரின் வாழ்க்கை சம்பவங்கள் தசாபுத்தியைக் கொண்டே முடிவு செய்யப்படுகிறது. நட்சத்திர பாதம் தவறாகும் போது தசாபுத்தி கணிதத்திலும் மாற்றம் ஏற்படும்.

    ஒரு உடலை இரண்டு உயிர் இயக்கினால் உடலால் செயல்பட முடியாது. உதாரணமாக மேஷ ராசி முடிந்து ரிஷப ராசி ஆரம்பிக்கும் போது அல்லது மேஷ லக்னம் முடிந்து ரிஷப லக்னம் ஆரம்பிக்கும் போது ஒருவர் பிறந்து இருந்தால் அவருடைய ஜாதக பலன் இரண்டு ராசி / இரண்டு லக்ன பலன்களுடன் இணைந்தே இருக்கும். இது தான் ஜோதிடருக்கு செக் பாயின்ட். தவறினால் ஜோதிட பலன்கள் ஜாதகரின் வாழ்க்கையோடு பொருந்தாமல் போகலாம். இது போன்ற லக்ன / நட்சத்திர சந்தியை முறைப்படுத்தாத ஒரு ஜாதகத்தை கொண்டு ஒருவருக்கு வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் போது, அது தவறாக அமைந்து ஜாதகரின் வாழ்க்கையே தடம் புரண்டு விடும்.

    எது எப்படி இருந்தாலும் இது போன்ற அமைப்பில் பிறந்தவர்களுக்கு தீர்வு கிடைக்க செய்ய முடியுமா? என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

    பெரும்பாலும் வாக்கியம்/திருக்கணிதம் என இரண்டு பஞ்சாங்கங்கள் நடைமுறையில் இருப்பதே இந்த நட்சத்திர / லக்ன சந்திக்கு முதல் காரணமாக அமைகிறது. வாக்கிய பஞ்சாங்கம் சிறந்ததா? திருக்கணிதப் பஞ்சாங்கம் சிறந்ததா? என்று ஆய்வு செய்தால் ஒரு ஜாதகருக்கு இந்த ஜென்மம் முழுவதும் தீர்வு கிடைக்க செய்ய முடியாது.

    எந்த பிரச்சினையாக இருந்தாலும் இரண்டு மாறுபட்ட முரண்பாடான கருத்து இருப்பது உலக இயல்பு. அதனால் ஜோதிடர்கள் சுய அனுபவத்தில் எந்த பஞ்சாங்க முறை சரியாக வருகிறதோ அதை பயன்படுத்தலாம். சர்ச்சைக்குரிய விசயத்திற்கு தீர்வு காண முயல்வது காலம், நேரத்தை வீணாக்கும் செயலாகும்.

    நாம் உதாரணத்திற்கு எடுத்துக் கொண்ட மேஷ / ரிஷப லக்ன, நட்சத்திர சந்தியில் பிறந்த ஒருவரின் பிரச்சினையை எவ்வாறு தீர்வு கொடுக்க முடியும் என்று பார்க்களாம்.

    ஒருவர் மேஷ லக்னத்தில் பிறந்து இருந்தால் தலை அல்லது முகத்தில் காயம்பட்ட தழும்பு அல்லது மச்சம் இருக்கும். உஷ்ண தேகம் உடைய வராக இருப்பார். எடுத்த காரியத்தை இறுதி வரை போராடி முடிக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணம் உடையவராக இருப்பார். ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் அழகாக இருப்பார்கள். லவுகீக வாழ்வில் அதிக நாட்டம் உடையவர்கள். பிறருடன் இனிமையாக முகம் சுழிக்காமல் பழகுவார்கள். கல்வி, கலைத்திறமை, இசை ஞானம், நடனமாடுதல், நடிப்பு ஒவியம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.

    இப்பொழுது உங்களுக்கு நன்றாக புரிந்து இருக்கும். ஒரு லக்னத்திற்கும் அடுத்த லக்னத்திற்கும் உள்ள குணாதிசயங்களை கொண்டு ஒருவரின் லக்னம் தொடர்பான பிரச்சினையை மிக எளிமையாக கொண்டு வந்து விடலாம்.

    இதே போல் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனி இயல்பு உண்டு. ஜாதகரின் குண இயல்புகள் எந்த நட்சத்தித்தோடு பொருந்தி வருகிறதோ அந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு ஜாதகரின் நடை, உடை, பாவனை, கடந்த கால, நிகழ்கால நிகழ்வுகள் ஆகியவற்றை தீர்மானித்து பலன் கூறினால் தீர்வு கிடைக்கும்.

    ராசி, நட்சத்திரம், லக்னத்தை குணாதிசயத்தோடு ஒப்பிட்டு தீர்வு கிடைக்கச் செய்வது காதைச் சுற்றி மூக்கை தொடுவதற்கு ஒப்பாகும். ஒரு பிரச்சினையை தரும் பிரபஞ்சம் அதற்கு எளிதான தீர்வையும் தந்து இருக்கிறது. ஒருவருடைய ஜாதகத்தில் ராசி, லக்னம் மாறினாலும் 100-க்கு 99 சதவீதத்தினருக்கு குரு, சனி, ராகு/கேதுக்கள் நிற்கும் இடம் மாறுவதற்கு வாய்ப்பே கிடையாது. இந்த 4 வருட கிரகங்களை கொண்டே ஜாதகருக்கு தீர்வு கிடைக்க செய்ய முடியும். இதற்கும் மேல் ஜாதகர் வந்த நேரத்தை கொண்டு பிரசன்னம் பார்த்தும் தீர்வு கொடுக்க முடியும்.

    மேலும் உளவியல் ரீதியாக இந்த பிரச்சினையை ஆராய்ந்தால் ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த கர்மாவின் அடிப்படையில் வாழ்வில் லாபம் மற்றும் நஷ்டங்களை சந்தித்து வருகிறார்கள். சாதகமான பலன்கள் நடைபெறும் போது மனது மகிழ்ச்சியாக உள்ளது. சில அசுப பலன்களை சந்திக்கும் போது மன சஞ்சலம் மிகுதியாகுகிறது.

    காலச்சக்ர பிடியில் சிக்கி தவிக்கும் மனிதர்கள் விதியின் பிடியில் இருந்து விடுபட்டு வெற்றி பெற வேண்டும் என்ற ஆவலில் தான் அனுபவிக்க இருக்கும் பலன்களை மீறி சில திட்டமிடுதலைச் செய்து அவற்றை அடைய முயற்சிக்க வேண்டிய கட்டாயத்தில் மனித வாழ்க்கை உள்ளது. அந்த முயற்சியில் சில வெற்றிகளையும் பல தோல்விகளையும் சங்கடங்களையும் சந்திக்க நேருகிறது.

    வெற்றி கிடைக்கும் போது தன் திறமையை நினைத்து பெருமைப்படும் மனிதன் தோல்வியை சந்திக்கும் போது பலரின் கவனம் ஜோதிடத்தின் பக்கம் திரும்புகிறது. ஜோதிடத்தின் மூலம் தனது விதிப் பயனை மாற்றும் பரிகாரம் செய்து வாழ்வில் வளம் பெற முடியும் என்ற எண்ணம் மிகுதியா கிறது. வேதாகம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சில பூஜை முறைகளை மேற்கொள்ளும் போது சில பலன்கள் மாற்றியமைக்கப்படலாம் என்றாலும் அது வெகு சிலருக்கு தற்காலிக தீர்வை தருகிறது.

    ஒருவன் தன் வாழ்வில் சந்திக்கின்ற அத்துணை அனுபவங்களுக்கும் காரணத்தை ஆராய்ந்தால் அவர்களுடைய ஊழ்வினையே முன் வந்து நிற்கும். இதைத் தான் நமது முன்னோர்கள் தீதும் நன்றும் பிறர் தர வாரா, ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அப்படி என்றால் இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தீர்வே கிடையாதா? என்ற ஆதங்க கேள்வி எழும். இது போன்ற தீராத பிரச்சினைகளால் மன உளைச்சலுக்கு எளிமையாக ஜோதிடத்தில் தீர்வு தர முடியும். கோச்சார குரு ஜனன கால சனிக்கும் சம்பந்தம் எற்படும் போது அல்லது கோச்சார சனி ஜனன கால குருவுக்கு சம்பந்தம் ஏற்படுத்தும் போது செய்யப்படும் வழிபாடு நிரந்தர தீர்வு தரும் என்ற உண்மை தெரியாமல் ஜோதிடத்தின் மேல் பலி சுமத்துகிறார்கள். உண்மையான பக்தி மற்றும் சரணாகதி ஒரு ஆன்மாவின் கர்மவினையை இல்லாமல் செய்துவிடும்.

    ஜோதிடம் என்பது பெரும் கடல். நிச்சயமாக ஜோதிடத்தின் மூலம் எதிர்கால வாழ்க்கையை நிம்மதியாகவும், ஒளிமயமாகவும் அமைத்துக் கொள்ளலாம்.

    பரிகாரம்:-

    லக்ன / நட்சத்திர சந்தியில் ஒரு ஜனனம் நிகழ்வது கர்ம வினை தோஷமே. உலக மக்கள் தொகையில் பத்து சதவீதத்தினருக்கு மட்டுமே இது போன்ற லக்ன / நட்சத்திர சந்தி பிரச்சினை ஏற்படுகிறது. இது சஞ்சித கர்மாவின் விளைவு. தினமும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான பிரதோஷ வேளையில் சிவபுராணம் படித்து வர கர்ம வினை குறைந்து காரிய சித்தி கிட்டும்.

    கண்டாந்தத்தில் குழந்தை பிறந்தால் நவக்கிரக சாந்தி ஹோமங்கள் செய்து கொள்வது நல்லது.

    • சூரிய தோஷத்தால் சிலருக்கு பித்ருக்கள் சாபம் அதிகரித்து குழந்தை பாக்கியத்தில் கூட தாமதத்தை ஏற்படுத்தலாம்.
    • வாழ்க்கையின் முக்கிய நடவடிக்கைகளை முடக்கும் சக்தியாக சூரிய தோஷம் அமைந்துள்ளது.

    நவக்கிரகங்களில் முக்கியமானது சூரியன். அதை முதன்மையாக கொண்டே மற்ற கிரகங்கள் இயங்கி வருகின்றன. எனவே சூரியன் தொடர்பாக ஒருவரது ஜாகத்தில் தோஷம் ஏற்பட்டால் அந்த தோஷம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    ஜாதகப்படி லக்னத்தில் இருந்து 2, 7, 8 கட்டங்களில் சூரியன் இருந்தால் அவை சூரிய தோஷம் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள். ஒருவருக்கு சூரிய தோஷம் ஏற்பட்டால் 3 முக்கிய தடைகளை உருவாக்கும் என்பது ஜோதிடர்களின் கருத்தாக உள்ளது.

    அதாவது சூரிய தோஷம் உள்ள ஜாதகக்காரருக்கு முதலில் கல்வியில் தடை ஏற்படுமாம். உயர் கல்வி கற்பதில் எதிர்பாராத இடையூறுகள் வந்து தடுக்கும் என்று சொல்கிறார்கள். அப்படியே கல்வியில் சிறப்பு பெற்றாலும் வேலை பெறுவதில் சூரிய தோஷம் தடை ஏற்படுத்தி விடும் என்கிறார்கள்.

    ஒருவேளை கல்வியும் கிடைத்தும், நல்ல வேலையும் கிடைக்கும் பட்சத்தில் திருமணம் கைகூடுவதில் சூரிய தோஷம் சிக்கலை ஏற்படுத்தும் என்று ஜோதிடர்கள் எழுதி வைத்துள்ளனர். அது மட்டுமின்றி தொடர்ந்து நோய் ெதால்லைகளையும் இந்த தோஷம் ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இப்படி வாழ்க்கையின் முக்கிய நடவடிக்கைகளை முடக்கும் சக்தியாக சூரிய தோஷம் அமைந்துள்ளது. எனவே சூரிய தோஷம் இருந்தால் அவசியம் அதை நிவர்த்தி செய்ய ஈடுபட வேண்டும்.


    சூரிய தோஷத்தை மிக மிக எளிதாக நீக்குவதற்கு சித்தர்களும், முன்னோர்களும் பல்வேறு பரிகாரங்களை வழிகாட்டுவதாக கூறி உள்ளனர். அதில் முதன்மையானது ஆஞ்சநேயர் வழிபாடு. ஒருவர் எந்த அளவுக்கு அனுமனை ஆர்த்தமாக வழிப்படுகிறாரோ அவருக்கு சூரிய தோஷம் பாதிப்பு வரவே வராது என்கிறார்கள்.

    அடுத்ததாக பசு மாட்டுக்கு கோதுமை வகை உணவுகளை கொடுப்பதன் மூலம் சூரிய தோஷத்தை நிவர்த்தி செய்ய கொள்ள முடியும் என்று கருதப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு காரணம் கூறப்படுகிறது. சூரியனின் தாணியம் கோதுமை ஆகும். எனவேதான் கோதுமை கலைந்த உணவு பொருளை பசு மாட்டுக்கு கொடுப்பதன் மூலம் சூரிய தோஷத்தை கட்டுப்படுத்தலாம் என்கிறார்கள்.

    இந்த பரிகாரங்கள் தவிர பாராயணம் மூலமாகவும் சூரிய தோஷத்தில் இருந்து விடுபட முடியும். சூரியனின் காயத்ரி மந்திரத்தை ஞாயிற்றுக்கிழமைகளில் உச்சரிப்பது மிகவும் கை கொடுக்கும். ஆதித்ய கிருதயம் படிக்கலாம். வாய்ப்பு இருப்பவர்கள் அனுமன் சாலீசா புத்தகம் வாங்கி தினமும் அதை படித்து வந்தால் நல்லது.

    சிலர் ஆலயங்களுக்கு சென்று பூஜைகள், பரிகாரங்களை செய்வதைதான் அதிகம் விரும்புகிறார்கள். அத்தகைய நம்பிக்கை உடையவர்கள் சூரிய தோஷத்தை நிவர்த்தி செய்ய கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

    சூரியனார் கோவிலில் நவக்கிரகங்களும் சுற்றி அமைந்துள்ளன. அங்கு வழிபடுவதன் மூலம் சூரிய தோஷம் மிக எளிதாக விலகும் என்பது ஐதீகம்.

    சென்னைக்கு அருகில் ஞாயிறு என்ற சூரிய தலம் உள்ளது. இந்த ஆலயத்தில் புஷ்ப ரதேஸ்வரர் மூலவராக உள்ளார். சென்னை செங்குன்றம் அருகே இருக்கும் இந்த ஆலயத்தில் சிவபெருமானை வழிபட்டு சூரியன் தனது பாவங்கள், தோஷங்களை நீக்கிக் கொண்டதாக புராணங்களில் குறிப்புகள் உள்ளன.


    இதன் காரணமாக இந்த ஆலயம் சூரியனால் ஏற்படும் தோஷங்களை போக்கும் அருமையான ஆலயமாக திகழ்கிறது. இந்த ஆலயத்தில் சூரியன் வழிபட்டால் அங்குள்ள தீர்த்தம் சூரியபுஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் சூரிய பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் இத்தகைய அமைப்பை பார்ப்பது மிகவும் அபூர்வமாக ஆகும். அந்த சன்னதியில் பூஜை செய்து வழிபட்டால் சூரிய தோஷம் நீங்கும்.

    அன்று பூஜைகளை எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு வழிமுறை உள்ளது. அலங்கரிக்கப்பட்ட கலசங்களுக்கு பூஜை செய்வதன் மூலம் சூரிய தோஷத்தில் இருந்து விடுபட முடியும் என்கிறார்கள். அதாவது அலங்கரிக்கப்பட்ட கலசத்துக்குப் பூஜை செய்து, பக்தர்கள் கையில் மலர்களுடன் சங்கல்பம் செய்கிறார்கள். களத்திர தோஷம் நீங்கவும், வேலை வாய்ப்பு அமையும், ஆரோக்கியம் பெருகும் என வெவ்வேறு பிரார்த்தனைகளுடன் நடக்கிறது சங்கல்பம்.

    தாங்கள் வைத்துள்ள புஷ்பங்களை கலசத்தின் மேல் சமர்ப்பித்து வணங்குகிறார்கள். தொழுநோய் போன்றவை குணமாகச் சூரியனை வழிபடுவது சிறந்தது. தாமிர பாத்திரத்தில் கோதுமையை வைத்து அதில் சூரியனைப் பிரதிஷ்டை செய்து அல்லது சூரியனை வழிபட்டுத் தானமாக வழங்கினால் சூரியனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.

    6 வாரம் அல்லது 11 வாரம் என்று சங்கல்பம் செய்து கொண்டு ஞாயிறு திருத்தலத்துக்கு வர வேண்டும். இங்கு வந்து சூரிய புஷ்கரணியில் நீராட வேண்டும். அந்த நீரை எடுத்து தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்.

    கோதுமை வைத்த தாமிர பாத்திரம், சிவப்பு வஸ்திரம், தாமரை பூ ஆகியவற்றைச் சூரியன் சன்னதியில் கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும். தங்கள் வயதிற்கு ஏற்ப தீபம் ஏற்ற வேண்டும். 6 முறை வலம் வந்து வழிபட வேண்டும். இப்படி 6 வாரம் அல்லது 11 வாரம் அதாவது ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட்டால் சூரியனால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

    தினமும் சூரிய கவசம் படிப்பதும் நல்ல பலனை தரும். வாரத்துக்கு ஒரு தடவை ஞாயிற்றுக்கிழமை வீட்டில் சர்க்கரைப் பொங்கல் வைத்து அதை சூரியனுக்கு நைவேத்தியம் செய்து வழிபட்டால் சூரிய தோஷத்தின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

    சூரிய உதயத்துக்கு முன்பாகவே எழுந்து குளித்து விட்டு வீட்டு வாசலில் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் சூரியனின் நல்ல பலன்களை அதிகம் பெற முடியும். சூரியன் உதிக்கும் சமயத்தில் வீட்டு வாசலில் நின்ற படியே கிழக்கு திசை நோக்கி வணங்குவது சிறப்பானதா கும். அந்த சமயத்தில் சூரிய பகவானிடம் அனைத்து பிரச்சினைகளையும் சொல்லி அவற்றை தீர்க்குமாறு வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

    வீட்டு வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் சூரியன் ரதம் வரைந்து வழிபடுவதன் மூலம் தோஷம் நீங்குவதோடு செல்வ செழிப்புக்கும் வழி வகுக்கும். மனதில் அமைதி உண்டாகும். சிலருக்கு சூரிய தோஷத்தால் பூர்வீக சொத்துக்களில் பிரச்சினை ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் இந்த வழிபாட்டை அவசியம் செய்ய வேண்டும்.

    சூரிய தோஷத்தால் திருமண தடை, உடல்நலக்குறைவால் அவதிப்படுபவர்கள் ஞாயிற்றுக்கிழமை சூரியனை வழிபட்டு கோதுமை தவிட்டை பசு மாட்டுக்கு கொடுக்க வேண்டும். சூரியனின் அருள் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்கள் கழுத்து செயினில் ஆஞ்சநேயர் படம் பொறித்த டாலரை சேர்த்தக் கொள்வது நல்லது.

    சூரிய தோஷம் மிக மிக கடுமையாக இருப்பதாக ஜோதிடர் கூறினால் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானுக்கு 5 அகல்விளக்கு தீபம் ஏற்றி அவசியம் வழிபட வேண்டும்.


    ஜோதிடர்கள் சாத்திரபடி சூரியன் பிதுர்காரகன் என்று அழைக்கப்படுகிறார். அதாவது தந்தை வழி உறவுகள் அனைத்தையும் நிர்ணயிப்பவராக உள்ளார். எனவே சூரியன் ஒருவரது ஜாதகத்தில் சரியாக அமையா விட்டால் தந்தை வழி உறவுகளில் கடும் பாதிப்பு ஏற்படும்.

    குறிப்பாக பூர்வீக சொத்துக்களை பகிர்ந்து கொள்வதில் சகோதரர்களுக்கு இடையே சமரசம் ஏற்படவே ஏற்படாது. பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும். இத்தகைய தோஷம் இருப்பவர்கள் அவசியம் சூரியனார் கோவிலுக்கு சென்று வழிபட்டே தீரவேண்டும்.

    ஜாதகத்தில் சூரியன் 2-ம் இடத்தில் இருந்தால் திருமணம் தாமதம் ஆகும் என்பார்கள். 7-ம் இடத்தில் இருந்தால் அது களத்திர தோஷமாக மாறும் என்பார்கள். 8-வது இடத்தில் இருந்தால் குடும்ப வாழ்க்கை அமைவதில் இழுபறி இருந்து கொண்டே இருக்கும் என்பார்கள்.

    இதையெல்லாம் தெரிந்து கொண்டு பரிகாரம் செய்ய வேண்டும். சூரிய தோஷத்தால் சிலருக்கு பித்ருக்கள் சாபம் அதிகரித்து குழந்தை பாக்கியத்தில் கூட தாமதத்தை ஏற்படுத்தலாம். அத்தகைய நிலையில் இருப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து சூரியன் போற்றிகளை சொல்லி வழிபட வேண்டும்.

    அரசமரம் இருந்தால் தினமும் அதற்கு நீர் ஊற்றி வருவதும் சூரிய தோஷத்தை கட்டுப்படுத்த கை கொடுப்பதாக இருக்கும்.

    • சார்.. நான் பாவம் சார்.. என்னை விட்டுடுங்க என்றேன்.
    • காமெடி பண்ணுவதில் இவர்களெல்லாம் கில்லாடிகள் என்றால் சின்னி ஜெயந்த் சார் காமெடியுடன் மிமிக்ரியும் பண்ணி கலக்குவார்.

    சத்யராஜ் சார் பெண் வேடத்தில் நம் முன் வந்து நின்றால் எப்படி இருக்கும்?

    உண்மையிலேயே என் முன் அப்படி ஒரு கெட்-அப்பில் அவர் வந்து நின்றார். 'மாமன் மகள்' படத்துக்கு தான் அந்த வேடம்.

    ஆள் வாட்ட சாட்டமாக ஆண்களுக்கே உண்டான கம்பீரத்துடன் இருந்தாலும் பெண் வேடத்திலும் நன்றாகத்தான் இருந்தார். 'சார்... சூப்பரா இருக்கீங்க சார்' என்றேன்.

    நான் அப்படி சொன்னதும் 'அட போம்மா நீ. பொம்பள வேடத்தில் நீங்கள்லாம் எப்படித்தான் நடிக்கிறீங்களோ? கண் இமையில் வைத்திருக்கும் 'ஐ லேஷ்' கண்ணை திறக்கவே முடியலை என்றார்.

    நான் அவரது கண்ணை பார்த்தேன். அதை தவறாக வைத்து இருந்தார்கள். 'சார், ஐலேஷை தவறாக வைத்திருக்கிறார்கள். அதனால் தான் உங்களுக்கு சிரமமாக தெரிகிறது. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... என்றபடி எனது மேக்அப் மேனை அழைத்து அதை சரியாக வைக்கும் படி கூறினேன். அவர் வந்து அந்த ஐலேஷை சரியாக வைத்ததும் அவருக்கு கண் சிரமம் சரியாகி விட்டது.

    உடனே அதானே பார்த்தேன். என்றபடி ஷூட்டிங்கில் சந்தோசமாக கலந்து கொண்டார். ஒரு காட்சியில் அவர் நடந்து வருவதை காலில் இருந்தே குளோசப்பாக காட்டுவார்கள். என்னை பார்த்ததும் யாரும்மா நீ. நீதான் பிரியாங்கிற பொண்ணா... என்று கேட்டுக் கொண்டே வருவார். டயலாக் பேசியபடி வந்த அவரை பார்த்ததுமே எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.

    அந்த காட்சியில் சிரிப்பை அடக்கிக் கொண்டு நடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன். அந்த படத்தில் மணிவண்ணன் சார், கவுண்டமணி சார் ஆகியோரும் உண்டு. இந்த கூட்டணி சேர்ந்தால் கலகலப்பு எப்படி இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள்.

    படப்பிடிப்பு தளத்தில் சாதாரண லைட் பாய் முதல், ஹீரோ, ஹீரோயின் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை. யாரை பார்த்தாலும் மணிவண்ணன் சார் கலாய்க்காமல் விடமாட்டார். சிரித்து சிரித்தே வயிறு வலிக்கும்.

    மணிவண்ணன் சாரிடம் 'என்ன சார் இப்படி எல்லோரையும் வாருகிறீர்கள். நான் ஷாட்டுக்கு சென்ற பிறகு என்னையும் இப்படித்தானே வாருவீங்க' என்றேன்.

    அதை கேட்டதும், அப்படி யார் சொன்னது? நீ இருக்கும் போதே உனக்கும் அந்த கதிதான் என்று சாதாரணமாக சொல்லிவிட்டு அவருக்கே உரித்தான பாணியில் சிரித்தார்.

    அவர் அப்படி சொன்னதும் 'சார்.. நான் பாவம் சார்.. என்னை விட்டுடுங்க என்றேன்.

    உடனே அவரும் பதிலுக்கு 'இந்தாப்பா மீனா பாவமாம்... ஒண்ணும் சொல்லாதீங்கப்பா' என்று சொல்லி சிரிக்க வைத்துவிட்டார். காமெடி பண்ணி கிட்டே சீரியசாக நடிப்பது கஷ்டம்.


    அந்த படத்தின் படப் பிடிப்பு ஊட்டியில் நடந்தது. அப்போது ஒரு ஆங்கில வார இதழில் சிகை அலங்கார மாடல் ஒன்றை பார்த்தேன். நாமும் அதே போல் பண்ணினால் என்ன என்று நினைத்தேன். எனது சிகை அலங்கார நிபுணரை அழைத்து அந்த புகைப் படத்தை காட்டி இதே போல் டிரை பண்ணுங்கள் என்றேன்.

    அதை பார்த்ததும் அவரும் பண்ணிடலாம்மா. ஈசிதான் என்றார். இரவில் மேக் அப்பை கலைத்த பிறகு அவர் அலங்காரத்தை தொடங்கினார். தலையில் குட்டி குட்டியாக முடியை சுருட்டி சுருட்டி பின்னி ஜடை போட்டார். நள்ளிரவு வரை இந்த வேலை நடந்தது. தலையில் நிறைய ஹேர் பின்களும் வைத்திருந்ததால் படுத்து தூங்கவே கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் இது புது ஸ்டைலாக இருக்குமே என்ற ஆசையோடு சிரமத்தை தாங்கிக் கொண்டு தூங்கினேன்.

    காலையில் எழுந்து தலையை கலைத்து மேக்-அப் போட தயாரான போது தலை முடியில் எந்த மாற்றமும் தெரியவில்லை. ரொம்ப ஏமாற்றமாகி விட்டது.

    சிகை அலங்கார நிபுணரும் ஜெல் போட்டிருக்கலாம். அப்படி செய்திருக்கலாம். இப்படி செய்திருக்கலாம் என்று சொல்லி சமாளித்தார். நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். 'என் தலையை வைத்து அவர் புதிய மாடலை உருவாக்க முயற்சித்து இருக்கிறார் என்று.' இந்த படத்தில் ஆச்சியும் உண்டு. மொத்தமும் ஜாலிப் பேர் வழிகள். படமும் முழுக்க முழுக்க நகைச்சுவையாகவே இருந்தது.

    சத்யராஜ் சார் பெண் வேடத்தில் வந்து ஏமாற்றும் காட்சி... அதை தொடர்ந்து அவர்தான் நான் காதலிக்கும் காதலா் என்பதை கண்டுபிடிக்கும் காட்சி கலகலப்பானது.

    ஆனால் ஒரே நேரத்தில் காமெடி உணர்வு, கோபம் ஆகிய உணர்வுகளை முகத்தில் கொண்டு வந்து நடிப்பது கஷ்டம். பெண் வேடத்தில் வரும் சத்யராஜ் சாரோடு நான் நடித்த ஒவ்வொரு காட்சியும் அப்படித்தான் அமைந்தது. அதையும் சவாலாக ஏற்று நடித்தேன்.

    ஷூட்டிங் முடிந்ததும் அந்த காட்சிகளை சொல்லி விழுந்து விழுந்து சிரிப்போம். காமெடி பண்ணுவதில் இவர்களெல்லாம் கில்லாடிகள் என்றால் சின்னி ஜெயந்த் சார் காமெடியுடன் மிமிக்ரியும் பண்ணி கலக்குவார்.

    படப்பிடிப்பு தளத்தில் எல்லோரும் ஒன்றாக இருந்தால் போதும் ஒரு பக்கம் காமெடி இன்னொரு பக்கம் மிமிக்ரி என்று களை கட்டும். அந்த ஒவ்வொரு நிகழ்வும் மறக்க முடியாதது. அடுத்த மறக்க முடியாத மற்றொரு நிகழ்வுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்...

    (தொடரும்...)

    • சன்னியாசம், வைராக்கியம் போன்றவற்றில் உண்மையாக ஈடுபடும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
    • தோஷங்கள் நீங்கி திருமணம் நடைபெற கன்னிப்பெண்கள் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வழிபடுவர்.

    பெருமாள் கோவிலுக்கு செல்பவர்கள் சக்கரத்தாழ்வார் சன்னதியினை வணங்காமல் வர மாட்டார்கள். இங்கு அதிக கூட்டம் இருக்கும். 3 சுற்று, 12 சுற்று, 48 சுற்று என வலம் வந்து வழிபடுவார்கள். இப்படி சுற்றி வருவது வேண்டுதல்களை நிறைவேற்றும் என்பது ஐதீகம். நம்பிக்கை. அதுவும் புதன், சனிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும். துளசி, சிகப்பு பூக்கள் சாற்றி அர்ச்சனை செய்வர். நெய் விளக்கு போடுவர்.

    சுதர்சனர் எனப்படும் இவர் மகாவிஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரத்திலும் உடன் இருந்து தீமைகளை அழித்தவர் என்று குறிப்பிடப்படுபவர். இவரை வணங்கினால் ஒருவருக்கு வாழ்வில் ஏற்பட்ட துன்பங்கள் விலகுகின்றது என்பது நம்பிக்கை. ஸ்ரீ வராக அவதாரத்தில் இவர் வராகரின் மூக்குப் பகுதி. நரசிம்ம அவதாரத்தில் இவர் நரசிம்மரின் நகங்கள். ராம அவதாரத்தில் ராமரது வில், கிருஷ்ண அவதாரத்தில் சக்கரம், பெருமாளை எப்போதும் சங்கு, சக்கரத்துடன் பார்க்க முடியும்.

    இவர் 16 கைகள் கொண்டவராகவும், 32 கைகள் கொண்டவராகவும் காணப்படுகின்றார். 'ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம' என்று எண்ணிக்கை கணக்கிலோ, எப்போதுமோ கூறலாம்.

    'சக்ரா' என்றாலே எப்போதும் சக்தியுடன் இயங்குவது என்று பொருள் கொள்ள வேண்டும்.

    மகாவிஷ்ணுவின் சக்தி வாய்ந்த ஆயுதம் என்று இவரை வழிபடுகின்றோம்.

    மனிதனுக்கு கஷ்டங்கள் கொஞ்சமாகவா இருக்கின்றது. நோய், கடன், சத்ருக்கள் என கொட்டி வழிகின்றன. இதில் மனதினை ஒரு நிலைப்படுத்து, ஆன்மீக பயணம் மேற்கொள் என்றால் முடியுமா?

    எந்தவித பிரச்சனையானாலும் பில்லி, சூன்யம், பயம், பிரமை, வம்பு, வழக்கு, குடும்ப பிரச்சனை. இப்படி எந்தவித பிரச்சனையானாலும் சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வந்தால் நீங்கும். நவக்கிரக தோஷங்கள் நீங்கும்.

    வெளியில் உள்ள பகைகளையும் நம் உள்ளே உள்ள பகைகளையும் நீக்குபவர் சக்கரத்தாழ்வார் என்பதால் ஆன்மீக பாதையில் முன்னேற இவரது வழிபாடும் அறிவுறுத்தப்படுகின்றது. இதன் மூலம்

    * பாராட்டுகளை எதிர்பாராத மன உறுதி தீரும்.

    * திறமை, கவனம் அதிகரிக்கும்.

    * வேண்டாத இடங்களில் இருந்து நம்மை இழுத்து வந்து விடும்.

    ஒருவரின் ஆன்ம பலத்தினை அவரே உணரச் செய்யும்.

    இவை அனைத்தும் எந்த இறைவழிபாட்டின் மூலமும் கிடைக்கும் பயன்கள்தான் என்பதனை உணர்வோம்.

    ஆன்மா, ஆன்மா என்கின்றோம். இந்த ஆன்மா ஒரு தாயின் கருவில் சேர்ந்து அந்த உடலோடு உலகிற்கு வரும்போது அது பிறப்பு என்று கூறப்படுகின்றது.

    அதே ஆன்மா அந்த உடலை விட்டு எந்த காலத்தில் பிரிந்தாலும் அந்த உடலுக்கு இறப்பு ஏற்படுகின்றது.

    அதே ஆன்மா மற்றொரு உடலில் சேரும்போது அது மறுபிறப்பு.

    எதிர்பாராமல் ஏற்படும் இறப்பு-விபத்து, தற்கொலை மூலம் ஏற்படும் இறப்பினை அகால மரணம் என்கின்றோம்.

    ஆன்மா உடலில் இருந்தாலும் அந்த மனிதன் உலக வாழ்வினைத் துறந்து சென்றால் அது துறவரம், சன்னியாசி.

    ஆன்மாவும், உடலும் ஒருங்கே இருந்தாலும் எதிலும் அதிக கட்டுப்பாடுடன், அளவு மீறாமல் வாழ்பவன் வைராக்கியம் கொண்டவன்.

    ஆன்மா உடலை விட்டு பிரியும் காலத்தினை அறிந்து மகிழ்வோடு எளிதாக அந்த குறிப்பிட்ட நேரத்தில் உடலை விட்டு பிரிபவர்கள் அடைவது முக்தி.

    ஆன்மா, உடல், உள்ளடக்கிய மூச்சு காற்றோடு காலம், காலமாய் இருப்பவர்களை ஜீவ சமாதி அடைந்தவர் என்கின்றோம்.

    நாம் வாழும் இந்த கலியுகத்தில் நம் கண்ணுக்கு அதிகமாகத் தெரிபவை பிறப்பு, இறப்பு, அகால மரணம், தற்கொலை இவைகள்தான்.

    ஜீவ சமாதி போன்றவை நம் கண்ணுக்கு தெரியாமல் எங்கோ நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. சன்னியாசம், வைராக்கியம் போன்றவற்றில் உண்மையாக ஈடுபடும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். 

    நாம் அனைவரும் தீய எண்ணங்கள் இல்லாத நல்ல மனமுடையவர்களாவது வாழ முயற்சிப்போமே.

    * சக்கரத்தாழ்வாரை சித்திரை நட்சத்திரத்தில் வழிபடுவது சிறப்பு.

    * சாளக்கிராமங்களில் சுதர்சன சாளக்கிராமத்தினை வைத்து பூஜை செய்பவர்கள் உண்டு.

    * ஸ்ரீ நாராயணனின் மறு சக்தியாகவே சுதர்சனர் பார்க்கப்படுகின்றார்.

    * சக்கரத்தாழ்வாரின் மறுபுறம் உள்ள யோக நரசிம்மரையும் சேர்த்து வழிபட ணே்டும்.

    * திருமோகூர், காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில், மதுரை அழகர் கோவில், ஸ்ரீரங்கம், கும்பகோணம் திருசக்ரபாணி கோவில் இவை சக்கரத்தாழ்வாரின் சிறப்பு தலங்கள்.

    * ராமாயணத்தில் பரதனை ஸ்ரீசக்ரத்தாழ்வாரின் அம்சம் என்பர்.

    * தோஷங்கள் நீங்கி திருமணம் நடைபெற கன்னிப்பெண்கள் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வழிபடுவர்.

    'சொல்வது'- அதாவது உபதேசம் செய்வது அனைவருக்கும் எளிது. மவுனமாய் இருந்தே தன் வாழ்வின் மூலம் பல பாடங்களைச் சொல்லித் தந்தவர்கள் மகான்கள் என்ற கூற்று உண்மைதான்.

    அனைவரும் மகான்கள் ஆவது எளிதல்லதான். அனைவராலும் நல்ல கருத்துக்களை உபதேசம் செய்ய முடியாது என்பதும் கூட உண்மைதான்.

    ஒரு செடி அந்த விதையின் ஊட்டம், மண்ணின் வளம், நல்ல நீர் வளம், பூச்சி பாதிப்பு இல்லாமை இவற்றினைக் கொண்டே வளரும். காய், கறி இவற்றினைத் தரும். அது போலத்தான் மனிதனும். தன் பரம்பரை, வளர்ப்பு முறை, சூழ்நிலை இவற்றினைப் பொறுத்தே வாழ்வினை வடிவமைத்துக் கொள்கின்றான். வினைப் பலனை நம்புபவர்கள் அதனையும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம்.

    முன்பெல்லாம் புத்தகங்களும், பல தலைவர்களின் பேச்சும், ரேடியோவும் தான் மனிதனுக்கு துணை புரிந்தது. கூட்டு குடும்பம் மிகவும் துணை புரிந்தது.

    இன்று வாய்ப்புகள் கூடி விட்டன. கூடவே குடும்பங்களும் சுருங்கி விட்டது. இருப்பினும் வாய்ப்புகளை கை விட்டு விட வேண்டாம். 

    கமலி ஸ்ரீபால்

    கமலி ஸ்ரீபால்

    * வருடத்திற்கு சில நல்ல புத்தகங்கள் என சிறு வயதில் இருந்தே படிக்க வேண்டும்.

    * அன்றாட செய்திகளை ஒரு முறையேனும் கேட்க வேண்டும். தேவையற்ற வாதங்களுக்கு ஒதுங்கி இருப்போம்.

    * ஆன்மீகமும் அறிய வேண்டும். நாத்திகமும் அறிய வேண்டும். இரண்டிலுமே அநேக நல்ல கருத்துகள் உள்ளன.

    * தியானம் தினமும் 10 அல்லது 2 நிமிடம் (அமைதியாய் உடல் அசைவற்று எண்ண ஓட்டமற்று) இருந்தால் போதும். மிகச் சிறந்த தெளிவு இருக்கும்.

    * நாம் சரியாக இருந்தால், சரியான செயல்களைப் புரிந்தால் அதனை மணிக்கணக்காய் பேசி பிறருக்கு புரிய வைக்க வேண்டும் என்ற அவசியமே இருக்காது. செய்ய வேண்டியதும் இல்லை. அதே போன்று ஒரு தவறு நிகழ்ந்து விட்டால் அதனை வாதாடி 'நான்தான் சரி' என்று வாதாட வேண்டாம். அது மற்றவர்க்கும், நமக்கும் நிம்மதியினைத் தராது.

    * பிறரோடு நம்மை சதா ஒப்பிட்டுப் பார்த்தால் நம் நிம்மதியே போய் விடும்.

    * தன்னைத் தானே குறைத்து மதிப்பிடுவது, தன்னைத்தானே மட்டமாக பேசுவது என்பது தன்னடக்கம் இல்லை. பலவீனம் ஆகும்.

    * ஒருவர் தன் பிரச்சனைகள், போராட்டங்களை நினைத்து சுருங்கக் கூடாது. அன்றாடம் அந்த பிரச்சனை, போராட்டத்திற்காக குறிப்பிட்ட நேரத்தினை செலவிடுங்கள். பின்னர் மற்ற வேலைகளை பார்க்க வேண்டும். இப்படி செய்யும்போது காலப்போக்கில் அவை குறைந்து விடும். மறைந்து விடும். மனமும் நொந்து ஓடியாமல் இருக்கும்.

    * நாம் நம் பலத்தினை, உறுதியினை குறைவாக மதிப்பிடுகின்றோம்.

    * மவுனம் தரும் நன்மைக்கு அளவே இல்லை. கோபம் வரும் நேரத்தில் அந்த இடத்தினை விட்டு நகர்ந்து விட வேண்டும். வாயினை பசை போட்டு ஒட்டி விட வேண்டும்.

    * மவுனம் என்பதனை வாய் மட்டுமல்ல, மனமும் பேசாது இருப்பதுதான் என்பர். குறைந்தபட்சம் பிரச்சனையான நேரங்களில் வாயையாவது திறக்காமல், வார்த்தைகளை கொட்டாமல் இருக்கலாமே.

    * ரொம்ப பிரச்சனை கொடுக்கும் மனிதர்களிடம் இருந்து ஒதுங்கி விடுவதும் ஞானம்தான்.

    * எதிர்பார்ப்பு என்ற ஒன்று இருந்தாலே நிம்மதி போய் விடும்.

    * தவறு செய்யாத மனிதர்கள் குறைவுதான். தவறி விழுந்து மீண்டு வந்து விடுவோமே! அதுதான் சாதாரண மனித வாழ்வின் யதார்த்தம்.

    * நாள் ஒன்றுக்கு ஒரு முறையாவது குறிப்பாக காலையில் எழுந்தவுடன் இந்த உலகம் இங்குள்ள அனைத்து ஜீவராசிகளும் நன்றாக இருக்க வேண்டும் என மனதார வேண்டலாமே.

    • ரோமன் கத்தோலிக்கர்களால் பிப்ரவரி 21, மே 13 ஆகிய நாட்களில் ஹேலோவீன் தினமாகக் கொண்டாடப்பட்டது.
    • குறிப்பிட்ட மெழுகுவர்த்தியை அந்த நாளைத் தவிர மற்ற வேறு எந்த நாட்களிலும் ஏற்றக் கூடாதாம்.

    மூட நம்பிக்கைகள் என்பது நினைவிற்கு எட்டாத காலந்தொட்டே, மனிதர்களின் வாழ்வில் ஒரு பகுதியாகவே இருந்து வந்து கொண்டிருக்கிறது. இது மனிதனின் சக்திக்குக் கட்டுப்படாத, புரிந்து கொள்ள இயலாத ஒரு வகை இனம் புரியாத அச்சத்தின் பிரதிபலிப்பே. என்றாலும் இதற்கு நவநாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலை நாடுகளும் விதி விலக்கல்ல. அந்த அச்சத்தின் உச்சம் தான் இவர்கள் கொண்டாடும் 'ஹேலோவீன்' தினம்.

    ஹேலோவீன் என்ற அனைத்து ஆன்மாக்களின் தினம் அமெரிக்காவில் மிகவும் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று. மரணம் அடைந்தவர்களின் ஆன்மாக்கள் நிறைவேறாத ஆசைகளுடன் அலைந்து கொண்டிருந்தால் அவை பேயாக மனிதர்களைத் தாக்கும் என்ற மூடநம்பிக்கை, எல்லா நாடுகளிலும் எல்லா மனிதர்களிடையேயும் இருந்துவருகிறது.

    நாம் ஆலயங்களில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா கொண்டாடுவது போலவும், மயானக்கொள்ளை பூசை செய்வது போலவும் அமெரிக்கர்கள் பேய்களுக்கு என்று ஆண்டுதோறும் அக்டோபர் 31-ம் நாள் ஹேலோவீன் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, அயர்லாந்து உள்ளிட்ட அனைத்து வளர்ந்த நாடுகளும் இதனைக் கொண்டாடி வருகின்றன.

    முதன்முதலில் அயர்லாந்தில், அகால மரணமடைந்த புனிதத் துறவிகளின் நினைவாக இந்நாள் ரோமன் கத்தோலிக்கர்களால் பிப்ரவரி 21, மே 13 ஆகிய நாட்களில் ஹேலோவீன் தினமாகக் கொண்டாடப்பட்டது. பின்னர் அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்களால் அக்டோபர் 31-ந்தேதியில் கொண்டாடப்பட்டு வருகிறது.


    நிறைவேறாத ஆசைகளுடன் அலையும் ஆவிகளை மகிழ்விப்பதால் தங்களுக்கு எந்த விதமான தீங்கும் நேராது என்பது மேற்கத்தியர்களின் அதீத நம்பிக்கை. ஆரம்பத்தில் உருளைக் கிழங்கை வெட்டி, அதன் உள்ளே மெழுகுவத்தியை ஏற்றி வைத்து மந்திரிப்பதன் மூலம் பேய்களை விரட்ட முடியும் என்று நம்பியவர்கள், தற்போது பெரிய பரங்கிக் காய்களை வெட்டி, அவற்றை அச்சமூட்டும் வகையில் அலங்கரித்து வீட்டு வாசலில் வைப்பதன் மூலம் பேய்களை அண்ட விடாமல் தடுக்கலாம் என்று நம்புகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலம் முடிந்து, பனிக்காலம் தொடங்கும் சமயம் ஒவ்வொரு வீட்டின் முன்பும் பூசனிக்காயை திகிலூட்டும் வகையில் அலங்காரம் செய்து வெளியே வைக்கிறார்கள். ஹேலோவீன் திருவிழாவால் மூட நம்பிக்கைகள், மக்கள் மரபு வழி நம்பிக்கைகள், புராணங்கள், சகுனங்கள் போன்றவற்றை நம்புபவர்களுக்கு மேலும் பலம் சேர்க்கிறது. இதன் பின்னணியில் பல வேடிக்கையான நம்பிக்கைகளும் வழக்கத்தில் உள்ளன.

    ஹேலோவீன் தினத்தன்று, பாரந்தூக்கியால் மேலே ஏற்றப்பட்ட, எரியும் மெழுகுவர்த்தி கெட்ட ஆவிகளின், பேய்களின் ஊளையிடல்களைத் தவிர்க்கச் செய்கிறதாகவும் நம்புகிறார்கள். இந்த தினத்தில் ஒரு மெழுகுவர்த்தி திடீரென காற்றினாலோ, அல்லது மூச்சுக் காற்றினாலோ அணைந்து விட்டால் இறந்து போனவரின் ஆன்மா தங்களை அழைப்பதாகவும் நம்புகிறார்கள்.

    அன்றைய தினத்தில் எப்பொழுதும் புதிய மெழுகுவர்த்தி மட்டுமே ஏற்றுவார்கள். அந்த குறிப்பிட்ட மெழுகுவர்த்தியை அந்த நாளைத் தவிர மற்ற வேறு எந்த நாட்களிலும் ஏற்றக் கூடாதாம். அப்படிச் செய்தால் கெட்ட சகுனங்களும், கட்டுப்படுத்த முடியாத வேறு ஏதாவது சம்பவங்களும் நிகழக் கூடும் என்றும் நம்புகிறார்கள்.

    அன்றைய இரவில் விளக்கை கைகளில் ஏந்திக் கொண்டு நீரூற்று இருக்கும் இடத்திற்குச் செல்லும் பெண்கள் தங்களுடைய எதிர்காலக் கணவனை நிழல் உருவில் காண முடியும் என்றும் நம்புகிறார்கள். நடு இரவில் ஒரு புதிய செந்நிற மெழுகுவர்த்தி ஏற்றி சூரிய உதயம் வரை அது அணையாமல் இருந்தால் யோகமாகுமாம்.

    தொன்று தொட்டு வரும் வழக்கமாக, ஹேலோவீன் தினத்தன்று, சொக்கப்பனை போன்ற பெருந்தீ வளர்த்து, அதைச் சுற்றி வெவ்வேறு குடும்பத்தைச் சார்ந்த பலர் நின்று கொண்டு, அந்தத் தீ அணைந்து சாம்பலானவுடன் அவரவர் நிற்கும் அந்த இடத்தின் அருகில் கூழாங்கற்களை அந்த சாம்பலுக்குள் புதைத்து வைப்பார்கள். அடுத்த நாள் அந்தக் கல் இடம் மாறியோ அல்லது அதற்கு ஊறுபாடு உண்டாகியிருந்தாலோ, அந்தக் கல்லுக்குச் சொந்தக்காரர்கள் 12 மாதத்திற்குள் இறந்து விடுவார்கள் என்பதற்கான அறிகுறியாகக் கருதுகிறார்கள்.

    வவ்வால் வீட்டை மூன்று முறை வலம் வந்தால் அதுவும் இறப்பிற்கான தீய சகுனமாம். இந்த தினத்தில் பிறப்பவர்கள் ஆவிகளைப் பார்க்கவும், அதனுடன் பேசக்கூடியவர்களாகவும் இருப்பார்களாம்.


    அன்று சிலந்திப் பூச்சியைப் பார்த்தால் அது இறந்து போன, தங்களை அதிகமாக நேசித்துக் கொண்டிருந்த ஒருவரின் ஆவி தன்னை கவனித்துக் கொண்டிருப்பதாக அர்த்தமாம். இப்படி நம்ப முடியாத ஆதாரமற்ற பல தகவல்களைச் சொல்கின்றனர்.

    நம்மூர் பூனை சகுனம் கூட அமெரிக்கர்களும் நம்புகிறார்கள். கருப்பு பூனை, சூனியக்காரியுடன் சம்பந்தப்பட்டதால், அந்த சூனியக்காரியேக்கூட பூனை வடிவில் வரக்கூடுமாம். இறந்தவர்களின் ஆவிகூட பூனையிடம் தங்கியிருக்குமாம். பூனை குறுக்கே போனால் திரும்பிப் போய்விட வேண்டுமாம், இல்லாவிட்டால் தீயவை நடக்குமாம்.

    ஹேலோவீன் தினத்தில் குழந்தைகள் மாறு வேடங்கள் அணிந்து கொண்டு, குறிப்பாக சூனியக்காரி, பேய், கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் இப்படி ஏதாவது உடை அணிந்து கொண்டு, வீடு வீடாகச் சென்று , டிரிக் ஆர் டிரீட் என்று ஒரு கூடையுடன் சென்று கேட்பார்கள். வீட்டில் உள்ளவர்கள் விதவிதமான சாக்லேட்களை அந்தக் குழந்தைகளுக்குக் கொடுத்தனுப்புவார்கள்.

    ஹாலோவீன் உடை அணிந்து கேளிக்கைகளில் ஈடுபடுவது, பூசணிக்காய்கள் அல்லது டர்னிப்களை ஜாக்-ஓ-லாந்தர்களாக செதுக்குதல், நெருப்பு கொளுத்துதல், பேய் பிடித்த இடங்களுக்குச் செல்வது ஆகியவை இக்கொண்டாட்டங்களில் அடங்கும். அச்சமூட்டும் கதைகளைச் சொல்வதும், திகில் அல்லது ஹாலோவீன் பின்னணியிலான திரைப்படங்களைப் பார்ப்பது, இறந்தவர்களின் கல்லறைகளில் மெழுகு வர்த்திகளை ஏற்றுவது உட்பட அனைத்தும் நடக்கும். மதச்சார்பற்ற கொண்டாட்டமானாலும் சிலர் அன்று இறைச்சி உண்ணாமல் ஆப்பிள், உருளைக்கிழங்கு அப்பங்கள், கேக்குகள் போன்ற சில சைவ உணவுகளை மட்டுமே உண்கிறார்கள்.

    காலம் செல்லச்செல்ல இந்த ஹாலோவீன் தினம் தொழில்நுட்ப உதவிகளுடன் மேலும் அதிபயங்கரமான கற்பனை வடிவங்களால் அச்சமூட்டும் வழக்கமும் துவங்கி மேலும் திகிலுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் 16 மாநிலங்களில் ஹேலோவீன் அருங்காட்சியகங்கள் உள்ளன. அங்குள்ள உருவங்கள் இந்த நாளில் வீதிகளில் உலா வரத் தொடங்கிவிடும். இரவு முழுக்க விதவிதமான பேய்களின் அலங்கார அணிவகுப்புகள் காண்பவரை மிரளச் செய்வதோடு, சிலர் பேய்களின் முகமூடியை அணிந்து கொண்டு சாலையெங்கும் திரிந்து பீதியைக் கிளப்புவார்கள். திடீரென்று வீடுகளுக்குள் நுழைந்து, 'ஹேப்பி ஹேலோவீன் டே' என்று குரல் எழுப்புவார்கள். அச்சமூட்டும் உருவங்களுடன் குழந்தை களுக்கு இனிப்புகளை வழங்கியும் மகிழ்வார்கள். 

    -பவளசங்கரி

    • பிராணன் என்றால் உயிர், அயமா என்றால் முறைபடுத்துதல், அதாவது உயிரை முறைபடுத்தும் ஒரு அற்புதமான கலை என்று பொருள்.
    • சித்தர்கள் இந்த மூச்சின் அளவுகளை பற்றி குறிப்பிடுவது மிகப் பிரம்மிப்பாக உள்ளது.

    உலகின் பெரும் பகுதி அறியாமை என்னும் இருளிள் மூழ்கி தூக்கத்தில் இருந்தபோது, பாரத திருநாடு ஆன்ம ஒளியில் விழித்து எழுந்து, அதன் தவ புதல்வர்களாகிய ரிஷிகள், இருளை கடந்து, "பொன்னிறத்தில் ஒளிரும் மாபெரும் இறைவனை கண்டு கொண்டேன். அதை அறிவால் அறிவதால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும். வேறு வழி இல்லை. அழியாத அந்த அமர தத்துவத்தின் குழந்தைகளே கேளுங்கள்" என்று இந்த பூமியில் வாழ்வோரையும், பிற உலகத்தினரையும் அறை கூவல் விடுத்து அழைத்தனர். இவ்வாறு உலகை புனித மயம் ஆக்கியபடி வாழ்ந்த ரிஷிகள் கண்ட உண்மை தான் வேதங்கள்.

    இந்த வேதம் என்பது யாராலும் எழுதப்பட்டது அல்ல. என்றென்றும் நிலவுகின்ற உண்மையின் தொகுப்பே வேதம். இந்த வேதம் ரிக், யஜுர், சாமம், அதர்வனம் என்று நான்கு வகைகளையும் மேலும் ஒவ்வொன்றும் மூன்று உட்பிரிவுகளையும் கொண்டது.

    சம்ஹிதை என்பது பல்வேறு தேவர்களிடம் பிரார்த்தனை.

    பிராம்மனம் என்பது யாகம்.

    ஆரண்யகம் என்பது உண்மையை பற்றிய ஆராய்ச்சி.

    உபநிடதம் என்பது, மனிதன் ஆறாவது அறிவை பயன்படுத்தி அறுதி உண்மையை ஆராயவும், மனிதரின் மனத்தால் அந்த எல்லையை தொடவும் உதவுகிறது.

    எனவே இந்த அக உலகை அறிவதற்கு யோகம் என்ற பயிற்சியே மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.

    கி.மு. 800-ல் இருந்து 500-ம் ஆண்டு வரை தோன்றிய உபநிடதங்கள், யோகம் என்பது மனிதரை உலக துன்பங்களில் இருந்து மீட்டு, பரவசம் அடையும் ஆன்மீக வாழ்வை அடைய செய்யும் என கூறுகிறது.

    இதற்கு மனிதர்கள் அக உலகிய பாராயணம் செய்து, தனக்குள் உள்ள தெய்வ நிலையை உணர்வதற்கும், வாழும் காலத்திலேயே இந்த ஜீவன் ஐக்கிய பிரம்ம முக்தி நிலை பெறுவதற்கும் மகான்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு அற்புதமான கலை தான் சித்தர்களின் சாகா கலை என்றும் சர கலை என்றும், நாடி சுத்தி பிராணாயாமம் என்றும் அழைக்கப்படுகிறது.

    இப்பொழுது இந்த நாடி சுத்தி பிராணாயாமம் என்றால் என்ன? என்று பார்ப்போம்.

    பிராணாயமம் என்றால் பிராணன் + அயமா. பிராணன் என்றால் உயிர், அயமா என்றால் முறைபடுத்துதல், அதாவது உயிரை முறைபடுத்தும் ஒரு அற்புதமான கலை என்று பொருள்.

    அடுத்ததாக இந்த பிராணாயாமம் பயிற்சியை, நான் ஏன் செய்ய வேண்டும்? என்கின்ற கேள்வி எழுகிறது. அதாவது, உடலிலே பிராண சக்தியை அதிகரித்து உடலின் உள் உறுப்புகளை சரியான முறையில் இயக்கி, உயிரை நீண்ட ஆயுளாக மாற்றி, வாழும் காலம் முழுவதும் இன்பமாக வாழ்வதற்கு இந்த நாடி சுத்தி பிராணாயாமம் மிகவும் அவசியம்.

    இந்த பயிற்சியை பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு முன் நம்முடைய ஆயுட்காலம் என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக இறைவனால் படைக்கப்பட்ட உயிரினங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆயுட்காலம் என்ற ஒன்று உண்டு. அந்த வகையில் நம்முடைய ஆயுட்காலம் என்பது 120 ஆண்டுகள்.

    சரி, இந்த 120 ஆண்டுகள் ஆயுட்காலம் என்பது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். இது நம் உள் இழுக்கும், மற்றும் வெளிவிடும் மூச்சு காற்றின் அடிப்படையில் தான் கணக்கு இடப்படுகிறது. அந்த கணக்கு என்னவென்று பார்ப்போம்.

    அதாவது ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் எனவும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சுகள் எனவும், 24 மணி நேரத்திற்கு 21600 மூச்சுகள் எனவும், ஒரு வருடத்திற்கு 78,84,000 மூச்சுகள் எனவும், 120 ஆண்டுகளுக்கு 94,60,80,000 மூச்சுகள் எனவும் கணக்கிடப்படுகிறது.

    இதை நாம் கேட்பதற்கே இவ்வளவு ஆச்சர்யமாக இருக்கிறது என்றால் இதை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டுஇந்த மூச்சை நாம், சரியான முறையில் பயன்படுத்தும் போது நம் தினசரி வாழ்க்கை எவ்வளவு இன்பமாக மாறும்.. மேலும் நாம் வாழும் காலம் முழுவதும் எப்படி இன்பமாக வாழ முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    இந்த கலையைதான் சித்தர்கள் சரகலை என்று அழைத்தார்கள். சரம் என்றால், நீண்ட அல்லது தொடர்ச்சி என்று பொருள். அதாவது நமது ஆயுளை நீண்ட காலம் மாற்றுவதற்கு சரகலை என்று பெயர். இதை திருமூலர் தனது பாடலிலே

    ஏற்றி இறக்கி இருகாலும் பூறிக்கும்

    காற்றை அளக்கும் கணக்கறிவாரில்லை

    காற்றை அளக்கும் கணக்கறி வார்க்கு

    கூற்றை உதைக்கும் குறியதுவாமே

    என்று கூறுகிறார். இந்த பாடலின் பொருள் என்னவென்றால் நம் மூச்சை உள்முச்சு, வெளிமூச்சாக விடும்போது, இடகலை மற்றும் பிங்கலை நாடிகளின் ஓட்டத்தை சமன் செய்யும்போது, உயிரின் நேரடி தொடர்பான சுமுமுனை நாடி இயங்க ஆரம்பித்துவிடும். அந்த சுமுமுனை நாடி இயங்க ஆரம்பித்து விட்டால் அல்லது நாம் இயக்கி விட்டால் நம் மூச்சுனுடைய எண்ணிக்கை, ஒரு நிமிடத்திற்கு 15க்கும் கீழ் இறங்கி விடும். இதை தான் கணக்கை அறிவிப்பவர்கள் இல்லை என்றும், எல்லோரும் எப்போழுதும் உணர்ச்சி வயப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார். ஆனால் அந்த பிராணாயாமம் பயிற்சியை அந்த சுமுமுனை நாடியை இயக்கும் கணக்குடன் செய்தால் எமனையும் நாம் வெல்லாம் என்று இந்த சரகலையின் ரகசியத்தை குறிப்பிடுகிறார்.

     

    மனவளக்கலை பேராசிரியர்கள் கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    மனவளக்கலை பேராசிரியர்கள் கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    இந்த நாடி சுத்தி பிராணாயாமம் பயிற்சியை முறைப்படுத்தி இந்த உலகில் வாழும் மக்களுக்கு ஒரு அற்புதமான பொக்கிஷத்தை கொடுத்தவர் யோகத்தின் தந்தை என்று அழைக்கப்படும் பதஞ்சலி முனிவர் ஆவார். அவர் தான் இந்த யோகத்தை முறைப்படுத்தி அதை எட்டு அங்கங்களாக பிரித்து அதற்கு அஷ்டாங்க யோகம் என்று பெயர் சூட்டினார். அந்த அஷ்டாங்க யோகம் என்றால் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.

    1. இயமம், 2. நியமம் 3. ஆசனம் 4.பிராணாயாமம் 5. பிராத்தியாகாரா 6. தாரணா 7. நியானம் 8. சமாதி என்ற எட்டு நிலைகள் ஆகும்.

    இயமம் என்பது அகிம்சை சத்தியம் திருடாமை பிரம்மச்சரியம், இரக்க குணம், ஜபம் பொறுமை, உறுதி, சுத்தம் போன்ற அடிப்படை விஷயங்களை நாம் கடைபிடித்துக்க வேண்டும்.

    நியமம் என்பது உடல் நலம் காத்தல், நல்லொழுக்கம், எளிய உணவு உண்ணுதல் வாதம், பித்தம், கபத்தை அதிகப்படுத்தும் உணவுகளை கைவிடுதல், இறைவனை பற்றிய சிந்தனை, ஈகை குணம், தத்துவங்களை கேட்டறிதல் போன்றவை.

    ஆசனம் என்பது நம்முடைய உடல் மனம் உயிரை இணைத்து வாழ்வை இனிமையாக வைத்தல் என்பது பொருள்.

    பிராணாயாமம் என்பது நமது உயிரை முறைப்படுத்தும் பயிற்சி.

    பிரத்தியாகாரா என்பது நமது புலன்கள் வழியாக புற உலகோடு தொடர்பு கொண்டு வெளியே அலையும் மனதை நமக்குள்ளாக உள்முகமாக திருப்புவது ஆகும்.

    தாரணா என்பது உள்முகமாக திரும்பிய மனதை, மறுபடியும் வெளியே அலைய விடாமல், ஒரு குறிப்பிட்ட வழியில் நிறுத்தி, முதுகு தண்டு வழியாக மனதை செலுத்தி தன் உடல் உட்பட, இந்த பிரபஞ்சம் யாவும் சூன்யமாக பாவித்து கண் விழித்தும் பார்க்காமல், காது இருந்தும் கேட்காமல் இருக்கும் நிலை தான் தாரணா. இதுவே ஒரு வகையில் நமது ஆயுள் முடியாமல் வளர செய்யும் வழி யாகும்.

    தியானம் என்பது மனதின் அலைசுழல் வேகத்தை குறைத்து அதிலேயே உயிரோடு இணைந்து ஒடுங்கி நின்று நமக்குள்ளேயே தன்னை அறிவதும், இறைவனை உணர்வதும் ஆகும். நமது மனதின் அலை சுழல் வேகத்தை நான்கு நிலைகளில் பிரிக்கலாம்.

    பீட்டா நிலை அலை - 14-40 cps- உணர்சி வயப்பட்ட நிலை

    ஆல்பா அலை - 8-13 cps

    தீட்டா அலை - 4-7 cps

    டெல்டா அலை 1-3 cps

    சமாதி என்பது எண்ணங்கள் அற்ற நிலையில் மனம் ஒடுங்கி உயிர் ஓட்டம் மட்டும் இயங்கி கொண்டு இறை நிலையோடு கலந்த நிலையாகும்.

    எனவே நமக்கு பிராணாயாமமும், தியானமும் சித்தி பெற வேண்டும் . இந்த தியானத்திற்கு ஒரு கணக்கை யோகத்தின் தந்தை பதஞ்சலி முனிவர் எவ்வாறு குறிப்பிடுகிறார் என்று பார்ப்போம்.

    தத்ர ப்ரத்ய்யைக தானத் தியானம் - பதஞ்சலி யோக சூத்திரம் விழதி பாதம் 3.2

    12 வினாடிகள் ஒரு குறிப்பிட்ட பொருளால் மனம் நின்றால் ஒரு தாரணையில் வெற்றி பெறலாம்.

    12 தாரணைகள் (12x12=144 வினாடிகள்) மனம் அலையாமல் நீடித்தால் ஒரு தியானத்தில் வெற்றி பெறலாம்.

    12 தியானங்கள், அதாவது 29 நிமிடங்கள் மனம் ஒடுங்கி நின்றால், ஒரு சமாதி ஆகும். சமாதி என்பது நாம் உயிரோடு இருக்கும்போது, தியானத்தில் ஆதிக்கு சமமான நிலையில் எண்ணம் அற்ற நிலைக்கு சென்று மீண்டும் சகஜமான வாழ்க்கைக்கு திரும்புவது ஆகும்.

    இதுவரை நாம் அஷ்டாங்க யோகத்தை பற்றி பார்த்தோம். இப்போது மீண்டும் பிராணாயாமத்திற்கு வருவோம்.

    நமது மூச்சினை, வலது நாசியின் வழியாக உள்ளே வெளியே செல்லும் மூச்சுக்கு பிங்கலை அல்லது சூரியநாடி அல்லது தந்தை நாடி அல்லது பித்ரு நாடி என்று கூறுவர்.

    இடது நாசியின் வழியாக உள்ளே வெளியே செல்லும் மூச்சினை இடகலை அல்லது சந்திர நாடி அல்லது தாய் நாடி அல்லது மாத்ரு நாடி என்று கூறுவர்.

    இந்த இடகலையும், பிங்கலையும் சமன்பட்டு சுழுமுனை நாடி வழியாக செல்லும் மூச்சுக்கு அருள் நாடி அல்லது குரு நாடி என்று கூறுவர்.

    இந்த பிராணாயாமம் பயிற்சியில் நாம் குரு நாடியை இயக்கும்போது நமக்கு மூச்சின் எண்ணிக்கை குறைந்து நமது ஆயுள் கூடுகிறது.

    சித்தர்கள் இந்த மூச்சின் அளவுகளை பற்றி குறிப்பிடுவது மிகப் பிரம்மிப்பாக உள்ளது.

    வலது நாசியில் வெளி செல்லும் முச்சு (சூர்ய கலை) அளவு 8 அங்குலமும், இடது நாசியில் வெளிசெல்லும் மூச்சு அளவு 12 அங்குலமும் வெளியேறுவதால், சந்திர கலை என்கின்ற இடது நாசி வழியாக 4 அங்குலம் மூச்சு நமக்கு ஒவ்வொரு தடவை மூச்சை வெளிவிடும் போதும் வீணாகிறது என்று ஆராய்ச்சி செய்து கூறி இருக்கிறார்கள்.

    மேலும் நாம் உணவு உண்ணும்போது 4 அங்குலம் மூச்சும், நடக்கும்போது 24 அங்குலம் மூச்சும், ஓடும்போது 42 அங்குலம் மூச்சும், தாம்பத்திய உறவின்போது 50 முதல் 60 அங்குலம் மூச்சும் செலவாகிறது என்று கண்டு பிடித்தார்கள்.

    எனவே ஆறு அறிவு படைத்த மனிதர்கள் தனது ஆயுள் காலத்தை நீட்டிக்க செய்வதற்கு அவர்களுடைய உடலில் உள்ள தத்துவங்களை ஆராய்ந்து அதில் அளவு முறை மீறாமலும், சிலவற்றை தவிர்த்தும், வந்தால் நமது ஆயுள் வரிவடையும் என்பதை சித்தர்கள் கண்டு பிடித்தார்கள்.

    அந்த தத்துவங்களை நமது உடலிலே 96 தத்துவங்களாக பிரித்தார்கள். அதில் 59 ஸ்தூல தத்துவங்களாகவும், 35 சூக்கும தத்துவங்களாகவும் 1 அதி சூக்கும தத்துவமாகவும் பிரிந்தார்கள். இந்த 96 தத்துவங்களை பற்றி அடுத்து பார்ப்போம்.

    • ஒருகாலத்தில் மக்கள், தங்களின் உணவு, உடை, வாழ்வியல் தேவைகளுக்கேற்ற பொருள்களை மட்டுமே உற்பத்தி செய்து வந்தனர்.
    • ஒருகாலத்தில் ’செல்வந்தர்’ என்று அழைக்கப்பட்டு வந்தவர்கள், இன்று ’பணக்காரர்’ என்று அழைக்கப்படுகின்றனர்.

    பணத்தின் அருமை அறிந்து கொள்ளப் பரிவோடு காத்திருக்கும் வாசகர்களே! வணக்கம்!

    பணம் என்பது இன்று நாணயங்களாகவும், அச்சடித்த தாள்களாகவும் மக்களின் பயன்பாட்டில் இருந்து வருவது. அண்மைக்காலமாகிய கணினி யுகத்தில், பணம் என்பது உருவப் பொருளின்றி அருவப் பொருளாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலமாகப் புழக்கத்தில் உள்ளது. உருவத்தோடு இருந்தாலும் உருவமின்றிக் கையாளப்பட்டாலும் பணத்தின் மதிப்பு எப்போதுமே குறைவதில்லை.

    உலகத்தில் பணம் கிறிஸ்து பிறப்புக்கு முந்தைய காலந்தொட்டே தோன்றி, நடைமுறையில் இருந்து வருகிறது. தொடக்கத்தில் நாணயங்களாகத் திகழ்ந்த பணம், காலப்போக்கில் தாள்களாகவும் உருவளர்ச்சி பெற்றது. தற்போது கண்களுக்கும் கைகளுக்கும் அகப்படாத கடவுள்போல, மனிதர் ஒவ்வொருவரின் கைபேசிக்குள்ளும் செயலியாக அடங்கி, வழக்கமான வரவுசெலவுகளைக் கண்டுவருகிறது.

    ஒருகாலத்தில் மக்கள், தங்களின் உணவு, உடை, வாழ்வியல் தேவைகளுக்கேற்ற பொருள்களை மட்டுமே உற்பத்தி செய்து வந்தனர். தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களைக் கொண்டு, தங்களுக்குத் தேவையான பொருள்களைப் பண்டமாற்று முறையில் மட்டுமே பெற்றும் வந்தனர். பண்டமாற்றுமுறை பெருகாத வரையில் வாணிகம் என்கிற தனிமுறை வளராமல் இருந்தது. வாணிகம் பெருகப் பெருகக், கூடுதல் உற்பத்திப் பொருள்களை விற்கவும், தங்களது தேவைக்கு மீறிய பொருள்களை வாங்கிச் சேர்த்து வைக்கவும் ஆரம்பித்தனர். வாணிகம் தனித் துறையாக உருவெடுத்த போது, அடிப்படையான உற்பத்திப் பொருள்கள், நுகர்பொருள்கள் எனும் கூடுதல் மதிப்பைப் பெற்றன; அவற்றை வாங்குவதற்கும் விற்பதற்கும் இடையில் பணம் ஓர் மதிப்புமிக்க கருவியாக விசுவரூபம் எடுத்து நிற்கத் தொடங்கியது .

    ஒருகாலத்தில் செல்வம் என்பது, வேளாண் நிலங்களாகவும், உதவுகிற ஆடுமாடுகளாகவும், வீட்டில் இருக்கும் தங்கங்களாகவும் இருந்தன. அவற்றின் மதிப்புகள், பத்து ஏக்கர் நிலம், நூறு ஆடுகள், பத்து மாடுகள், ஐந்து கிலோ தங்கம்… என்பதுபோல அளவைகள் அடிப்படையில் இருந்தன. ஆனால் பணம் தனது ஆதிக்கத்தைக் காட்டத் தொடங்கிய பிறகு, இன்று ஐந்துகோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், ஒருகோடி ரூபாய் மதிப்புடைய ஆடுமாடுகள், இரண்டுகோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் என்று பணமதிப்பை வைத்தே செல்வத்தின் மதிப்புகள் கணக்கிடப் படுகின்றன.

    பணம் என்பது இன்றைய வணிக மேலாதிக்க உலகில், பொருள்களை வாங்குவதற்கான மதிப்புமிகு கருவியாகவும், செய்கிற சேவைக்குப் பெறுகிற கண்ணியம் மிக்க ஊதியமாகவும் திகழ்கிறது. ஒருவருடைய மதிப்பும் மரியாதையும் அவர் மாதந்தோறும் ஈட்டுகிற பணத்தின் அளவையும், வங்கிக் கணக்கில் அவருக்கு இருக்கும் பணக் கையிருப்பையும், பெரும் வணிக நிறுவனங்களுக்குச் சென்று பொருள்களை வாங்குவதற்கு அவருக்கு இருக்கும் சக்தியையையும் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.

    ஒருகாலத்தில் 'செல்வந்தர்' என்று அழைக்கப்பட்டு வந்தவர்கள், இன்று 'பணக்காரர்' என்று அழைக்கப்படுகின்றனர். ஒவ்வொருவரின் செல்வத்தின் மதிப்பும் இன்று பணத்தின் மதிப்பை வைத்தே அளக்கப் படுகின்றன.

    பொதுப்படையாக நாம் ஒருவரைப் பார்த்துப் பணம் நல்லதா? தீயதா? என்று கேட்டால் அது தீயதுதான் என்று படக்கென்று சொல்லிவிடுவார். ஆனால் உண்மையில் பணத்திற்கென்று தனிக் குணம் கிடையாது. அது யாருடைய கையில் இருக்கிறதோ அதைப் பொறுத்தே அதற்கு நல்லது தீயது குணங்கள் ஒட்டிக்கொள்கின்றன. நல்லவர்கள் கையில் பணம் இருப்பது, துளிர் முதல் வேர்வரை பயன்படுகிற மருந்து மரம், உள்ளூர் நடுவே பழம் பழுத்துத் தொங்குவதுபோல என்கிறார் திருவள்ளுவர்.

    பொதுவாக நம்மிடையே ஒரு கருத்து உண்டு. "பணம் என்பதும் செல்வம் என்பதும் கெட்டவர்களிடம்தான் அதிகமிருக்கும்; பணக்காரர்கள் எல்லாருமே கெட்டவர்கள்" என்பதே அது. இதன் அடிப்படையில், "நல்லவர்களாக வாழ வேண்டுமானால் பணம் சம்பாதிக்க ஆசைப்படக் கூடாது; அப்படிச் சம்பாதித்தாலும் தீய குறுக்கு வழிகளை மட்டுமே பின்பற்ற நேரிடும்" என்றெல்லாம் பணம் குறித்த தவறான கண்ணோட்டங்கள் உண்டு.

    நடைமுறை உண்மை அதுவன்று. பணத்தால் தான் எல்லா நல்ல காரியங்களையும் செய்யமுடியும் எனும்போது பணம் எப்படிக் கெட்டதாக இருக்கமுடியும்?. உங்களை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கின்ற, ஏழ்மையைக் காரணம் காட்டி உங்களைக் கேலிபேசித் தாழ்த்திக்கொண்டே இருக்கிற எதிரிகளின் கொட்டத்தை, ஆணவத்தை அடக்கச் சிறந்த வழி எது தெரியுமா?

    திருவள்ளுவர் சொல்கிறார், "பணத்தைச் சம்பாதியுங்கள்! பணத்தை உருவாக்கிப் பெருகச் செய்வதற்கான செயல்களைச் செய்யுங்கள். எதற்காக?. நீங்கள் சம்பாதித்துப் பெருக்குகிற பணம்தான், உங்கள் எதிரிகளின் செருக்கை அடக்குகிற, அறுக்கிற கூர்மையான ஆயுதம்! "என்கிறார்.

    சுந்தர ஆவுடையப்பன்

    சுந்தர ஆவுடையப்பன்

    "செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும்

    எஃகு அதனிற் கூரியது இல்"

    வள்ளுவர் ஒரு சில இடங்களில் மட்டுமே 'செய்க!' எனும் கட்டளை பிறப்பித்திருப்பார். அந்த அடிப்படையில் ஒரு தயக்கமும் இல்லாமல், இன்றே பணம் ஈட்டுகிற முயற்சிகளில் ஈடுபடுக! என இந்தக் குறளில் எல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.

    நம்மில் ஒவ்வொரு மனிதர்க்கும் பணம் ஈட்டுவது, ஒரு கடினச்செயல் என்றால், அதனைச் சென்றுவிடாமல் சேர்த்து வைப்பது அதைவிட மிகுந்த கடினச்செயல் என்றே கூற வேண்டும். 'கையில வாங்கிப் பையில

    போடுவதற்குள் காசுபோன இடம் தெரியாது அல்லாடும் அப்பாவிகளே நம்மில் அதிகம். பணம் சம்பாதிப்பதற்கு எப்படித் திறமை அவசியமோ அதைப்போல அதைச் சேர்த்து வைப்பதற்கும் தனித் திறமை வேண்டும்.

    சிலரைக்கேட்டால், செலவழிப்பதற்காகத் தானே சம்பாதிக்கிறோம்? என்று கேட்பார்கள். உண்மைதான்; செலவழிக்கத்தான் செல்வம்!. ஆனாலும் அதனை ஈட்டும்போது நாம் உழைக்கிற உழைப்பைக் கொஞ்சம் எண்ணிப் பார்த்தால், செலவழிக்கும்போதும் கொஞ்சம் அளந்து செலவழிக்க முற்படுவோம். 'ஆற்றில் போட்டாலும் அளந்து போடு!' என்றுதானே பழமொழியும் கூறுகிறது.

    ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ஆண்டும் நாம் செலவுசெய்யும்போது, அவசியம் எது? அனாவசியம் எது? என்று கொஞ்சம் அக்கறை செலுத்திச் செலவழித்தால் அதுவே சிக்கணம் ஆகிறது. சிக்கணத்தைச் சேர்த்துவைக்கத் தொடர்ந்தால் அதுவே சேமிப்பாகப் பெருக்கெடுக்கிறது. பெருகுகிற சேமிப்பை, வைப்புத் தொகையாகவோ, முதலீடுகளாகவோ மாற்றினால் அதுவே நிலைத்த வருமானத்தைத் தருகிற புது வளமாக மாறிவிடும். அப்புறம் என்ன? நாமும் செல்வந்தர் தான்!; நாமும் பணக்காரர் தான்!.

    பணம் பத்தும் செய்யும்! என்கிறார்கள். பத்து என்றால், பத்து என்கிற எண்ணிக்கை அல்ல; எண்ணிக்கையில் அடங்காத பலவற்றைப் பணம் இருந்தால் செய்து காட்ட முடியும் என்கிற நேர்முறை வாசகமாக, நம்பிக்கை வாசகமாக இதனை நாம் கொள்ள வேண்டும்.

    ஓர் அரசன், தனது படையினர் சிலரோடு காட்டிற்கு வேட்டைக்குச் சென்றான்; அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றபோது பாதை தவறி, தனது படையினரைப் பிரிந்து விட்டான். தனித்து விடப்பட்ட அரசன், தனது குதிரையில் நாட்டிற்குத் திரும்பும் பாதை தேடிக், காட்டிற்குள் அலைந்து கொண்டிருந்தான். அப்போது ஓரிடத்தில் ஒரு ஓலைக்குடிசை இருப்பதைக் கண்டான்; மகிழ்ச்சியோடு குடிசையின் முன்புறம் குதிரையை நிறுத்தி, 'யார் உள்ளே?' என்று குரல் எழுப்பினான். பதில் வரவில்லை; குதிரையை விட்டு இறங்கி, தான் கொண்டு வந்திருந்த ஒரு மூட்டையை எடுத்துக்கொண்டு குடிசைக்குள் போனான். உள்ளே அந்தக் குடிசைக்குச் சொந்தக்காரன் அடுப்புமுன் அமர்ந்து குளிர் காய்ந்து கொண்டிருந்தான்.

    "நான் இந்த நாட்டின் ராஜா வந்திருக்கிறேன். எனக்கு மரியாதைக்கு ஒரு வணக்கம்கூடச் சொல்லாமல் அமர்ந்திருக்கிறாயே! ஏன்?" என்று கேட்டான் அரசன்.

    "நீங்களே என் வீட்டிற்கு அடைக்கலமாக வந்திருக்கிறீர்கள்!. வணக்கம் சொல்ல வேண்டியது நீங்களா? இல்லை நானா? எதிர்த்துக் கேட்டான் குடிசைவாசி.

    ராஜா ஒரு துணிமூட்டை நிறையத் தங்கக் காசுகள் கொண்டு வந்திருந்தான். அந்த மூட்டையைக் குடிசைவாசிமுன் அவிழ்த்து, " இந்தா மதிப்புமிக்க இந்தத் தங்க மூட்டையில் இருந்து ஒரு நாணயத்தைத் தருகிறேன்! வாங்கிக் கொண்டு ஒரு வணக்கம் சொல்!" என்றான்.

    வாங்கிக் கொண்ட குடிசைவாசி," பெரிய தங்கக்காசு மூட்டையை நீங்கள் வைத்துக் கொண்டு, ஒரே ஒரு காசை மட்டும் எனக்குத் தருகிற உங்கள் கருமித்தனத்திற்கு என்னால் எப்படி வணக்கம் சொல்ல முடியும்?" என்று கேட்டான்.

    உடனே அரசன், தனது மூட்டையைச் சரிபாதியாகப் பிரித்து," இந்தா பாதியை உனக்குத் தருகிறேன். இப்போதாவது வணக்கம் சொல்!" என்றான்.

    குடிசைவாசி இதற்கும் மசிந்த பாடில்லை. ''அரசனே! நீங்கள் கொண்டுவந்த பொற்காசு மூட்டையில் பாதியை எனக்குத் தந்து விட்டீர்கள். இப்போது செல்வநிலைமை என்று பார்த்தால், உங்களிடம் எத்தனையளவு பொற்காசுகள் இருக்கின்றனவோ அதே அளவு காசுகள் என்னிடமும் சமமாக இருக்கின்றன. சமமாக இருக்கும் ஒருவரைப் பார்த்து வணக்கம் சொல்லத் தேவையில்லை. இப்போதும் நான் உங்களுக்கு வணக்கம் சொல்ல இயலாது" என்றான்.

    நொந்து போன அரசன் தன்னிடமிருந்த பாதித் தங்கக் காசு மூட்டையையும் குடிசைவாசியிடம் கொடுத்து விட்டான்," இந்தா முழுவதுமாகத் தந்து விட்டேன். என்னிடமிருந்த செல்வம் முழுவதையும் எடுத்துக்கொண்டு, மரியாதைக்காகக் கூட வேண்டாம்; நன்றிக்காகவாவது ஒரு வணக்கம் சொல்!" என்றான்.

    அரசன் தந்த அந்தப் பாதி மூட்டையையும் தன்பக்கம் இழுத்துக்கொண்ட குடிசைவாசி இப்போது அரசனைப் பார்த்துப் பேசினான், "ஐயா! தற்போது முழு தங்கக்காசு மூட்டையும் என் வசமிருப்பதால் உண்மையிலேயே பணக்காரன் நான்தான்; இத்தனைப் பொற்காசுகளுக்குச் சொந்தக்காரனாக இருக்கும் நான், ஒரு பொற்காசுகூட இல்லாத, ஏழையான உங்களைப் பார்த்து எதற்காக வணக்கம் வைக்க வேண்டும்?" என்று கேட்டானே பாருங்கள் ஒரு கேள்வி!.

    இந்தக் குடிசைவாசியின் மனத்தைப் போலத்தான் நம்மின் பலரது மனத்தைப் பணம் ஆட்டிப் படைக்கிறது.

    நேர்வழியில் செல்வம் செய்வது கடினம் என்றால், அதனைச் சிக்கனமாகச் செலவழித்துச் சேமித்து வைப்பதும் பெருக்குவதும் அதை விடக்கடினம். ஆயினும் பணம் என்பது ஈட்டியவர்க்கு மட்டுமே முற்றிலும் பயன்படும் என்பது தன்னலம் சார்ந்தது. தக்கவர்க்கும் தகுந்த செயல்களுக்கும் கொடுத்து மகிழ்கிற ஈகையிலேயே செல்வத்தின் பயன்மதிப்புப் பன்மடங்காகப் பெருகி நிற்கிறது.

    செல்வத்துப் பயனே ஈதல்!

    இது பத்தோடு பதினொன்று அல்ல! பத்தில் முத்தானது!

    தொடர்புக்கு 9443190098

    • பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இத்தலத்தில் மட்டும்தான் கருடாழ்வார் சங்கு, சக்கரம் ஏந்தி 4 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார்.
    • பெருமானே! எனக்கு ஒரு ஆசை. நான் தங்களை ராம அவதார திருக்கோலத்தில் காண விரும்புகிறேன்!” என்று வேண்டினான்.

    108 வைணவ திவ்ய தேசங்களில் கும்பகோணம் அருகே இருக்கும் திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர் கோவில், 22-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. வாமன அவதாரத்துடன் தொடர்புடைய இத்தலம், நான்கு யுகங்களிலும் வழிபடப்பட்டுள்ள சிறப்பைக் கொண்டது.

    பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இத்தலத்தில் மட்டும்தான் கருடாழ்வார் சங்கு, சக்கரம் ஏந்தி 4 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார்.

    சுக்ரபுரி என்ற பெயர் கொண்ட இத்தலம், நவக்கிரகங்களில் சுக்கிரனால் (வெள்ளி) தவம் இயற்றி வழிபடப்பட்டுள்ளது.

    திருவெள்ளியங்குடி பெருமாளை தரிசித் தால் 108 திவ்ய தேச பெருமாள்களை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ஒளியிழந்த கண்களோடு தவித்த சுக்கிராச்சாரியார், ஒளி தந்த பெருமாளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, இத்தலத்தில் அணையா தீபமாக பிரகாசிக்கிறார். அதனால் இத்தலம் நவக்கிரகத்தில் சுக்கிரத் தலமாகப் போற்றப்படுகிறது.

    ஒரு தடவை தேவர்களின் சிற்பியான விஸ்வகர்மாவுக்கும் அசுரர்களின் சிற்பியான மயனுக்கும் சிற்பக் கலைத் திறமையில் யார் சிறந்தவர் என்ற போட்டி ஏற்பட்டது. பிரம்மதேவன் இருவருக்கும் சமாதானம் செய்ய முனைந்தார்.

    "எத்தனையோ கோவில்களை நான் கட்டி முடித்திருக்கிறேன். பெருமாளுக்குரிய திவ்விய தேசங்கள் பலவற்றை நான்தான் கட்டினேன். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் வைகுண்டநாதர் கோவிலையும் நான்தான் கட்டினேன். அப்படியிருக்க என் முன்னால் அசுர சிற்பியான மயன் எவ்வாறு நிற்க முடியும்?"என்று விஸ்வகர்மா கூறினான்.

    பிரம்மா குறுக்கே நுழைந்து, "அதெல்லாம் உன்னுடைய திறமை என்று வீராப்பு கொள்ளாதே. போன ஜென்மத்தில் நீ செய்த இறைத் தொண்டுக்கான பெருமாளின் கருணை அது. அவர் நினைத்தார். நீ செய்தாய் அவ்வளவுதான்!" என்றார்.

    தலை குனிந்தான் விஸ்வகர்மா. மயனைப் பார்த்தார் பிரம்மா. 'நீ பூலோகம் சென்று காவிரிக் கரையில் சிறந்ததோர் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து மகாவிஷ்ணுவை நோக்கித் தவம் செய். அவர் உனக்கு காட்சி கொடுப்பார். அந்த இடத்தில் ஓர் ஆலயத்தை எழுப்பினால் உனக்கும் விஸ்வகர்மா போல் புகழ் கிடைக்கும்!" என்று ஆசிர்வதித்தார்.


    பிரம்மாவின் யோசனைப்படி மயன் பூமிக்கு வந்து பல இடங்களை ஆராய்ந்தான். இறுதியில் பாஸ்கர ஷேத்திரத்தில் மார்க்கண்டேயர் தவம் செய்து கொண்டிருந்த இடத்தின் அருகில் அமர்ந்து தவம் செய்யத் துவங்கினான். அவனது தவத்துக்கு இறங்கி சங்கு சக்கரதாரியாக மகாவிஷ்ணு ஷீராப்தி நாதராக (பாற்கடல்நாதர்) திருக்காட்சி தந்தார்.

    அதைக் கண்ட மயன், "பெருமானே! எனக்கு ஒரு ஆசை. நான் தங்களை ராம அவதார திருக்கோலத்தில் காண விரும்புகிறேன்!" என்று வேண்டினான்.

    பெருமாள் புன்னகையுடன் தம் கரத்தில் இருந்த சங்கு சக்கரத்தை அருகில் இருந்த கருடனின் கையில் தந்து விட்டு பின் வில், அம்புகளுடன் அலங்காரக் கோலத்தில் கோல வில் ராமனாகக் காட்சியளித்தார். எனவேதான் இவருக்கு கோலவில்லி ராமன் என்ற திருநாமம் ஏற்பட்டது.

    பகவானின் பாதங்களில் விழுந்த மயன் பெருமகிழ்ச்சியடைந்து அழகிய மதிலும் சுற்றுப் பிரகாரங்களும் கொண்ட ஒரு ஆலயத்தை அங்கே அமைத்தான்.

    பகவான் வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டபோது அத்தகைய தானத்தைத் தர வேண்டாம் என்று வெள்ளி பகவான் சுக்கிராச் சாரியன் கூறினார். தானத்துக்கு இடையூறாக இருந்ததால் அவர் தன் கண்களை இழந்தார்.

    பார்வை இழந்த கண்களை திரும்பப் பெறுவதற்கு இந்தத் தலத்தில் ஒரு மண்டலம் (45 நாட்கள்) தவமிருந்தார். தவத்தை மெச்சிய கோலவில்லி ராமன் சுக்கிரனுக்குக் காட்சி கொடுத்து கண் பார்வை மீண்டும் கிடைக்க அருள் பாலித்தார்.

    "வெள்ளியே! உனக்கு வேண்டிய வரம் கேள்!" என்று கேட்க, "நீங்கள் எனக்குக் காட்சி கொடுத்த இந்தத் தலம் என் பெயரிலேயே 'வெள்ளியங்குடி' என்று வழங்கப் பட வேண்டும்!' என்று வேண்ட 'தந்தேன்!' என்றார் பகவான்.

    அதனாலேயே இந்தத்தலம் வெள்ளியங்குடி என்று தற்போது வழங்கப்படுகிறது திரேதாயுகத்தில் பிரம்மாவுக்கு இத்தல பெருமாள் காட்சி அளித்ததால் பிரம்மபுத்திரம் என்ற பெயரும், திரேதாயுகத்தில் பராசர முனிவருக்கு தரிசனம் தந்ததால் பராசரம் என்றும், துவாபர யுகத்தில் சைந்திரருக்கு அருள் புரிந்ததால் 'சைந்திர நகரம்' என்றும், கலியுகத்தில் பார்க்கவனுக்கு (சுக்கிரனின் மறு பெயர் பார்க்கவன்) காட்சி கொடுத்ததால் 'பார்க்கவபுரி' என்றும் சுக்கிரபுரி என்றும் இத்தலத்துக்கு புராணப் பெயர்கள் உண்டு. இந்த ஆலயம் வயல்கள் சூழ்ந்த பகுதியில் காணப்படுகிறது.

    கருங்கல்லினால் அமைக்கப்பட்ட கருவறையில் மூலவர் ஷீராப்திநாதர் கிழக்கே திருமுக மண்டலத்துடன் புஜங்க சயனத்தில் சேவை சாதிக்கிறார். ராமர் உபய நாச்சி யார்களுடன் தரிசனம் தருகிறார். தன்னை அழுகுபடுத்திக் கொள்வதில் பிரியம் கொண்ட உற்சவ மூர்த்தி சிருங்கார சுந்தரன் என்ற பெயருடன் காட்சி அளிக்கிறார்.

    கருவறையில் அனுமனின் வடிவத்தை காணலாம். கோவிலுக்கு எதிரே அனுமன் சந்நிதி அமைந்துள்ளது. இங்கு கருடாழ்வார் நின்ற நிலையில் அமர்ந்த நிலையில் இல்லாமல் எழுகின்ற நிலையில் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார்.

    வருடத்தில் வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி முதல் தேதிகள் அதாவது விஷ்ணுபதி புண்ணிய காலத் தில் சிறப்புப் பிரார்த்தனைத் திருமஞ்சனம் நடைபெறுகிறது. அந்தப் பிரார்த் தனை செய்தால், நினைத்தது பலிக்கும் என்கின்றனர்.

    சுக்கிராச்சாரியாருக்கு கொடுக்கப்பட்ட ஒளி இன்றைக்கும் நேத்ர தீபமாக இக்கோவி லில் பிரகாசித்துக் கொண்டி ருக்கிறது. தேவலோகப் பதவியை இழந்த தேவேந்திரன் இத்தலத்துக்கு வந்து வேதவிற்பன்னர்களைக் கொண்டு பெருமாளுக்குப் பல உற்சவங்களைச் செய்து தன் பதவியை மீண்டும் பெற்றான்.

    பராசர முனிவர் நீண்டகாலம் இந்தத் தலத்தில் தங்கி வைகாசன ஆகம முறைப்படி ஆராதனை செய்து சித்தி பெற்றார். முனிவர் எழுப்பிய பராசர தீர்த்தம் இந்த ஊரில் உள்ளது.

    திருமங்கை ஆழ்வாரால் பத்து மங்களா தரிசனம் செய்யப்பட்ட தலம் இது. அகோபில மடம் ஜீயர் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், ' ஜகத்குரு பரமாச்சாரியார் ஆகியோர் பல காலம் இங்கு தங்கியிருந்து சாதுர் மாஸ்ய வியாச பூஜை செய்திருக்கிறார்கள்.

    தல விருட்சமான செங்கதலி என்ற செவ்வாழை கோவிலின் உட் பிரகாரத்தில் கருங்கல் தரையில் முளைத்து வளர்ந்துள்ளதைக் காணலாம். ஆண்டுக்கு ஒரு தடவையே இது தார் போடும்.

    இத்தலம் 1,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. பெருமாள் கிழக்கு நோக்கி பள்ளி கொண்ட கோலத்தில், வர்ணம் பூசப்பட்ட நிலையில் அருள் பாலிக்கிறார்.

    ஸ்ரீராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, திருக்காத்திகை விழா, வைகுண்ட ஏகாதசி வைபவ தினங்களில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும். அன்றைய தினத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சுவாமி, தாயார் வீதிஉலா வருவது வழக்கம்.

    இத்தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் வைகாசி ரோகிணி நாளிலும் மாசி மாதம் முழுவதிலும் அதிகாலையில் நீராடினால் சகல விதமான தோஷங்களும் நீங்கிவிடும் என்பது சான்றோர் வாக்கு.

    சுக்கிர வாரத்தில் (வெள்ளிக்கிழமை) இத்தலத்துக்கு வந்து பெருமாளை சேவித்தால் எல்லா நலன்களும் கிட்டும். சுக்கிர யோகம் அதிகரிக்கும். திரு மணத்தடை உள்ளவர்கள், கண் பார்வை குறை உள்ள வர்கள் நிவர்த்தி பெறும் தலம் இது.

    திருவெள்ளியங்குடி தலம் கும்பகோணம், அணைக்கரை மார்க்கத்தில் சோழபுரம் மற்றும் திருப்பனந் தாளில் இருந்து 5 கி.மீ. தொலை வில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து அணைக்குடி வழியாக நகரப் பேருந்து வசதி உண்டு.

    இவ்வூர் குடந்தையில் இருந்து 18 கி.மீ. தொலைவி லும், சோழபுரத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவிலும், திருப்பனந்தாளில் இருந்து 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது. ஆட்டோக்கள், கார்கள் வசதிகளும் உண்டு.

    • புகழால் அணுவளவும் பாதிக்கப்படாத சித்த புருஷரான ரமணர், தன்னைத் தேடிவந்த அனைவருக்கும் மவுனமாய்த் தன் அருளை வழங்கிக் கொண்டிருந்தார்.
    • `பக்தி நெறியில் இரண்டு நியாயம் உண்டு தெரியுமோ? ஒன்று மர்க்கட நியாயம். இன்னொன்று மார்ஜால நியாயம்.

    திருவண்ணாமலையில் வாழ்ந்துவந்த பகவான் ரமணரின் பெருமை உலகெங்கும் பேசப்படத் தொடங்கியிருந்த காலம் அது.

    யோகி ராம்சுரத்குமார் தமது மூன்று குருமார்களில் ஸ்ரீரமணரும் ஒருவர் எனத் தெரிவித்திருந்தார். ஸ்ரீராமதாசரிடம் பக்தியையும் ஸ்ரீஅரவிந்தரிடம் ஞானத்தையும் கற்றுக்கொண்ட தான், ஸ்ரீரமணரிடம் தவத்தைக் கற்றதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ஸ்ரீரமணரின் புகழ் விறுவிறுவென்று பரவியதால், வெளிநாடுகளில் இருந்தும் கூட, ஏராளமானோர் ரமணரைத் தேடி வந்து கொண்டிருந்தார்கள்.

    புகழால் அணுவளவும் பாதிக்கப்படாத சித்த புருஷரான ரமணர், தன்னைத் தேடிவந்த அனைவருக்கும் மவுனமாய்த் தன் அருளை வழங்கிக் கொண்டிருந்தார். ஆன்மிக அன்பர்கள் ஸ்ரீரமணர் அருளில் திளைத்துக் கொண்டிருந்தார்கள்.

    ஸ்ரீரமணரின் தீவிர அடியவர்களில் ஒருவர் சுந்தரேச ஐயர். ரமண மகரிஷியின் பெருமை முழுவதையும் அறிந்தவர். ஸ்ரீரமணரையே முழுமையாய்ச் சரணடைந்து வாழ்ந்தவர்.

    சுந்தரேச ஐயரின் உறவினர் ஒருவருக்கு திடீரெனக் கால் நடக்க இயலாமல் போய்விட்டது. கம்பைக் கையில் ஊன்றிக் கொண்டு நடக்கத் தொடங்கினார் அவர். அதுவும் சிரமமாகத் தான் இருந்தது.

    மருத்துவர்கள் இனிக் கம்போடுதான் நடக்க வேண்டும் எனத் தீர்மானமாய்ச் சொல்லி விட்டார்கள். அந்த உறவினரின் மனம் அளவற்ற வருத்தத்தில் ஆழ்ந்தது. இனி வாழ்நாள் முழுவதும் கம்போடு தான் நடக்க வேண்டும் என்ற எண்ணமே அவரைக் கதிகலங்கச் செய்தது.

    ஒருநாள் கம்பை ஊன்றியவாறு சுந்தரேச ஐயரைத் தேடிவந்தார் அவர். தன் நிலைமையைச் சொல்லி மனம் வருந்தினார். `இனிக் கம்பை எடுத்துவிட்டு இயல்பாக என்னால் நடக்கவே முடியாதா?` என அழுது புலம்பினார். அவரது கண்ணீர் சுந்தரேச ஐயரின் உள்ளத்தைக் கரைத்தது.

    `ஏன் முடியாது? மண்ணில் நடமாடும் கடவுள் ஸ்ரீரமணர் இருக்கிறாரே? வெளிநாடுகளில் இருந்தெல்லாம் அவரைத் தேடி வருகிறார்கள் அடியவர்கள். உன்னால் அவரை நாடிச் செல்ல முடியாதா?

    ஸ்ரீரமணரைச் சரணடைந்து உன் துயரத்தைச் சொல். உன் கால் தானாய்ச் சரியாகும்! மருத்துவர்களுக்கு எல்லாம் பெரிய மருத்துவர் ஸ்ரீரமணர்!` என்றார் சுந்தரேச ஐயர்.

    உடல் ஒரு பற்றுக்கோலை ஊன்றிக்கொண்டு நடப்பது மாதிரி, அந்த உறவினரின் மனம் சுந்தரேச ஐயரின் அறிவுரையால் ரமணரை ஒரு பற்றுக்கோலாய்க் கொள்ளத் தலைப்பட்டது. அந்த அறிவுரையையே பின்பற்றி நடக்கலானார் அந்த உறவினர்.

     

    திருவண்ணாமலை சென்று ரமணரை தரிசித்தார். அங்கேயே தங்கினார். நாள்தோறும் ஸ்ரீரமணர் முன்னிலையில் அமர்ந்து தன் கால் சரியாக வேண்டும் எனப் பிரார்த்திக்கத் தொடங்கினார்.

    ரமணர் தன் முகத்தில் ஒரு குறுமுறுவலோடு அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர, எதுவும் பேசவில்லை. ரமணர் எப்போதும் அதிகம் பேசுவதில்லையே? மவுனம் தானே பெரும்பாலும் ரமணர் மொழி?

    அவர் தன் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டாரா இல்லையா? வந்தவருக்கு எதுவும் விளங்கவில்லை. ஆனால் ரமணாஸ்ரமத்தில் ரமணர் முன்னிலையில் நடைபெறும் விந்தையான பல நிகழ்வுகளை அவர் தொடர்ந்து கவனிக்கலானார்.

    திருவண்ணாமலையில் இருந்த குரங்குகள் ஸ்ரீரமணரிடம் பாசத்தோடு பழகி வந்தன. விலங்கினத்தைச் சேர்ந்த குரங்குகள் கூட மகான் ரமணரிடம் பக்தி செலுத்துவது அவரை வியக்க வைத்தது.

    குட்டிக் குரங்குகள் ஸ்ரீரமணர் மடியிலும் தோளிலும் ஏறி அமர்ந்துகொள்வதுண்டு. சில குட்டிக் குரங்குகள் ரமணரின் கழுத்தை ஒரு தாயைக் குழந்தை கட்டிக் கொள்வதைப் போல் கட்டிக் கொள்வதுண்டு. அவரிடம் அவை உரிமையோடு விளையாடுவதும் உண்டு.

    ரமணர் ஒருபோதும் குரங்குகளை விரட்டுவதில்லை. அவற்றின் விளையாட்டை மனமார ரசிப்பார் அவர். குரங்குகளின் முதுகில் பிரியத்தோடு தடவிக் கொடுப்பார்.

    ஏதேனும் ஒரு குரங்கு பசியோடு தன்னைத் தேடிவந்தால் ரமணர் அதற்குத் தன் கையாலேயே உணவளிப்பார். அப்போது ரமணரைப் பார்த்தால் குரங்குகளின் அன்பான தாய்போல் தோன்றும். ஒருநாள் ஒரு குரங்கு புதிதாய்ப் பிறந்த தன் குட்டியை ரமணரிடம் கொண்டுவந்து காண்பித்தது. பிறகு எதுவும் பேசாமல் அமைதியாக தன் குட்டியோடு ரமணர் முன் எதையோ எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தது.

    ரமணர் அந்தத் தாய்க் குரங்கையும் குட்டிக் குரங்கையும் அருள்பொங்கப் பார்த்தார். பின் அவற்றின் தலைமீது கைவைத்து ஆசீர்வதித்தார். அவ்வளவுதான். அவரது ஆசீர்வாதம் கிடைத்ததும் மகிழ்ச்சியோடு வேறு எதையும் எதிர்பார்க்காமல் அவை புறப்பட்டு விட்டன.

    குட்டிக் குரங்கு தன் தாயின் மடியை இறுகப் பற்றிக் கொண்டது. பின் தாய்க் குரங்கு குட்டிக் குரங்கோடு மரம் விட்டு மரம் தாவி எங்கோ சென்று மறைந்துவிட்டது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அன்பர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். அதுமட்டுமல்ல, ஒருநாள் ரமணர் பசியோடு ஒரு நாவல் மரத்தின் கீழ் நின்றபோது மரத்தில் இருந்த குரங்குகள் அவர் பசியைத் தீர்க்கும் எண்ணத்தில் அவருக்காக நாவல் பழம் பறித்துப் போட்ட காட்சியையும் அவர் கண்டார்.

    குரங்குகள் கூட ரமணரின் அருளைப் பெறுகின்றன. ரமண பகவானுக்கு நாவல் பழத்தை நிவேதனமாய்ப் பறித்துப் போடுகின்றன. ஆனால் ரமணர் அருளைத் தம்மால் பெற முடியவில்லையே? அவர் மனம் வைத்தால் தன் கையில் உள்ள கம்பைத் தூக்கிப் போட்டுவிட்டுத் தான் இயல்பாக நடக்குமாறு அவரால் செய்ய முடியாதா? நினைத்து நினைத்து மறுகியது அந்த அன்பரின் உள்ளம்.

    ஒருநாள் சுந்தரேச ஐயரும் கால் ஊனமான உறவினரும் ரமணர் முன்னிலையில் அமர்ந்திருந்த போது, ரமணர் சிரித்தவாறே பேசத் தொடங்கினார்:

    `பக்தி நெறியில் இரண்டு நியாயம் உண்டு தெரியுமோ? ஒன்று மர்க்கட நியாயம். இன்னொன்று மார்ஜால நியாயம். மர்க்கடம் என்றால் குரங்கு. மார்ஜாலம் என்றால் பூனை.

    குட்டிக் குரங்கு என்ன செய்கிறது? தாய்க் குரங்கை, தான் இறுகப் பற்றிக் கொள்கிறது. அது கையை விட்டுவிட்டால் அவ்வளவு தான். கீழே விழ வேண்டியது தான். தன் வலிமையை நம்பி, தன் பிடிப்பின் மூலம் தாயைச் சார்ந்திருக்கிறது அது.

    ஆனால் குட்டிப் பூனை அப்படிச் செய்வதில்லை. தன்னைப் பாதுகாக்கும் பொறுப்பை முழுமையாகத் தன் தாயிடமே கொடுத்து விடுகிறது அது. தாய்ப் பூனைதான் குட்டிப் பூனையை வாயால் கவ்விக் கொள்கிறது.

    இப்போது குட்டிப் பூனையைப் பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பும் தாய்ப் பூனைக்குத்தான். குட்டிப் பூனை தாயை முழுமையாகச் சார்ந்திருப்பதால் அதற்கு எந்தக் கவலையும் இல்லை.

    மர்க்கட நியாயப்படி, குட்டிக் குரங்கைப் போல் பக்தி செய்யாமல், மார்ஜால நியாயப்படி குட்டிப் பூனையைப் போல் பக்தி செய்வதுதான் நல்லது. பகவான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான். நம் வேலை பகவானை முழுமையாக நம்பிச் சரணடைவதுதான். இல்லையா?`

    ஸ்ரீரமணர் பேசப் பேச அந்த அன்பர் பொறுமையாக அதைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஸ்ரீரமணர் என்ன சொல்கிறார்? தனக்குத்தான் மறைமுகமாக ஏதேனும் அறிவுறுத்துகிறாரா? தான் முழுமையாக பகவானைச் சரணடைய வேண்டும் என்கிறாரா? தன் சரணாகதி இன்னும் முழுமை பெறவில்லை என்கிறாரா?

    ஊன்றுகோலுடன் நடந்து கொண்டிருந்த அன்பருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஏதோ புரிந்த மாதிரியும் இருந்தது.

    ஒரு பெருமூச்சோடு தன் ஊனம் குணமாக வேண்டும் எனத் தொடர்ந்து பிரார்த்தனை செய்யலானார் அவர். திருவண்ணாமலையை ஊன்றுகோலுடன் வலம் வருவது, ஸ்ரீரமணர் முன் அமர்ந்து பிரார்த்தனை செய்வது இப்படியே காலம் கடந்து கொண்டிருந்தது. ஆனால் எந்தப் பலனையும் காணோம்.

    ஒருநாள் வெறுத்துப் போய் விரக்தியுடன் திருவண்ணாமலையை விட்டுப் புறப்பட்டார் அவர். தன் நிலை இனி இப்படித்தான் என மனம் கசந்து ஊன்றுகோலுடன் நடக்கலானார்.

    சற்றுதூரம் சென்றவுடன் அவர் முன் தோன்றினார் அவருக்கு முன்பின் பரிச்சயமில்லாத ஒரு முதியவர். யார் அந்த முதியவர்? அவர் முகத்தில் லேசாக ரமணரின் ஜாடை தென்படுகிறதோ?

     

    திருப்பூர் கிருஷ்ணன்

    திருப்பூர் கிருஷ்ணன்

    அந்த முதியவர் அவர் அருகே வந்தார். `என்ன இன்னும் கம்பை ஊன்றிக் கொண்டு நடக்கிறாய்? பகவான் மேல் நம்பிக்கை வராதா உனக்கு? இனி உனக்குக் கம்பு வேண்டாம்!` என அதட்டினார். அவர் கையில் இருந்த கம்பைப் பிடுங்கி இரண்டாய் முறித்துப் போட்டு விட்டு விறுவிறுவென்று நடந்து மறைந்து போனார். அன்பரின் உள்ளம் திகைத்தது. யார் இந்த முதியவர்? ஏன் இப்படிச் செய்தார்? இனி நான் கம்பில்லாமல் எப்படி நடப்பேன்?

    இப்படி நினைத்தவாறே மெல்லக் காலை எடுத்து வைத்தார் அன்பர். என்ன ஆச்சரியம்! அதன்பின் அவரால் கம்பில்லாமலேயே நடக்க முடிந்தது. கால்கள் இரண்டும் மிகுந்த வலிமை பெற்றிருந்தன.

    நம்பிக்கையில்லாமல், திருவண்ணாமலையை விட்டு விலகிச் செல்ல நினைத்த தன் நினைப்பை எண்ணி அவர் மனத்தில் அளவற்ற வெட்கம் தோன்றியது. வலிமை பெற்ற கால்களோடு ஓடிவந்து ஸ்ரீரமணரைக் கண்ணீர் வழிய நமஸ்கரித்தார் அந்த அன்பர்.

    அப்போதும் ரமணர் ஒன்றும் பேசவில்லை. தன் அருகே அமர்ந்திருந்த ஒரு பூனையை உற்றுப் பார்த்தார். பின் அந்த அன்பரைப் பார்த்தார். அவ்வளவுதான்.

    ஆன்மிக அன்பர்களுக்குத் தேவை குரங்கு போலான மர்க்கட நியாயம் அல்ல, பூனையைப் போலான மார்ஜால நியாயம்தான் என்பதைத் தன் விழிகளாலேயே ரமணர் போதிப்பதாய்ப் புரிந்துகொண்டார் அவர். ஸ்ரீரமணரின் பாதாரவிந்தங்களை விழுந்து வணங்கினார். அவர் மனம் முழுமையான சரணாகதி என்றால் என்ன என்பதை உணர்ந்து கொண்டது.

    தொடர்புக்கு:

    thiruppurkrishnan@gmail.com

    • ஹோண்டா ஒரு சிறிய எஞ்சினை சைக்கிளுடன் இணைத்தார்.
    • 150 நாடுகளில் ஹோண்டாவின் கார்களும், மோட்டார் சைக்கிள்களும் இன்று ஓடுகின்றன

    ஹோண்டா - இந்தப் பெயரை அறியாதவரே இன்று இருக்க முடியாது. ஏனெனில் சாலையில் நாம் பார்க்கின்ற கார்களும் மோட்டார் சைக்கிள்களும் பெரும்பாலும் ஹோண்டாவாகவே இருக்கும். ஜப்பானுக்கு ஒரு தனி கவுரவத்தைத் தந்தது ஹோண்டா நிறுவனத் தயாரிப்புகள்.

    ஆனால் ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் 'மேட் இன் ஜப்பான்' என்று பொறிக்கப்பட்டிருந்த வார்த்தைகளை எந்த ஒரு பொருள் மீது பார்த்தாலும் அனைவரும் எள்ளி நகையாடுவர். அது தரமில்லாத உதவாக்கரை பொருள் என்று தூக்கி எறிவார்கள்.

    இந்த அவமானத்தைத் தாங்க முடியாத ஜப்பானியர்கள் ஒரு உறுதிமொழியை எடுத்தனர். தரமில்லாத எதையும் விற்பனைக்கு அனுப்பாதே என்று.

    நாளடைவில் தரக் கட்டுபாடுகள் அதிகமானது. உற்பத்தி உத்திகள், கடுமையான மேற்பார்வை சோதனைகள் எல்லாமாகச் சேர்ந்து ஜப்பானில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் தரத்தில் நம்பர் ஒன் என்ற பெயரைப் பெற ஆரம்பித்தன. இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்ல, ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்புகளைச் சொல்லலாம்.

    ஹோண்டா உற்பத்தி செய்யும் கார், மோட்டார் சைக்கிளைப் பார்ப்பவர்கள் அந்த நிறுவனத்தின் நிறுவனரான ஹோண்டாவைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

    பிறப்பும் இளமையும்: சோய்சிரோ ஹோண்டா 1906-ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் நாளன்று ஜப்பானில் உள்ள கோம்யா என்ற கிராமத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார். தந்தை ஜிஹெய் ஒரு கொல்லர். தாய் மைகா ஒரு நெசவாளி. ஏழ்மையான குடும்பம் என்றாலும் மனதிருப்தியுடன் ஒழுக்கத்துடன் வாழ்ந்த குடும்பம் அது.

    ஹோண்டாவின் இளமைப் பருவத்தில் எங்கு பார்த்தாலும் சைக்கிள் மயம். ஆகவே சைக்கிள் ஓட்டுபவர்கள் தங்கள் சைக்கிளை பராமரிக்கவும் புதுப்பிக்கவும் ரிப்பேர் செய்யவும் ஹோண்டாவின் தந்தையிடம் வருவது வழக்கம். அங்கு ஆரம்பித்தது ஹோண்டாவின் மெஷின்கள் மீதான ஆர்வம். தானே சொந்தமாக ஒரு ரிப்பேர் கடையை ஆரம்பித்தார்.

    1922-ல் பள்ளியை விட்டு வெளி வந்த ஹோண்டா டோக்கியோ சென்று கார்கள், மோட்டார் சைக்கிள்கள் பற்றி அறிய ஆர்வம் கொண்டார்.

    ஆகவே வீட்டை விட்டு வெளியேறி டோக்கியோவில் ஹோங்கோ என்ற இடத்தில் யூஜோ சகாகிபாரா என்பவரிடம் கத்துக்குட்டி வேலையாளாகச் சேர்ந்தார். ஹோண்டாவின் ஆர்வத்தைப் பார்த்த யூஜோ அசந்து போனார். ஹோண்டாவிற்கு எல்லாவற்றையும் சொல்லித் தர ஆரம்பித்தார்.

    1928இல் வீடு திரும்பிய ஹோண்டா தன் சொந்தத் தொழிலை ஆரம்பித்தார். அவருக்கு வயது 22 தான்! இரண்டே வருடங்களில் அவரது நிறுவனத்தில் 30 பேர் வேலை செய்தனர். ஹோண்டாவிற்கு திருமணம் ஆனது. அவரது மனைவி சசியும் நிறுவனத்தில் சேர்ந்து தொழிலைக் கவனிக்க ஆரம்பித்தார்.

    உழைப்பதில் இன்பம்: உழைப்பதில் அவருக்கு இருந்த ஈடுபாட்டால் அவர் பசி, தாகத்தையே மறந்தார். அவரே பின்னால் கூறியது இது: "நான் கத்துக்குட்டி பயிற்சியாளராக உழைத்துக் கொண்டிருந்த போது எனது கவனத்தைத் திசை திருப்ப விடமாட்டேன். எனது நண்பர்கள் என்னை விரும்பி அழைத்தாலும் போக மாட்டேன். 'உணவுக்கான நேரம் வந்து விட்டது. சாப்பிட வா' என்று என் தாயார் என்னை அழைத்தாலும் போக மாட்டேன். என்னை இழுத்துக் கொண்டு போய் எனக்கு உணவைப் பரிமாறுவார் அம்மா. என் காதுகள் இப்படி 'செயலிழப்பதைக்' கண்ட எனது தாயார் நாளடைவில் எனது கவனத்தின் தீவிரத்தை உணர்ந்து கொண்டார். 'வேலையை முடித்து விட்டு சாப்பிட வா' என்று கூறும் அளவுக்கு அவருக்கு மனப்பக்குவம் வந்து விட்டது. பசி தாகம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை.

    உலகப் போர்: காலம் மாறத் தொடங்கியது. 1937-ல் ஜப்பானுக்கும் சீனாவிற்கும் போர்.

    பின்னர் வந்தது இரண்டாம் உலகப் பெரும்போர். ரிப்பேர் செய்வதை விட்டு விட்டு மோட்டார் சைக்கிள் மற்றும் கார் தயாரிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கினார் ஹோண்டா. சிசிரோ கதோ என்ற நண்பருடன் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.

    ச.நாகராஜன்

    ச.நாகராஜன்

    பிஸ்டன் ரிங்குகளைத் தானே தன் கையால் தயாரிக்கத் தொடங்கினார் ஹோண்டா. ஆனால் அவை தரத்துடன் இல்லை. ஒரே தோல்வி மயம். ஆகவே உலோக இயல் பற்றிய தனது அறிவு போதுமானதாக இல்லை என்பதை அறிந்து கொண்ட ஹோண்டா அதில் கவனம் செலுத்தி தரமான படைப்புகளை உருவாக்குவதில் வெற்றி பெற்றார்.

    நிறுவன வளர்ச்சி: 1939-ம் ஆண்டு அவர் ஒரு தேர்ந்த நிபுணராக ஆக முடிந்தது. மெல்ல மெல்ல ஆர்டர்கள் வர ஆரம்பித்தது. தரமோ சூப்பர். 2000 பேர்கள் உள்ள பெரிய நிறுவனமாக அவரது நிறுவனம் வளர்ந்தது.

    1948-ல் மோட்டார் பொருத்தப்பட்ட முதல் சைக்கிளை அவர் அறிமுகப்படுத்தினார். அவரது தயாரிப்பின் பெயர் ட்ரீம் (கனவு).

    1959-ல் அவர் கார்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். தனது முதல் ஸ்போர்ட்ஸ் காரில் அவர் பழைய விமானம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட எஞ்சினைப் பொருத்தி ஓட்டினார்.

    மெல்ல மெல்ல வளர்ந்த அவரது நிறுவனம் 1959-ல் நம்பர் ஒன் நிறுவனமாக மாறியது. தனது மாடலை மாற்றும் போதெல்லாம் அந்த மாடலின் முதல் காரை அவரே ஒட்டிப் பார்ப்பது வழக்கமானது. இந்தப் பழக்கத்தை தனது 65 வயது முடிய அவர் விடவில்லை.

    தோல்விகளில் துவளாதே: வாழ்க்கை முழுவதும் அவருக்கு ஏற்பட்ட தோல்விகள் பல. தடைகளும் பற்பல. இரண்டாம் உலகப் போரில் இடாவா என்ற இடத்தில் இருந்த அவரது தொழிற்சாலை மீது குண்டு போடப்பட்டு அது முற்றிலுமாக சேதம் அடைந்தது.

    1945-ல் மிகாவா என்ற இடத்தில் இருந்த அவரது தொழிற்சாலை பெரிய பூகம்பம் ஒன்றினால் சேதமடைந்தது. ஆனால் ஒருபோதும் அவர் மனம் தளர்ந்ததில்லை.

    உலகப்போர் முடிந்த பிறகு கார் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆகவே அனைவரும் சைக்கிளுக்குத் திரும்பி வர ஆரம்பித்தனர். ஹோண்டா ஒரு சிறிய எஞ்சினை சைக்கிளுடன் இணைத்தார். அனைவரும் அதை விரும்பி வாங்க ஆரம்பித்தனர். ஆனால் தேவைக்குத் தகுந்தபடி அவரால் உற்பத்தி செய்ய முடியவில்லை.

    ஜப்பானை வலிமையுள்ளதாக்க தனக்கு உதவி செய்யுமாறு 18000 சைக்கிள் விற்பனையாளர்களுக்கு அவர் உத்வேகமூட்டும் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். 5000 பேர்கள் அவருக்கு உதவ முன்வந்தனர். அதை வைத்து சிறிய எஞ்சின்கள் ஏராளமானவற்றை அவர் உருவாக்கி அனைவருக்கும் தந்தார்.

    முதலில் அவர் உருவாக்கிய எஞ்சின்கள் சற்று பெரிதாக இருந்ததால் சந்தையில் விற்பனையாகவில்லை. ஹோண்டா விடவில்லை. தொடர்ந்து முயற்சி செய்து சிறிய மாடல் எஞ்சினை உருவாக்கினார். விற்பனை சக்கை போடு போட்டது. சூப்பர் கப் என்ற அந்த மாடலை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் வாங்க ஆரம்பித்தன.

    இதே போல இன்னொரு முறை ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் கார் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட மறுபடியும் களத்தில் இறங்கினார் ஹோண்டா. இந்த முறை அவர் சிறிய காரைத் தயாரித்தார். எரிபொருள் சிக்கனத்தைக் கொண்ட அந்த காரை அனைவரும் வாங்க இந்த முறையும் பெரிய வெற்றி அவருக்குக் கிடைத்தது!

    பீப்பிள் பத்திரிகை 1980-ம் ஆண்டின் உலகின் ஆகப்பெரும் மனிதர்கள் 25 பேரில் ஒருவராக அவரை அறிவித்தது. அனைவரும் அவரை 'ஜப்பானின் ஹென்றி போர்டு' என்று புகழ ஆரம்பித்தனர்.

    பழகுவதற்கு இனிமையானவர், தவறுகளைச் சுட்டிக் காட்டும் போது உடனடியாக அப்படியே ஏற்றுக் கொள்வார். அதைத் திருத்திக் கொண்டு முன்னேறுவார். இரண்டு மகன்களையும் இரண்டு மகள்களையும் அவர் அன்புடன் வளர்த்தார்; நற்பண்புகளை தன் வாழ்க்கை மூலம் வாழ்ந்து காட்டினார்.

    ஆனால் தனது மகன்களை அவர் வற்புறுத்தி தனது நிறுவனத்தை மேற்கொள்ளச் செய்ய அவர் விரும்பவில்லை. அவரது மகன் ஹிரோடோஷி ஹோண்டா தனக்கென ஒரு மோட்டார்ஸ் போர்ட்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

    தனது தொழிலகத்தில் அவர் தரத்தைக் கண்டிப்பாக வற்புறுத்துவார். நேரம் தவறாமை அவரது முக்கியப் பண்பானது. தனது தொழிலாளர்கள் மத்தியில் அவர் மிஸ்டர் தண்டர்ஸ்டார்ம் - மிஸ்டர் இடிமின்னல் புயல்- என்று அறியப்பட்டார்.

    மறைவு: ஹோண்டா 1991-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி ஈரல் கோளாறு காரணமாக மரணமடைந்தார். அவர் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் 470. காப்புரிமைகள் 150. ஜப்பான் நாட்டின் உயரிய விருதான 'ப்ளூ ரிப்பன்' விருது அவருக்கு தரப்பட்டது.

    3200 டாலருடன் ஆரம்பிக்கப்பட்ட அவரது நிறுவனம் 30 பில்லியன் டாலர் அதாவது 3000 கோடி டாலர் என்ற அளவுக்கு வளர்ந்திருந்தது.

    ஹோண்டாவின் தயாரிப்பு நிறுவனங்கள் இப்போது அமெரிக்கா, சீனா, இந்தியா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் உள்ளன. அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும் ஹோண்டா அக்கார்ட் காரைப் பார்க்கலாம். ரேசுக்கான ஹோண்டாவின் மோட்டார் சைக்கிள்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. 150 நாடுகளில் ஹோண்டாவின் கார்களும், மோட்டார் சைக்கிள்களும் இன்று ஓடுகின்றன.

    வெற்றிக்கு வழி: ஹோண்டாவின் கருத்துப்படி அவர் தனது வெற்றிக்குக் காரணமாகக் கூறியவை இரண்டு விஷயங்கள்

    1) டிரையல் அண்ட் எர்ரர் வழிமுறை: ஒரு பொருளைத் தயாரித்து சோதனை செய்து அதில் உள்ள குறைகளைக் களைந்து கொண்டே இருந்தால் நல்ல பொருள், தரத்துடன் உற்பத்தியாகி விடும்.

    2) தோல்விகளால் துவளாதீர்கள்; ஒரு பொருளைக் கண்டுபிடித்து தயாரிக்கும் போது ஏற்படும் தோல்விகளைக் கண்டு துவளாதீர்கள். ஒவ்வொரு தடைக்கல்லும் வெற்றிக்கான படிக்கல் என்று உணருங்கள்.

    ரிஸ்க் எடுக்க பயப்படக் கூடாது என்பது அவரது கொள்கை.

    மூன்று கொள்கைகளைத் தனது கம்பெனி கொள்கைகளாக அவர் கொண்டிருந்தார். வாங்குவதில் சந்தோஷம், விற்பதில் சந்தோஷம், உருவாக்குவதில் சந்தோஷம் ஆகியவையே அந்த மூன்று.

    அவர் ஒரு முறை கூறினார் இப்படி: பலரும் வெற்றி பெற வேண்டுமென்று விரும்புகின்றனர். வெற்றியானது பல தோல்விகளுக்கும் சுயபரிசோதனைகள் செய்த பின்னருமே அடையப்படும் என நான் நம்புகிறேன். வெற்றி பெற ஒரு சதவிகித உழைப்பே தேவை மற்ற 99 சதவிகிதம் தடைகளை மீறி முன்னேறுவது தான்! தடைகளைக் கண்டு பயப்படவில்லை என்றால் வெற்றி தானே உங்களை வந்து அடையும்!

    அவரது வாழ்க்கை போதித்த போதனை:தோல்விகளைக் கண்டு துவளாதீர்கள் என்பது தான்.

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    • நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மரபணுவில் பிழை ஏற்படாமல் தடுக்கும்.
    • இயற்கை நிறமிகளை இயற்கையிலே தன்னகத்தே அதிகம் கொண்டவை பழங்கள் தான்

    அறுபது வயதைக் கடக்கும் முதியவர்கள் அனைவரும் புற்றுநோய் சார்ந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். அதற்கு புற்றுநோயினை தடுக்கும் உணவுகளையும், புற்றுநோயினை வெல்லும் உணவுகளையும் நாடுவது இன்றியமையாதது.

    சமீபத்திய ஆய்வுகள் அதிர்ச்சிகரமான பல தகவல்களைத் தெரிவிக்கின்றன. அதன்படி ஒவ்வொரு உடலிலும் புற்றுநோய்க்கான செல்கள், விதைகளாக உறங்கி கொண்டிருப்பதாகவும், அந்த விதை வளர்ச்சி பெற்று புற்றுநோய் எனும் கொடிய நோயாக மாறுவது உணவு, சூழல் இவற்றைப் பொறுத்து அமைவதாக உள்ளது எனவும் தெரிவிக்கின்றன.

    புற்றுநோய் என்பது உடலில் உள்ள மரபணுவில் உண்டாகும் பிழைகளால் உருவாகும் நோய். மரபு சார்ந்து வரும் புற்றுநோய் ஒருபுறம் இருக்க, உணவு மற்றும் பல்வேறு வேதிப்பொருட்கள், வேதிக்காரணிகள் மூலமாக உண்டாகும் நாட்பட்ட பாதிப்பானது, பின்னாளில் மரபணுவில் பிழையையும், பாதிப்பையும் உண்டாக்கி புற்றுநோய்க்கு அடித்தளமிடுவதாக உள்ளது.

    ரத்தத்தில் மாறி மாறி காணும் சர்க்கரை அளவு நாட்பட்ட அழற்சிகளை உடலில் உண்டாக்கி புற்றுநோய்க்கான வழியை உண்டாக்குவதாக நவீன அறிவியல் கூறுகிறது. அத்தகைய அழற்சியை உண்டாக்கும் உணவுகள் என்று நவீன அறிவியல் பட்டியலிடும் உணவுப் பொருட்களில் முக்கிய இடத்தைப் பிடிப்பது இனிப்பு சார்ந்த உணவுகளும், இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும் உணவுகளும் தான். ஆகவே இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்பாடோடு வைத்துக்கொள்வது புற்றுநோயை தடுப்பதிலும், வெல்வதிலும் பெரும்பயன் அளிக்கும்.

    உலகம் முழுக்க புற்றுநோய் சார்ந்த ஆய்வுகள் பல்வேறு கோணங்களில் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. அதில் புற்றுநோய்க்கும் உடல் பருமனுக்கும் அதிக தொடர்பு உள்ளதென்றும், புற்றுநோய்க்கும் சர்க்கரை நோய்க்கும் அதிக தொடர்பு உள்ளதென்றும் கூறுகின்றன. எனவே இவை இரண்டையும் கட்டுக்குள் வைப்பது மிக அவசியம்.

    மேற்கூறிய நோய்நிலைகளுக்கு அடிப்படையாக உள்ள தொடர்பு இன்சுலின் எனும் ஹார்மோன் என்கிறது நவீன அறிவியல். உண்மையில் இன்சுலின் ஹார்மோன் சர்க்கரை நோயுடன் தொடர்புடையது என்பது பலருக்கு தெரியும். ஆனால் புற்றுநோய்க்கும், இன்சுலின் எதிர்ப்புக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக தெரிய வருகிறது.

    உணவை மருந்தாக்கிய சித்த மருத்துவம் உடலில் புற்றுநோய்க்கு ஆதாரமாகும் மரபணு பிழை உருவாகாமல், இன்சுலின் எதிர்பினைத் தடுக்க காயகல்ப மருந்துகளை பரிந்துரைப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நெல்லி தேனூறல், இஞ்சித் தேனூறல், கரிசாலை கற்பம், திரிபலை கற்பம் ஆகிய மருந்துகள் உடலை அழியாமல் காக்கக்கூடியன. இவற்றில் மிகச்சிறப்பு வாய்ந்தது நெல்லி தேனூறல் தான். 

    நெல்லிக்காயை லேசாக ஆவியில் வேக வைத்து, பின்னர் குண்டூசி கொண்டு சிறுதுளைகளை உண்டாக்கி, அதன்பின் தேனில் ஊறவைத்து ஒரு மண்டலம் சாப்பிட உடல் செல்கள் அனைத்திற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். அதே போல் இஞ்சியும் செய்து எடுத்துக்கொள்ளலாம். சித்த மருந்தான திரிபலையில் நெல்லிக்காய் சேருவதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே சித்த மருந்தான திரிபலை சூரணத்தை கற்பமாக 45 நாட்கள் எடுத்துக்கொள்வது உடல் செல்களுக்கு புத்துணர்ச்சி தரும். மரபணு பிழையைத் தடுக்கும்.

    நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மரபணுவில் பிழை ஏற்படாமல் தடுக்கும், ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை அதிக அளவு இருப்பது குறிப்பிடத்தக்கது. நெல்லிக்கனி மரபணு வரை சென்று காக்கும் என்று இன்றைய நவீன அறிவியல் உரக்க கூறுவதற்கு ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே, அதியமான் தமிழ் பாட்டி ஒவ்வையாருக்கு நெல்லிக்கனியை வழங்கியது சிறப்புமிக்கது. நம்ம ஊர் நெல்லிக்கனி போல வெளிநாட்டு பழங்களான ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி ஆகிய பழங்களும் பல்வேறு நன்மைகளை வாரி வழங்கக்கூடியன. மொத்தத்தில் பழங்கள் மரபணு பிழையைத் தடுக்கும் பேராயுதங்கள்.

    அதே போல் இயற்கை வேளாண் பொருட்களைப் பயன்படுத்துவதும் இன்றைய சூழலில் அவசியமாகின்றது. மக்கள்தொகை பெருகி விட்டது, அதற்கேற்ற உணவு உற்பத்தி தேவை என்று கருதி இன்றைய சூழலில் அதிகம் பயன்பாட்டில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளும், களைக்கொல்லி மருந்துகளும் கூட மரபணுவில் மாற்றம் உண்டாக்க காரணமாகிவிடும் என்று பல்வேறு தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

    ஆகவே புற்றுநோயை வெல்ல வேண்டுமானால் நம் உடலுக்கு நஞ்சாக மாறும் பூச்சிமருந்துகள் கலந்த உணவுகளை தவிர்த்து, நஞ்சில்லா இயற்கை வேளாண் பொருட்களை நாடுவதும் மிக முக்கியமானது.

    பஞ்சு மிட்டாய் முதல் பந்தியில் பரிமாறும் இனிப்புகள் வரை அனைத்திலும் செயற்கை நிறமூட்டிகளும், சுவையூட்டிகளும், நாவினை அடிமையாக்கும் வேதிப்பொருட்களும் சேர்க்கப்படுவது முதுமையில் மரபணு பிழை உருவாகும் வாய்ப்பினை அதிகரிப்பதாக உள்ளன. ஆகவே உண்ணும் உணவுப் பொருட்கள் அனைத்தும் இயற்கையாய் இருப்பது புற்றுநோயை வெல்லும் எளிய வழிமுறை.

    பிளாக்ஸ் விதைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுவதும், பிளாக்ஸ் விதை எண்ணெயை பயன்படுத்துவதும் புற்றுநோய்க்கு நல்லது என்பதை அறிந்து அவற்றைப் பயன்படுத்தும் நம்மவர்கள், நமது பாரம்பரிய உணவு வகைகளை மறந்தவர்கள் தான். "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்" என்பதைப் போல, என்ன சத்து இல்லை எங்கள் பாரம்பரிய உணவில் என்பதையும் புரிந்துகொண்டு செயல்பட வேண்டியது அவசியமான அவசரம்.

    இயற்கை நிறமிகளை இயற்கையிலே தன்னகத்தே அதிகம் கொண்டவை பழங்கள் தான். பப்பாளி, மாதுளை, நாவல் போன்ற பழங்களின் நிறத்திற்கு காரணம் மரபணு பிழை உண்டாகாமல் தடுக்கும் இயற்கை நிறமிகள். அதே போல் கேரட், தக்காளி, ப்ராக்கோலி போன்ற நிறமுள்ள காய்கறிகளும் இயற்கை நிறமிகளை உடையன. இவ்வாறாக நாம் கொண்டாட வேண்டிய இயற்கை நிறமிகளை மறந்து விட்டதால், செயற்கை வேதி நிறமிகள் நம்மை ஆட்கொண்டு புற்றுநோய்க்கு ஆதாரம் அமைக்கின்றன.

     அதைப் போலவே கருப்பு கவுனியும், மாப்பிள்ளை சம்பா, காட்டு யானமும், இன்னும் பல பாரம்பரிய நிறமுள்ள அரிசிகள் அதிகப்படியான 'ஆன்தோசயனின்' எனும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வேதி நிறமிகளை கொண்டு நம் மரபணு பிழையைத் தடுக்கும் தன்மை உடையன. இவற்றை நாடுவதும் முதுமையின் நலத்திற்கு அவசியம்.

    எப்படி உடல் பருமனுக்கும், புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதோ அதை போல் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவுக்கும் அதிக தொடர்பு உள்ளது. ஏனெனில் புற்றுநோயை உண்டாக்கும் பல்வேறு கார்சினோஜெனிக் காரணிகள் நம் உடலில் உள்ள கொழுப்பு பொருட்களுடன் ஒட்டிக்கொண்டு உடலிலேயே தங்கி விடுவதாக ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆகவே தான் கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகள் புற்றுநோயை வெல்வதற்கு துணைபுரிவதில்லை. மாறாக, கொழுப்பு இல்லாத நார்ச்சத்துள்ள பழங்களும், பிஞ்சுக் காய்கறிகளும், தாவர வகை சார்ந்த உணவுப்பொருட்களும் புற்றுநோயை வெல்ல உதவும் சிறந்த உணவுப்பொருட்கள்.

    அதே போல் விலங்கு புரதச்சத்துக்கள் நமது உடலில் ஐஜிஎப் -1 எனும் ஹார்மோன் சுரப்பினை தூண்டுவதன் மூலம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தூண்டுவதாக ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஹார்மோன் சுரப்பு புற்றுநோய் உண்டாவதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. எனவே புற்றுநோயை வெல்ல முழுதாவர தானிய உணவுப்பொருட்களை நாடுவது அவசியம் என்று மேற்கத்திய நாடுகளின் ஆய்வுகளே தெரிவிக்கின்றன.

    எல்லாவற்றையும் விட புற்றுநோயை வெல்ல இன்றைய நவீன அறிவியல் கையில் எடுக்கும் பேராயுதங்களுள் ஒன்று வைட்டமின்-டி தான். வைட்டமின்- டி என்பது எலும்புகளுக்கு வலிமை தரும் என்பது நாம் அறிந்தது. ஆனால் இரத்தத்தில் வைட்டமின்-டி அளவு குறைவது என்பது பல்வேறு புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும் என்கிறது நவீன அறிவியல்.

    நம் தமிழ் சித்தர்கள் வெயிலில் சூரிய வணக்கம் செய்ய வலியுறுத்தியது இதற்குத்தான் போலும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை 15 முதல் 30 நிமிடங்கள் வெயில்படும்படி உடலை வெளிப்படுத்துவதும் புற்றுநோயை வெல்லும் எளிய வழிமுறை என்கின்றன ஆய்வுகள்.

    சங்க காலம் முதல் உணவை மருந்தாக பயன்படுத்தியது தமிழ் சமூகம். என்ன நோய்க்கு என்ன உணவு பத்தியம்? என்பதைக் கடந்து, எந்த நிலத்தில் என்ன உணவு எடுக்க வேண்டும்? என்று வாழும் சூழலுக்கு ஏற்றார் போல் உணவு முறைகளை வகுத்து வழிநடத்தியவர்கள் நம் முன்னோர்கள்.

    குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இவற்றுக்கு ஏற்ற உணவுகள் என்ன? காலை, மதியம், இரவு இவற்றுக்கு ஏற்ற உணவுகள் என்ன? என்பதை ஆராய்ந்து வலியுறுத்தினர். ஆக முதுமையில், சித்த மருத்துவத்தின் உணவு அறிவினை பயன்படுத்தி நலம் நாட வேண்டியது அவசியமான ஒன்று.

    சோ.தில்லைவாணன்

    சோ.தில்லைவாணன்

     புற்றுநோய்க்கு மட்டுமல்ல, இன்னும் பல்வேறு நோய்களின் தீர்வுக்கான கதவுகளின் பூட்டினை திறக்கும் சாவியாக விளங்குபவை உணவுகள் தான். இதைத்தான் பண்டைய சித்த மருத்துவமும், இன்றைய நவீன ஆய்வுகளும் தம்பட்டம் அடித்துக் கூறுகின்றன.

    ஆகவே முதுமையில் உண்டாகும் புற்றுநோயினை வெல்வதற்கு உணவு எனும் படைக்கலனை கையில் எடுப்பது அவசியம்.

    பதப்படுத்தப்பட்ட உணவுகளும், காற்றேட்டப்பட்ட பானங்களும், அதிக சர்க்கரை சத்துள்ள பாஸ்டா, பேக்கரி உணவுகளும், செயற்கை நிறமி சாயம் கலந்த உணவுகளும், முதுமையில் மட்டுமல்ல எல்லா பருவத்திலும் மரபணு பிழை உண்டாக்கி, புற்றுநோயை வரவழைக்கும் என்று நவீன ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இவற்றை உண்பது வாய்க்கு ருசி என்பதைத் தவிர, உடல் ஆரோக்கியத்திற்கு எந்த பயனும் இல்லை. ஆக ஆரோக்கியம் அளிக்கும் பயனுள்ள உணவுகளை நாடுவது புற்றுநோயை வெல்லும் எளிய வழி முறை.

    தொடர்புக்கு:

    drthillai.mdsiddha@gmail.com

    ×