என் மலர்
இந்தியா

துணை ஜனாதிபதி தேர்தலில் கடைசி கட்ட விறுவிறுப்பு: பா.ஜ.க. வேட்பாளருக்கு கூடுதல் ஓட்டுகள் கிடைக்க வாய்ப்பு
- துணை ஜனாதிபதியை பாராளுமன்ற இரு சபைகளின் எம்.பி.க்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள்.
- பாராளுமன்ற மக்களவையில் ஒரு இடம் காலியாக இருப்பதால் மொத்தம் 542 எம்.பி.க்கள் உள்ளனர்.
புதுடெல்லி:
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலக்குறைவு காரணமாக பதவியை ராஜினாமா செய்வதாக அவர் ஜனாதிபதியிடம் விளக்கம் அளித்தார்.
நாட்டின் 2-வது மிக உயர்ந்த அரசமைப்பு பதவியான துணை ஜனாதிபதி பதவியை நீண்ட நாட்களுக்கு காலியாக வைத்திருக்க கூடாது என்று சட்ட விதிகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து பட்டியல் வெளியிட்டது. அதன்படி கடந்த மாதம் 7-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானாவை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.
கடந்த மாதம் அவர்கள் இருவரும் துணை ஜனாதிபதி பதவிக்கு தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்த னர். அதன் பிறகு அவர்கள் இருவரும் பாராளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்கள். நேற்று அவர்கள் இருவரும் தங்களது இறுதிக்கட்ட ஆதரவு திரட்டலை நடத்தி முடித்தனர்.
துணை ஜனாதிபதியை பாராளுமன்ற இரு சபைகளின் எம்.பி.க்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள். பாராளுமன்ற மக்களவையில் ஒரு இடம் காலியாக இருப்பதால் மொத்தம் 542 எம்.பி.க்கள் உள்ளனர்.
பாராளுமன்ற மேல்சபையில் 5 எம்.பி.க்கள் இடங்கள் காலியாக உள்ளதால் 228 எம்.பி.க்கள் உள்ளனர். இது தவிர மேல்சபையில் 12 நியமன எம்.பி.க்கள் உள்ளனர்.
மொத்தம் 782 எம்.பி.க் கள் நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்களிக்க தகுதியானவர்களாக உள்ளனர். இந்த 782 எம்.பி.க்களில் 392 வாக்குகள் பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார். தற்போது பாராளுமன்ற இரு அவைகளில் பா.ஜ.க. கூட்டணிக்கு அதிக எம்.பி.க் கள் உள்ளனர்.
பா.ஜ.க. கூட்டணிக்கு இரு அவைகளிலும் மொத்தம் 422 எம்.பி.க்கள் பலம் இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை பெறும் வகையில் எம்.பி.க்கள் பலம் இல்லை. எனவே நாளை நடக்கும் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.
இதற்கிடையே துணை ஜனாதிபதி தேர்தலில் ரகசிய வாக்குசீட்டு முறை கடைபிடிக்கப்பட இருப்பதால் தற்போதைய எண்ணிக்கையை விட கூடுதல் வாக்குகளை பெற வேண்டும் என்பதில் இரு கூட்டணிகளும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 11 எம்.பி.க்களும், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக அறிவித்து உள்ளனர்.
இதனால் பா.ஜ.க. கூட் டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு 433 வாக்குகள் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இது தவிர பிஜு ஜனதா தளத்தின் 7 எம்.பி.க்கள், பாரதீய ராஷ்டீரிய சமிதியின் 4 எம்.பி.க்கள் ஆதரவை பெற இரு கூட்டணிகளும் தீவிரமாக காய்களை நகர்த்தி வருகின்றன.
பாராளுமன்றத்தில் சிறு கட்சிகளும், 3 சுயேட்சைகளும் உள்ளனர். அவர்கள் உள்பட 23 எம்.பி.க்களின் வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என்பது தெரியாமல் உள்ளது. அந்த வாக்குகளும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்தால் அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தல் நாளை பாராளுமன்ற வளாகத்தில் அறை எண். எப்.101 என்ற அரங்கத்தில் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடத்தப்பட உள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தல் நடத்தும் அதிகாரியாக மேல்சபை செயலாளர் பி.சி.மோடி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் ஓட்டுப்பதிவை கண்காணிப்பார். ஓட்டு போடுவதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் டெல்லிக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
இன்று மாலைக்குள் அனைத்து எம்.பி.க்களும் டெல்லிக்கு வந்து விட வேண்டும் என்று பா.ஜ.க. உத்தரவிட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும் உடனடியாக ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.






