search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அமைதியை நிலைநாட்ட இந்தியா தலையிட வேண்டும்: பாலஸ்தீன தூதர் வலியுறுத்தல்
    X

    அமைதியை நிலைநாட்ட இந்தியா தலையிட வேண்டும்: பாலஸ்தீன தூதர் வலியுறுத்தல்

    • தற்போது வரை இப்போரில் இரு தரப்பிலும் 1500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்
    • இந்தியா இரு நாடுகளுக்கும் நட்பு நாடாக இருந்து வருகிறது

    கடந்த சனிக்கிழமையன்று காலை இஸ்ரேல் மீது பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் ஏராளமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுப்பதாக அறிவித்து பாலஸ்தீன எல்லை பகுதியான காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளை வேட்டையாடி வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி இரு தரப்பிலும் 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை தாக்குதலை நிறுத்த போவதில்லை என இஸ்ரேல் உறுதிபட தெரிவித்துள்ளது. இப்போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்க, மத்திய கிழக்கு நாடுகள் இப்போருக்கு இஸ்ரேலை குற்றம் சாட்டியுள்ளன.

    இந்நிலையில், இந்தியாவிற்கான பாலஸ்தீன தூதர் அபு அல்ஹைஜா (Abu Alhaija) இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமித்ததன் பதில் நடவடிக்கையே ஹமாஸ் தாக்குதல். பாலஸ்தீன பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்பை இஸ்ரேல் நிறுத்தி கொண்டால் இஸ்ரேல் மீதான தாக்குதல்களும் நிற்கும். இந்த போருக்கு சர்வதேச நாடுகளும் ஒரு காரணம். ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக 800க்கும் மேற்பட்ட தீர்மானங்களை இயற்றியது. ஆனால், இஸ்ரேல் அத்தீர்மானங்களின்படி நடந்து கொள்ளவில்லை. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கும் இந்தியா ஒரு நட்பு நாடு. எனவே இந்தியா இப்பிரச்சனையில் தலையிட்டு இரு நாடுகளுக்கிடையே தூதுவராக செயல்பட்டு ஒரு சுமூக முடிவு எட்ட முயற்சி செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.

    இவ்வாறு அல்ஹைஜா கூறினார்.

    Next Story
    ×