ஒரு கட்சி ஆயிரம் கோடி மிரட்டி வசூலிக்கிறது, மற்றொரு கட்சிக்கு ஆயிரம் கோடி அபராதம்: ப.சிதம்பரம்

காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் தேர்தலுக்கு முன்பாக பாஜக அரசால் முடக்கப்பட்டுள்ளதுஇது காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்கும் முயற்சிகளே அன்றி வேறில்லை
ஒரு கட்சி ஆயிரம் கோடி மிரட்டி வசூலிக்கிறது, மற்றொரு கட்சிக்கு ஆயிரம் கோடி அபராதம்: ப.சிதம்பரம்
Published on

வருமான வரித்துறை சார்பில் சுமார் 1,823 கோடி ரூபாய் செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

2017-18 முதல் 2020-21 வரையிலான மதிப்பீடு மற்றும் அபராதம், வட்டி ஆகியவை தொடர்பாக 1,823 கோடி ரூபாய் கட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

"நமது ஜனநாயக நாட்டில் மிகப் பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் தேர்தலுக்கு முன்பாக பாஜக அரசால் முடக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்கும் முயற்சிகளே அன்றி வேறில்லை, ஆனால் இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக நாங்கள் பயப்பட மாட்டோம், வரும் தேர்தலில் நம் நாட்டு மக்கள் பாஜகவுக்கு இதற்காக பதிலையே வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

பாஜகவின் 8,250 கோடி தேர்தல் பத்திர ஊழல் இந்திய நாட்டையே உலுக்கியது. ஆளும் கட்சி தங்களது நண்பர்களிடம் இருந்து பணத்தை பெரும் அதே சமயத்தில், வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சியை குறிவைத்து 1800 கோடி அபராதம் விதித்துள்ளது.

தேர்தல் நேர்மையாக நடைபெறவேண்டும் என்பதையே ஜனநாயகம் விரும்புகிறது. வரி பயங்கரவாதத்தை அல்ல. ஒரு கட்சி பல ஆயிரம் கோடிகளை மிரட்டி வசூலித்துவிட்டு, மற்றொரு கட்சிக்கு பல ஆயிரம் கோடியை அபராதமாக செலுத்த உத்தரவிடுவது எப்படி நியாயம்?. பாஜக அரசு வரி பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வருகிறது" என்று ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com