என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் எந்தெந்த பொருட்களின் விலை அதிகரிக்கிறது?- வெளியான புதிய தகவல்கள்
    X

    ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் எந்தெந்த பொருட்களின் விலை அதிகரிக்கிறது?- வெளியான புதிய தகவல்கள்

    • நிலக்கரி, லிக்னைட் ஆகியவை 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
    • வாடகை கார்களிலும், தனியார் போக்குவரத்து சேவைகளிலும் பயணச் செலவு கூடும்.

    பிரதமர் மோடி, தனது சுதந்திர தின உரையில் நாட்டு மக்களுக்கு இந்தாண்டு இரட்டை தீபாவளி என்றும், அதற்காக ஜி.எஸ்.டி.யில் வரி சீர்த்திருத்தம் செய்யப்படும் என்றார். அதன்படி கடந்த 3-ந்தேதி டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இதுவரை இருந்த 5, 12, 18, 28 என்ற வரி விகிதங்கள் 5 மற்றும் 18 சதவீதம் என்ற இரட்டை அடுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் 12 சதவீதத்தில் இருந்த பொருட்கள் எல்லாம் 5 சதவீதத்திற்கும், 28 சதவீதத்தில் இருந்தவை 18 சதவீதத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய வரி மாற்றங்கள் வருகிற 22-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

    இந்த மாற்றத்தால் மக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் விலை குறைந்து இருக்கிறது. உதாரணமாக வீட்டு உபயோக பொருட்களான பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின் மற்றும் கார்கள் 28 சதவீதத்தில் இருந்து 18-க்குள் வந்து விடுகிறது. மேலும் பென்சில், ரப்பர் போன்ற ஸ்டேஷனரி பொருட்கள், மருத்துவ காப்பீடுகள் ஆகியவற்றுக்கு முழுமையாக வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதேவேளையில் சில பொருட்களுக்கும், சேவைகளுக்கு வரி அதிகரித்துள்ளது. அதன்படி நெய்த மற்றும் நெசவு செய்யப்பட்ட ஆடைகள் மற்றும் பஞ்சை இடையில் வைத்து தைக்கப்படும் பொருட்கள் அதாவது குயில்ட் மெத்தைகள் போன்ற பொருட்கள் ரூ.2 ஆயிரத்து 500-க்கு மேல் இருந்தால் தற்போதைய வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கம்பளிகள் 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக வரி உயர்ந்துள்ளது. அதனால் இந்த பொருட்களின் தற்போதைய விலையில் இருந்து அதிகரித்து விடும்.

    அதே போல வேலைகளை பிறருக்கு அளிக்கும் ஜாப் வொர்க் சேவைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு சுரங்கம் தொடர்பான தொழில்நுட்ப சேவைகள், சுரங்க ஆதரவு சேவைகள் என அனைத்து 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் அரசு சார்ந்த பணிகளான கடல்சார் பணிகள், மண் அகழ்வு பணிகள், துணை ஒப்பந்தங்கள் ஆகியவை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    அதேபோல் நிலக்கரி, லிக்னைட் ஆகியவை 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பான்மசாலா, அனைத்து இனிப்புப் பானங்கள், ஆல்கஹால் இல்லாத குளிர்பானங்கள், கார்பனேட்டு பழசாறுகள், பழசாறுகள், புகையிலை, சிகரெட், பிற புகையிலை தயாரிப்புகள், நிக்கோடின் பொருட்கள்ஆகியவை அனைத்தும் 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    கேசினோ, சூதாட்டம், ரேஸ் கிளப்புகள், ஆன்லைன் விளையாட்டுகள், ஐ.பி.எல். போட்டிக்கான வரி ஆகியவை 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக இருக்கிறது.

    விமானப் பயணங்களில் எகானமி அல்லாத முதல் வகுப்பு, பிசினஸ் கிளாஸ் பயணங்களுக்கு இதுவரை 12 சதவீத ஜி.எஸ்.டி. இருந்தது. ஆனால் தற்போது அது 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக விமானக் கட்டணங்கள் அதிகரிக்க உள்ளன. அதேபோல், எரிபொருள் செலவு சேர்த்து வசூலிக்கப்படும் மோட்டார் வாகனப் பயண கட்டணங்களும் 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளன. இதனால், வாடகை கார்களிலும், தனியார் போக்குவரத்து சேவைகளிலும் பயணச் செலவு கூடும். சரக்கு போக்குவரத்திலும் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிறது.

    இந்திய ரெயில்வே தவிர்த்த பிறரால் இயக்கப்படும் ரெயில் கன்டெய்னர் போக்குவரத்து, இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் பைப் லைன் மூலம் கொண்டு செல்லப்படும் சேவைகள், மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய அனைத்தும் 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், வாடகை வாகன சேவைகளில் - மோட்டார் வாகனங்களும், லாரி போன்ற சரக்கு வாகனங்களும் 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த மாற்றங்களின் தாக்கமாக, சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் அனைத்தும் அதிகரிக்கின்றன. இதன் விளைவாக மக்கள் அன்றாட வாழ்க்கைச் செலவுகள் மட்டுமல்லாமல், சந்தையில் பொருட்களின் விலைகளும் கூடும் வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×