என்.சி.பி.க்கு உரிமை கோரும் வழக்கு: தேர்தல் ஆணையம் விசாரணை

ஜூலை 2023ல் அஜித் பவார் தனது ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு வெளியேறினார்சின்னத்தை மட்டுமே நம்பி மக்கள் வாக்களிப்பதில்லை என சரத் பவார் கூறினார்
என்.சி.பி.க்கு உரிமை கோரும் வழக்கு: தேர்தல் ஆணையம் விசாரணை
Published on

1999 ஜூன் மாதம், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த மூத்த அரசியல் தலைவரான சரத் பவார் (82) தொடங்கியது, தேசிய காங்கிரஸ் கட்சி (NCP).

கடந்த ஜூலை 2023ல் அக்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவரும், சரத் பவாரின் உறவினருமான அஜித் பவார், தனது ஆதரவாளர்களுடன் மகராஷ்டிர மாநிலத்தின் ஆளும் சிவசேனா-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து, அம்மாநில துணை முதல்வரானார்.

இதன் காரணமாக என்.சி.பி. இரண்டாக உடைந்தது. கட்சியின் சின்னத்திற்கும் பெயருக்கும் உரிமை கொண்டாடிய அஜித் பவார், இது தொடர்பாக தனக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் மற்றும் கட்சியின் பிற பிரமுகர்களின் ஆதரவு கடிதத்துடன் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார்.

சரத் பவாரின் மகளும், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே, "கட்சியில் பிளவு ஏதும் இல்லை" என கூறி வந்தார்.

தேர்தல் ஆணையம் எடுக்கும் எந்த முடிவையும் தான் ஏற்பதாக அஜித் பவார் கூறி வந்தார்.

இந்நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்க, தேர்தல் ஆணையத்தின் டெல்லி அலுவலகத்திற்கு வர இரு பிரிவு தலைவர்களுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது.

இதையடுத்து, டெல்லி அலுவலகத்திற்கு எம்.எல்.ஏ. ஜிதேந்திர அவத் மற்றும் பிற முக்கிய தலைவர்களுடன் சரத் பவார், இன்று வருகை தந்தார். "வாக்காளர்கள் கட்சி சின்னத்தை மட்டுமே நம்பி வாக்களிப்பதில்லை" என முன்னரே சரத் பவார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அஜித் பவார் தரப்பில் பிரபல வழக்கறிஞர்கள் மகேஷ் ஜெத்மலானி மற்றும் மனிந்தர் சிங் ஆஜராகின்றனர். சரத் பவார் தரப்பில் காங்கிரஸ் முக்கிய தலைவரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி ஆஜராகிறார்.

இரண்டு ஆணையர்கள், தலைமை தேர்தல் ஆணையர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com