search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புத்தாண்டு தரிசனத்திற்கு அனுமதிக்காததால் திருப்பதியில் பக்தர்கள் போராட்டம்
    X

    புத்தாண்டு தரிசனத்திற்கு அனுமதிக்காததால் திருப்பதியில் பக்தர்கள் போராட்டம்

    • புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
    • தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 22-ந் தேதி முதல் இன்று வரை வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதற்காக 9 இடங்களில் 4 லட்சம் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டது.

    இந்த தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் 10 நாட்களாக தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். நேரடி இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

    இதனால் பக்தர்கள் நேரடி இலவச தரிசனத்திற்கு வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்தது. இந்த நிலையில் நேற்று இரவு புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் பகுதிக்கு சென்றனர்.

    அங்கிருந்த அதிகாரிகள் நேரடி இலவச தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தெரிவித்தனர். மேலும் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    அப்போது பக்தர்கள் கோவில் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும் திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    நேரடி இலவச தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தொடர்ந்து தெரிவிக்கப்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இது பற்றிய தகவல் அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

    இதைத் தொடர்ந்து பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இந்த சம்பவத்தால் திருப்பதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×