search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கெஜ்ரிவாலைக் கொல்ல சதி நடப்பதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு: பா.ஜ.க. பதிலடி
    X

    கெஜ்ரிவாலைக் கொல்ல சதி நடப்பதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு: பா.ஜ.க. பதிலடி

    • ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்களும் கோபத்தில் உள்ளனர்.
    • ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி :

    டெல்லியை ஆளும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கும், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொள்வது தொடர் கதையாகி உள்ளது.

    இந்த நிலையில் டெல்லி வட கிழக்கு தொகுதி பா.ஜ.க. எம்.பி.யும், அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மனோஜ் திவாரி நேற்றுமுன்தினம் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

    அந்தப் பதிவில் அவர், "நான் அரவிந்த் கெஜ்ரிவாலின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுகிறேன். ஏனென்றால், அந்தக் கட்சியின் தொடர் ஊழலாலும், டெல்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட அந்தக் கட்சி டிக்கெட்டுகளை விற்றதாலும், சிறையில் கற்பழிப்பு குற்றவாளியுடன் ஆம் ஆத்மி கட்சித் தலைவரின் நட்பாலும், சிறையில் மசாஜ் செய்யப்பட்டுள்ளதாலும் மக்களும், ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்களும் கோபத்தில் உள்ளனர். அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்பட்டுள்ளனர். இது டெல்லி முதல்-மந்திரிக்கு நடந்து விடக்கூடாது" என கூறி உள்ளார்.

    இந்தப் பதிவைத் தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், துணை முதல்-மந்திரியுமான மணிஷ் சிசோடியா நிருபர்களிடம் பேசினார்.

    அப்போது அவர் முதல்-மந்திரி கெஜ்ரிவாலை கொல்ல பா.ஜ.க. சதி செய்வதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியது அதிர வைப்பதாக அமைந்தது.

    இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-

    அரவிந்த் கெஜ்ரிவாலைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டதை பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி பேச்சு மொழி காட்டிக்கொடுக்கிறது. இந்த மிரட்டலுக்காக மனோஜ் திவாரியை கைது செய்ய வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்.

    குஜராத் சட்டசபை தேர்தலிலும், டெல்லி மாநகராட்சி தேர்தலிலும் ஏற்பட்டுள்ள தோல்வி பயத்தால் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி செய்கின்றனர். இதில் டெல்லி எம்.பி. மனோஜ் திவாரிக்கு தொடர்பு இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    இந்த விவகாரத்தில் நாங்கள் தேர்தல் கமிஷனில் புகார் செய்வோம்.

    ஆனால் இப்படிப்பட்ட அற்பமான அரசியல் கண்டு ஆம் ஆத்மி கட்சி பயப்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கு பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், "நான் அரவிந்த் கெஜ்ரிவாலின் பாதுகாப்பு பற்றி கவலைப்படுகிறேன். ஆனால் மணிஷ் சிசோடியா, கெஜ்ரிவாலைக் கொல்ல பா.ஜ.க. சதி செய்கிறது என்ற பழைய பல்லவியைத்தான் மீண்டும் பாடுகிறார். கெஜ்ரிவால் கொல்லப்படுவார் என சிசோடியா தீர்க்கதரிசனம் சொல்கிறபோது, மணிஷ் சிசோடியா கைது செய்யப்படுவார் என கெஜ்ரிவால் சொல்கிறார். என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரிய வில்லை" என கூறினார்.

    Next Story
    ×