என் மலர்
இந்தியா

50% வரி: சிறுகுறு தொழில்களை அழித்துவிட்டு இந்திய பொருட்களை வாங்க சொன்னால் எப்படி? - காங்கிரஸ்
- ரத்தினம், நகைகள், ஜவுளி, ஆடைகள், இறால் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதித் துறைகளை கடுமையாகப் பாதிக்கும்.
- நீங்கள் உங்கள் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் பொருளாதார கொள்கைகள் மூலம் சிறு குறு தொழில் துறையை முற்றிலுமாக அழித்துவிட்டீர்கள்.
ரஷியாவிடம் எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டி இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா அபராதமாக விதித்த 25 சதவீத வரி நாளை (ஆகஸ்ட் 27) முதல் அமலுக்கு வர உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க சுங்கத் துறை அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டது.
இதனால், ஏற்கனவே உள்ள 25% வரியுடன் சேர்த்து இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ரத்தினம், நகைகள், ஜவுளி, ஆடைகள், இறால் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதித் துறைகளை கடுமையாகப் பாதிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
இதற்கிடையே நேற்று குஜராத்தில் பேசிய பிரதமர் மோடி, "விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், சிறு தொழில்களின் நலன்தான் மிக முக்கியமானவை. அமெரிக்காவின் மிரட்டலால், நமக்கு அழுத்தம் அதிகரிக்கலாம். ஆனால், அனைத்தையும் நாம் தாங்கிக் கொள்வோம்.
நான் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற மந்திரத்தை பின்பற்ற வேண்டும். வணிகர்கள் தங்கள் கடைகளுக்கு வெளியே இந்திய பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதாக ஒரு பெரிய பலகையை வைத்திருக்க வேண்டும்" என்று கூறினார்.
இந்நிலையில் அமெரிக்காவின் வரிவிதிப்பு, விசித்திரமான இந்திய வெளியுறவு கொள்கையின் விளைவு என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
வரிவிதிப்பு மற்றும் இந்திய பொருட்களை வாங்குவது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, "நாம் கடைப்பிடித்து வரும் மிகவும் விசித்திரமான வெளியுறவுக் கொள்கையின் விளைவுகளை நாம் அனைவரும் இப்போது பார்த்து வருகிறோம்.
இதற்கு அரசாங்கம் எவ்வாறு பதிலளிக்கும் என்பதைப் பார்ப்போம். வெறும் அலங்கார பேச்சுக்கள் மட்டும் போதாது.
நீங்கள் உங்கள் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் பொருளாதார கொள்கைகள் மூலம் சிறு குறு தொழில் துறையை (MSME) முற்றிலுமாக அழித்துவிட்டீர்கள்.
அப்படி இருக்கும்போது மக்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை எவ்வாறு வாங்குவார்கள். உற்பத்தி இல்லாத இடத்தில், பொருட்களை எப்படி வாங்க சொல்ல முடியும்" என்று வினவியுள்ளார்.






