search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தாவில் அமித் ஷா பிரசார வாகனம் மீது தாக்குதல்:  தடியடி, தீவைப்பு, கலவரம்
    X

    கொல்கத்தாவில் அமித் ஷா பிரசார வாகனம் மீது தாக்குதல்: தடியடி, தீவைப்பு, கலவரம்

    கொல்கத்தா நகரில் பாஜக தலைவர் அமித் ஷாவின் பிரசார வாகனத்தின் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
    கொல்கத்தா:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி ஆறுகட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடுமையான மோதல்கள் நடந்தன.
     
    பிரதமர் மோடியும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர்.

    இந்நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக ஜாதவ்பூர் பகுதியில் பாஜக தலைவர் அமித் ஷாவின் மிக பிரமாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணிக்கு அனுமதி அளிக்க போலீசார் மறுத்து விட்டனர். இந்த பேரணியில் பங்கேற்பதற்காக அமித் ஷா வரும் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டதால் அம்மாநில பாஜகவினர் கொதிப்படைந்துள்ளனர்.

    இந்த பேரணி ரத்தான நிலையில் ஜாய்நகர் பகுதியில் நடைபெற்ற மற்றொரு பிரசார கூட்டத்தில் நேற்று மம்தா பானர்ஜியை அமித் ஷா கடுமையாக தாக்கி பேசினார்.

    ‘இன்று இங்கு நான் 3 பிரசார கூட்டங்களில் பேச இருந்தேன். மம்தாவின் மருமகன் போட்டியிடும் தொகுதிக்கு நான் போனால் அவர் தோற்பது உறுதி என்பதால் அங்கு என்னுடைய நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனது பிரசாரத்திற்கு மட்டும்தான் மம்தா தடை விதிக்க முடியும். ஆனால், பாஜகவின் வெற்றியை அவரால் தடுத்து நிறுத்திவிட முடியாது.

    மத்திய அரசு கொண்டுவந்த பல திட்டங்களின் பலன்கள் இங்குள்ள மக்களை வந்து சேராத வகையில் மம்தாவின் அரசு தடைக்கல்லாக நின்று தடுத்து விட்டது. அந்த திட்டங்களின் மூலம் இங்குள்ள மக்களிடையே பிரதமர் மோடி பிரபலமாகி விடக்கூடாது என்ற நோக்கத்தில் மம்தா இந்த திட்டங்களை எல்லாம் எதிர்த்து வருகிறார்.

    இந்த மாநிலத்தில் உள்ள மக்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொன்னால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இந்த மேடையில் இருந்து நான் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்குகிறேன். நாளை வரை நான் கொல்கத்தாவில் இருப்பேன். முடிந்தால், துணிச்சல் இருந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று மம்தாவுக்கு நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன்’ என அமித் ஷா பேசினார்.

    இந்நிலையில், கொல்கத்தா நகரில் இன்று மாலை நடைபெற்ற பாஜக பேரணியில் அமித் ஷா பங்கேற்றார்.

    கொல்கத்தா பல்கலைக்கழகத்தை கடந்து சுமார் 7 மணியளவில் கல்லூரி சாலைக்குள் பேரணி நுழைந்தபோது அமித் ஷா வந்த பிரசார வாகனத்தின் மீது சில கம்புகள் வீசப்பட்டன. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.



    பேரணியில் வந்தவர்களுக்கும் வேறொரு தரப்பினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. சாலையோரத்தில் இருந்த கட் அவுட்டுகள் அடித்து நாசப்படுத்தப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றதால் கொல்கத்தா நகர மக்கள் பீதியடைந்துள்ளனர். பல பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×