search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாங்கள் அளிக்கும் குறைந்தபட்ச வருமானத் தொகையை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது - ராகுல்  பேச்சு
    X

    நாங்கள் அளிக்கும் குறைந்தபட்ச வருமானத் தொகையை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது - ராகுல் பேச்சு

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஏழைகளுக்கு மாதந்தோறும் நாங்கள் அளிக்கும் குறைந்தபட்ச வருமானத் தொகையை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #minimumincometopoor #RahulGandhi
    புவனேஸ்வர்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் 28-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம், அட்டல் நகரில் நடைபெற்ற விவசாயிகள் சம்மேளனத்தில் கலந்து கொண்டார். விவசாயிகளின் வங்கிக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு ராகுல் காந்தி வழங்கினார். அம்மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகேல் உள்ளிட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்புமிக்க ஒரு முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார். வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் உலகிலேயே முதன்முறையாக ஏழை மக்களுக்கு அடிப்படை வருமானம் நிர்ணயிக்கப்படும்.

    இதன்மூலம் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழை குடிமகனுக்கும் குறைந்தபட்ச வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தால் நாட்டில் பசியும், ஏழ்மையும் இருக்காது. இந்த திட்டத்தை உலகிலேயே முதன்முறையாக எங்கள் அரசு இந்தியாவில் அறிமுகப்படுத்தும் எனவும் வாக்குறுதி அளித்தார்.

    இது வெறும் வாய்ப்பேச்சுதான் நடைமுறைக்கு சாத்தியப்படாது என பா.ஜ.க. முன்னணி பிரமுகர்கள் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில், ஒடிசா மாநிலம், கலஹன்டி மாவட்டம், பவானிபட்னா பகுதியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, அம்மாநிலத்தை ஆளும் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு ஏழைகள் மற்றும் பழங்குடியினரை வஞ்சித்து வருவதாக குற்றம்சாட்டினார்.

    15 தொழிலதிபர்கள் வாங்கி இருந்த மூன்றரை லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கடனை தள்ளுபடி செய்த பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு தினந்தோறும் வெறும் 17 ரூபாய் அளிக்கும் திட்டத்தை அறிவித்துவிட்டு, இதை பா.ஜ.க. ஆட்சியின் வரலாற்று சிறப்புமிக்க சாதனை திட்டம் என்று அவர் மார்தட்டி வருவதாகவும் ராகுல் குறிப்பிட்டார்.

    தொடர்ந்து ராகுல் காந்தி பேசியதாவது:-

    பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகமாக வாழும் இந்த மாவட்டத்துக்கு முன்னர் முக்கியத்துவம் அளித்து இந்திரா காந்தி, ராஜீவ்  காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர்  பல நல்ல திட்டங்களை நிறைவேற்றினார்கள்.



    மத்தியில் ஆளும் மோடி அரசும் இங்குள்ள நவீன் பட்நாயக் அரசும் ஏராளமான நன்மைகளை செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் அதை செய்யத் தவறியதுடன் உங்களுடைய விளை நிலங்கள், நீராதாரம் மற்றும் காட்டு வளங்களையும் பறித்துக் கொண்டனர்.

    உங்கள் அனைவரின் வங்கிக் கணக்குகளிலும் தலா 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்று மற்றவர்களைப்போல் நான் பொய் வாக்குறுதி அளிக்க மாட்டேன். ஆனால், மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அனைவரின் வங்கி கணக்குகளிலும் மாதந்தோறும் குறைந்தபட்ச வருமானம் சென்று சேரும் என்பதை நான் மீண்டும் ஒருமுறை இங்கு உறுதிப்பட தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. துணிச்சல் இருந்தால் தடுத்து நிறுத்திப் பாருங்கள். உங்களை நான் நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Nopowercanstop #minimumincometopoor #RahulGandhi
    Next Story
    ×