search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 மாநில தேர்தல் முடிவுகள்: பாஜக இல்லா இந்தியாவை உருவாக்க மக்கள் விருப்பம் - சிவசேனா
    X

    5 மாநில தேர்தல் முடிவுகள்: பாஜக இல்லா இந்தியாவை உருவாக்க மக்கள் விருப்பம் - சிவசேனா

    5 மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜனதா இல்லாத இந்தியாவை உருவாக்க மக்கள் விரும்புவதை காட்டுவதாக சிவசேனா கூறியுள்ளது. #ElectionResult2018 #ShivSena
    மும்பை :

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் பா.ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

    இந்த தோல்வியை பா.ஜனதாவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா, தனது கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் கடுமையாக விமர்சித்துள்ளது.

    அதுபற்றி கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடியும், அமித்ஷாவும் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று சூளுரைத்தனர். ஆனால் தற்போது அவர்கள் ஆட்சி செய்த மாநிலங்களிலேயே பா.ஜனதா இல்லாத காலத்தை அவர்கள் பார்க்கவேண்டிய நிலைமை வந்துவிட்டது.

    தங்களை தவிர்த்து வேறு எந்த கட்சியும் அந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க முடியாது, மக்கள் தங்கள் ஆட்சியை விரும்புகிறார்கள் என்று பா.ஜனதாவினர் அவிழ்த்துவிட்ட கட்டுக்கதை தேர்தல் முடிவுகளால் பொய்யாகி இருக்கிறது. வானத்தில் பறந்து கொண்டிருந்த அவர்களை, மக்கள் தங்களின் வாக்குகள் மூலம் தரைக்கு இழுத்துள்ளனர்.



    இந்த தேர்தல் முடிவுகளால், பா.ஜனதா இல்லாத இந்தியாவை உருவாக்க மக்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

    ராஜஸ்தானில் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டார்கள்.

    மத்திய பிரதேசத்தில் விளைப்பொருட்களுக்கு உரிய விலை கேட்ட விவசாயிகள் துப்பாக்கி குண்டுகளை எதிர்கொண்டனர். இதற்கு மக்கள் தேர்தலின் மூலம் பழிதீர்த்துக்கொண்டார்கள்.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கை பெரும் பொருளாதார சீரழிவை ஏற்படுத்தியது. ஏராளமானோர் வேலை இழந்தனர். பணவீக்கம் அதிகரித்தது.

    ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பிரதமர் மோடியோ உலக அரசியலில் ஈடுபட விமானத்தில் பறந்துகொண்டு இருந்தார்.

    விமானம் இந்தியாவில் தரை இறங்கியதும் நேராக தேர்தலுக்காக பிரசாரம் செய்ய கிளம்பினார். மோடியின் குழந்தைத்தனமான பேச்சுகள் தற்போது அவருக்கு எதிராகத் திரும்பி இருக்கிறது.

    இன்றைக்கு நாடு சில தொழில் அதிபர்களால் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நிர்வகிக்கப்படுகிறது. மத்திய ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளின் நிர்வாகம் சிதைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ElectionResult2018 #ShivSena
    Next Story
    ×