search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்தியில் பாஜக அரசையும், தெலுங்கானாவில் டிஆர்எஸ் அரசையும் வீழ்த்துவோம்- ராகுல் சபதம்
    X

    மத்தியில் பாஜக அரசையும், தெலுங்கானாவில் டிஆர்எஸ் அரசையும் வீழ்த்துவோம்- ராகுல் சபதம்

    மத்தியில் பாஜக அரசையும் தெலுங்கானாவில் டிஆர்எஸ் அரசையும் தேர்தலில் தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று ராகுல் காந்தி பேசினார். #TelenganaElections #Rahul
    கோடங்கல்:

    தெலுங்கானா மாநிலத்தில் வரும் 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். அவ்வகையில் விகாராபாத் மாவட்டம் கோடங்கல் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-

    பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே வேற்றுமையை உருவாக்கி உள்ளார். அதையே தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் செய்துள்ளார். மத்திய பாஜக அரசாங்கமும் சரி, தெலுங்கானாவில் ராஷ்டிரிய சமிதி அரசாங்கமும் சரி மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறிவிட்டன.



    2019 பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மோடி அரசாங்கத்தை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும். அதேபோல் வரும் டிசம்பர் 7-ம் தேதி நடக்க உள்ள தெலுங்கானா தேர்தலில் டிஆர்எஸ் அரசாங்கத்தை வீழ்த்தி ஆட்சிக்கு வரும்.

    காங்கிரஸ் ஆட்சியின்போது தெலுங்கானா பகுதியில் நீர்ப்பாசன திட்டங்கள் தொடங்கப்பட்டது. அந்த திட்டங்களை டிஆர்எஸ் அரசாங்கம் மறுவடிவமைத்து பெயர்களையும் மாற்றியது. அத்துடன் கமிஷன் பெறுவதற்காக செலவையும் அதிகரித்தது.

    தெலுங்கானாவில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால், மூன்றே மாதங்களில் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கி, மக்களின் கனவுகள் நிறைவேற்றப்படும். 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். முதியோர் பென்சன் 2000 ரூபாய் வழங்கப்படும்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். #TelenganaElections #Rahul
    Next Story
    ×