search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜாதவின் மனைவி, தாயார் பாக்.கில் விதவைகள் போல நடத்தப்பட்டனர்: சுஷ்மா சுவராஜ்
    X

    ஜாதவின் மனைவி, தாயார் பாக்.கில் விதவைகள் போல நடத்தப்பட்டனர்: சுஷ்மா சுவராஜ்

    குல்பூஷண் ஜாதவை பார்க்கச் சென்ற அவரது மனைவி மற்றும் தாயாரை பாகிஸ்தான் அதிகாரிகள் விதவைகள் போல நடத்தியுள்ளதாக சுஷ்மா சுவராஜ் பாராளுமன்றத்தில் கூறினார். #KulbhushanJadhav #SushmaSwaraj #WinterSession
    புதுடெல்லி:

    இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷண் ஜாதவ் உளவு பர்த்ததாக கூறி அவரை பாகிஸ்தான் கைது செய்து சிறை வைத்துள்ளது. அவருக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இந்தியாவின் தலையீட்டால் மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில் ஜாதவின் குடும்பத்தினர் சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் அவரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.

    கண்ணாடி தடுப்பு வைக்கப்பட்ட நிலையில் ஜாதவின் மனைவி சேத்தன்குல், தாயார் அவந்தி ஆகியோர் சந்தித்தனர். இண்டர்காம் உதவியுடன்தான் பேசினார்கள். சந்திக்கும் முன் இருவரது தாலி, வளையல், நெற்றிப்பொட்டு அகற்றப்பட்டது. ஆடையையும் மாற்ற வைத்துள்ளனர்.



    பாகிஸ்தானின் இந்த செயலுக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இன்று பாராளுமன்றம் கூடியதும் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் இது தொடர்பான அறிக்கையை படித்தார்.

    அப்போது ஜாதவ் குடும்பத்தினர் மீது பாகிஸ்தான் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு தாலி, பொட்டு, வளையல் ஆகியவற்றை அகற்றியதற்கு கண்டனம் தெரிவித்தார். அதிகாரிகள் அவர்களை விதவைகள் போல நடத்தியுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

    ஜாதவின் தாயார் சேலை அணிந்து சென்றதற்கு பதிலாக சல்வார் அணிந்து செல்ல வற்புறுத்தப்பட்டார். மராத்தி மொழியில் பேச அனுமதி மறுத்ததுடன் ஜாதவின் மனைவி ஷூவில் மென்பொருள் ரகசியமாக பொருத்தப்பட்டு இருப்பதாக கூறி சோதனை நடத்தியதையும் கண்டித்தார்.

    ஜாதவ் குடும்பத்தினருக்கு சர்வதேச நீதிமன்றம் மூலம் நிரந்தர தீர்வு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் சுஷ்மா சுவராஜ் உறுதி அளித்தார்.

    இதேபோல் டெல்லி மேல்-சபையிலும் சுஷ்மா சுவராஜ் அறிக்கை தாக்கல் செய்தார். முன்னதாக ஜாதவ் விடுதலைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சர்வதேச அமைப்புகள் இதை கண்டிக்க வேண்டும் என்று மேல் சபை தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

    காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் பேசுகையில், பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தார். நமது சகோதரிகளை அந்நிய நாடு இழிவுபடுத்தியிருப்பதை ஏற்க முடியாது என்றார். #KulbhushanJadhav #SushmaSwaraj #WinterSession
    Next Story
    ×