search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய ரேவந்த் ரெட்டி காங்கிரசில் இணைகிறார்
    X

    தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய ரேவந்த் ரெட்டி காங்கிரசில் இணைகிறார்

    தெலுங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சியின் செயல் தலைவர் பதவியில் இருந்து விலகிய ரேவந்த் ரெட்டி வரும் 31-ம் தேதி ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சியின் செயல் தலைவராக பதவி வகித்த ரேவந்த் ரெட்டி கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற மேல்சபை தேர்தலில் வாக்களிப்பதற்காக நியமன எம்.எல்.ஏ. ஒருவருக்கு பணம் கொடுத்த சர்ச்சையில் சிக்கினார்.

    ஆந்திர மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள தெலுங்கு தேசம் கட்சி தெலுங்கானா மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ளது. அம்மாநில தெலுங்கு தேசம் கட்சியின் செயல் தலைவராகவும் தெலுங்கானா மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துவரும் ரேவந்த் ரெட்டி என்பவர், தெலுங்கானா மாநில அரசிடம் இருந்து ஆந்திர மாநில மந்திரிகள் உள்பட சிலர் ஒப்பந்தங்களை பெற்று லாபம் அடைந்து வருவதாக சமீபத்தில் குற்றம்சாட்டி இருந்தார்.

    காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை ரேவந்த் ரெட்டி ரகசியமாக சந்திப்பதாகவும், அவர் விரைவில் காங்கிரசில் சேரப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நேற்று விஜயவாடா நகருக்கு சென்ற ரேவந்த் ரெட்டி தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க காத்திருந்தார்.

    சந்திரபாபு நாயுடு வருவதற்கு தாமதமானதால் அவரது தனி உதவியாளரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டு உடனடியாக ரேவந்த் ரெட்டி ஐதராபாத் திரும்பினார்.

    இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து நேற்று விலகிய ரேவந்த் ரெட்டி வரும் 31-ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் என்று தெலுங்கானா மாநில அரசியல் விவகாரங்களுக்கான அகில இந்திய காங்கிரஸ் மேலிட தலைவர் ஆர்.சி.குந்தியா இன்று தெரிவித்துள்ளார்.

    ரேவந்த் ரெட்டி மரியாதைக்குரிய ஆற்றல்மிக்க தலைவர். அவரை காங்கிரஸ் கட்சிக்கு நாங்கள் வரவேற்கிறோம். மேலும் சில தலைவர்களும் விரைவில் எங்கள் கட்சியில் இணைவார்கள் என்று குந்தியா குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×