என் மலர்
கதம்பம்
- காபிக் கொட்டைளை நன்றாக இளங்கருப்பு கலர் வரும்வரை வறுக்க வேண்டும்
- சிக்கரி வேர்களை காயவைத்து, வறுத்து, பவுடர் செய்துவதுதான் சிக்கரி.
16வது நூற்றாண்டில், மைசூர் இஸ்லாமியர் ஆட்சியர்களின் கீழ் இருந்தது. பாபா புடான் என்ற சுபி துறவி இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இணைந்து வாழ்ந்தவர். இவர் மெக்காவுக்கு புனித யாத்திரை செய்த போது, காபியின் சிறப்பை அறிந்து, 7 காபிக் கொட்டைகளை தனது அங்கியில் மறைத்து வைத்து யேமெனி துறைமுகத்திலிருந்து சிக்மகளூர் திரும்பினார்.
இங்கு வந்து சந்திரகிரி மலையில் விதைத்து வளர்ந்ததுதான் கூர்க் சிக்மகளூரு காபியின் ரகசியம். தற்போது இந்த மலைப்பகுதி பாபா புடன் பெட்டா என அவரின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இவரது சமாதியும் இங்கு இருக்கிறது.
காபிக் கொட்டைளை நன்றாக இளங்கருப்பு கலர் வரும்வரை வறுக்க வேண்டும். சிக்கரி 20% கலப்பதுதான் தென்னிந்தியாவின் ரகசியம். சிக்கரியின் இலேசான கசப்புத் தன்மை . இதை இந்த மாதிரி மெஷினில் அரைத்து பவுடர் ஆக்குவார்கள்.
சிக்கரி என்பது என்ன ?
சிக்கரி என்பது ஐரோப்பிய, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியாவில் நம்மூர் இஞ்சி போல வளரும் தாவரம், பிற்காலங்களில் இந்தியாவுக்கும் வந்தது. சிக்கரி மாடுகளுக்காக முதலில் வளர்க்கப்பட்ட தாவர வகை. இது தானே எங்கு பார்த்தாலும் மழைகாலங்களில் அடர்ந்து வளரும். இது ஒரு வகை கசப்பு தன்மை கொண்டது.
இந்த சிக்கரி வேர்களை காயவைத்து, வறுத்து, பவுடர் செய்துவதுதான் சிக்கரி. இந்த சிக்கரி டீ நல்ல சக்தியைக் கொடுக்கக் கூடியது. போர், குளிர் காலங்களில் ஐரோப்பியர்கள் அடிக்கடி உபயோகிப்பர்.
ப்ரான்சில் நெஸ்லே கம்பனி 60% சிக்கரி 40% காபிபவுடர் கலந்து "ரிகோர்" காபி மிகப்பிரபலம். பால் சேர்க்க மாட்டார்கள். மதராஸ்-மைசூர் கலவை 80:20 மற்றும் இங்கு பால், தேன், வெல்லம், சீனி சேர்ப்பது. கலோரி இங்கு அதிகம். அதுதான் காலையில் காபி சாப்பிட்டால் அந்த சக்தியே பலமணிநேரம் பசியைத் தாங்கும்.
-வெங்கடேஷ் கவிதா
- பாலச்சந்தர் எதுவும் பேசாமல் நாகேஷ் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
- துன்பங்களையும் துயரங்களையும் மனதில் தேக்கி வைத்துக் கொண்டுதான், நம்மையெல்லாம் சிரிக்க வைத்திருக்கிறார் நாகேஷ் !
நாகேஷ் தனது முதல் மகன் ஆனந்த் பாபு பிறந்த சமயத்தில், அந்தக் குழந்தையைப் போய்ப் பார்க்க விரும்பவில்லையாம்.
ஏதேதோ காரணங்களைச் சொல்லி தவிர்த்து விட்டு, நடிப்பதற்காக படப்பிடிப்பு அரங்கத்திற்குப் போய்விட்டார்.
அங்கே இருந்த பாலசந்தருக்கு ஆச்சரியம்.
"நாகேஷ்... இன்னும் நீ உன் குழந்தையைப் பார்க்கப் போகவில்லையா ?"
சற்று நேர அமைதிக்குப் பின்,"இல்லை" என்று மெல்லிய குரலில் சொன்னாராம் நாகேஷ்.
"ஏன் ?"
கலங்கிய கண்களுடன் பாலச்சந்தரை நிமிர்ந்து பார்த்த நாகேஷ் தழுதழுத்த குரலில் சொன்னாராம் :
"கொஞ்சம் என் முகத்தைப் பாருங்கள். முழுவதும் அம்மைத் தழும்புகள்."
பாலச்சந்தர் எதுவும் பேசாமல் நாகேஷ் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
"இந்த முகத்தோடு நான் என் குழந்தையைப் பார்க்கப் போனால்... அந்தச் சின்னஞ்சிறு குழந்தை பயந்து போய் விடாதா ? அதனால்தான் நான் என் குழந்தையைப் போய்ப் பார்க்க விரும்பவில்லை."
கண்ணீர் ததும்பும் கண்களோடு நாகேஷ் இப்படிச் சொல்லவும் கலங்கிப் போய் விட்டாராம் பாலச்சந்தர் .
கொஞ்ச நேரத்துக்குப் பின், நண்பன் நாகேஷை சமாதானம் செய்தாராம்.
"நாகேஷ், உனக்கு உன் நடிப்புத்தான் அழகு. கவலைப்படாதே !
புறப்படு. முதலில் போய் உன் குழந்தையைப் பார்த்து, தூக்கிக் கொஞ்சி விட்டு, அப்புறம் ஷூட்டிங்குக்கு வா" என்று உற்சாகம் கொடுத்து அனுப்பி வைத்தாராம் பாலச்சந்தர்.
இவ்வளவு துன்பங்களையும் துயரங்களையும் மனதில் தேக்கி வைத்துக் கொண்டுதான், நம்மையெல்லாம் சிரிக்க வைத்திருக்கிறார் நாகேஷ் !
ஆம்."சிரிப்பவர்கள் எல்லோரும் கவலை இன்றி வாழ்பவர்கள் இல்லை ; கவலையை மறக்கக் கற்று கொண்டவர்கள் !"
-ஜான்துரை ஆசீர் செல்லையா
- கடைசி விருப்பங்களுக்கு கட்டுப்படுமாறு ராஜா தனது தளபதியிடம் கேட்டார்.
- தளபதிகள் தங்கள் மன்னரின் கடைசி விருப்பத்திற்கு இணங்க ஒப்புக்கொண்டனர்.
மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
மகா அலெக்சாண்டர், பல நாடுகளை வென்று தனது நாட்டிற்குத் திரும்பியபோது, அவர் நோய்வாய்ப்பட்டார், அது அவரை மரணப் படுக்கைக்கு அழைத்துச் சென்றது.
அவர் தனது தளபதிகளைக் கூட்டி, "நான் விரைவில் இவ்வுலகை விட்டுச் செல்கிறேன், எனக்கு மூன்று விருப்பங்கள் உள்ளன, தயவுசெய்து அவற்றைத் தவறாமல் நிறைவேற்றுங்கள்" என்று கூறினார்.
இந்த கடைசி விருப்பங்களுக்கு கட்டுப்படுமாறு ராஜா தனது தளபதியிடம் கேட்டார்:
1) "என் மருத்துவர்கள் மட்டுமே எனது சவப்பெட்டியை சுமக்க வேண்டும்" என்றார்.
2) "எனது சவப்பெட்டியை கல்லறைக்கு கொண்டு செல்லும் போது, நான் சேகரித்த செல்வங்களை எனது உடல் கல்லறைக்கு செல்லும் பாதையில் வரிசையாகவையுங்கள்" என்று கூறினார்.
3) "எனது மூன்றாவது மற்றும் கடைசி ஆசை என்னவென்றால், எனது இரண்டு கைகளும் என் சவப்பெட்டிக்கு வெளிய தொங்கவிடப்பட வேண்டும்" என்று அலெக்சாண்டர் கூறினார்.
தளபதிகள் தங்கள் மன்னரின் கடைசி விருப்பத்திற்கு இணங்க ஒப்புக்கொண்டனர் மற்றும் அவ்வாறு செய்வதற்கான காரணத்தை அவரிடம் கேட்டனர்.
அலெக்சாண்டர் கூறினார், "நான் கற்றுக்கொண்ட மூன்று பாடங்களை உலகம் அறிய விரும்புகிறேன்..."
1."எனது சவப்பெட்டியை என் மருத்துவர்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏனென்றால் இந்த பூமியில் எந்த மருத்துவரும் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியாது என்பதை மக்கள் உணர வேண்டும். அவர்கள் மரணத்தின் முன் தோற்றுப் போவார்கள்....
2. தனது இரண்டாவது விருப்பத்தை விவரித்தார்: "நான் என் வாழ்நாள் முழுவதும் செல்வத்தை சம்பாதிப்பதற்காக செலவிட்டேன், ஆனால் என்னுடன் எதையும் கொண்டு செல்ல முடியாது... என்பதை மக்கள் அறியட்டும்"
3. மூன்றாவதாக, "நான் இந்த உலகத்திற்கு வெறுங்கையுடன் வந்தேன் , நான் வெறுங்கையுடன் செல்கிறேன்...என்பதை மக்கள் அறிய விரும்புகிறேன் என்றார்.
- நாகேஸ்வரர் கோவில், துவாரகை, குஜராத்.
- இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்கள்.
இந்தியாவில் மொத்தம் பன்னிரெண்டு ஜோதிர்லிங்க கோவில்கள் உள்ளதை நாம் அறிவோம். ஒன்றில் மற்றது எவ்விதத்திலும உயர்த்தி என்று சொல்லி விட முடியாது. அத்தனையும் நேர்த்தியான மிகச் சிறப்பான கோவில்கள். அத்தனையும் சுயம்பு லிங்கங்கள்.
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்கள் :
1.சோம்நாத், பிரபாச பட்டணம், கிர் சோம்நாத் மாவட்டம், குஜராத்.
2.ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோவில், ஸ்ரீசைலம், ஆந்திரப் பிரதேசம்.
3.மகாகாலேஸ்வரர் கோவில், உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம்.
4.ஓங்காரேஸ்வரர் கோவில், மத்தியப் பிரதேசம்.
5.கேதார்நாத் கோவில், உத்தராகண்டம்.
6.பீமாசங்கர் கோவில், சகாயத்திரி, மகாராஷ்டிரா.
7.காசி விஸ்வநாதர் கோவில், வாரணாசி, உத்தரப் பிரதேசம்.
8.திரிம்பகேஸ்வரர் கோவில், நாசிக், மகாராஷ்டிரா.
9.வைத்தியநாதர் கோவில், தேவ்கர், ஜார்க்கண்ட்.
10.நாகேஸ்வரர் கோவில், துவாரகை, குஜராத்.
11.இராமேஸ்வரம், தமிழ்நாடு.
12. கிரிஸ்னேஸ்வரர் கோவில், ஔரங்கபாத், மகாராஷ்டிரா.
இவ்வரிசையில் எண் 1 , 11 இல் உள்ள இரண்டு கோவில்களும கடற்கரையில் உள்ளது. கேதார்நாத இமயமலையிலும் பிற அனைத்தும் வட இந்தியாவில் இருக்கின்றது.
கோவிலின் விஸ்தீரணத்தைக் கணக்கிட்டுப் பார்க்கும் நிலையில் நம் தமிழ் நாட்டில் உள்ள இராமேஸ்வரம் திருக்கோவில் அளவு பெரிது 12 கோவில்களில் வேறு எந்த திருக்கோவில் பரப்பளவும் இல்லை.
இராமேஸ்வரம் கோவில் தரிசனம் பெறுவதற்கு வட இந்தியாவில் இருந்து பக்தர்கள் வெள்ளமாய் வருகிறார்கள். நமக்குத்தான் நமது திருக்கோவில்களின் அருமை தெரிவதில்லை.
இராமேஸ்வரம் - காசி - இராமேஸ்வரம் இப்படியாக ஒரு முழுச் சுற்று தரிசனம் முடிந்தால் பிறவி அறும் என்பார்கள்.
-கி.காமராஜ்.
- மருதாணி வைப்பது வெறும் அழகிற்காக மட்டும் இல்லை.
- மருதாணியை நாம் கால்களில் ஏற்படும் வெடிப்புகளில் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பும் மறையும்.
திருமணத்தில் ஏன் பெண்கள் மருதாணி வைத்துக் கொள்கிறார்கள் தெரியுமா?
மருதாணி வைப்பது வெறும் அழகிற்காக மட்டும் இல்லை. மருதாணி வைப்பதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அதனால் ஒவ்வொரு விசேஷத்திற்கும் மருதாணி வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். நம் முன்னோர்கள்.,.
மருதாணி வைப்பதால் சொறி மற்றும் சிரங்கு போன்ற தொற்றுக்கள் பரவாமல் தடுக்கலாம். மருதாணி வைப்பதால் நகத்தின் இடுக்கில் சேரும் அழுக்கில் உள்ள விஷக்கிருமிகளை அளிக்கிறது.
மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல் வெப்பம் தணியும். கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர மனநோய் ஏற்படுவது குறையும்...
கையில் மருதாணி வைப்பதால் உடலில் உள்ள வெப்பத்தை தனித்து உடல் சூட்டை தணிக்கிறது. மருதாணியை நாம் கால்களில் ஏற்படும் வெடிப்புகளில் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பும் மறையும்.
முடி உதிர்தல், இளநரை, வழுக்கை, முடி அடர்த்தியாக வளர, மருதாணியை அரைத்து தலைக்கு குளிக்கும் முன் தலையில் தேய்த்து மசாஜ் செய்து 1 மணி நேரம் ஊறவைத்து பின் குளித்தால் முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்...
சிலருக்கு மருதாணி வைத்தால் சளி பிடித்து விடும். இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7 அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.
தீக்காயங்களுக்கு மருதாணி இலைகள் பெரிதும் உதவி புரியும். மருதாணி இலைகளை அரைத்து தீக்காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் வலி வெகுவாக குறையும். அதனால் தீக்காயங்களுக்கு மருதாணி இலைகளை மருந்தாக பயன்படுத்தலாம்.
மருதாணியின் வாசனைக்கு பாலியல் உணர்வுகளை தூண்டும் தன்மை இருக்கிறது. எனவே தான் திருமணத்திற்கு மருதாணி வைப்பது என்பது ஒரு சடங்காகவே கொண்டாடப்படுகிறது....
-அழகுராஜா
- ஒருவர் தனக்குத் தேவையான பழைய பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பிச் சென்றார்.
- இனி வரும் காலங்கள் பொற்காலமே, மிக பெரிய வெற்றியே’ என தன்னம்பிக்கையுடன் தன் பழைய தொழிலை தொடங்கச் சென்றார்.
ஒருவன் தன்னுடைய தொழிலில் படுதோல்வியடைந்த நிலையில், தான் நடந்து வந்த வழியில், தெரு முனையில் போவோர், வருவோரை மிகுந்த மனவேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது எதிரில் உள்ள குப்பைத் தொட்டியில் ஒருவர் தனக்குத் தேவையான பழைய பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பிச் சென்றார்.
சிறிது நேரத்தில் இன்னொரு நபர் அதே குப்பைத் தொட்டியில் தனக்குத் தேவையான பாட்டில்களை எடுத்துச் சென்றார்.
மீண்டும் ஒருவர் தனக்குத் தேவையான பழைய பிளாஸ்டிக் தட்டு, பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பிச் சென்றார்.
அதன்பின் ஒரு நாய் வந்து எச்சில் இலையில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டுச் சென்றது.
கடைசியாக வந்த ஒரு பசு, குப்பையில் கிடந்த பச்சிலையை சாப்பிட்டு தன் பசியை போக்கிக் கொண்டது.
இதைப் பார்த்த, படுதோல்வியடைந்த அந்த நபர் "ஒரு சிறிய குப்பைத் தொட்டியில் இத்தனை பேர் பிழைத்து வாழ்கிறார்கள் என்றால், இந்த பரந்து விரிந்து கிடக்கும் இவ்வுலகில் நாம் அனைவரும் எப்படி எல்லாம் பிழைத்து வாழலாம்" என்று நினைத்தார், தன் மனதை திடப்படுத்திக் கொண்டு, 'இனி தனக்கு தோல்வியே கிடையாது, இனி வரும் காலங்கள் பொற்காலமே, மிக பெரிய வெற்றியே' என தன்னம்பிக்கையுடன் தன் பழைய தொழிலை தொடங்கச் சென்றார்.
-பாலா
- அனைத்து நோய்களுக்கும் உடல் சூடுதான் காரணம்.
- சில நாட்களில் பனிக்காலம் முடிந்து விடும்.
பிறப்புறுப்பு சார்ந்த அனைத்து நோய்களுக்கும் உடல் சூடுதான் காரணம்.. கர்ப்பபை புற்று நோய், கர்ப்பபை கட்டி, யோனியில் வரும் புண்கள், விதைப்பை வலி, விதைப்பை வீக்கம், விதைப்பை புற்றுநோய், ஆணுறுப்பு புண்கள், சிறுநீரக கல், சிறுநீரக எரிச்சல், சிறுநீர்ப்பை சதை வளர்ச்சி, சிறுநீர்ப்பை கட்டி, சிறுநீரில் ரத்தம் வருதல், சிறுநீர்ப்பை புற்றுநோய் என சிறுநீர்ப்பாதையில் வரும் பல தொந்தரவுகள்..
இந்த நோய்கள் எல்லாமல் வராமல் தடுக்கவும், நோய் வந்தவர்கள் மீண்டு வரவும் வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியம்.. சீரகம் கலந்த நல்லெண்ணெய்யை சூடு செய்து தலை உடல் முழுவதும் தேய்த்து 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்..
இன்னும் சில நாட்களில் பனிக்காலம் முடிந்து விடும். பனி முடிந்து உடனே எண்ணெய் குளியலுக்கு பழக்கபடுத்திகொள்ளுங்கள்.. சிறுநீரகம் சிறுநீரகப்பை பிறப்புறுப்பு நோய்களில் இருந்து பாதுகாப்பாய் இருந்துகொள்ளுங்கள்.
-ரியாஸ்
- மனிதர்கள் ஒருத்தரைப் பார்த்து ஒருத்தர் பயப்பட வேண்டிய அவசியமில்லை.
- சில சமயங்களில் அடி, உதை உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவுறது இல்லை தெரியுமா?
"டேய்...! கையைக் கொடுடா, வாழ்த்துக்கள்!"
"எதுக்கு?"
"வேலை கிடைச்சிடுச்சின்னு கேள்விப்பட்டேன்"
"ஓ.. ஆமாம். நன்றி!"
"இப்படி ஒருத்தரை ஒருத்தர் கையைப் பிடிச்சிக் குலுக்குற பழக்கம் எப்படி வந்தது தெரியுமா உனக்கு?"
"தெரியாதே.."
"அந்தக் காலத்துல வீரர்கள் எப்பவும் வாள் அல்லது துப்பாக்கியைக் கையிலே வச்சிருப்பாங்களாம்.. ரெண்டு பேர் சந்திக்கும் போது, 'என் கையிலே ஆயுதம் இல்லை. தாக்குவேன்னு பயம் வேண்டாம். நாம் நட்புறவுடன் இருப்போம்...' அப்படீங்கறதைத் தெரிவிக்கறதுக்காக கை கொடுத்துக்குவாங்களாம். அந்த வழக்கம் அப்படியே நிலைச்சி போச்சு"
"இது ஒரு நல்ல பழக்கம் தான். மனிதர்கள் ஒருத்தரைப் பார்த்து ஒருத்தர் பயப்பட வேண்டிய அவசியமில்லை. எல்லோரும் அன்பா இருக்கணும்...ஆதரவா இருக்கணும். சண்டை போடுறது ரொம்பத் தப்பு. அன்பைக் காட்டறதும் கைதான், அடிக்க ஓங்குறதும் கை தன்!"
"ஆனா சில சமயங்களில் அடி, உதை உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவுறது இல்லை தெரியுமா?"
"எதை வச்சி சொல்ற"
"ஆமாம். நேத்திக்கு கூட கடைத் தெருவுல எனக்கும் இன்னொருத்தனுக்கும் பெரிய சண்டை. கடைசியில கையை ஓங்கினதும் தான் சண்டை நின்னுது"
"அப்படியா.."
"ஆமாம். ஒரே அடி, அவ்வளவு தான்."
"யாருக்கு, அவனுக்கா?"
"இல்லை...எனக்கு!"
- தென்கச்சி சுவாமிநாதன்.
- மாதம் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் பில் வரும்.
- அணிந்து கொண்டுதான் அவ்வளவு விரைப்பாக நிற்கிறார்.
அமரர் ஜீவானந்தம் அவர்களின் எளிமையை அனைவரும் அறிவார்கள்.
அவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போது அவர் தொகுதியில் ஒரு அரசு விழா.
முதல்வர் காமராஜர் வருகிறார்.
ஜீவா வரவில்லையா என்று விசாரிக்கிறார்.
வரவில்லை என்று அறிந்ததும் அப்போது ஜீவா வசித்துக்கொண்டிருந்த சாக்கடையும் சகதியும் நிறைந்த குறுகிய சந்துக்குள் நடந்தே வருகிறார்!
அங்கே அவர் கண்ட காட்சி!

இடுப்பில் ஈரத்துண்டைக் கட்டிக்கொண்டு, துவைத்த வேட்டியைக் காய வைத்து நின்று கொண்டிருந்தார் ஜீவானந்தம்!
கர்மவீரரின் நெஞ்சம் எப்படித் துடித்துப் போனதோ!
"என்னடா இது, நானே ஒரு பரதேசி! என்கிட்டயாவது நாலு வேட்டி சட்டை இருக்குண்ணேன்; இவன் நம்மளவிட பெரிய பரதேசியால்லா இருக்காண்ணேன்!"
என்று தவித்துப் போயிருப்பார்!
இன்று எனக்குத் தெரிந்த ஒரு கட்சிக்காரருக்கு வேட்டி சட்டை (1 செட்) பசை போட்டு சலவை செய்ய குறைந்தது ரூ.150 ஆகிறது!
அதுவும் அந்தச் சிறப்புச் சலவைக்கு அழுக்குத்துணிகள் ஐம்பது கி.மீ. கூட பயணம் செய்து திரும்பி வருகின்றன!
இதுவே மாதம் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் பில் வரும்!
அதை அணிந்து கொண்டுதான் அவ்வளவு விரைப்பாக நிற்கிறார்!
ஆனால் ஒரு எம்.எல்.ஏ. , மாற்றுத் துணி இல்லாமல் உடுத்திய வேட்டியைத் துவைத்து, அது உலர்ந்த பிறகே உடுத்திக்கொண்டு விழாவிற்குப் போக வேண்டும் என்று காத்திருந்தது இந்த மண்ணில் தான் நடந்ததய்யா!
-மா. பாரதிமுத்துநாயகம்
- பயணத்தில் பல்வேறு உறுப்புகள் வேலை செய்யும்.
- புண்ணை ஆற்றுவதும் உடலை தேற்றுவதும் கடினம்.
நாம சாப்பிடும் உணவு வாயில ஆரம்பிச்சு மலக்குடல் வரை ஒரு பெரிய பயணம் போகும்.
நாம கண்டதை வாயில போடுவோம் ஆனா அது ஒவ்வொன்னையும் தரம் / இனம் பிரிச்சு மாவு, கொழுப்பு, நார்சத்து, நல்லது கெட்டதுன்னு வகைபடுத்தி உடலுக்கு குடுக்கவும் வெளியே அனுப்பவும் செய்யும். இந்த பயணத்தில் பல்வேறு உறுப்புகள் வேலை செய்யும். அதில் முக்கியமானது இரைப்பை.
அல்சரின் ஆரம்ப கட்டமான 'Gastritis' இங்க தான் துவங்குது. நாம சாப்பிடுற உணவு, மாவு பொருளா இருந்தா அது வாயில் உள்ள உமிழ்நீரில் சேர்ந்த உடனே செரிமானம் ஆக ஆரம்பிக்குது. அதுவே எண்ணெய் கலந்தது, கொழுப்பு அதிகம், மாமிசம்ன்னு அடர்த்தி அதிகமானதா இருந்தா அது செரிமானம் ஆக உணவுக்குழாய், இரைப்பை, சிறு குடல், பெருங்குடல் முதல் மலக்குடல் வரை பயணிக்கனும்.
நடுவில, முழுங்குறதெல்லாம் போய் ரெஸ்ட் எடுக்கிற இடம் தான் இரைப்பை. இந்த இரைப்பை கொஞ்சம் கெட்டியான சுவர்களை கொண்டது, ஏன்னா உணவை செரிக்க சுரக்கும் அமிலம் நம்மளையே போட்டு பாத்துற கூடாதுல அதுக்கு தான் அந்த கெட்டி சுவர்.
அப்படி கெட்டி சுவரா இருந்தாலும், நேரம் காலம் இல்லாம கண்டதை உள்ள தள்ளுவது, நேரத்துக்கு சாப்பிடாம இருப்பது, முக்கியமா கண்ட மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதால அமிலம் கண்ணாபின்னான்னு சுரந்து சுவருக்கு மேலா இருக்கிற பூச்சு வீங்கிடும், அது தடித்து அதிக வாயுவை உற்பத்தி பண்ண ஆரம்பிக்கும். இதை தான் 'Gastritis'ன்னு சொல்றோம்.
வயிறு உப்பிசம், தலை சுற்றல், பசி இல்லாமை, பெரிய பெரிய ஏப்பம் மற்றும் காற்று பிரிதல், வயிற்று வலி இது கூட திடீர் எடை குறைதல் அல்லது அதிகரித்தலும் !! இருக்கலாம்.
பொதுவா ஆன்டாசிட்கள் (Gelusil, Ranitidine, Omez, etc etc) போட்டு இந்த நோயின் தாக்கத்தை நாம குறைச்சுட்டாலும், நம்ம வாழ்க்கை முறையை சரியா வச்சுக்கலைன்னா இது முற்றி அல்சர் வரை போகும். அதன் பின் புண்ணை ஆற்றுவதும் உடலை தேற்றுவதும் கடினம்.
வாழ்க்கை முறையை(நேரத்துக்கு சாப்பிடுவது, தூங்குவது, டென்சன் ஆகாமல் இருப்பது, குளிர் பானங்களை அளவாக அருந்துவது) சரியா வச்சுகிட்டா ஆரம்ப நிலையிலேயே இதை ஹோமியோபதி மருந்துகள் மூலமா குணப்படுத்தலாம். Hydrastis Q, Condurango Q, போன்ற ஹோமியோபதி மருந்துகள் ஒரு பக்க விளைவில்லாத ஆன்டாசிடாக வேலை செய்யும்.
-டாக்டர் எம். சரவணக்குமார்
- அம்பர் ஒரு கிலோ ஒரு கோடி வரை விலை போகக்கூடியது.
- விலை உயர்ந்த விலங்குகளின் கழிவுகள் மற்றும் எச்சங்கள்.
விலை உயர்ந்த விலங்குகளின் கழிவுகள் மற்றும் எச்சங்கள்...
அம்பர்: திமிலங்கிலத்தின் எச்சமான அம்பர் ஒரு கிலோ ஒரு கோடி வரை விலை போகக்கூடியது. இது மருத்துவ பயன்பாட்டிற்கும் வாசனை திரவியமாகவும் பயன்படுகிறது.
லூவா: லூவா காப்பி என விளையுயர்ந்த இந்த காப்பிக் கொட்டைகளின் விலை கிலோ 25,000 ரூபாய். பூனைகளின் மலத்தில் இருந்து இந்த காப்பி கொட்டைகள் தயாரிக்கப்படுகின்றன.
பிளாக் ஐவரி காபி: இது யானையின் மலத்தில் இருந்து தயாரிக்கப்படும் மிகவும் விலை உயர்ந்த காஃபி.
புனுகு: வாசனை திரவியமாக பயன்படும் இந்த புனுகு பூனையின் விந்து.
கோரோசனை: வாசனை திரவியமாக கருதப்படும் இந்த கோரோசனை பசுக்களின் பித்தப்பையில் உருவாகும் கழிவு...
இது தவிர எத்தனையோ விலங்குகளின் கழிவுகள் மருத்துவத் துறையில் மருந்தாகவும், உயரிய பானங்களில் சேர்க்கப்படும் வாசனை மற்றும் சத்தூட்டும் பொருளாகவும் பயன்படுகின்றன.
பாம்பின் விஷம் முதல் தேளின் விஷம் வரை அத்தனையும் விலை உயர்ந்த மருந்தாக பயன்படுகிறது.
-பாலாஜி
- பல மாநிலங்களில் வீட்டுப்பள்ளி முறைக்கு ஆதரவாக சட்டங்கள் இயற்றபட்டன.
- ஐம்பது மாநிலங்களிலும் வீட்டுப்பள்ளி முறை வலுவாக இருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள ஒரு நல்ல விசயம் ஹோம்ஸ்கூலிங். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல், வீட்டில் அம்மாவே ஆசிரியராக மாறி பாடங்களை கற்பிக்கும் முறை.
1970க்களில் இம்முறை பரவலானபோது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் படிக்க வைக்க முடியுமா என பலத்த விவாதம் எழுந்தது. ஜான் ஹோல்ட் என்பவர் வீட்டிலேயே பெற்றோர் பிள்ளைக்கு தேவையான அனைத்தையும் கற்பிக்கமுடியும், நீதி, நெறிமுறைகளை வீட்டில் கற்பிப்பது மாதிரி அரசு பள்ளிகளில் கற்பிக்கமுடியாது என்றார். அவருக்கு கணிசமாக ஆதரவு கூடியது.
அதன்பின் பல மாநிலங்களில் வீட்டுப்பள்ளி முறைக்கு ஆதரவாக சட்டங்கள் இயற்றபட்டன. இன்று ஐம்பது மாநிலங்களிலும் வீட்டுப்பள்ளி முறை வலுவாக இருக்கிறது. சுமார் 5% குழந்தைகள் வீட்டுப்பள்ளிகளில் படிக்கிறார்கள்.
இம்மாதிரி குடும்பங்களில் அம்மா தான் வேலைக்கு போகாமல் ஆசிரியராக இருந்து பாடங்களை கற்பிப்பார். தந்தை வேலைக்கு போவார். சில பாடங்களை தந்தையும் கற்பிப்பதுண்டு. இருவராலும் கற்பிக்கமுடியாத பாடங்களை கற்பிக்க வீட்டுப்பள்ளி அசோசியேசன் மாதிரி அமைப்புகள் உண்டு.
உங்களுக்கு அல்ஜீப்ரா தெரியாதா? பிரச்சனை இல்லை. உங்கள் பக்கத்து தெருவில் இருக்கும் இன்னொரு வீட்டில் அல்ஜீப்ரா தெரிந்த ஒரு ஹோம்ஸ்கூலர் இருப்பார். அவர் அதை கற்பிப்பார்.
இணையம் வந்தபின்னர் கான் அகாடமி, யுடெமி, யுடியூப் மாதிரி பல வசதிகள் வந்துவிட்டன. ஹோம்ஸ்கூலிங் செல்லும் குழந்தைகள் மாலையில் ஒன்றுகூடி விளையாடி, சக மாணவர்களுடன் பழகும் அனுபவத்தையும் அடைகிறார்கள்.
12வது வகுப்பில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் என்ன பரிட்சையை எழுதுகிறர்களோ, அதையே தான் இவர்களும் எழுதி பாஸ் செய்யவேண்டும். வீட்டுப்பள்ளி மாணவர்கள் அந்த பரிட்சையில் நல்ல மதிப்பெண்களை பெற்று தேர்கிறார்கள். நல்ல கல்லூரிகளிலும் அட்மிஷன் கிடைக்கிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்களை விட இவர்கள் நல்ல நிலையில் இருப்பதாக தான் ஆய்வுகள் கூறுகின்றன.
அதிலும் இப்போது பள்ளிகளில் பரவும் கஞ்சா, வன்முறை கலாசாரத்தை கண்டு பலரும் வீட்டுப்பள்ளி முறையை பற்றி யோசிக்க துவங்கியுள்ளனர். கொரொனா சமயம் பலரும் வீட்டுப்பள்ளி முறைக்கு மாறினார்கள்.
குடும்பங்களிலும் இதனால் அமைதி நிலவுகிறது. விவாகரத்து விகிதம் 50%க்கும் மேல் இருக்கும் அமெரிக்காவில் இக்குடும்பங்களில் 5% தான் விவாகரத்து விகிதம் உள்ளது. அர்ப்பணிப்பு இல்லாமல் வீட்டுப்பள்ளி முறையை எல்லாராலும் கையாள இயலாது.
உலகெங்கும் பல நாடுகளில் வீட்டுப்பள்ளிகள் செயல்படுகின்றன என்றாலும், அமெரிக்காவில் தான் இதன் சதவிகிதம் மிக அதிகம்.
- நியாண்டர் செல்வன்






