என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசிடம் தமிழகத்தை எடப்பாடி அடகு வைத்து விட்டார் - டிடிவி தினகரன் தாக்கு
    X

    மத்திய அரசிடம் தமிழகத்தை எடப்பாடி அடகு வைத்து விட்டார் - டிடிவி தினகரன் தாக்கு

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டை மட்டுமின்றி அ.தி.மு.க.வையும் மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டார் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #TTVDinakaran
    திருப்பூர்:

    அ.ம.மு.க. துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் திருப்பூர் பெருமா நல்லூர் நால் ரோடு பகுதியில் திறந்த வேனில் நின்றபடி பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.அப்போது அவர் பேசியதாவது-

    தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 18 தொகுதிகளிலே 8 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை என்றால், இந்த துரோகிகளின் ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். தமிழகத்தை வஞ்சிக்கின்ற மத்திய, மாநில ஆட்சியாளர்கள் ஒரு கூட்டணியாகவும், மற்றொருபுறம் ஏற்கனவே தமிழ்நாட்டை வஞ்சித்த காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு போன்ற கட்சிகள் மதசார்பற்ற கூட்டணி என்கிற பெயரிலே ஒரு கூட்டணியாகவும் தேர்தலை சந்திக்கின்றனர்.

    தமிழகத்தில் நடக்கின்ற ஆட்சி மக்களுக்கான ஆட்சியா? அல்லது ஒப்பந்தம் எடுப்பவர்களுக்கான ஆட்சியா? என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இது மக்களுக்கான ஆட்சி என்றால் மக்களை பாதிக்கின்ற எந்த திட்டத்தையும் இங்கே செயல்படுத்த விட்டிருக்கமாட்டார்கள்.

    தொழில்கள் பாதிக்கும் என்பதால்தான் ஜி.எஸ்.டி.யை ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால் மோடியின் தவறான பொருளாதார கொள்கையால், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையால், இன்றைக்கு தமிழகத்திலே பின்னலாடை தொழில் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும். கருப்பு பணம் ஒழிப்பு என்று கூறி ஏழைகளிடம் இருந்து பணத்தை பிடுங்க தான் செய்துள்ளனர். பின்னலாடை தொழிலும், தொழிலாளர்களும் மோடியின் ஆட்சியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பின்னலாடை தொழிலை பாதிக்கும் பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணியை, முடிவுக்கு கொண்டுவர வேண்டும். திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சிக்காக திருப்பூர் குமரன் பெயரில் கைத்தறி மற்றும் பின்னலாடை தொழில்நுட்ப கல்லூரி அமைக்கப்படும். தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

    தற்போதைய அரசு தொழில் வளர்ச்சியை பெருக்கிவிட்டதாக பொய்பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்டி.யில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான வரி விதிப்புகளை மாற்றி, மீண்டும் பழைய அளவிலே வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாளைய பிரதமரை தீர்மானிக்கும் இடத்தில் நாங்கள்தான் இருக்கிறோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டை மட்டுமின்றி அ.தி.மு.க.வையும் மத்திய அரசுக்கு அடகு வைத்துவிட்டனர்.



    இதனால் இந்த இயக்கத்தையும், தமிழகத்தையும் மீட்டெடுக்க வேண்டும். கேரளாவிலே ராகுல் காந்தி போட்டியிடுகின்ற வயநாடு தொகுதியிலே கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை நிறுத்தி, எதிர்த்து போட்டியிடுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டிலே காங்கிரஸ் கட்சியுடன், கம்யூனிஸ்டு கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இது முரண்பாடாக உள்ளது.

    ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் பணத்தை முன்வைத்தே வாக்குகள் சேகரித்து வருகின்றனர். மக்களையோ, தொண்டர்களையோ அவர்கள் நம்பவில்லை. பா.ஜனதாவின் கைப்பாவையாகவே அ.தி.மு.க. ஆட்சி இருந்து வருகிறது. மோடியுடன் நாங்கள் சமரசம் செய்திருந்தால், இப்போது யார் முதலமைச்சராக இருந்திருப்பார் என்று உங்களுக்கு தெரியும். தமிழகத்தில் உள்ள அனைத்து மதத்தினரும் சமம் என்ற அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபோல கணக்கம்பாளையம், பாண்டியன்நகர், எம்.எஸ்.நகர், சி.டி.சி.டெப்போ, வெள்ளியங்காடு நால்ரோடு, கே.வி.ஆர்.நகர், சிறுபூலுவபட்டி, 15 வேலம்பாளையம், திருமுருகன்பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் திறந்தவேனில் நின்றபடி டி.டி.வி. தினகரன் பேசினார். #TTVDinakaran
    Next Story
    ×