காவல்துறை Vs போக்குவரத்துத்துறை: பஞ்சாயத்து ஓயுமா?

பேருந்தில் ஏறிய காவலர் டிக்கெட் எடுக்கமுடியாது என ரகளையில் ஈடுபட்ட வீடியோ வைரலானது. நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை Vs போக்குவரத்துத்துறை: பஞ்சாயத்து ஓயுமா?
Published on

சென்னை:

நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க மறுத்து ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமீபத்தில் வைரலானது. அதில், அரசு பேருந்தில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள்தான். எங்களுக்கும் டிக்கெட் கிடையாது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக விளக்கமளித்த போக்குவரத்துத்துறை, போலீசார் பேருந்தில் பயணிக்கையில் கட்டாயம் டிக்கெட் எடுக்கவேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத்துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது என தெரிவித்தது.

இதற்கிடையே, சென்னையில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசு பேருந்துகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

இந்த நடவடிக்கையால் போலீசாருக்கும், போக்குவரத்துத் துறைக்கும் இடையே மோதல் போக்கு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை செங்கல்பட்டு அருகே வாரண்ட் வைத்திருந்த போலீஸ்காரரிடம் டிக்கெட் எடுக்கும்படி கண்டக்டர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.

இதேபோல், திருநெல்வேலியில் உள்ள வள்ளியூரில் போக்குவரத்து ஆய்வாளர் ஒருவர் நாகர்கோவில் நோக்கிச் சென்ற அரசு பேருந்தை ஓட்டிச் சென்ற 3 டிரைவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தார். சீட் பெல்ட் அணியாதது, யூனிபார்ம் சரியாக அணியாதது தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் குற்றம் சாட்டுவதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். காவல்துறைக்கும், போக்குவரத்துத்துறைக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் தொடருமா என்பது அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து தெரிய வரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com