search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் தனியார் பள்ளியை மூட எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் போராட்டம்
    X

    பெற்றோர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுத்த படம்.

    பல்லடத்தில் தனியார் பள்ளியை மூட எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் போராட்டம்

    • பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை 50க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர்
    • பெற்றோர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு வந்து முற்றுகையிட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே வெங்கிட்டாபுரத்தில் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் ஸ்காட் சர்வதேச பள்ளி 10.08.2012 ம் தேதி தொடங்கப்பட்டது. இதனை அப்போதைய தமிழக கவர்னர் ரோசய்யா திறந்து வைத்தார். இப்பள்ளியில் தொடக்கத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளுடன் இயங்கி வந்தது. அதன் பின்னர் படிப்படியாக மாணவர் சேர்க்கை குறைந்து தற்போது பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை 50க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர்.இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் எதிர்பார்த்த அளவு மாணவர் சேர்க்கை இல்லாததால் பள்ளியை தொடர்ந்து நடத்த இயலாது அதனால் இன்று முதல் பள்ளி செயல்படாது என்று நேற்று மாலை பெற்றோர்களுக்கு செல்போன் மூலம் ஆசிரியர்கள் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு வந்து முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் மணிமுத்து உள்ளிட்ட போலீசார் பெற்றோர் - பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து பெற்றோர் கூறுகையில், நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நிறைவடைந்து கல்வி கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எங்களது குழந்தைகள் படித்து வந்த ஸ்காட் பள்ளியை உடனடியாக மூடுவதாக அந்த நிர்வாகம் கூறுகிறது. எங்களது குழந்தைகளை வேறு நல்ல பள்ளியில் உடனே சேர்க்க இயலாது. நடப்பு கல்வி ஆண்டு மட்டும் இப்பள்ளியை இயக்கி அதன் பின்னர் பள்ளியை மூடினால் நாங்கள் வேறு நல்ல பள்ளியை தேர்வு செய்து அதில் அடுத்த கல்வியாண்டில் எங்களது குழந்தைகளை சேர்க்க இயலும்.

    பள்ளியை மூடுவது குறித்து முன்கூட்டியே தகவல் கொடுப்பதோடு உரிய கால அவகாசமும் அளிக்க வேண்டும். உடனே பள்ளி மூடுவது எங்களது குழந்தைகளின் பள்ளி படிப்பும், எதிர்காலமும் கேள்வி குறியாகும். எங்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தான் நாங்கள் கல்விக்காக ஆண்டு ஒன்றுக்கு ரூ.2 லட்சத்திற்கும் மேல் செலவு செய்கிறோம். குழந்தைகளின் நலனுக்காக நாங்கள் போராடவும் தயங்க மாட்டோம் என்றனர். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் தொடர்ந்து பள்ளியை 2 நாள் நடத்துவதாகவும், 2 நாட்களுக்குள் தலைமை நிர்வாகத்திடம் பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பெற்றோர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாகவும் தெரிவித்தனர் .இதையடுத்து சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.

    Next Story
    ×