search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் இடப்பிரச்சனையில் மோதல்: இந்து முன்னணி நிர்வாகியை தாக்கிய தி.மு.க. கவுன்சிலர் மீது வழக்கு
    X

    நெல்லையில் இடப்பிரச்சனையில் மோதல்: இந்து முன்னணி நிர்வாகியை தாக்கிய தி.மு.க. கவுன்சிலர் மீது வழக்கு

    • கவுன்சிலர் ஷேக் மன்சூர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • ஒரு கட்டத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு அய்யப்பனுக்கு சரமாரி அடி விழுந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்தவர் ஷேக் மன்சூர்(வயது 42). இவர் நெல்லை மாநகராட்சியில் 20-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் நெல்லை மாநகர இந்து முன்னணி பேட்டை நகர துணைத்தலைவராக உள்ளார்.

    இவர்கள் 2 பேருக்கும் இடையே பேட்டை செக்கடி பகுதியில் உள்ள ஒரு இடம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவு இந்த பிரச்சனை தொடர்பாக டவுன் காட்சி மண்டபம் அருகே 2 தரப்பினருக்கும் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    அப்போது கவுன்சிலர் ஷேக் மன்சூர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டு அய்யப்பனுக்கு சரமாரி அடி விழுந்துள்ளது.

    அப்போது அந்த வழியாக பேட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை இரவு பணிக்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டவர்களை தடுத்துள்ளார். அப்போது அவருக்கும் அடி விழுந்தது. இதில் கையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அய்யப்பனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதுகுறித்து டவுன் போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அதனை கண்ட கவுன்சிலர் தரப்பினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். காயம் அடைந்த அய்யப்பன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை ஆகியோரை டவுன் போலீசார் மீட்டு ஆம்புலன்சு மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக அய்யப்பன் அளித்த புகாரின்பேரில், ஆயுதம் கொண்டு தாக்கியதாக தி.மு.க. கவுன்சிலர் ஷேக் மன்சூர் மற்றும் கூட்டாளிகள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மோதல் சம்பவத்தை தடுக்க சென்ற பேட்டை சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக கவுன்சிலர் ஷேக் மன்சூர் மற்றும் கூட்டாளிகள் மீது 3 பிரிவுகளில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த பிரச்சனையில் தொடர்புடைய கவுன்சிலர் ஷேக் மன்சூரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் இந்து முன்னணி நிர்வாகி அய்யப்பனை இந்து முன்னணி மாநில செயலாளர் வக்கீல் குற்றாலநாதன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    Next Story
    ×