search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சப்-இன்ஸ்பெக்டர்
    X

    குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சப்-இன்ஸ்பெக்டர்

    • தமிழக அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் சேர்த்து வாரத்தில் 5 நாட்கள் முட்டை, 2 நாட்கள் பயிறு வகைகள் வழங்குகிறது.
    • சப்-இன்ஸ்பெக்டர் ஏற்படுத்திய விழிப்புணர்வு மூலம் 11 குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து உள்ளதை பலர் பாராட்டி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    மதுரையை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 40). இவர், தற்போது திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். ஊத்துக்கோட்டை அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சப்-இன்ஸ்பெக்டர் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது. கல்வி மீது ஆர்வம் கொண்ட இவர், தான் பணிபுரியும் இடங்களில் எல்லாம் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை அணுகி கல்வியின் அவசியம் பற்றி வலியுறுத்தி வருகிறார்.

    இவர், தற்போது பணிபுரிந்து வரும் பென்னாலூர்பேட்டை அருகே உள்ள திடீர்நகரில் சுமார் 40 குடும்பங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் காடுகளுக்கு சென்று விறகு வெட்டியும், தேன் எடுத்து விற்றும், அரிசி ஆலைகளில் தொழிலாளர்களாக வேலை செய்தும் வருகின்றனர். இவர்கள் தங்கள் குழந்தைகளை குல தொழில்களிலேயே ஈடுபடுத்தி வருகின்றனர்.

    இதையறிந்த சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் நேற்று அந்த பகுதிக்கு சென்றார். அந்த பகுதியில் 11 குழந்தைகள் பள்ளிக்கு செல்வதே இல்லை என்பதை அறிந்தார்.

    இதையடுத்து அவர்களுடைய பெற்றோர்களை சந்தித்து பேசியதாவது:-

    தமிழக அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் சேர்த்து வாரத்தில் 5 நாட்கள் முட்டை, 2 நாட்கள் பயிறு வகைகள் வழங்குகிறது. மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின்படி குழந்தைகள் கண்டிப்பாக கல்வி கற்க வேண்டும். பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் பெற்றோர்கள் மீது வழக்கு தொடரலாம். எனவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்.

    வேண்டுமானால் அவர்களுடைய கல்வி செலவை நானே ஏற்றுக்கொள்கிறேன். குழந்தைகளுக்கு உதவ பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையம் 24 மணி நேரமும் திறந்து இருக்கும். எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம். யார் காலில் விழுந்தாவது உங்களுக்கு வேண்டியதை செய்து தருகிறேன். உங்கள் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்.

    இவ்வாறு அவர் உருக்கமாக பேசினார்.

    இதையடுத்து அந்தப் பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் தங்களது 11 குழந்தைகளையும் பென்னாலூர்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சேர்த்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஏற்படுத்திய விழிப்புணர்வு மூலம் 11 குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து உள்ளதை பலர் பாராட்டி வருகின்றனர்.

    குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்படி சப்-இன்ஸ்பெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    Next Story
    ×