search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் உள்பட தமிழக அமைச்சர்களின் ரூ.2 லட்சம் கோடி சொத்துப்பட்டியலை வெளியிடுவேன்: அண்ணாமலை
    X

    அண்ணாமலை பேசியபோது எடுத்த படம்.

    முதல்-அமைச்சர் உள்பட தமிழக அமைச்சர்களின் ரூ.2 லட்சம் கோடி சொத்துப்பட்டியலை வெளியிடுவேன்: அண்ணாமலை

    • முதல்-அமைச்சர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சொத்துப்பட்டியல் வெளியிடப்படும்.
    • தனியார் மருத்துவ கல்லூரிகள் இருப்பதால் நீட் வேண்டாம் என்கிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் கோவில்வழியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கட்சியில் தொண்டர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மதுவால் குடும்ப தலைவரை இழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி மற்றும் 3 பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலியை அண்ணாமலை வழங்கினார்.

    விழாவில் அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் முக்கிய பிரச்சினையாக இருப்பது ஊழல் என்று தான் சொல்வார்கள். ஊழலின் ஆழம் என்பது ஒரு தலைமுறையை அழித்துக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் தி.மு.க.வினர் நான் கட்டியிருக்கும் கைக்கெடிகாரத்துக்கு பில் வேண்டும் என்றனர். நானும் கைக்கெடிக்காரத்துக்கான பில் கொடுப்பதற்கான தேதி, நேரம் குறிப்பிட்டு விட்டேன். கைக்கெடிகாரத்தை எங்கிருந்து வாங்கினேன் என்பது குறித்து முழு ஆதாரத்தை கொடுக்க உள்ளேன்.

    கெடிகார பில் மட்டுமல்ல, 13 ஆண்டுகளாக நான் போலீஸ் அதிகாரியாக இருந்து சம்பாதித்த சொத்து அனைத்தையும் பொதுமக்களிடம் தெரிவிக்கிறேன். அனைத்து வங்கி கணக்கு விவரங்கள் தெரிவிப்பேன்.

    தி.மு.க. அமைச்சர்கள், பினாமிகள், உறவினர்கள் சொத்துப்பட்டியலும் பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கப்படும். முதல்-அமைச்சர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சொத்துப்பட்டியல் வெளியிடப்படும். நமக்கு தெரிந்தவரை ரூ.2 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. முதல்-அமைச்சர் முதல் தி.மு.க. எம்.எல்.ஏ. வரை ஒவ்வொருவருக்கும் தனித்தனி சொத்துப்பட்டியல் வெளியிடப்படும்.

    தி.மு.க. அமைச்சர் ஒருவர் இந்தோனேஷியாவில் சொந்தமாக துறைமுகம் வைத்துள்ளார்.

    தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வைத்திருக்கும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அதை சேர்த்து வாங்கியுள்ள 150 ஏக்கர் நிலத்தை வளைத்து போட்டுள்ளனர். தனியார் மருத்துவ கல்லூரிகள் இருப்பதால் நீட் வேண்டாம் என்கிறார்கள். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க செல்லும்போது மக்களிடம் கேட்கும் கேள்வி, ரூ.2 லட்சம் கோடியா?, பா.ஜனதா கட்சியா? என்பதாகத்தான் இருக்கும். திருப்பூரின் முன்னேற்றம் அரசால் வரவில்லை. மக்களின் உழைப்பால் வந்துள்ளது. எந்த அரசும் இதை சொந்தம் கொண்டாட முடியாது.

    ரூ.2 லட்சம் கோடிக்கான சொத்துப்பட்டியல், ஊழல் பட்டியலால் ஏப்ரல் மாதம் முதல் களைகட்ட தொடங்கும். மக்கள் நேர்மையின் பக்கம் இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×