என் மலர்
காஞ்சிபுரம்
மாமல்லபுரம:
கோவளம் அருகே உள்ள திருவடந்தையில் நித்திய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது. நேற்று காலை குளத்தில் வாலிபர் பிணம் கிடப்பதாக மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி மற்றும் போலீசார் தீயணைப்பு படையினர் உதவியுடன் தேடினர். அப்போது தண்ணீருக்கு அடியில் சேற்றில் சிக்கி இருந்த வாலிபர் உடலை மீட்டனர்.
அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரிய வில்லை. அவருக்கு சுமார் 20 வயது இருக்கும். உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவில் குளத்தில் வாலிபர் சிலர் நிற்பதை அப்பகுதி மக்கள் பார்த்து உள்ளனர். அவரை மர்ம நபர்கள் கடத்தி கொன்று குளத்தில் வீசினார்களா? அல்லது நண்பர்களுடன் குளித்த போது தண்ணீரில் மூழ்கி பலியானாரா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மதுராந்தகம்:
மதுராந்தகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் தினசரி செங்கல்பட்டு, பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்காக சென்று வருகின்றனர்.
தினமும் காலை நேரத்தில் மதுராந்தகம் பஸ் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு, பெருங்களத்தூர் பகுதிக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பவுர்ணமியில் திருவண்ணாமலை, திருவக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு மதுராந்தகம் போக்குவரத்து பணி மனையில் உள்ள பஸ்கள் சிறப்பு பஸ்களாக மாற்றி இயக்கப்பட்டதால் வழக்கமாக செங்கல்பட்டு, பெருங்களத்தூருக்கு செல்லும் பஸ்கள் வராததால் பயணிகள் கடும் அவதிபட்டனர்.
இன்று அதிகாலை 4.30 மணிக்கு வழக்கமாக பல்வேறு இடங்களுக்கு செல்லும் பஸ்கள் மதுராந்தகம் பஸ் நிலையத்திற்கு வராததால் பயணிகள் ஆத்திரம் அடைந்தனர்.
இந்நிலையில் மதுராந்தகம் பணிமனையில் இருந்து ஊரின் பெயர் பலகையை மாற்றி வேறு இடத்திற்கு செல்வதற்காக 4 பஸ்கள் மதுராந்தகம் பஸ் நிலையத்திற்கு வந்தன. இதை பார்த்து ஆத்திரம் அடைந்த பயணிகள் 4 பஸ்களை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து தினசரி வழி தடத்தில் பஸ்களை இயக்க சொல்லி கோஷங்களை எழுப்பினர்.
இதை தொடர்ந்து பஸ்களின் நடத்துனர் போன் மூலம் போக்குவரத்து அதிகாரியிடம் தொடர்பு கொண்டு பேசினார். இதைத் தொடர்ந்து பஸ்கள் வழக்கமான வழி தடத்தில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. பயணிகள் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் மதுராந்தகத்தில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆலந்தூர் :
சென்னை விமான நிலை யத்தில் இன்று அதிகாலை மலேசியா செல்லும் விமானம் புறப்பட தயா ராக இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த மனோகர், குமாரின் கைப்பை, சூட்கேசை சோதனை செய்த போது கட்டு கட்டாக அமெரிக்க டாலர் பணம் இருந்தது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.28 லட்சம் ஆகும்.
பணத்திற்கான ஆவணம் அவர்களிடம் இல்லை. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அவை ஹவாலா பணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக பிடிபட்ட குமார், மனோகரிடம் விசாரணை நடக்கிறது.
இதே போல் நேற்று காலை இலங்கை செல்லும் விமானத்தில் சென்னையை சேர்ந்த 2 பேரிடம் ரூ.31 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர், யூரோ பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காஞ்சீபுரம்:
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பு மனுதாக்கல் வருகிற ஏப்ரல் 22–ந் தேதி தொடங்குகிறது.
இதையொட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுலவகத்தில் அளிக்கலாம். வேட்புமனுத்தாக்கல் வரும் 29–ந் தேதி வரை பெறப்படும்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் ஏப்ரல் 30ம் தேதியும், போட்டியிலிருந்து விலக விரும்புவோர் தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெற மே மாதம் 2ந் தேதியும் கடைசி நாளாகும்.
சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி:– மண்டல அலுவலகம் 15, பெருநகர சென்னை மாநகராட்சி, நெ.120, ராஜிவ்காந்தி சாலை, சோழிங்கநல்லூர். தேர்தல் நடத்தும் அலுவலர், செந்தில்வேல், உதவி ஆணையர் (கலால்) காஞ்சீபுரம்.
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி:– மண்டல அலுவலகம் 12, பெருநகர சென்னை மாநகராட்சி, எண்.1, புது தெரு, ஆலந்தூர். தேர்தல் நடத்தும் அலுவலர், ராஜேந்திரன், தனி துணை ஆட்சியர் (நில எடுப்பு) காஞ்சிபுரம்.
ஸ்ரீபெரும்புதூர் (தனி) சட்டமன்ற தொகுதி:– தாலுக்கா அலவலகம், ஸ்ரீபெரும்புதூர். தேர்தல் நடத்தும் அலுவலர், பாரி, கூடுதல் நேர்முக உதவியாளர் (நில எடுப்பு), காஞ்சீபுரம்.
பல்லாவரம் சட்டமன்ற தொகுதி:– பல்லாவரம் நகராட்சி அலுவலகம், குரோம்பேட்டை. தேர்தல் நடத்தும் அலுவலர், விஸ்வ நாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியளர் (நில எடுப்பு), காஞ்சிபுரம்.
தாம்பரம் சட்டமன்ற தொகுதி:– வருவாய் கோட்ட அலுவலகம், ஜி.எஸ்.டி.ரோடு, தாம்பரம் சானிடோரியம், சென்னை–45. தேர்தல் நடத்தும் அலவலர், விமல்ராஜ், வருவாய் கோட்டாட்சியர், தாம்பரம்.
செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி:– வருவாய் கோட்ட அலுவலகம், செங்கல்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர், பன்னீர்செல்வம், வருவாய் கோட்டாட்சியர், செங்கல்பட்டு.
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி:– தாலுக்கா அலுவலகம், திருப்போரூர் ஆகும், தேர்தல் நடத்தும் அலுவலர் , கோவிந்தராசு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், காஞ்சிபுரம்.
செய்யூர் (தனி) சட்டமன்ற தொகுதி:– தாலுக்கா அலுவலகம், செய்யூர் ஆகும். தேர்தல் நடத்தும் அலுவலர், ஜெயக்குமார், தனி துணை ஆட்சியர் (ச.பா.தி), காஞ்சீபுரம்.
மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதி:– வருவாய் கோட்ட அலுவலகம், ஜி.எஸ்.டி.ரோடு, மதுராந்தகம் ஆகும். தேர்தல் நடத்தும் அலுவலர், பர்கத்பேகம், வருவாய் கோட்டாட்சியர், மதுராந்தகம்.
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி:– மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் (2வது மாடி), காஞ்சிபுரம் ஆகும். தேர்தல் நடத்தும் அலுவலர், பவணந்தி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், காஞ்சிபுரம்.
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதி:– சப்-கலெக்டர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், காஞ்சீபுரம் ஆகும். தேர்தல் நடத்தும் அலுவலர், அருண்தம்புராஜ், சப்–கலெக்டர், காஞ்சீபுரம்.
திருவள்ளுர் மாவட்டத் தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடம் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் விவரம் வருமாறு:–
கும்மிடிப்பூண்டி தொகுதி:– கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தனித்துணை ஆட்சி யர் மல்லிகா.
பொன்னேரி தொகுதி:– பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலர் நாராயணன்.
திருத்தணி தொகுதி:– திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலர் சேதுமாதவன்.
திருவள்ளுர் தொகுதி:– திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விக்னேஷ்வரன்.
பூந்தமல்லி தொகுதி:– பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளுர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயச்சந்திரன்.
ஆவடி தொகுதி:– ஆவடி வட்டாட்சியர் அலுவலகம், உதவி ஆணையர் (கலால்) முத்துசாமி.
மதுரவாயல் தொகுதி:– மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகம், அம்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் வீரப்பன். அம்பத்தூர் தொகுதி:– அம்பத்தூர் மண்டல அலுவலகம் (மண்டலம்7), மண்டல அலுவலர் நடராஜன்.
மாதவரம் தொகுதி:– மாதவரம் வட்டாட்சியர் அலுவலகம், தனித்துணை ஆட்சியர் (சிறப்பு திட்ட அமலாக்கம்) பார்வதி.
திருவொற்றியூர் தொகுதி:– திருவொற்றியூர் மண்டல அலுவலகம் (மண்டலம்1), திருவொற்றியூர் மண்டல அலுவலர் பென்சமின் பாபு.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் விமானத்தில் பெரும் அளவில் ஹவாலா பணம் கடத்தப்பட இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை சென்னையில் இருந்து கொழும்புக்கு செல்ல இருந்த விமானத்தில் ஏற வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த கோபால்(வயது 36), சத்யராஜ்(34) ஆகியோர் கொழும்புக்கு செல்ல வந்திருந்தனர்.
அவர்களது உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவர்களது சூட்கேசில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் மற்றும் யூரோ நாட்டு கரன்சிகள் இருந்தன. அவர்களிடம் இருந்து ரூ.37 லட்சம் மதிப்பு உள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கோபால், சத்யராஜ் ஆகியோரது விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், இது தொடர்பாக அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் கணக்கில் வராத இந்த பணத்தை எதற்காக கொழும்புக்கு கடத்திச் செல்ல முயன்றனர். அது ஹவாலா பணமா? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என பல்வேறு கோணங்களில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேல்மருவத்தூர், ஆதிபரா சக்தி சித்தர் பீடத்தில் சித்திரைப் பவுர்ணமி விழா இன்று அதிகாலை மங்கள இசை, சிறப்பு அபிஷேகத் துடன் தொடங்கியது.
ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னி லை வகித்தார். தஞ்சை மாவட்ட தலைவர் வாசன் தலைமை தாங்கினார்.
காலை 9.15 மணிக்கு சித்தர் பீடத்துக்கு வந்த பங்காரு அடிகளாருக்கு வரவேற்பும், பாதபூஜையும் நடைபெற்றது. இதில் திரளான செவ்வாடை பக்தர்கள் கலந்து கொண்ட னர்.
இதைத் தொடர்ந்து நடந்த அன்னதானத்தை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் கோ.ப.செந்தில் குமார் தொடங்கி வைத்தார். மாலை 6 மணிக்கு நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை (21–ந்தேதி) அதிகாலை மங்கள இசை, அபிஷேகம் மற்றும் பங்காரு அடிகளாருக்கு வரவேற்பு பாத பூஜை நடைபெறுகிறது.
காலை 10 மணியளவில் சிறப்பு கலசவிளக்கு வேள்வி பூஜை நடக்கிறது. இதனை, பங்காரு அடிகளார் தொடங்கி வைக்கிறார்.
லட்சுமி பங்காரு அடிகளார், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், சக்தி பீடங்கள் இணைச் செயலாளர் ராஜேந்திரன் கலந்து கொள்கிறார்கள்.
சித்ரா பவுர்ணமியை யொட்டி மேல்மருவத்தூர் முழுவதும் செவ்வாடை பக்தர்களால் நிரம்பி வழிகிறது. அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, தங்கும் இடம் வசதிகள் சிறப் பாக செய்யப்பட்டு உள்ளன.
டி.எஸ்.பி. சிவசங்கர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை வந்த மத்திய மந்திரி வெங்கைய்யா நாயுடு விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
தமிழக சட்டசபை தேர்தலில் வேட்புமனு தாக்கல் இன்னும் தொடங்கவில்லை. பா.ஜனதா கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இறுதி பட்டியல் வெளியிட்ட பிறகு பிரசாரத்துக்கு நான் வருவேன். அப்போது தமிழ்நாட்டு அரசியல் குறித்து பேசுவேன்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க முடியவில்லை என்று சில மத்திய மந்திரிகள் கூறியுள்ளனர். தேர்தல் நேரத்தில் ஒருவர் மீது ஒருவர் குறை கூறுவது சகஜம். அந்த அமைச்சர் தனது துறை ரீதியாக சந்திக்க முடியவில்லை என்று தனது ஆதங்கத்தை தெரிவித்து இருக்கலாம். மத்திய–மாநில அமைச்சர்கள் மக்களுக்கு சேவை செய்யத்தான் இருக்கிறார்கள். எனவே ஒருவருக்கொருவர் குறை கூறுவது சரியல்ல.
தமிழ்நாட்டில் நடப்பது சட்டமன்ற தேர்தல். பாராளுமன்ற தேர்தல் அல்ல. பாராளுமன்ற தேர்தலில் தான் நாடு முழுவதும் மோடி அலை வீசியது.
இது சட்டசபை தேர்தல் மோடியும் போட்டியிடவில்லை. மோடி புகழ் இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பரவி வருகிறது.
எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் மீது அக்கறை கிடையாது மக்கள் நலனை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ்.சை எதிர்ப்பதுதான் அவர்களது நோக்கமாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். மக்களுக்கு எதிரான இயக்கம் அல்ல. மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகிறது. அதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஊழயற்ற மக்களுக்கு நன்மையான ஆட்சி கொடுக்க வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் திட்டம்.
காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் தங்களை மதசார்பற்ற கட்சி என்று கூறி வருகிறது. ஆனால் அவர்கள் வன்முறைக்கும் பயங்கரவாதத்துக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ், இடதுசாரி சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து உள்ளது. ஆனால் கேரளாவில் எதிர் எதிர் அணியில் உள்ளது. இதனை மக்கள் நன்கு அறிவார்கள் கேரளாவில் பாரதீய ஜனதா வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, சிட்கோ ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
எனவே மறைமலைநகர், தொழிற்பேட்டை, காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, திருக்கச்சூர், பேரமனூர், சிங்கபெருமாள்கோவில், செங்குன்றம், மல்ரோஜாபுரம், கோவிந்தாபுரம், சட்டமங்கலம், கூடுவாஞ்சேரி டவுன், பெருமாட்டுநல்லூர், காயாரம்பேடு, நந்திவரம், மகாலட்சுமி நகர், கோவிந்தராஜபுரம், மாடம்பாக்கம், தைலாவரம், ஊரப்பாக்கம், ஆதனூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
இந்த தகவலை மறைமலைநகர் மின்வாரிய செயற்பொறியாளர் மாலதி ஸ்ரீ தெரிவித்து உள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் ஜெயலலிதா, இன்று காஞ்சிபுரம் மாவட்டம் வாரணவாசியில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள 18 தொகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் எனது தலைமையிலான அரசு ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. முந்தைய தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம்.
முந்தைய தேர்தல் வாக்குறுதிகளை அப்படியே தி.மு.க வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத நிலையில் தி.மு.க. பொய்ப்பிரச்சாரம் செய்கிறது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மூலம் மின்திருட்டு கண்டறியப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சினை, கச்சத்தீவை தாரை வார்த்தது ஆகியவற்றிற்கு தி.மு.க.வே காரணம். வெள்ள பாதிப்பின்போது எனது தலைமையிலான அரசு விரைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டது. தொற்றுநோய் ஏற்படாமல் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. அரசு மேற்கொண்ட வெள்ள நிவாரணப் பணியை மத்திய அரசின் குழு பாராட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் மதுவிலக்கு பற்றி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தற்போது பேசி வருகின்றனர். நான் ஏற்கனவே கூறியதுபோல், மதுவிலக்கு பற்றி பேசுவதற்கு கருணாநிதிக்கோ, தி.மு.க.வுக்கோ தகுதி கிடையாது. தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நப்பாசையில் மதுவிலக்கு பற்றி பேசுகின்றனர்.
பூரண மதுவிலக்கு குறித்து தொடர்ந்து தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளது. ஆட்சிக்கு வந்ததும் முதல் பணியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கருணாநிதி கூறினார். பூரண மதுவிலக்கு தி.மு.க.வின் கொள்கை என்றால் அதுபற்றி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மதுவிலக்கு சட்டம் இயற்றப்படும் என்றும், டாஸ்மாக் கலைக்கப்பட்டு மதுவிற்பனை முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் கூறியிருக்கிறார்கள். பூரண என்ற வார்த்தை அதில் இல்லை. மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் எண்ணமே கருணாநிதிக்கும், தி.மு.க.வுக்கும் கிடையாது.
என்னைப்பொருத்தவரை பூரண மதுவிலககு என்பதே எனது கொள்கையாகும். ஆனால், அதனை ஒரே கையெழுத்தில் கொண்டு வருவது என்பது இயலாது. படிப்படியாகத் தான் கொண்டுவர முடியும். அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற இலக்கு எய்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கோடை வெயில் கடந்த 2 நாட்களாக அதிகமாக உள்ளதால் மாமல்லபுரம் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது.பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். கடும் வெயிலால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்ததால் மாமல்லபுரம் ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில் போன்ற முக்கிய இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
வெயிலின் தாக்கம் குறைந்த பின்னரே பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரிக்கும் என்று தெரிகிறது.
நேற்று கடும் வெயில் காரணமாக பயணிகள் கூட்டம் இல்லாததால் கடற்கரை கோவிலின் பிரதான நுழைவு வாயிலில் உள்ள பசுமை புல் வெளிகளில் காகங்கள் மட்டுமே இரை தேடி கொண்டிருந்தன.
நடிகர் விஜய் நடித்த ‘தெறி’ படம் கடந்த 14–ந்தேதி ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் சில தியேட்டர்களில் படம் ரிலீஸ் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் செங்கல்பட்டு பகுதியில் ‘தெறி’ பட திருட்டு சி.டி. விற்கப்படுவதாக நகர விஜய் மக்கள் இயக்க தலைவர் பூக்கடை ஜின், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் பாலாஜி உள்ளிட்ட 50–க்கும் மேற்பட்டோர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜோசப்பிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் தீவிர கண்காணப்பில் ஈடுபட்டனர். அப்போது செங்கல்பட்டு ராஜாஜி தெருவில் உள்ள கடையில் ‘தெறி’ பட சி.டி. விற்பது தெரிந்தது.
போலீசார் விரைந்து சென்று செங்கல்பட்டு பெரியமணியக்காரர் தெருவை சேர்ந்த முருகனை கைது செய்தனர். அவனிடம் இருந்து 15 ‘தெறி’ பட சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
செங்கல்பட்டு பகுதியில் தெறி படம் ரிலீசாகாத நிலையில் படத்தின் திருட்டு சி.டி. விற்கப்படுவது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம், ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (36). சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். சொந்த வேலை காரணமாக ஆற்காடு வந்த அவர் நேற்று பணிக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி சென்றார்.
சென்னை–பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ராஜகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
பெரிய காஞ்சீபுரம் அப்பாராவ் தெருவைச் சேர்ந்தவர் அப்பாதுரை (72). இவர் தனது உறவினர் வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காஞ்சீபுரம் பொன்னேரிக்ரை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஷேர்ஆட்டோ சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அப்பா துரையை அக்கம் பக்கத்தினர் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமைனயில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.






