என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    மேட்டூர் அணை டெல்டா பகுதிகளை பார்வையிட்ட மத்திய நிபுணர் குழுவினருடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார். மத்திய நிபுணர் குழுவினரின் அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் 17-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
    ஆலந்தூர்:

    தமிழக-கர்நாடகாவில் உள்ள அணைகளில் நீர் இருப்புகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மத்திய நீர்வள ஆணைய தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் 13 பேர் கொண்ட உயர்நிலை தொழில்நுட்ப குழுவை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது.

    இந்த குழுவினர் கடந்த 2 நாட்களாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள், காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகள் பாசன பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேட்டூர் அணையை ஞாயிறு அன்று பார்வையிட்ட ஜா குழு அணையின் வலது கரையையும் அணையின் நீர் இருப்பு நிலவரத்தையும் ஆய்வு செய்தது. வருவாய் துறை, மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தனர். அப்போது அங்கு வந்த விவசாயிகள் ஜா குழுவினரை சந்தித்து தங்கள் நிலைமைகளை எடுத்து கூறினார்கள். அவர்களின் கருத்துக்களை தொழில் நுட்ப குழுவினர் கவனமாக கேட்டறிந்தனர்.

    அதன் பிறகு திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகளுக்கு சென்று பாசன பகுதிகளை பார்வையிட்டனர். அங்கும் விவசாயிகள் தங்கள் கஷ்டங்களை எடுத்து கூறினார்கள்.

    2 நாள் ஆய்வுகளை முடித்துக்கொண்டு ஜா குழுவினர் நேற்றிரவு சென்னை வந்தனர்.

    சென்னை விமான நிலையம் அருகே உள்ள ராடிசன் ஓட்டலில் தங்கிருந்த மத்திய குழுவினரை தமிழக தலைமை செயலாளர் ராமமோகன ராவ் இன்று காலை 9.30 மணியளவில் சந்தித்து பேசினார்.

    அப்போது தமிழகத்திற்கான நீர் தேவை குறித்து ஜி.எஸ்.ஜாவிடம் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் விரிவாக எடுத்துரைத்தார்.

    அதன்பிறகு ஜா தலைமையிலான குழுவினர் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

    முன்னதாக சென்னை விமான நிலையத்தில் ஜி.எஸ்.ஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    உச்சநீதிமன்ற உத்தரவுபடி கர்நாடகா-தமிழக அணைகளில் நீர் இருப்பை பார்வையிட்டோம். கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி பாசனப்பகுதிகள், நீர்பிடிப்பு பகுதிகளில் ஆய்வு செய்தோம். அதன்பிறகு மேட்டூர் அணையின் நீர் இருப்பு நிலவரத்தையும் ஆய்வு செய்தோம்.

    காவிரி டெல்டா பாசன பகுதிகளை 2 நாட்களாக முழுமையாக ஆய்வு செய்தோம். சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட கலெக்டர்களிடமும், பொதுப் பணித்துறை அதிகாரிகளிடமும், விவசாயிகளிடமும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

    தமிழக விவசாயிகள் கொடுத்துள்ள தகவல், விவரங்கள் அனைத்தும் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசின் தலைமை செயலாளர் இன்று என்னை சந்தித்து பேசினார். மாநில அரசு கொடுத்துள்ள கோரிக்கைகள் குறித்தும் விவசாயிகள் தந்துள்ள மனுக்கள் குறித்தும் ஆலோசித்தோம். விவசாயிகளின் கோரிக்கைகளையும் பரிசீலித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    எங்களது அறிக்கையை வருகிற 17-ந்தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அடுக்குமாடி கட்டுமான பணியின் போது 12-வது மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி பலியானர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒப்பந்ததாரர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

    திருப்போரூர்:

    கேளம்பாக்கத்தை அடுத்த தையூர், செங்கன்மால் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றின் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகள் நடை பெற்று வருகின்றன.

    இதில் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த முத்தாகர்ஷேக் (22) பெயின்டிங் வேலை செய்து வந்தார். அவர் 12-வது மாடியில் கிரில் கேட்டிற்கு பெயின்டிங் அடித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    இது குறித்து கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சரியான பாதுகாப்பு வசதியின்றி தனியார் நிறுவனம் வேலை வழங்கியதால் 12-வது மாடியிலிருந்து தொழிலாளி கீழே விழுந்து இறந்தது தெரியவந்தது.

    இதையடுத்து மேடவாக்கத்தைசேர்ந்த ஒப்பந்தக்காரர் சதாசிவம், மேனேஜர் ஜெயராமன், சூபர்வைசர் நரேஷ்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    திருப்போரூர் அருகே 11-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த சிறுங்குன்றம் கிராமம் செல்லியம்மன்கோயில் தெருவில் வசித்து வருபவர் ராமு. இவருடைய மகள் பவித்ரா (17). திருப்போரூர் அரசு மகளிர் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 9-ந்தேதி வீட்டில் இருந்த பவித்ராவை சரியாக படிக்கவில்லை என அவருடைய அக்காள் திட்டியதாக கூறப்படுகிறது.

    இதில் மனமுடைந்த பவித்ரா வீட்டில் யாரும் இல்லாத போது தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மேல்சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து திருப்போரூர் இன்ஸ்பெக்டர் முத்துக் குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காவிரி பிரச்சினையில் பிரதமரை குறை சொல்லி திசை திருப்புகின்றனர் என தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியில் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    காவிரி பிரச்சினையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசுவதற்காக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதா கிருஷ்ணன், எச்.ராஜா, நான் ஆகியோர் டெல்லி செல்கிறோம். தமிழகத்தில் நிலவும் காவிரி பிரச்சினை தொடர்பாக அவரிடம் விவாதிக்க உள்ளோம்.

    காவிரி பிரச்சினையில் தமிழக பா.ஜனதா தொடர்ந்து விவசாயிகள் பக்கம் இருந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது. ஆனால் காவிரி பிரச்சினையில் மத்திய அரசையும், பிரதமரையும் குறை சொல்லி திசை திருப்புகின்றனர்.

    விவசாயிகளுக்கு ஆதரவாக திருநாவுக்கரசர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். மத்திய அரசையும் அவர் குறை கூறி இருக்கிறார்.

    கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சி நடத்தியது. அப்போது ஏன் அவர்கள் காவிரி பிரச்சினையை தீர்க்கவில்லை. காவிரி நீர் மேலாண்மை வாரியம் ஏன் அமைக்கவில்லை என்று திருநாவுக்கரசர் விளக்கம் சொல்ல வேண்டும்.

    காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் தமிழக பா.ஜனதா உறுதியாக உள்ளது.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் அப்பல்லோ மருத்துவ மனைக்கு சென்று அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். எனவே மாற்று முதல்-அமைச்சரோ அல்லது பொறுப்பு முதல்- அமைச்சரோ நியமிக்கப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குரோம்பேட்டையில் என்ஜினீயர் வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தாம்பரம்:

    குரோம்பேட்டை, ராதா நகர் நம்மாழ்வார் தெருவை சேர்ந்தவர் ராமநாதன். சாப்ட்வேர் என்ஜினீயர். சிறுசேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு ராமநாதன் வீட்டை பூட்டிவிட்டு தனி அறையில் குடும்பத்துடன் தூங்கினார். நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்து புகுந்தனர்.

    பின்னர் பீரோவை உடைத்த அதில் இருந்த ரூ.17 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்தது ராமநாதனுக்கு தெரியவில்லை. இன்று அதிகாலை எழுந்த போது தான் பணம் கொள்ளை போனது தெரிந்தது.

    மறைத்து வைத்திருந்த 10 பவுன் நகையை கொள்ளை கும்பல் கவனிக்காததால் அவை தப்பியது.

    வீட்டில் உரிமையாளர் இருக்கும் போதே கொள்ளையர்கள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மருத்துவ கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் அவரது காதலர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    கேரளாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரின் மகள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு எம்.எஸ்.கார்டியாலஜி மேற்படிப்பு படித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 11-ந்தேதி இரவு மாமல்லபுரம் ஒத்தவாடை பிரதான குறுக்கு தெருவில் உள்ள தனியார் விடுதியில் காதலருடன் தங்கினார். காதலரின் நண்பரும் அடுத்த அறையில் தங்கினார். காதலர்கள் மது அருந்தி உல்லாசமாக இருந்துவிட்டு தூங்கினர்.

    மறுநாள் அதிகாலை 4 மணிக்கு மருத்துவ கல்லூரி மாணவி திடீரென அலறினார். அலறல் சத்தம் கேட்டு விடுதி ஊழியர் ஒருவர் அங்கு சென்றார். மற்ற ஊழியர்களும் அங்கு வந்தனர். அப்போது தன்னை யாரோ பலாத்காரம் செய்ததாக கூறினார். இது குறித்து அந்த மாணவி மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதைத்தொடர்ந்து, போலீசார் அங்கு சென்று அந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவ பரிசோதனையில் இருவரின் உயிர் அணுக்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர் விடுதி ஊழியரும் பரிசோதிக்கப்பட்டார். அந்த பெண்ணின் காதலர், காதலரின் நண்பர் ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர். மருத்துவ பரிசோதனைக்கும், விசாரணைக்கும் தாங்கள் அழைக்கும்போது வருமாறு கூறி, அப்போது அவர்களை போலீசார் விடுவித்தனர்.

    பின்னர் விசாரணைக்காக இருவரையும் போலீசார் அழைத்தபோது, அவர்கள் ஒத்துழைக்காமல் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    முதல் அமைச்சர் பற்றி அவதூறு பரப்பினால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்பிரமணிய சாமி கூறினார்.
    ஆலந்தூர்:

    பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, மும்பை செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைதான் முக்கியம். விடுதலைப்புலிகள், ஐ.எஸ்.ஐ.எஸ்., போன்ற அமைப்புகளின் செயல்பாடுகள் அதிகமாக உள்ளது. இந்து முன்னணி தலைவர்கள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதனால் மக்களிடம் அச்சம் ஏற்பட்டு உள்ளது.

    முதல்அமைச்சர்தான் அரசாங்கம் நடத்துகிறாரா? இல்லை முன்னாள் அரசு அதிகாரிகள் அரசாங்கத்தை நடத்துகிறார்களா? என தெரியவில்லை. இதனால் சிறிது காலம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் சரியாகும் வரை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கூறி உள்ளேன். இதற்காக கவர்னர் பல அமைச்சர்களை அழைத்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

    முதல்அமைச்சர் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் உள்ளார். மேலும் மருத்துவமனையில் நீண்ட நாள் தங்கி இருக்க வேண்டும் என தெளிவாக அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்துக்கு தற்காலிமாக ஒரு முதல்-அமைச்சரை நியமிக்க வேண்டும்.  

    தமிழக முதல்-அமைச்சர் பற்றி அவதூறாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரப்பினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. நாட்டில் கலவரம் ஏற்படுத்த இதுபோன்ற செய்திகளை பரப்புகின்றனர்.

    தமிழகம் தனது சொந்த காலில் நிற்கவேண்டும். காவிரியில் இருந்து தண்ணீர் கேட்டு நிற்பதை விட கடலில் இருந்து குடிநீரை உருவாக்கி மக்களுக்கு வழங்கவேண்டும். தமிழகத்தில் 24 மணி நேரமும் குழாய்களில் தண்ணீர் வினியோகம் செய்யப்படவேண்டும்.

    முதலில் இந்த பிரச்சினைகளை தீர்த்து வைத்து விட்டு பின்னர் காவிரியில் நமது உரிமையை விட்டு கொடுக்காமல் போராடவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மாமல்லபுரம் விடுதியில் மருத்துவ மாணவியை 2 பேர் பலாத்காரம் செய்தது உறுதி என பரிசோதனையில் தகவல் வெளியாகியுள்ளது
    மாமல்லபுரம்:

    கேரளாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் மகளான மருத்துவ கல்லூரி மாணவி கடந்த மாதம் 11-ந்தேதி மாமல்லபுரம் ஓத்தவாடை பிரதான குறுக்குத்தெருவில் உள்ள விடுதி ஓன்றில் 2 ஆண் நண்பர்களுடன் வந்து தங்கினார்.

    அதில் ஒருவர் அவரது காதலர் என கூறப்படுகிறது. 2 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு ஒரு அறையில் காதலனுடன் மது அருந்தி உல்லாசமாக இருந்துள்ளார்.

    மறுநாள் காலையில் மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்தில் மாணவி ஒரு புகார் கொடுத்தார். அதிகாலையில் தனது அறைக்குள் வேறுநபர் ஓருவர் வந்ததாகவும் அவர் பலாத்காரம் செய்ததாகவும் புகார் அளித்தார்.

    பின்னர் செங்கல்பட்டு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பரிசோதித்த போது 2 பேர் அவரை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    தற்போது சந்தேகத்துக்கு இடமான விடுதி ஊழியர் ஓருவருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது மருத்துவ கல்லூரி மாணவியுடன் வந்த 2 பேரும் 1 மாதம் ஆகியும் இன்னும் பரிசோதனைக்கு வந்து போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் புறக்கணிப்பதால் வழக்கு நிலுவையில் உள்ளது.

    போலீசார் கோர்ட்டை அணுகி இருவருக்கும் பிடிவாரண்டு பெற முடிவு செய்துள்ளனர். அவர்கள் 2 பேரையும் பரிசோதித்த பிறகுதான் குற்றவாளிகள் யார் என்று தெரியவரும். இந்த வழக்கில் 2 பேர் குற்றவாளி என்பது உறுதி ஆகியுள்ளது.
    சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று தேசிய பாதுகாப்பு படையினர் சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
    சென்னை:

    சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று தேசிய பாதுகாப்பு படையினர் சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் மெட்ரோ ரெயிலில் திடீரென்று தீவிரவாதிகள் அச்சுறுத்தும் வேளையில் பயணிகளை எப்படி காப்பாற்றுவது? என்பது குறித்து பாதுகாப்பு படையினர் செய்து காண்பித்தனர்.

    3 குழுக்களாக பிரிந்து மெட்ரோ ரெயிலின் இருபுறமும் சென்று திடீரென்று ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே புகுந்து பயணிகளை காப்பாற்றுவது, நவீன ஆயுதங்கள் கொண்டு தாக்குவது உள்ளிட்டவைகளை செய்துகாட்டியதை பயணிகள் ஆர்வத்துடன் பார்த்தனர். மேலும், நவீன ரக ஏணி, ஜன்னல் கண்ணாடி உடைக்கும் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களையும் பயணிகளுக்கு காண்பித்தனர்.

    ஏற்கனவே கடந்தாண்டு இறுதியில் கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இதுபோன்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    நந்திவரத்தில் வீட்டு முன் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தையை கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.
    வண்டலூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் நந்திவரம் சின்னகுளக்கரை தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 35). இவரது குழந்தை சூரியபிரகாஷ் (2½). நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் குழந்தை சூரியபிரகாஷ் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஒரு பெண் திடீரென குழந்தையை கடத்தி சென்றார்.

    குழந்தை அழும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த குழந்தையின் தாய் வெளியே ஓடிவந்து பார்த்த போது யாரோ ஒரு பெண் தனது குழந்தையை கடத்திச் செல்வது தெரிய வந்தது.

    இதனையடுத்து அங்கு இருந்தவர்கள் அந்த பெண்ணை துரத்திச்சென்று குழந்தையை மீட்டனர். பின்னர் அந்த பெண்ணை கூடுவாஞ்சேரி போலீசில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து குழந்தையின் தந்தை செந்தில் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து குழந்தையை கடத்தியதாக பிடிபட்ட பெண்ணை விசாரித்தபோது அவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி (50) என்பது தெரியவந்தது.

    போலீசார் அவரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி, அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    காவிரி பிரச்சனை குறித்து பிரதமர் மோடியிடம் முறையிடுவேன் என்று புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    காவிரி நதிநீர் கண்காணிப்பு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா தலைமை செயலாளர்கள் இடம் பெற்று உள்ளனர்.

    புதுவை மாநிலம் சார்பாக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உறுப்பினராக இருப்பார்.

    காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள நானும், அதிகாரிகளும் செல்கிறோம்.

    கர்நாடகா அரசு காவிரி நீரை முறையாக திறந்து விட்டால் புதுவைக்கு 7 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் திறந்து விடும். காவிரி நீர் பிரச்சனையால் எங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    மேலும் கர்நாடக அரசு, மத்திய அரசிடம் முறையாக அனுமதி பெறாமல் ஒரு சில தடுப்பு அணைகளையும் கட்டி தண்ணீரை தேக்கி உள்ளது. அதனையும் கண்காணிப்பு குழுவிடம் கூறுவோம்.

    ஏற்கனவே நான் பிரதமரை சந்திக்க அனுமதி வாங்கி உள்ளேன். திட்டமிட்டபடி அவரை நாளை சந்தித்து காவிரி பிரச்சினை குறித்து முறையிடுவேன்.

    காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் கூறியும் அதனை மத்திய அரசு அமைக்கவில்லை. இனியும் காலம் தாழ்த்தாமல் காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தேசிய தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து பேசுகிறேன். அப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கர்நாடக அரசு நியாயமாக நடக்கும்படி கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்கும்படி கேட்டுக்கொள்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    செங்கல்பட்டு அருகே அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வடமாநில பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பெண் பயணிகள் அவருக்கு பிரசவம் பார்த்தனர்.
    செங்கல்பட்டு:

    திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று இரவு சென்னைக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது.

    இன்று காலை 8.15 மணிக்கு செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் 5-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது.

    8.20 மணிக்கு செங்கல்பட்டு ரெயில் நிலையத்திலிருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சிறிது தூரம் சென்ற போது பொது பெட்டியில் இருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவர் வலியால் துடித்தார்.

    உடனே மற்ற பயணிகள் ரெயில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். இதுபற்றி அவர்கள் ரெயில் நிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் ரெயில்வே ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவித்தார்.

    ஆனால் மருத்துவ குழுவினர் வருவதற்குள் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டு ரெயிலிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. பெண் பயணிகள் அவருக்கு பிரசவம் பார்த்தனர்.

    அதன்பின் வந்த மருத்துவ குழுவினர் தாய்-குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்சில் ரெயில்வே ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் தாய்-குழந்தையும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    வடமாநிலத்தைச் சேர்ந்த அப்பெண் பெயர் விவரம் எதுவும் தெரியவில்லை. அவரிடம் ரெயில்வே ஊழியர்கள் இந்தியில் பேசி விவரங்களை கேட்டனர். ஆனால் அவர் எதுவும் கூறவில்லை.

    அவர் ரெயிலில் தனியாக வந்துள்ளார். உடன் யாரும் வராததால் அவர் பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை.
    ×