என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டு முன் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தையை கடத்திய பெண் கைது
    X

    வீட்டு முன் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தையை கடத்திய பெண் கைது

    நந்திவரத்தில் வீட்டு முன் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தையை கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.
    வண்டலூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் நந்திவரம் சின்னகுளக்கரை தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 35). இவரது குழந்தை சூரியபிரகாஷ் (2½). நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் குழந்தை சூரியபிரகாஷ் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஒரு பெண் திடீரென குழந்தையை கடத்தி சென்றார்.

    குழந்தை அழும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த குழந்தையின் தாய் வெளியே ஓடிவந்து பார்த்த போது யாரோ ஒரு பெண் தனது குழந்தையை கடத்திச் செல்வது தெரிய வந்தது.

    இதனையடுத்து அங்கு இருந்தவர்கள் அந்த பெண்ணை துரத்திச்சென்று குழந்தையை மீட்டனர். பின்னர் அந்த பெண்ணை கூடுவாஞ்சேரி போலீசில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து குழந்தையின் தந்தை செந்தில் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து குழந்தையை கடத்தியதாக பிடிபட்ட பெண்ணை விசாரித்தபோது அவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி (50) என்பது தெரியவந்தது.

    போலீசார் அவரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி, அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    Next Story
    ×