என் மலர்tooltip icon

    கடலூர்

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் முடக்கப்பட்ட மின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று கனிமொழி எம்.பி. தேர்தல் பிரசாரம் செய்தார்.
    கடலூர்:

    கடலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் இள.புகழேந்தி, புவனகிரி தி.மு.க. வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து கனிமொழி எம்.பி. கடலூர், புவனகிரி பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–

    மக்களுக்காக உழைக்கிற தலைவர் கருணாநிதி. 5 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உங்களை வந்து சந்தித்தாரா? செய்வீர்களா, செய்வீர்களா? என்று கேட்ட முதல்–அமைச்சர் மறுபடியும் வந்தாரா?

    வெள்ளம் வந்து பாதிப்பு ஏற்பட்ட அந்த நேரத்தில் இந்த ஆட்சியில் உதவிக்கரம் நீட்டினார்களா? நிவாரணம் தான் வழங்கப்பட்டதா? சென்னை, கடலூரில் வெள்ள பாதிப்புக்கு அ.தி.மு.க. ஆட்சி தான் காரணம். கடலூர் ஆறுகள் கடலில் கலக்கும் இடம். உப்பனாறு, கெடிலம் ஆற்றின் முகத்துவாரத்தை தூர்வாராததால் தான் இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இள.புகழேந்தி, எம்.எல்.ஏ.வாக இருந்த போது முகத்துவாரங்கள் தூர்வாரப்பட்டது. அதன்பிறகு தூர்வாரப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சியின் அக்கறையின்மை. வெள்ளத்தில் மக்களை காப்பாற்ற, மக்களின் பிரச்சினைகளை கூட தீர்க்கவில்லை. பல பேரிடர்கள் ஒன்றன்பின் ஒன்றாக தாக்குதல் நடத்தியும், இந்த ஆட்சியில் நிரந்தர தீர்வு காண முயற்சி எடுக்கவில்லை.

    இங்கு வெள்ளம் வந்த போது முதலில் வந்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை மேற்கொண்டது தி.மு.க.வினர். அ.தி.மு.க. ஆட்சியில் என்ன செய்தார்கள், தொண்டு நிறுவனங்கள் கொண்டு வந்த வாகனங்களை பிடித்து அதில் ஸ்டிக்கர் ஒட்டினார்கள்.

    தமிழ்நாட்டில் எவ்வித வளர்ச்சியும் இல்லை. சட்டம்–ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. மின் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. 5 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் ஒரு யூனிட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யவில்லை. நிலக்கரி வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. இவர்கள் செய்யும் ஊழலுக்கு மின்கட்டணம் மூலம் மக்கள் விலை கொடுக்க வேண்டியதிருக்கிறது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முடக்கப்பட்டுள்ள மின்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்விக்கடன் ரத்து செய்யப்படும். மதுவிலக்கு கொண்டு வரப்படும். கடலூர் துறைமுகம் ஆழப்படுத்தி விரிவாக்கம் செய்யப்படும். சிப்காட் ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கழிவுகள் சுத்திகரிக்கப்படும். கடலூரில் அரசு மருத்துவக்கல்லூரி செயல்படுத்தப்படும்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி சொன்னதை செய்வார். கடந்த தி.மு.க. ஆட்சியில் முதல்–அமைச்சராக கருணாநிதி பொறுப்பேற்றதும் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, விவசாயிகளின் ரூ.7 ஆயிரம் கோடி வங்கிக்கடனை தள்ளுபடி செய்தார். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்களை பார்க்க முடியவில்லை.

    தமிழகத்தில் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் வேலையில்லாமல் இளைஞர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் புவனகிரி வெள்ளாற்றில் தடுப்பணை கட்டப்படும். புவனகிரியில் உள்ள நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்கப்படும்.

    சிதம்பரம் நகரில் நடராஜர்கோவில் தேர் ஓடுவதற்கு சிமெண்ட் சாலை அமைக்கப்படும். சிதம்பரம் நகர மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும். மழைக்காலங்களில் ஆற்றில் இருந்து வெளியேறும் முதலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    அ.தி.மு.க. இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைப் பார்த்து, அதற்கு மாறாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட இருக்கும் பொய்யான தேர்தல் அறிக்கையை கண்டு மக்கள் ஏமாறாமல் தி.மு.க.விற்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.
    தேர்தல் பிரசாரத்தின்போது திருமாவளவன் கார்–போலீஸ் ஜீப் மீது கல்வீசிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன் நேற்று ஸ்ரீமுஷ்ணம் அருகே கொழைச்சாவடிக்குப்பத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு காரில் சென்றார். அவருடன் கட்சி நிர்வாகிகளும், பாதுகாப்புக்காக போலீசாரும் உடன் சென்றனர். அதைத்தொடர்ந்து அவர் அங்கு பிரசாரத்தை முடித்துவிட்டு புளியங்குடி நோக்கி சென்ற போது, யாரோ மர்ம நபர்கள் திடீரென கல்வீசி தாக்கினர்.

    இதில் திருமாவளவன் வாகனத்துக்கு பின்னால் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கார் மற்றும் போலீஸ் ஜீப் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.

    இது பற்றி அறிந்ததும் திருமாவளவன் தனது காரை நிறுத்தி பார்வையிட்டார். கட்சி நிர்வாகிகளும் திரண்டனர். கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்திய திருமாவளவன் பிரசாரத்துக்காக புளியங்குடிக்கு சென்றார்.

    இந்த கல்வீச்சு சம்பவம் தொடர்பாக கொழைசாவடி குப்பத்தைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    என்னை எதிர்த்து நிற்பவர்கள் என்னை எப்படியாவது வீழ்த்தி விடவேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    இன்று காலை ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்தில் உள்ள ஆனந்தகுடி பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–

    நான் முன்பு அ.தி.மு.க., மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி வைத்திருந்தேன். தற்போது அந்த கட்சிகளை எதிர்த்து மக்கள் நல கூட்டணி என்ற மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறேன். எங்களது கூட்டணியின் நோக்கம் ஊழலற்ற ஆட்சி அமைப்பது, மதுக்கடைகளை ஒழிப்பது.

    நான் சிதம்பரம் எம்.பி. தொகுதியில் 2 முறை போட்டியிட்டேன். 1 முறை வெற்றி பெற்றேன். 2–வது முறையாக வெற்றி வாய்ப்பை இழந்தேன். அந்த தேர்தலில் நான் தோல்வி அடைந்தாலும் சிதம்பரம் எம்.பி. தொகுதிக்கு உட்பட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றிருந்தேன்.

    இந்த தேர்தலில் நான் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடப்போவதாக ஊடகங்களில் தகவல் வெளியாகின. கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் தொகுதி என்னை தாய் போன்று அரவணைக்கும் தொகுதியாகும். அதனால் நான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன்.

    என்னை எதிர்த்து நிற்பவர்கள் என்னை எப்படியாவது வீழ்த்தி விடவேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள். பலகோடி செலவு செய்கிறார்கள். என்னிடம் இருப்பது நான் உடுத்தி இருக்கும் உடை மட்டும்தான். நான் உங்களை நம்பி தேர்தலில் போட்டியிடுகிறேன்.

    பணத்துக்காக நீங்கள் வாக்களித்தால் ஓட்டுகள் சிதறும். வெற்றி வாய்ப்பு பாதிக்கும். எனவே நீங்கள் ஓட்டுகளை சிதறாமல் மோதிர சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அப்போது நான் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

    அ.தி.மு.க. அரசு மதுக்கடையை மூடாது. தமிழ்நாட்டில் கிராமங்கள் தோறும் மதுக்கடைகள் திறந்ததால் இளம் வயதிலேயே பல பெண்கள் கணவனை இழந்து கைக் குழந்தையுடன் தவிக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். அதற்கு நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் கொக்கரசன் பேட்டை, எசலூர், மதகளி மாணிக்கம் ஆகிய பகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்தார்.

    புவனகிரி தொகுதியில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அங்கு மட்டும் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

    புவனகிரி:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் அதிகபட்சமாக புவனகிரி தொகுதியில் 17 வேட்பாளர்களும், குறைந்த பட்சமாக காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

    16–ந் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நோட்டா சின்னம் உள்பட 16 சின்னங்கள் மட்டுமே பொருத்த முடியும்.

    புவனகிரி தொகுதியில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அங்கு மட்டும் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதர தொகுதிகளில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படும்.

    இந்த முறை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளரின் படமும் இடம் பெற உள்ளது.

    இதுதவிர எந்த கட்சிக்கு ஒட்டுப்போட்டோம் என்பதை வாக்காளர்கள் அறியக்கூடிய வசதி கடலூர் சட்டசபை தொகுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    நெய்வேலியில் என்.எல்.சி. ஊழியர் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    நெய்வேலி:

    பண்ருட்டியை அடுத்த வடக்கு சேப்ளாநத்தம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமரன் (வயது52) என்.எல்.சி. ஊழியர். அதே பகுதியை சேர்ந்தவர் பாபு(25). இவர்கள் இருவருக்கும் வீட்டு மனை தொடர்பாக வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    நேற்று விஜயகுமரன் மோட்டார் சைக்கிளில் பஸ் நிலையத்துக்கு சென்றார்.

    அப்போது வழி மறித்து பாபு அவரது தந்தை காசி உறவினர் முரளி ஆகிய 3 பேரும் சேர்ந்து உருட்டு கட்டையால் விஜயகுமரனை தாக்கினர்.

    இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து மந்தாரகுப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பாபுவை கைது செய்தனர். முரளி காசி ஆகியோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    பணம் கொடுக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் சட்டசபை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிதம்பரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–

    டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கூறி சசிபெருமாள் கடும் போராட்டம் நடத்தினார். அந்த போராட்டத்தில் அவர் இறந்தார். அவரது மரணத்துக்கு முதல்–அமைச்சரோ, அன்புமணி ராமதாசோ அனுதாபம் கூட வெளியிடவில்லை.

    டாஸ்மாக் கடைகளை மூடினால்தான் மக்கள் நலமுடன் வாழ முடியும். தமிழகத்தில் மதுவை ஒழிக்கும் சக்தி எங்களிடம் மட்டுமே உள்ளது. பணம் கொடுக்கும் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்.

    மக்கள் ஆதரவு எங்களுக்கு உள்ளதால், நாங்கள் ஆட்சிக்கு வருவது உறுதி. விஜயகாந்த் முதல்–அமைச்சரானால், அவர் நல்லாட்சி தருவார். ம.தி.மு.க. நிர்வாகிகள் பூத் செலவுக்கு பணம் கேட்டால் என்னிடம் தகவல் சொல்லுங்கள். அவர்களை கட்சியை விட்டு நீக்கிவிடுகிறேன்.

    ராணுவத்தில் பணிபுரியும் இஸ்லாமியர்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு செல்வதற்காக விடுமுறை விட காரணமாக இருந்தவன் நான்தான்.

    பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றவுடன் அரசாங்க ஊழியர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பயிற்சி அளிக்க வேண்டும் என்று கூறினார். இது குறித்து அவரிடம் நான் பேசி தடுத்தேன். இவையெல்லாம் வாக்குக்காக அல்ல.

    அ.தி.மு.க., தி.மு.க. கட்சி கள் ஆகிய 2 கட்சிகளும் மது மற்றும் ஊழலால் தமிழ்நாட்டை பாழ்படுத்தி விட்டனர். இதை மாற்ற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க.–த.மா.கா. மக்கள் நல கூட்டணி.

    சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்போம் என்பதை பற்றி எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். இதேபோல் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பாக இருப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடலூரில் வாக்காளர்களுக்கு கொடுக்க லாரியில் குடம் கடத்த முயற்சி செய்ததால் அ.தி.மு.க.வினருக்கும் –பா.ம.க.வினருக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் ஆக்கர் தெருவில் உள்ள ஒரு புதிய வீட்டின் முன்பு நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் மினிலாரி வந்து நின்றது. அந்த வீட்டில் இருந்த ஏராளமான பிளாஸ்டிக் குடங்களை சிலர் லாரியில் ஏற்றினர். அதை வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அ.தி.மு.க.வினர் முயற்சி செய்வதாக பா.ம.க.வினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக பா.ம.க.வினர் விரைந்து வந்து லாரியில் குடங்களை ஏற்றுவதை தடுத்தனர்.

    மேலும் அந்த லாரி அங்கிருந்து செல்லாமல் இருக்க டயரில் இருந்த காற்றை பிடுங்கி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பா.ம.க. வேட்பாளர் பழ.தாமரைகண்ணன் ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார். அ.தி.மு.க.வினரும் திரண்டனர்.

    இருதரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் ஏராளமான போலீசாரும் விரைந்து வந்தனர். இதற்கிடையே அந்த லாரி அங்கிருந்து கிளம்பியது. ஆனால் அதை தடுத்து நிறுத்த சம்பவ இடத்தில் இருந்த போலீசார் எந்தவித முயற்சியும் செய்யவில்லை. அந்த லாரியில் சென்ற அ.தி.மு.க.வினர் சற்று தூரத்தில் லாரியை நிறுத்தி விட்டு, காலி மனைக்குள் குடங்களை வீசியெறிந்து விட்டு லாரியை ஓட்டிச்சென்றனர்.

    இதனால் பா.ம.க. வேட்பாளர் பழ.தாமரைகண்ணன் கோபமடைந்தார். போலீசாரிடம் லாரியை தப்ப விட்டது ஏன்? என்று கேட்டார். இதனால் அவருக்கும் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த தகவலை அறிந்த கடலூர் தாசில்தார் அன்பழகன் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது வேட்பாளர் தாமரைக்கண்ணன் அவரிடம் குடங்கள் இருந்த வீட்டுக்குள் சென்று சோதனை செய்ய வேண்டும் என்று கூறினார். இதற்கு தாசில்தார் அன்பழகன் வருமானவரித்துறையினர் வந்தால் மட்டுமே நாங்கள் வீட்டிற்குள் சென்று சோதனை செய்ய முடியும் என்று தெரிவித்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதற்கிடையே மக்கள் நல கூட்டணியினர் மற்றும் தி.மு.க.வினர் அங்கு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அங்கு இருந்தவர்களை அப்புறப்படுத்தினர்.

    இதுபற்றி பா.ம.க. வேட்பாளர் பழ.தாமரைகண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–

    கடலூர் மஞ்சகுப்பம் ஆக்கர் தெருவில் உள்ள வீட்டில் இருந்து லாரி மூலம் கட்டுக்கட்டாக பணமூட்டைகளை லாரியில் அடுக்கி அதற்குமேல் காலிகுடங்கள் ஏற்றப்பட்டது. இது முழுவதும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்ல முயற்சி செய்தனர். அப்போது எங்கள் கட்சியினர் பார்த்து என்னிடம் தகவல் சொன்னார்கள். சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது போலீசார் உதவியுடன் அந்த லாரி அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்றுள்ளது. இதுபற்றி போலீசாரிடம் கேட்டால் அவர்களுக்கு ஆதரவாகவும், எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சமயத்தில் வீட்டின் பின்வழியாக புதுவையில் இருந்து டெம்போ மற்றும் கார்கள் மூலம் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பண மூட்டைகளை எந்தவித அச்சமும் இன்றி நிதானமாக கொண்டு சென்றுள்ளனர். இது பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் தெவித்தால் முறையான நடவடிக்கை இல்லை. இது குறித்து முழுமையான விசாரணையை தேர்தல் ஆணையம் நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். என்றார்.

    இதுகுறித்து தாசில்தார் அன்பழகனிடம் கேட்டபோது, லாரியையும், குடங்களையும் கைப்பற்றி உள்ளோம். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். என்று கூறினார்.

    எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்தால் மதுக்கடைகள் நிரந்தரமாக மூடப்படும் என கடலூரில் வைகோ பேசினார்.

    கடலூர்:

    தே.மு.தி.க.–மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. சார்பில் கடலூர் சட்டமன்ற தொகுதியில் த.மா.கா. வேட்பாளர் வக்கீல் சந்திரசேகரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ பேசியதாவது:–

    ஜப்பான் நாட்டில் அடிக்கடி இயற்கை சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்படுவது போல், கடலூர் மாவட்டத்திலும் இயற்கை பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. தானே புயலால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். முந்திரி மரங்கள் அழிந்தன. பெரும் மழை வெள்ளத்தால் விவசாயிகள் அடித்து செல்லப்பட்டனர்.

    அப்போது என்னுடைய தாயார் இறந்த நேரத்திலும், கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு வந்து எங்களால் முடிந்த நலத்திட்ட உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்தோம். கெடிலம் ஆற்றின் இரு கரைகளிலும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டதால் தான் கடலூர் பாதிக்கப்பட்டது. பாதாள சாக்கடை திட்டம் இன்னும் முடிவடையவில்லை.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லா திட்டங்களையும் நிறைவேற்றி தருவோம். தேர்தல் அறிக்கையில் குறைந்த பட்ச செயல்திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்து உள்ளோம்.

    எங்களின் தேர்தல் அறிக்கை ஒரு பிரம்மாஸ்திரம் ஆகும். தமிழ்நாட்டின் சரித்திரமாக எங்கள் தேர்தல் அறிக்கை உள்ளது. கிராமங்களில் சாலை வசதி முதல் நகரங்களில் உயர்மட்ட பாலங்கள் கட்டுவது வரை தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியில் கமிஷன் வாங்குகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாலை முதல் பாலம் அமைக்கும் பணிகள் வரை நிபுணர்கள், ஓய்வு பெற்ற என்ஜினீயர்கள், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர்களை வைத்து ஆய்வு செய்வோம்.

    சமூக ஆர்வலர்களை கொண்ட பொது தணிக்கைக்குழு அமைப்போம். இவர்கள் ஊழலை ஒழிப்பதுடன், சாலைகளை ஆய்வு செய்து அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து கைது செய்வோம்.

    மவுலிவாக்கம் கட்டிட விபத்து நடந்த பிறகு, அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பயந்து வாழ்ந்து வருகிறார்கள்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதியை பற்றி பேசும்போது சாதி பெயரை சொல்லி பேசவில்லை.

    தொழில்கள் பற்றி பேசுகிற போது, நாதஸ்வரம் என்று சொன்னேன். இது பற்றி நான் விளக்கம், மன்னிப்பு கேட்டும், என் உருவ பொம்மைகளை 3 நாட்கள் தி.மு.க.வினர் எரித்தார்கள். தற்போது சாதி பெயரை சொல்லி பேசக்கூடாது என கண்டித்து எனக்கு தேர்தல் ஆணையம் தபால் அனுப்பி உள்ளது.

    போலீஸ் டி.ஜி.பி. அசோக்குமார் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறார். எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்தால் மதுக்கடைகள் நிரந்தரமாக மூடப்படும். ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம்.

    இந்த தேர்தலில் இளைஞர்கள், மாணவ– மாணவிகள்தான் மாற்றத்தை தர முடியும். 2016 தேர்தலில் அலைபேசி புரட்சி நடக்கும். 234 தொகுதிகளிலும் நம்முடைய வேட்பாளர்களிடம் வாக்குச்சாவடி (பூத்) செலவுக்கு பணம் கேட்காதீர்கள்.

    இவ்வாறு வைகோ பேசினார்.

    பண்ருட்டி அருகே முந்திரி வியாபாரியிடம் ரூ. 1 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள செம்மங்குப்பம் பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் ரவி சேகர் தலைமையில் இன்று காலை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தினார்கள். வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று கண்காணித்தனர்.

    அப்போது அந்த வழியாக அந்த பகுதியை சேர்ந்த முந்திரி வியாபாரி மாணிக்கவேல் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். அவரது வாகனத்தை வழிமடக்கி அதிகாரிகள் சோதனையிட்டனர் அவர் வைத்திருந்த பையில் ரூ. 1லட்சத்து 65 ஆயிரத்து 400 இருந்தது. அந்த பணத்தை கொண்டு செல்வதற்கு அவரிடம் எந்த விதமான ஆவணமும் இல்லை. எனவே அவரிடம் இருந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்

    பின்னர் அந்த தொகையை பண்ருட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் மதியழகன் மற்றும் தாசில்தார் கீதா ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.வியாபாரி மாணிக்கவேல் பணத்தை யாருக்கு கொடுக்க எடுத்து சென்றார் என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தொல். திருமாவளவன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    கடலூர்:

    வரும் 16-ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தொல். திருமாவளவன் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடுகிறார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அவர் அங்கு கடந்த 4 நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இந்நிலையில், இன்று காலை காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த தொல். திருமாவளவன், அங்கு தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    திருமாவளவனின் மாற்று வேட்பாளராக காட்டுமன்னார்கோவில் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் மணவாளனும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    விபத்தில்சிக்கிய தம்பதிக்கு திருமாவளவன் உதவி காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்.
    சிதம்பரம்:

    நாகை மாவட்டம் வக்ரமாரி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி மாலா. இவர்கள் இருவரும் சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் செல்லும் வழியில் உள்ள திருநாரையூர் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    எதிரே வந்த கார் மோதி படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். வெகுநேரமாகியும் ஆம்புலன்சு வரவில்லை. அந்த நேரத்தில் காட்டுமன்னார்கோவிலில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து விட்டு காரில் வந்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தனது காரை நிறுத்தினார்.

    காரில் இருந்து இறங்கிய அவர் சம்பவம் பற்றி கேட்டறிந்தார். பின்னர் அந்த தம்பதியை தன்னுடன் வந்த ஒரு காரில் ஏற்றி சிகிச்சைக்காக ராஜா முத்தையா மருத்துவமனைக்கு கட்சி நிர்வாகிகளுடன் அனுப்பி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “விபத்தில் சிக்கிய தம்பதி, ஆம்புலன்சு வராமல் 1 மணி நேரத்துக்கும் மேலாக அவதிப்பட்டுள்ளனர். நான் அவர்களை காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தேன். ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக ஆம்புலன்சை கூட விட்டு வைக்கவில்லை. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். இந்த நிலைமாற வேண்டும்” என்றார்.
    ×