என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேப்பூர் அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது
வேப்பூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள களரம்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48). இவரது மனைவி சுஜாதா (32). இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். கணவன் - மனைவிக் கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும்.
இந்தநிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வேப்பூர் அருகே பில்லூர் பகுளத்தில் விவசாய நிலம் ஒன்றை வெங்கடேசன் குத்தகைக்கு எடுத்தார். எனவே குடும்பத்துடன் இங்கு வந்து தங்கி குத்தகைக்கு எடுத்த நிலத்தில் விவசாயம் செய்துவந்தார்.
இங்கு வந்தும் தொடர்ந்து அவர்களுக்கிடையே குடும்ப தகராறு இருந்துவந்தது. இந்தநிலையில் நேற்று அந்த குத்தகை நிலத்தில் உள்ள கிணற்றில் சுஜாதா பிணமாக மிதந்தார். இதுபற்றிய தகவல் அறிந்த சுஜாதாவின் தாயார் வளர்மதி வேப்பூர் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து சுஜாதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் வெங்கடேசனிடம் விசாரணை நடத்தினர். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்து சுஜாதா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து சுஜாதாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குபதிவு செய்து வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர்.






