
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் குறித்து அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.
அதேபோல உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் நடந்த டெண்டர் முறைகேடுகள், போலீஸ் துறையில் வாக்கி டாக்கி கொள்முதலில் நடந்த முறைகேடு உள்ளிட்டவை குறித்தும் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.
இதற்காக அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் அரசு தரப்பில் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் சென்னையில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
மு.க.ஸ்டாலின் விமர்சனங்களை வெளியிட்ட முரசொலி பத்திரிகை ஆசிரியர் முரசொலி செல்வம், கலைஞர் டிவி ஆசிரியர் திருமாவேலன் ஆகியோர் மீதும் கிரிமினல் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டுக்கு தடை விதித்திருந்தது.
அண்மையில் பொறுப்பேற்ற தி.மு.க. அரசு, முந்தைய ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெற்று அரசாணை பிறப்பித்துள்ளது.
அதேபோல ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள 18 அவதூறு வழக்குகளை திரும்பப்பெற தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தனக்கு எதிரான அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மு.க.ஸ்டாலினுக்கு எதிராக நிலுவையில் உள்ள 18 கிரிமினல் அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறுவது தொடர்பான தமிழக அரசின் அரசாணை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் தொடர்பான விபரங்களை அட்டவணையாக தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, ஸ்டாலின் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.
இந்த நிலையில், இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதி இன்று பிறப்பித்தார்.