search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.70 லட்சம் மோசடி - அரசு பள்ளி ஆசிரியரிடம் போலீசார் விசாரணை

    ஈரோடு அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக 13 பேரிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.70 லட்சம் வரை மோசடி செய்த சம்பவம் குறித்து அரசு பள்ளி ஆசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கள்ளிப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர் ராஜசேகர்.

    இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று போலி அரசாணை வழங்கியதாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்தனர்.

    இது குறித்து விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பணம் கொடுத்து ஏமாந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.விசாரணையில் அரசு வேலை வாங்கித் தருவதாக 13 பேரிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.70 லட்சம் வரை மோசடி நடந்தது தெரியவந்துள்ளது. மேலும் ஆசிரியர் ராஜசேகரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:-

    அரசு வேலை வாங்கித் தருவதாக 13 பேரிடம் ரூ. 70 லட்சம் பெறப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர் ராஜசேகர் இடைத்தரகர் போன்று செயல்பட்டு உள்ளார். இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. போலி ஆணை வழங்கி மோசடிக்கு மூளையாக செயல்பட்ட நபர் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அவரது நடவடிக்கை குறித்து கண்காணித்து வருகிறோம். விரைவில் அந்த நபர் கைது செய்யப்படுவார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×