என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ
    X
    வைகோ

    23 ஆண்டுகளுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் கட்டாயப்படுத்தி என்னை எம்.பி. ஆக்கினார் - வைகோ

    23 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை வலுக்கட்டாயமாக பாராளுமன்ற மேல்சபை எம்.பி. ஆக்கினார் என வைகோ கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    23 ஆண்டுகளுக்கு பிறகு பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்துகொள்ள இருக்கிறேன். நான் முதன் முறையாக எம்.பி. ஆன போது பாராளுமன்றத்தில் முரசொலிமாறன் என்னை ஆதரித்தார். அதன்பிறகு 3 முறை கலைஞர் என்னை எம்.பி. ஆக்கினார்.

    இப்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை வலுக்கட்டாயமாக பாராளுமன்ற மேல்-சபை எம்.பி. ஆக்கி டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அவருக்கு எனது நன்றி.

    முக ஸ்டாலின்


    தற்போது தமிழகம் பல்வேறு அபாயங்களை எதிர்நோக்கி இருக்கிறது. மேகதாது அணை வந்தால் தமிழ்நாட்டில் காவிரி பாழாகும். ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் தமிழகம் மெதுவாக சகாரா பாலைவனமாகும்.

    தமிழ்நாட்டில் அணு கழிவை கொட்டுவதன் மூலம் 100 அணுகுண்டுகள் வெடிக்கும் ஆபத்து ஏற்படும். நியூட்ரினோ திட்டத்தால் முல்லைப்பெரியார், இடுக்கி அணைகளுக்கு ஆபத்து ஏற்படும். இவை வந்தால் தமிழகம் சுடுகாடு ஆகிவிடும்.

    நீட் தேர்வை தொடர்ந்து மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு நெக்ஸ்ட் என்னும் அபாய திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர இருக்கிறது. எல்லா துறைகளிலும் இந்தி, சமஸ்கிருதம் மொழிகளை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் மத சார்பின்மையை சீர் குலைக்கும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுகிறது. 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்கும் வரையில் ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என்று ராஜாஜி சொன்னார். தமிழ்மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும்.

    நான் சட்ட நகலை கொழுத்தி சிறை சென்று இருக்கிறேன். பொடா சட்டத்தில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டேன். நீண்ட இடை வெளிக்குப்பிறகு மீண்டும் எம்.பி.யாக டெல்லி செல்கிறேன்.

    தற்போது பாராளுமன்றத்தில் எம்.பி.யாக இருப்பவர்களுடன் எனக்கு பழக்கம் இல்லை. தமிழகத்தின் உரிமையை காப்பதற்கு குரல் கொடுப்பேன்.

    இவ்வாறு வைகோ கூறினார்.
    Next Story
    ×