search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கெயில் குழாய் பதிக்க பயிர்கள் அழிப்பு: தினகரன், ராமதாஸ், வைகோ கண்டனம்
    X

    கெயில் குழாய் பதிக்க பயிர்கள் அழிப்பு: தினகரன், ராமதாஸ், வைகோ கண்டனம்

    காவிரி பாசனப் பகுதியில் கெயில் குழாய் பதிக்க பயிர்களை அழித்திருப்பதற்கு தினகரன், ராமதாஸ், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    காவிரி பாசனப் பகுதியில் கெயில் குழாய் பதிக்க பயிர்களை அழித்திருப்பதற்கு தினகரன், ராமதாஸ், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்:- 

    காவிரி டெல்டாவில் பயிர் இருக்கிற வயல்களை அழித்து எரிவாயு குழாய் பதிக்கிற வேலைகளை மத்திய அரசின் கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருவது கடுமையான கண்டனத்திற்குரியது.

    சீர்காழியை அடுத்த மாதானம் முதல் செம்பனார் கோவில் அருகிலுள்ள மே மாத்தூர் வரை விளை நிலங்களில் எரிவாயு குழாய்களைப் பதிக்க வேண்டும் என கெயில் நிறுவனம் ஒற்றைக்காலில் நின்று வருகிறது.

    ஆனால் அப்பகுதி விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதனையும் மீறி நாற்றாங்கால்களிலும், நடவு செய்யப்பட்டிருக்கிற வயல்களிலும் எந்திரங்களைக் கொண்டு வந்து இறக்கி, எரிவாயு குழாய்களைப் பதிப்பதற்கான பணிகளை அரசு அதிகாரிகள் துணையோடு மேற்கொண்டிருக்கிறார்கள்.

    கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி,கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் கெயில் எரிவாயு குழாய்களை விளை நிலங்களில் பதிப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த இரண்டொரு நாட்களுக்குள்ளாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள்.

    விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிற இந்தப் பணியை மத்திய, மாநில ஆட்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். அங்கே குவிக்கப்பட்டிருக்கிற கனரக வாகனங்களையும், எந்திரங்களையும் அப்புறப்படுத்த வேண்டும்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    நாகப்பட்டினம் மாவட்டம் மாதானத்திலிருந்து நரிமனம் எண்ணை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணையை கொண்டு செல்வதற்காக, உழவர்களின் எதிர்ப்பையும் மீறி, குறுவை நடவு செய்யப்பட்டுள்ள வயல்களில் காவல்துறை துணையுடன் குழாய்ப் பாதை அமைக்கும் பணிகளை கெயில் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.

    உழவர்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் மதிக்காமல் அத்துமீறி வயலில் நுழைந்து, பயிர்களை அழித்து, குழாய்ப் பாதை அமைப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

    மாதானம் முதல் மேமாத்தூர் வரை கெயில் எண்ணைக் குழாய்ப் பாதை அமைப்பதால் அப்பாதை நெடுகிலும் உள்ள 30 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான விளைநிலங்கள் பாதிக்கப்படும்.

    இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள். உழவர்களின் வாழ்வாதாரங்களை பறித்து விட்டு, எண்ணை குழாய்ப் பாதைகளை அமைப்பது கண்களை பறித்து விற்று விட்டு, அந்தக் காசில் கண்மை வாங்குவதற்கு இணையான அபத்தமான, அழிவுச் செயலாகும்.

    விவசாயத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பையும், பாதிப்பையும் ஏற்படுத்திவிடும்.

    எனவே, இனியாவது விழித்துக் கொண்டு இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட மத்திய அரசு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:-

    விவசாயிகள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், கெயில் நிறுவனம் மே 16 -ம் தேதி, மேமாத்தூர், காளகஸ்தி நாதபுரம் பகுதியில் குறுவை சாகுபடிக்கு விதை விட்ட மற்றும் நடவு செய்த வயல்களில் பொக்லைன் இயந்திரத்தை இறக்கி பயிர்களை நாசப்படுத்தி, குழாய் பதிக்க முனைந்தபோது, மக்கள் கொதித்து எழுந்தனர்.


    நேற்று முன்தினம் உமையாள்புரம் கிராமத்தில் நடவு செய்த விளைநிலத்தில் ராட்சத குழாய் பதிக்கும் வேலைக்காக பொக்லைன் இயந்திரத்தை இறக்கிப் பயிர்களை அழித்துள்ளது கெயில் நிறுவனம்.

    கொச்சியிலிருந்து பெங்களூருக்கு எரிவாயு குழாய் கொண்டு செல்ல மேற்கு மாவட்ட விளைநிலங்களில் குழாய் அமைக்க கெயில் நிறுவனம் முயற்சித்தபோது, விவசாயிகள் போராடிய தால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கெயில் நிறுவனத்துக்கு தடை விதித்தார்.

    காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு எடுத்தல் உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களை ரத்துச் செய்யக்கோரி மக்கள் போராட்டம் தீவிரமடையும் சூழலை உணர்ந்துகொண்டு, தமிழக அரசு இத்திட்டங்களுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    Next Story
    ×