search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக ஓட்டுகளை தினகரன் பிரிப்பார்- கருணாஸ் பேட்டி
    X

    அதிமுக ஓட்டுகளை தினகரன் பிரிப்பார்- கருணாஸ் பேட்டி

    பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. இரண்டாக பிரிந்து உள்ளதால் நிச்சயமாக தினகரன் பெரும்பாலான ஓட்டுக்களை பிரிப்பார் என்று கருணாஸ் எம்எல்ஏ கூறியுள்ளார். #Karunas #dinakaran #admk

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற 27-ந்தேதி சென்னையில் நடக்கும் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை யாருக்கு ஆதரவு என்பது குறித்து முடிவு எடுக்கும். அது மக்கள் நலன் சார்ந்ததாகவே நிச்சயம் இருக்கும்.

    ஏற்கனவே நான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளதால் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து அதில் ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல் குறித்து கலந்தாலோசனை செய்து அதன் பிறகு ஒரு முடிவு எடுக்கப்படும்.

    பதவி என்பது மக்கள் கொடுத்தது. மக்களுக்காக எதையும் இழக்க நான் தயாராக உள்ளேன். மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் வாக்குகளை பெற்று எம். எல்.ஏ.வாக வருவேன்.

    வரும் பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. இரண்டாக பிரிந்து உள்ளதால் நிச்சயமாக தினகரன் பெரும்பாலான ஓட்டுக்களை பிரிப்பார். அது அ.தி.மு.க.விற்கு பாதகமாக அமையும்.


    கழகங்கள் இல்லாத தமிழகம் என்று கூறி வந்த பா.ஜ.க., அ.தி.மு.க.வோடு கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் என்ன? அவர்கள் தனித்து நிற்க வேண்டியது தானே.

    இதேபோன்று கடந்த மாதம் வரை பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வந்தது. அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் புகார் மனுவும் அளித்துள்ளனர். அவர்கள் தற்போது அ.தி. மு.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன? தைலாபுரத்தில் நடந்த விருந்தின் பின்னணி மற்றும் மர்மம் என்ன?

    மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைப்பதில் மத்திய மாநில அரசுகள் அரசியல் செய்து வருகிறது. உடனடியாக விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்காவிட்டால் வரும் பாராளுமன்ற தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயம் மத்திய, மாநில அரசுக்கு தகுந்த பதில் அளிப்பார்கள்

    அனைத்து அரசியல் கட்சிகளும் தினகரனின் வளர்ச்சியை பொறுக்காமல் அவரை பலவீனப்படுத்த நினைக்கின்றனர். ஆனால் அவர் மேலும் பலம் பெற்று தான் வருகிறார். அவரை பா.ஜ.க. திகார் ஜெயிலுக்கு அனுப்பாமல் இருந்திருந்தால் அவர் அரசியலுக்கு வந்திருக்க மாட்டார்.

    நான் தமிழன் என்று சொல்வதில் அது மட்டுமே தகுதியாக இருக்கிறது என்று கமல் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழன் என்று கூறுவது தான் தகுதி என்றார். #Karunas #dinakaran #admk

    Next Story
    ×