search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாகுமரியில் 2வது நாளாக கடல் சீற்றம் - படகு போக்குவரத்து ரத்து
    X

    கன்னியாகுமரியில் 2வது நாளாக கடல் சீற்றம் - படகு போக்குவரத்து ரத்து

    கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் சீற்றம் நீடித்ததால், விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
    கன்னியாகுமரி:

    சென்னையில் வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக நேற்று மாலை கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது.

    கன்னியாகுமரி கடலில் அலைகள் பனை மர உயரத்திற்கு எழுந்ததோடு, பயங்கர சீற்றத்துடனும் காணப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் மாலையிலேயே விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    திருவள்ளுவர் சிலையை பார்க்க அழைத்து செல்லப்பட்ட பயணிகளும் அவசர, அவசரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

    இதுபோல நேற்று காலையிலும் கன்னியாகுமரி கடல் பகுதியில் பயங்கர சீற்றம் காணப்பட்டது. இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகு போக்குவரத்தை ரத்து செய்தது.

    இன்றும் அங்கு கடல் சீற்றம் நீடித்தது. இதனால் 2-வது நாளாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பயணிகளை அழைத்து செல்லும் படகுகள் குகன், பொதிகை, விவேகானந்தா படகுகள் கரையில் ஓய்வெடுத்தன.

    கடல் சீற்றம் காரணமாக இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், வாவத்துறை, புதுக்கிராமம், சிலுவை நகர், கோவளம், கீழ மணக்குடி, மேல மணக்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் அவர்களின் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

    கட்டுமரம், வள்ளத்தில் கடலுக்கு செல்வோரும் இன்று பணிக்கு செல்லவில்லை. அலைகளின் சீற்றத்தை கண்டு அவர்கள் கட்டுமரங்களை கரையில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். விசைபடகு மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    இதுபோல கடற்கரை பகுதி முழுவதும் பயங்கர சூறைக்காற்றும் வீசியது. சாலைகளில் நடந்து செல்லும் பயணிகள் முகத்தை மூடியபடி சென்றனர்.

    இன்று அதிகாலையில் சூரியோதயம் பார்க்க சென்ற பயணிகள் அதன்பின்பு கடலில் குளிக்க சென்றனர். அவர்களை பாதுகாப்பு கருதி சுற்றுலா போலீசார் அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தனர்.

    Next Story
    ×