search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை-திருப்பூர்-நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை
    X

    கோவை-திருப்பூர்-நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை

    கோவை-திருப்பூர்-நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை வீட்டின் மேற்கூரை பெயர்ந்து பெண் படுகாயம்

    கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் நேற்று மாலை முதல் மேககூட்டம் திரண்டு மழை வருவது போல் காணப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சூறாவளி காற்றுடன் மாலை முதல் மழை பெய்ய தொடங்கியது.

    அன்னூர் அருகே உள்ள குப்பனூர் பஞ்சாயத்து ஆலாங்குட்டையை சேர்ந்தவர் ராமசாமி(45). கூலி தொழிலாளி. இவரது மனைவி கலாமணி(40). இவர்கள் ஆரோபிளேக் மூலம் வீடு கட்டி மேற்கூரையாக சிமெண்ட் ஷீட் போட்டுள்ளனர்.

    நேற்று மாலை வீசிய சூறாவளி காற்றுக்கு ராமசாமி வீட்டின் மேற்கூரை பெயர்ந்து வீட்டுக்குள் இருந்த அவரது மனைவி கலாமணி தலையில் விழுந்தது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து சிறுமுகையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து இரவு 11 மணி முதல் கோவை நகரில் பயங்கர சூறாவளி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் இரவில் கடுங்குளிர் நிலவியது.

    சூறாவளி காற்றின் காரணமாக பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் உடைந்து காணப்படுகிறது. மழைவெள்ளம் தாழ்வான இடங்களில் தேங்கியுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பலத்த சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலையிலும் இடி- மின்னலுடன் கனமழை பெய்தது.

    சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஊட்டி- மைசூர் சாலையில் 2 ராட்சத மரம் சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர். பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின்சாரம் தடைபட்டது.

    இன்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றன. இதமான சீதோஷ்ண நிலை நிலவுவதால் சுற்றுலா இனிமையாக அனுபவித்து வருகிறார்கள்.

    இந்த மழை தேயிலை மற்றும் காய்கறி பயிர்களுக்கு உகந்தது என்று விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோன்று கோத்தகிரியில் இரவு 2 மணிநேரம் மழை பெய்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இன்று காலை வரை மின் வினியோகம் தடைபட்டது.

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்தது. வெயிலின் தாக்கம் அதிக மானதால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கினர். நேற்று திருப்பூரில் 102 டிகிரி வெயில் வாட்டியது.

    இந்நிலையில் நேற்று மாலை முதல் திருப்பூரில் குளிர்ந்த காற்றுடன் மண்வாசனை வீசியது. கருமேகங்கள் திரண்டிருந்தன. இரவு 11 மணி அளவில் பலத்த இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. சூறாவளியுடன் பெய்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    கனமழையால் ஊத்துக் குளி ரோடு, தாராபுரம் ரோடு, எம்.ஜி.ஆர். சிலை, டி.எம்.எப். பாலம் ஆகிய இடங்களில் மழைநீர் ஆறாக ஓடியது. சில இடங்களில் மரம், மின் கம்பம் சாய்ந்தது.

    கொளுத்தும் வெயில் வாட்டி வந்த நிலையில் இந்த கோடை மழை திருப்பூர் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    Next Story
    ×