என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் ஓடும் பள்ளிக்கூட வேனில் மாரடைப்பால் டிரைவர் பலி
    X

    ஈரோட்டில் ஓடும் பள்ளிக்கூட வேனில் மாரடைப்பால் டிரைவர் பலி

    ஈரோட்டில் இன்று காலை ஓடும் பள்ளிக்கூட வேனில் டிரைவர் மாரடைப்பால் இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் திண்டல் தெற்கு பள்ளத்தில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு மாணவ- மாணவிகளை ஏற்றி வர ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தை சேர்ந்த செந்தில் (வயது 40) என்பவர் காண்டிராக்ட் முறையில் வேன் ஓட்டி வந்தார்.
    இன்று காலை அவர் மாணவ-மாணவிகளை ஏற்றி வருவதற்காக கருங்கல் பாளையம் கே.ஏ.எஸ். நகர் பகுதிக்கு சென்றார்.

    அந்த வேனில் மாணவ- மாணவிகளை ஏற்றி இறக்குவதற்கு உதவியாக கருங்கல்பாளையம் ஜெயகோ பால் வீதியை சேர்ந்த வீரமணி (55) என்ற பெண் இருந்தார்.

    அந்த வேன் கே.ஏ.எஸ். நகரை நெருங்கி வந்தபோது திடீரென செந்திலுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து வேனை ஓட்ட முடிய வில்லை.

    அந்த நேரத்திலும் அவர் தனது நெஞ்சில் கைவைத்தபடி பெரிய அசம்பாவிதம் ஏற்படாமல் வேனை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

    வேன் தனது கட்டுப்பாட்டை இழந்து ஓடுவதால் அவர் யாரும் எதிரில் வந்து வேனுக்குள் சிக்கிவிடாமல் இருக்க சத்தமாக ஹாரன் அடித்துக் கொண்டே வந்தார்.

    வேனுக்குள் இருந்த வீரமணியும் டிரைவரின் நிலையை உணர்ந்து சத்தமிட்டார். ஹார்ன் சத்தத்தை கேட்டு அந்த பகுதியில் இரு சக்கர வாகனத்திலும், நடந்தும் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் தாறு மாறாக வருவதை அவர்கள் பார்த்தனர். விபரீதத்தை உணர்ந்த அவர்கள் ஓட்டம் பிடித்து தங்களை பாதுகாத்தனர்.

    ஒரு சிலர் பலரை எச்சரித்து ஒதுங்கி போக செய்தனர். இதற்கிடையே தாறு மாறாக ஓடிய வேன் அந்த பகுதியில் உள்ள துரைராஜ் என்பவரின் டீக்கடை நோக்கி சென்றது.

    இதை பார்த்த துரைராஜ் பதற்றமடைந்தார். பலர் அந்த கடையில் நின்று டீ குடித்துக்கொண்டு நின்றனர். அவர்களை நோக்கியும், டீக்கடையை நோக்கியும் வேன் வருவதையும், தாமதித்தால் பெரிய ஆபத்து ஏற்படும் என்பதையும் உணர்ந்த துரைராஜ் அங்கு நின்றவர்களை சத்தமிட்டு உஷார்படுத்தினார்.

    இதனால் அங்கு நின்றவர்கள் அங்கிருந்த தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓட்டம் பிடித்தனர். டீக்கடைக்காரர் துரைராஜூம் தனது கடையில் இருந்து வெளியே ஓடி வந்துவிட்டார்.

    சிறிது நேரத்தில் தாறுமாறாக ஓடி வந்த வேன் டீக்கடை மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. வந்த வேகத்தில் அந்த வேன் டீக்கடைக்குள் புகுந்து நின்றது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் அங்கு ஒடி வந்தனர். வேனுக்குள் பள்ளி குழந்தைகள் இருக்குமோ என்ற பயத்தில் பலர் வேனுக்குள் சென்று பார்த்தனர்.

    வேனுக்குள் பெண் வீரமணி மட்டும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருப்பதை பார்த்தனர். அவரை அவர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். வீரமணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    டிரைவர் செந்தில் வேன் ஸ்டியரிங் மீது சாய்ந்து கிடந்தார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு செந்திலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்து விசாரணை நடத்தினர்.

    இந்த விபத்து சம்பவம் இன்று காலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
    Next Story
    ×